சங்கச்சாரல்
(தொடர்)
|
சங்கச்சாரல் - 4
|
|
இத்தொடரின் இதர அத்தியாயங்கள்
|
இறையியல் பொழிவுகள் இனிய சொற்கவிகள்
இன்று மகளிர் கவியரங்கேறுவதும், பட்டிமன்றம் பேசுவதும் அன்றாடக்காட்சி. இது ஏழாம் நூற்றாண்டில் நடந்திருக்க முடியுமா? சங்க மகளிர்க்குப் பிறகு காரைக்கால் அம்மை மட்டுந்தானே கண்ணில் படுகிறார் என்பார் ஏக்கம் தவிர்க்கவே சம்பந்தர் தம் ஆவூர்ப் பதிகத்தில் ஏழாம் நூற்றாண்டுப் பெண்ணரசிகளின் பேச்சுத்திறன் காட்டுகிறார்.
ஆவூரில் விழாக்கால்த்தே கவியரங்குகளில் மகளிர் சொற்கவி பாடுவராம். கேட்டு மகிழ்ந்த மக்கள் பொன்னை அள்ளியளித்து வாழ்த்துவராம் (1:8). இது ஏதோ மகளிர் தொடர்பான விழா என்று யாரும் நினைத்துவிடக் கூடாதென்றுதான் அதே ஆவூரில் நிகழ்ந்த மற்றொரு காட்சியையும் சம்பந்தர் காட்டுகிறார். இங்கும் விழாக் களம்தான். அழகு செய்யப்பட்ட அரங்கத்தில் பொழிவாளர்களாய்ப் பெண்களும் ஆண்களும். இவர்கள் பாலொத்த மொழியில் இறைவனின் பெருமைகளை மக்களுக்கு இதமாக எடுத்துச் சொல்கிறார்களாம்.
இறையியல் பொழிவுகளும், இனிய சொற்கவிகளும் ஏழாம் நூற்றாண்டில்; தந்தவர்கள் பெண்கள். பதிகவரிகளுக்குள் பண்பாட்டு வரலாறு.
சங்க காலத்துக் கோழிப்போர்
முதலாம் இராசராசனின் இராஜராஜீசுவரத்துக் கல்வெட்டொன்று கோழிப்போரைச் சுட்டுகிறது. அண்மையில் விழுப்புரத்திற்கருகே அரசலாபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நடுகல் கல்வெட்டு போரில் மாய்ந்த சேவலின் சிற்பத்தோடு அமைந்துள்ளது. கல்வெட்டுப் புகழுடைய இக்கோழிப்போர் சங்கப் பழமையது.
தலைவனின் பிரிவால் வாடும் தலைவி ஒருத்தி, தோழியிடம் தன் ஏக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் பாலைப் பாடலில், அகநானூறு, சேவல் போரைக் குறிப்பிடுகிறது. தலைவி சொல்கிறாள், 'கூரிய வாயினையும், கொழுந்து விட்டெரியும் தீப்போன்ற சிறகினையும் உடைய வீட்டுக் கோழியின் வீரச்சேவல் போர் செய்யுங்கால் கிளர்ந்தெழும் கழுத்தினையுடையது. இத்தகு கழுத்தினையொத்த செம்முருக்க மலர்கள் பூத்திட இளவேனில் வந்தது. ஆனால் வருவதாய்ச் சொன்ன அவர் வந்திலரே'.
பூவுக்கு உவமையாய்ப் போர்ச் சேவலின் கழுத்து. நமக்கோ பண்பாட்டுச் செய்தி.
'மனையுறை கோழி மறனுடைச் சேவல் போர்புரி எருத்தம் போலக் கஞலிய பொங்கழல் முருக்கின்'
(அகம் - 277)
தேவமொழி
பதிகப் பாடல்களில் அகச்சுவைப் பாடல்களும் உண்டு. சம்பந்தரின் திருக்கானூர்ப் பதிகம் அத்தகையதொன்று. தன் அழகை இறைவன் கவர்ந்துகொண்டு, தனக்குக் குமிழம் பூ நிறத்தைத் தந்துவிட்டதாகக் குற்றம் சாட்டும் காரிகை ஒருத்தி, அழகு கவர வந்த இறைவனின் வருகையை வர்ணிக்கிறாள்.
தமிழில் இனிமையாகப் பேசிக்கொண்டும், தாளம், வீணை, முழவம், மொந்தை எனப் பல இசைக்கருவிகள் ஒலிக்கப் பாடிக்கொண்டும் வந்த சிவபெருமான் பவழம் போல் சிவந்திருந்தாராம்.
தன்னையே தலைவியாய்க் கொண்டு இறைவனைக் காதலனாய்க் கருதி சம்பந்தர் பாடியுள்ள இப்பதிகம், 'சிவபெருமான் தமிழில் இனிமையாகப் பேசிக்கொண்டு வந்தார்' என்று கூறுவதன் வழி, தமிழே தேவமொழி என்று தெளிவு செய்கிறது.
இந்த அரிய தகவல் கோயில் வாசல்களைச் சேர்வது எப்போது?
(முதல் திருமுறை, பக்கம் 331)
தகவல் : வரலாறு ஆய்விதழ் - 1, டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய வெளியீடு.
|
|
|
|
வீடியோ தொகுப்பு
Video Channel
|
|
|
|
|
|
|
|