Issue No. 53
இதழ் 53 நவம்பர் 16 - டிசம்பர் 17, 2008
|
அவர் வருவாரே!
இரா.
கலைக்கோவன்
|
|
|
கைவளைகள் நழுவுமாறு பிரிவுத் துன்பத்தால் மெலிந்தும் நலிந்தும் நீ இங்குத் தனித்திருக்கிறாய்..
அவரோ பொருளீட்டுவதற்காக வேறு மொழி பேசும் தேசத்திற்குச் சென்றுள்ளார். சிவந்த கொம்புகளையும் கரிய அடியினையும் உடைய வெண்கடம்ப மரத்தில் பூத்த வெள்ளிய பூங்கொத்தினைச் சுரிந்த, வளைந்த தம் தலைமுடியில் சூடி, வில்லை இடப்பக்கத்தே தழுவிக் கொண்டு, வருவோரை எதிர்பார்த்துக் கொள்ளையிடக் காத்திருக்கும் மழவர் உலவும் வழிகளை உடைய தேசம் அது.
வெற்றி விளங்கும் முரசினையுடைய சேரலாதன் கடல் போரில் பகைவர்களை வென்று அவர்தம் காவல் மரமான கடம்பை வெட்டியவன். இமயமலையில் வில் பொறித்தவன். மாந்தை நகரில் உள்ள அவ்வரசனின் வளமனை முற்றத்தில் பகைவர்கள் பணிந்து செலுத்திய பெருமை சான்ற அணிகலன்கள், பொன்னால் செய்யப்பட்ட பாவைகள், வயிரங்கள் எனப் பல்வகைப் பொருளும் அளவிடமுடியாது குவிந்துள்ளன.
நிலம் உண்ணுமாறு நிறைந்து கிடக்கும் அத்தகு நிதியத்தையே பெற்றாலும் உன் அன்பர் அங்குத் தங்கமாட்டார். பொருள் பெற்ற அடுத்த நிமிடமே அவரது பயணம் உன்னை நோக்கியதாகவே இருக்கும், அதனால், தலைவி கவலற்க.
அகம் - 127
தோழி கூற்று
பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது
திணை : பாலை ஆசிரியர் : மாமூலனார்
இலங்கு வளை நெகிழச் சாஅய், அல்கலும், கலங்குஅஞர் உழந்து, நாம் இவண் ஒழிய வலம் படு முரசின் சேர லாதன் முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து, இமயத்து முன்னோர் மருள வணங்குவில் பொறித்து, நல் நகர் மாந்தை முற்றத்து ஒன்னார் பணி திறை தந்த பாடுசால் நன்கலம் பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல் ஒன்று வாய் நிறையக் குவைஇ, அன்று அவன் நிலம் தினத் துறந்த நிதியத்து அன்ன ஒரு நாள் ஒரு பகல் பெறினும், வழிநாள் தங்கலர் வாழி, தோழி! செங் கோல் கருங் கால் மராத்து வாஅல் மெல் இணர் சுரிந்து வணர் பித்தை பொலியச் சூடி, கல்லா மழவர் வில் இடம் தழீஇ, வருநர்ப் பார்க்கும் வெருவரு கவலை மொழி பெயர் தேஎத்தர் ஆயினும், பழி தீர் காதலர் சென்ற நாட்டே.
|
|
|
|
வீடியோ தொகுப்பு
Video Channel
|
|
|
|
|
|
|
|