http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 2

இதழ் 2
[ செப்டம்பர் 15 - அக்டோபர் 14, 2004 ]


இந்த இதழில்..
In this Issue..

கல்வெட்டுகளைக் காப்பாற்றுவோம்
எஸ்.ஜே சூர்யாவுக்கு ஒரு கண்டனம்
கதை 1 - சேந்தன்
புதிரான புதுமை
கந்தன் குடைவரை
கட்டடக்கலை ஆய்வு - 2
கருங்கல்லில் ஒரு காவியம் - 2
இது கதையல்ல கலை - 2
'MS - a life in music' - ஒரு விமர்சனம்
இராகமாலிகை - 2
சங்கச்சாரல் - 2
கோச்செங்கணான் காலம்
இதழ் எண். 2 > பயணப்பட்டோம்
இது கதையல்ல கலை - 2
லலிதாராம்

டிசம்பர் சீஸன் கச்சேரிகளுக்குச் செல்லும் பொழுது, ஒரு நாளில் பல கச்சேரிகளை கேட்கும் வாய்ப்பு கிடைக்கும். சில நாட்களில் காலை 9.00 மணி கச்சேரி பிரமாதமாய் இருக்கும். மதியம் 12.30 மணி கச்சேரியைக் கேட்டால், 9.00 மணிக்கு கச்சேரி கேட்ட நினைவே இருக்காது. 2.30 மணி கச்சேரியை கேட்டவுடன், இதுதான் சுகத்தின் உச்சகட்டம், இதற்கு மேல் எதுவும் கேட்க வேண்டாம் என்று தோன்றும். ஆனாலும் 6.00 மணி ப்ரைம் டைம் கச்சேரியை விட மனது வராமல் அதையும் கேட்போம். அந்த கச்சேரி, பிரம்மானந்தமாய் அமைந்து அந்த நாளை, பொன்னேட்டில் பொறிக்கப் படவேண்டிய தினமாய் மாற்றிவிடும்.

இந்த அனுபவம் சங்கீதத்துக்கும் மட்டுமல்ல, கோயில்களுக்கும் உண்டு. ஊட்டத்தூரைக் கண்டு மயங்கிய நாங்கள், திருப்பட்டூரைக் கண்டதும், இதை மிஞ்ச வேறொன்றுமில்லை என்று நினைத்தபடி திருச்சிக்குத் திரும்பினோம். அரங்கனைக் கண்ட திருப்பானாழ்வார் "என் இனிய அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாதே" என்று சொன்னது போல், "திருப்பட்டூரைக் கண்ட கண்கள் (இன்று) மற்றொன்றினைக் காணாதே" என்று நினைத்து, அன்றைய மதியத்தை முனைவர் கலைக்கோவனின் இல்லத்தில் இளையராஜாவின் இசையைப் பற்றி அளவளாவியபடி கழித்தோம். அவரே, "சாயங்காலம் எங்கேயாவது பக்கத்துல போயிட்டு வரலாமா?" என்று வினவ, பேராவல் கொண்ட எங்கள் மனது வேண்டாம் என்றா சொல்லும்?

திருச்சி-கோயம்பத்தூர் நெடுஞ்சாலையில் இருக்கும் அல்லூரில், "வரப்புல இருக்கற சிவன் கோயில் எங்கே?" என்று ஊர் மக்களிடம் கேட்டால், சரியான வழி கிடைக்கும் இடத்தில் அமைந்துள்ள கோயிலை அடைந்தோம். கோயிலைச் சுற்றிலும் உயர்ந்து வளர்ந்த மரங்கள் சூழ்ந்திருக்கின்றன. நாங்கள் போன சாயங்கால வேளையில் வீசிய தென்றலில் பலத்த சலசலப்பிற்கிடையில் கோயிலை ரசிக்கத் தொடங்கினோம். இப்பொழுதெல்லாம், எந்த கோயிலுக்குச் சென்றாலும் எங்களது கழுத்து எங்களையறியாமலே வளைந்து, எங்களை மேல்நோக்க வைக்கிறது.

6 மாதங்களுக்கு முன், ஒரு கோயிலுக்குச் சென்றால், பூதவரி என்ற ஒன்றை பார்த்திருப்பதே துர்லபம். இப்பொழுது என்னடா என்றால், கோயில் கருவறையை கணக்கிலேயே சேர்த்துக் கொள்ளாமல், பூதவரிக்கே முதல் மரியாதை கொடுக்கிறோம். தென்புறத்திலிருக்கும் பராந்தக சோழனின் கல்வெட்டே, அக்கோயிலில் கிடைக்கும் கல்வெட்டுகளுள் பழமையானது. அவரைத் தவிர, சுந்தர சோழனின் கல்வெட்டும் இங்கேயிருக்கிறது.

கோயில்களில் இருக்கும் பல சிற்பங்கள் கடவுளைக் குறிக்கும் வகையிலும், அமானுஷ்யமாகவும் இருக்கும். அக்கால மக்களின் அன்றாட வாழ்க்கையைச் சித்தரிக்கும் வகையிலான சிற்பங்கள் பலவற்றை பூதவரியில் காணலாம். மேற்குப் புறச் சுவரில், மூக்கினுள் திரி போன்ற நீளமான எதையோ விட்டுக் கொண்டிருக்கும் பூதத்தைப் பார்க்கையில், ஒரு குழந்தை செய்யும் குறும்பின் சித்தரிப்பு போல எனக்குத் தோன்றியது. 'சிரட்டைக் கின்னரி' (நம்ப கொட்டாங்கச்சி வயலினைத்தான் இப்படிச் சொல்லியிருக்காங்க), 'குழல்', 'கொம்பு', 'மத்தளங்கள்', 'இலை தாளம்' (அட! அதுதாங்க நம்ப ஜால்ரா) போன்ற இசைக்கருவிகள் எல்லாம் பூதவரியில் காணக்கிடைக்கிறது. வடபுறச் சுவரில், இலக்கியங்களில் கூறப்படும், 'குடக்கூத்து' சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒரு பூதம் தனது ஒரு கையை நீட்டி, உள்ளங்கைக்கும் முழங்கைக்கும் இடையிலான பகுதியில் ஒரு குடத்தைத் தாங்கி நடனமாடுவது போலச் சித்தரிக்கப் பட்டிருக்கின்றது.


கிழக்குப்புற கோஷ்டத்தில் இரு பெண்மணிகள் தெரிகிறார்கள். அவர்கள் பிக்ஷாடனரின் அழகைக் கண்டு மயங்கி, தன் வேலையை மறந்து அவரைத் தொடர்ந்து வந்த பெண்மணிகள்.


கோயிலை ஒரு வலம் வந்தபின், கோயிலுக்குள் நுழையலாம் என்று எத்தனிக்கும் பொழுது, எங்கள் கண்களில் ஓர் அறிய சிற்பம் பட்டது. முனைவர் கலைக்கோவனே அந்த சிற்பத்தை அப்பொழுதுதான் முதல் முறையாகப் பார்ப்பதாகச் சொன்னார். அசோக வனத்தில் சீதை தனது நிலையை விளக்குவது போலவும், அதை அனுமன் கேட்டு அவருக்கு றுதல் கூறுவது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ள இச்சிற்பத்தில்,. சீதையில் உருவத்தில் துயரமும், அனுமனின் உருவத்தில் பவ்யமும் அற்புதமாய் தெரியும் வகையில் அமைந்துள்ளது.




என்னடா 'ஈர்த்த' என்று நிகழ்ந்த காலத்தில் சொல்கிறேன் என்று பார்க்கிறீர்களா? அழகான உருவங்களைக் கோயில் திருப்பணி என்கிற பெயரில் குலைப்பது அன்றாடம் நடப்பதுதானே. அப்படிப்பட்ட ஒரு கைங்கர்யத்துக்கு ளான உருவமான இந்த அபூர்வச் சிலை இன்று காணவே சகிக்க முடியாத நிலையில் இருக்கிறது.

இரண்டு மனித முகங்களுடனும், ஓர் யானை முகத்துடனும், ஓர் சிம்ம முகத்துடனும் இன்று விளங்கும் இச்சிலையின் வலப்பக்கம் இருக்கும் முகம், உண்மையில் பன்றி முகமாக இருந்தது. எந்த மஹானுபவர் கிருபையாலோ, அந்த முகம் இன்று யானை முகமாக இருக்கிறது. பிரதானமாய் இருக்கும் மனித முகத்தில் பச்சை நிற ஆயில் பெயிண்ட் பார்ப்பவரை பயமுறுத்தும் வகையில் இருக்கிறது. அச் சிலையின் கைகளும் கால்களும் நளினத்தையிழந்து விளங்குகின்றன. ஊர் மக்களுக்கெல்லாம், இச்சிலை இக்கோயிலுக்குத் தனிச்சிறப்பையளிக்கும் சிலை என்று தெரிந்திருந்தும் அக்கறையின்றி நடந்து கொண்டிருப்பதையெண்ணி வருந்தியவாறே கோயிலினுள் சென்ற எங்களுக்கும் இன்னும் பல அதிர்ச்சிகள் காத்திருந்தன.

கோயில் விமானத்தை முதல் தளத்தின் மேல் நின்று பார்த்த பொழுது, அதில் பல நாட்டிய கரணச் சிற்பங்கள் எங்களுக்குத் தென்பட்டன. ஒவ்வொரு சிற்பத்தின் மேலும் படிந்திருந்த மஞ்சள், பச்சை, சிகப்பு என்று பெயிண்டாபிஷேகத்தால் அச்சிலைகளின் பொலிவு பன்மடங்கு குறைந்திருப்பதையும் மீறி அழகாகவே இருக்கின்றன. கீழே இறங்கியதும், தென்புறச் சுவரிலிருந்த கல்வெட்டுகளைப் பார்த்தோம். அங்கிருந்த கல்வெட்டுகளுக்கிடையில், "நிலமளந்தகோல்" என்ற கோலளவையும் கண்டோம். லால்குடியில் இரண்டு கூட்டல் குறிகளுக்கிடையில் "அளவுகோல்" என்றிருப்பதைப் போல், இக்கோயிலில், இரு கூட்டல் குறிகளுக்கிடையில் "நிலமளந்தகோல்" என்ற கல்வெட்டு தென்படுகிறது.

நிலமளந்தகோலைக் கண்டவுடன், அங்கிருந்தபடியே விமானத்தையொருமுறை பார்த்தோம். அப்பொழுது அல்லூரில் பார்த்த அரிய சிற்பங்களுள் ஒன்றான, "சீதை அனுமன் சம்பாஷணை" இங்கும் இருப்பது கண்டு ஆச்சர்யத்தில் மூழ்கினோம். கோயிலின் விமானத்தை பெயிண்டால் சிதைத்த செம்மல்கள், அதிஷ்டானத்தையும் (basement), சுவர்பகுதிகளையும் புண்ணியமாய்ப் போகட்டும் என்று விட்டுவைத்திருக்கிறார்கள். பூதவரியில் மட்டும் சுண்ணாம்பு பலவருடங்களுக்கு முன் அடிக்கப்பட்டிருக்கிறது.


சிவன் சன்னிதிக்கு வலப்பக்கத்தில் இன்னொரு சன்னிதி இருக்கிறது. அதிலும் அற்புதமான பூதவரியும் சில அழகான miniatures-உம் இருக்கின்றன. குறிப்பாக, இரு பெண்மணிகள் சூலத்தையேந்தியாடும் நடனத்தைக் காட்டும் miniature அற்புதமான ஒன்று.

இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.