http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 43

இதழ் 43
[ ஜனவரி 16 - பிப்ரவரி 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

ஜல்லிக்கட்டு சங்ககாலப் பழமையதா?
மலையடிப்பட்டியில் புதிய கல்வெட்டு
திரும்பிப் பார்க்கிறோம் - 15
Temples of Narthamalai and Kadambar malai
மாங்குளம் குடைவரை
காரோணன் குடிகொண்ட கடல்நாகை
திரைக்கை காட்டும் தென் நாகை
மனிதம் சரணம் கச்சாமி!!!
காவிரியும் உன்னவளே! நந்தலாலா!
அங்கும் இங்கும் (ஜன. 16 - பிப். 15)
இதழ் எண். 43 > தலையங்கம்
ஜல்லிக்கட்டு சங்ககாலப் பழமையதா?
ஆசிரியர் குழு

வாசகர்களுக்கு எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

பொங்கலுக்குத் தமிழகத்தில் சில ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி வருடாவருடம் நடைபெற்று வருவதும், விலங்கு நல அமைப்பின் (Animal welfare board) மனுவின் பேரில், பங்கேற்பவர்களுக்கும், பொதுமக்களுக்கும் அபாயம் விளைவிக்கக்கூடிய அப்போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்து ஆணையிட்டதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். பல்வேறு தரப்பினரும் அந்த ஆணையை விலக்கக்கோரி ஆர்ப்பாட்டம் செய்ததும், அதன் காரணமாக உச்சநீதிமன்றம் இவ்வருடம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை அரசின் மேற்பார்வையோடு நடத்தலாம் என்று வரையறுத்திருப்பதும் தெரிந்திருக்கும். இந்த ஆர்ப்பாட்டங்கள் செய்தோர் அனைவரும் முக்கியக் காரணமாகக் கூறியது இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது தமிழ்நாட்டின் பழம்பெரும் கலாசாரம் என்பதைத்தான். இப்போட்டி பல ஆயிரம் வருடங்களாகத் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்பது ஒரு சாராரின் வாதம். இந்த வாதம் எந்த அளவுக்கு உண்மை, இந்த வாதத்திற்கான ஆதாரம் எது?

சில வரலாற்றரிஞர்கள், சங்ககாலத்தில் மஞ்சுவிரட்டு (காளைகளைப் பொது வீதியில் ஓடவிட்டு அவற்றை இளைஞர்கள் விரட்டுவது) மற்றும் எருது கட்டுதல் (காளைகளைக் கயிற்றால் கட்டி அடக்குவது) எனும் விளையாட்டுகள் நடைபெற்றன என்று கூறுகின்றனர். பிறகு நாயக்க மன்னர்களால் இவ்விளையாட்டுகள் அபாயம் மிக்க போட்டியாக உருவெடுத்தன என்றும், பின்னாளில் ஜமீன்தார்கள் தங்கள் பலத்தை நிரூபிப்பதற்காகப் பலமுள்ள முரட்டுக் காளைகளை வளர்த்தார்கள். ஆனால் அக்காளைகளை யாரும் அடக்கி வென்றுவிட்டால் தங்கள் மதிப்பினை இழந்து விடுவோம் என்று பயந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் எதையும் வைக்கவில்லை என்றும் அவ்வறிஞர்கள் கருதுகின்றனர். சங்ககாலத்தில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது என்ற கருத்தை வலியுறுத்த நீலகிரிப்பகுதியில் கரிக்கியூர் என்ற ஊரில் உள்ள கற்பாறை ஓவியங்களை ஆதாரமாகக் காட்டுகின்றனர். அவ்வோவியங்கள் மூவாயிரம் வருடங்களுக்கும் மேல் பழமையானது என்று கூறுகின்றனர். மூவாயிரம் வருடங்கள் பழமையானது என்பது சரியாக இருக்கலாம். ஆனால் சில மனிதர்களின் உருவங்களும் பசு அல்லது காளை மாடுகளின் உருவங்களுமே பெற்றிருக்கும் அவ்வோவியங்கள் மஞ்சுவிரட்டைத்தான் குறிக்கின்றன என்று கருதத் தகுந்த ஆதாரம் ஏதும் இருக்கின்றதா என்பது தெரியவில்லை.

எங்களுக்குத் தெரிந்தவரையில் சங்க இலக்கியங்களில் மஞ்சுவிரட்டைப் பற்றியோ, எருது கட்டுதல் பற்றியோ எந்த ஒரு குறிப்பும் காணப்படவில்லை. ஐந்தாம் நூற்றாண்டு இலக்கியமான கலித்தொகையில் மஞ்சுவிரட்டு பற்றிய குறிப்பு காணப்படுகிறது. ஆனால் அதுவும் கல்யாண நிகழ்ச்சியாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறதே தவிரப் பொங்கலுக்காக நடத்தப்படுவதாகக் குறிக்கப்படவில்லை. ஜல்லிக்கட்டைப் பற்றியும், மஞ்சுவிரட்டைப் பற்றியும் ஆழமாக இலக்கியம், ஓவியம் மற்றும் கல்வெட்டுச் சான்றுகள் கொண்டு ஆய்வு செய்ய இது ஒரு அருமையான சந்தர்ப்பம். இந்த வீரவிளையாட்டு அல்லது போட்டி எப்படி எவ்வாறு தொடங்கி இன்று இந்த அபாயகரமான ஜல்லிக்கட்டுப் போட்டியாக உருவெடுத்திருக்கிறது என்பதை ஆராய்ந்து அறியவேண்டும். இப்போட்டி சங்ககாலப் பழமையது என்ற கூற்று உண்மையா என்பதும் இந்த ஆராய்ச்சியின் மூலம் புலப்படும்.

முதலில் சிலரால் சொல்லப்பட்ட ஜல்லிக்கட்டு சங்ககாலப் பழமையது என்ற கருத்தானது, பலராலும் பரப்பப்பட்டு இப்பொழுது இணையதளத்துக்கும் வந்துவிட்டது. பலர் தங்கள் வலைப்பூக்களில் (Blog) மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு ஜல்லிக்கட்டு சங்ககாலம் தொடங்கிய பழக்கம் என்று ஆராயாமல் எழுதி வருகின்றனர். இப்படித்தான் அநேகக் கருத்துக்கள் மக்களிடையே பரவிவிடுகின்றன. பிறகு அக்கருத்தை மாற்றுவது மிகவும் சிரமமாகிவிடுகிறது. தஞ்சை கோயில் விமானத்தின் மேல் இருப்பது ஒரே கல் என்ற வதந்தி எப்படிப் பரவியதோ அப்படி. அது ஒரு கல் அல்ல ஆரஞ்சு சுளைபோல் பல கற்கள் அடுக்கியது என்று தெரிந்து பல வருடம் ஆன நிலையிலும், பலரும் நாங்கள் உண்மையைக் கூறும் பொழுது நம்ப மறுத்து "அப்படியானால் இந்தப் புத்தகத்தில் அப்படி எழுதியிருக்கிறதே" என்று சந்தேகத்துடனே கேட்கிறார்கள். இப்படிப் பரவி வரும் இக்கருத்து உண்மைதானா என்று ஆராய்ந்து பார்த்து அதைக் கூடிய விரைவில் பலருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டியது நம் கடமை.

ஆராய்ச்சியின் முதற்கட்டம் தகவல்களை சேகரிப்பது தான். ஆகையால் வாசகர்களான உங்களுக்கு தெரிந்திருக்கும் சங்ககால, சங்கம் மருவிய காலத்து இலக்கியங்கள் மற்றும் பக்தி இலக்கியங்கள் இவற்றில் காணப்படும் மஞ்சுவிரட்டைப் பற்றிய குறிப்புகள், கல்வெட்டு ஆதாரங்கள், இதுபோன்று வரலாற்றுத் தகவல்களை மின்னஞ்சல் மூலம் எங்களுக்கு கூடிய விரைவில் அனுப்புங்கள். பலரும் அவரவர்களுக்கு தெரிந்த தகவல்களைத் தந்தால் அவையனைத்தையும் ஆராய்ந்து வரலாற்றினைச் சுலபமாக அறிய முடியும். எனவே அனுப்புங்கள் தகவல்களை, பிறகு தெரிந்து கொள்வோம் ஜல்லிக்கட்டின் வரலாற்றினை.

this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.