Issue No. 87
இதழ் 87 மார்ச் 16 - ஏப்ரல் 15, 2012
|
சப்தரிஷி மண்டல வழிபாடு
ரிஷியா
|
|
|
நம் சங்கத் தமிழர்கள் வானவியல் கலையில் சிறந்து விளங்கினர். இவ்வானவியல் துறை பல நிலைகளிலும் நல்ல வளர்ச்சியுடையதாய் விளங்கியது. ஆதிரை நன்னாள், கார்த்திகை விளக்கீட்டு விழா என விண்ணில் மின்னிய நட்சத்திரத் தாரகைகள் சார்ந்த பல விழாக்களைத் தம்முடைய வணக்கத்திற்குரிய வழிபாட்டு விழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
சப்தரிஷி மண்டலம் எனப்படும் ஏழு விண்மீன்களைக் கொண்ட நட்சத்திரக் கூட்டத்தை வழிபடும் வழக்கமும் சங்கத் தமிழரிடையே இறைசார்ந்த நம்பிக்கை வழிபாட்டில் இருந்துள்ளது. நற்சுவை நல்கும் நற்றிணைப் பாடல்வழி இது தேற்றம். இதோ பாடல்:
"மையற விளங்கிய மணிநிற விசும்பில் கைதொழ மரபின் எழுமீன் போல"
-இளநாகனார் : நற்றிணை : 231 : 1-2
(இது சிறைப்புறமாகத் தோழி சொல்லி வரைவு கடாவியது)
விளக்கம்:
"மேகங்கள் சிறிதுமின்றி விளங்கிய நீலமணியின் நிறத்தையுடைய வானத்தின்கண் கண்டோர் கைகூப்பி வணங்கும் முறைமையினையுடைய 'சாலி' என்னும் விண்மீன் கூட்டம்போல..." என்பது மேற்கண்ட பாடலின் பொருள்.
இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்த படியால் அறிவின் நுட்பம் அதிகம் உடையோராய்ச் சங்கத் தமிழர் விளங்கினர். சப்தரிஷி மண்டல வழிபாடு என நட்சத்திரக் கூட்டம் ஒன்றைக் கைகூப்பி வணங்கி வாழ்ந்துள்ளனர். வானில் மின்னும் திருவாதிரை, கார்த்திகை போன்று ஒற்றைத் தாரகைகளை வணங்கியது போலவே இது போன்ற வழிபாடு செய்துள்ளனர். இவ்வழிபாடு இன்று தமிழர் வாழ்வியல் வழக்கத்தில் இல்லையென்றாலும் அன்று வாழ்வியல் வழக்காக இருந்துள்ளது.
|
|
|
|
வீடியோ தொகுப்பு
Video Channel
|
|
|
|
|
|
|
|