www.varalaaru.com
A portal for
South Indian History
 
72 இதழ்கள்...
1004 படைப்புக்கள் !
  Home    About US    Font Problems   
இதழ் - 5
தலையங்கம்
தவறுகளைத் தவிர்ப்போம்
கதைநேரம்
மத்தவிலாசப் பிரகசனம் - 3

இராஜராஜீஸ்வரம் சிறப்பிதழ் - ஒரு அறிவிப்பு
கலைக்கோவன் பக்கம்
ஸ்ர்புறக்குடிப்பள்ளி
கலையும் ஆய்வும்
கல்வெட்டாய்வு - 4

கட்டடக்கலை ஆய்வு - 5

வைஷ்ணவ மாகேசுவரம்
பயணப் பட்டோம்
இராஜசிம்மன் இரதம்
ஆங்கிலப் பகுதி
Political history of Thirutthavatthurai and it"s neighbourhood
ஆலாபனை
எம்.எஸ் - ஒரு வரலாற்றுப் பதிவு
இலக்கியச்சுவை
சங்கச்சாரல் - 5

கோச்செங்கணான் யார் - 3
எம்.எஸ் - ஒரு வரலாற்றுப் பதிவு

டிசம்பர் 12-ஆம் தேதி அன்று வந்த செய்தித்தாள்கள் அனைத்தும் முதல் பக்கத்தில் ரஜினிகாந்தின் பிறந்த நாள் பற்றிய செய்தியைத் தாங்கி வராமல், சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனை படைத்த 34-ஆவது சதத்தை வெளியிடாமல், 88 வருடங்கள் வாழ்ந்து வரலாறு படைத்த எம்.எஸ்-இன் மறைவைத் தெரிவித்தன. அன்றிலிருந்து, தூர்தர்ஷனிலும், பல தனியார் தொலைக்காட்சிகளிலும் எம்.எஸ்-இன் வாழ்வைப் பற்றிய நிகழ்ச்சிகள் வந்த வண்ணம் இருக்கின்றன.





கடந்த ஆண்டு மட்டும் எம்.எஸ்-இன் வாழ்வை மூன்று புத்தகங்கள் பதிவு செய்ய முயன்றன. அக்டோபர் 1986-ஆம் ஆண்டு, 'ஸ்ருதி' பத்திரிகை, எம்.எஸ்-இன் 70-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு பல கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்தது. இன்னும் எத்தனையோ பத்திரிகைகளில், நாளிதழ்களில், புத்தகங்களில் எல்லாம் பதிப்பித்தும் முழுமையடையாத சகாப்தமாக எம்.எஸ்-இன் வாழ்க்கை விளங்குகிறது.

அவரவர் விருப்பம் போல எம்.எஸ்-இன் வாழ்வை பதிவு செய்துகொண்டிருக்கும் இன்றைய நிலையில், எம்.எஸ்-இன் வாழ்வு எதைப் பதிவு செய்தது என்பதைப் பார்ப்போம். எம்.எஸ்-இன் கச்சேரி அணுகுமுறை, அவரது ஆலாபனை, அவரது ஸ்வரப்ரஸ்தாரம், அவரது லய விந்யாசம், பக்திப் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது என்பதைப் பற்றியெல்லாம் அவருக்குச் சாதகமாகவும், பாதகமாகவும் பேசுபவர்களைக் காண முடியும். ஆனால், அவரது குரல்வளத்தை, கீர்த்தனைகள் பாடிய விதத்தை, பாடல்களில் இருக்கும் விஸ்ராந்தியைப் பற்றி ஒரு கருத்துதான் இருக்க முடியும்.

மேல்கூறிய மூன்றில், குரல் வளத்தைப் பற்றி சொல்வது ஒரு பெரிய நதியில் கால் டம்ப்ளர் தண்ணீர் ஊற்றுவது போன்றதாகும்.

விஸ்ராந்தி என்பது ஒரு அனுபவம், அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஆகையால், எம்.எஸ் பாடிய கீர்த்தனைகளைப் பற்றி ஆராய்வோம்.

கீர்த்தனை என்பது ராகம் என்னும் அரசன் தடங்கலின்றி உல்லாசமாய் பவனி வரத் தோதான ராஜபாட்டை. கீர்த்தனைகள் பாடும் பொழுது, ஒரே வரியை பல முறை வேறு வேறு விதமாகப் பாடுவார்கள். இதற்குச் சங்கதிகள் என்று பெயர். இந்த சங்கதிகளை ஒரு நல்ல பேட்ஸ்மேனின் திறமைக்கு ஒப்பிடலாம். ஒரு கிரிக்கெட் மேட்ச் நடக்கிறது, ஒரு திறமையான பேட்ஸ்மேன் ஒரு சுழற்பந்து வீச்சாளரை சந்திக்கிறார். முதல் பந்து 'குட்-லெங்ந்தில்' விழுகிறது, நமது பேட்ஸ்மெனின் கால்கள் பந்தை நோக்கி துரிதமாகச் சென்று மிட்-ஆனுக்கு மேல் பந்தைத் தூக்கி அடிக்கின்றன. விளைவு - 4 ரன்கள். அடுத்த பந்தும் அதே இடத்த்ல் விழுகிறது, ஆனால் இம்முறை லாங்-ஆனில் ஒருவர் இருக்கிறார். நமது ஆட்டக்காரர் சற்று நகர்ர்ந்து காலியாக இருக்கும் 'பாயிண்ட்' திசையில் 'கட் செய்கிறார். விளைவு - 4 ரன்கள். இம்முறை டீப்-பாயிண்ட் இருக்கிறது, பந்து அதே இடத்தில் விழுந்து வருகிறது, பேட்ஸ்மேன் பந்து தன்னை கடக்கும் வரைக் காத்திருந்து, விக்கட்-கீப்பரின் கையுரையில் செல்லும் முன் செல்லமாக தடவிக் கொடுப்பது போல பந்தை லேட்-கட் செய்கிறார். விளைவு - 4 ரன்கள்.

எப்படி ஒரே பந்தை வெவ்வேறு விதமாக பவுண்டரிக்கு அனுப்பி, தன் திறமையின் பரிமாணங்களை பேட்ஸ்மேன் வெளிப்படுத்தினாரோ, அதே போல, ஒரு ராகத்தின் பல பரிமாணங்களை வெளிக்கொணர்வதே சங்கதிகளின் வேலை. காம்போஜி ராகக் கிருதியான 'ஓ ரங்க சாயி' என்ற பாடலின் பல்லவியை எம்.எஸ் பாடும் விதத்தைக் கேட்டால், நான் கூறிய 'cricket analogy' புரியும். 'ஓ ரங்கசாயி' என்ற வரியில் 'ஓ' என்ற சொல் (எழுத்து) மட்டும் இரண்டு களை ஆதி தாளத்தின் 3 இடங்களுக்கு வரும். அந்த ஒரு எழுத்தை முதலில் காம்போஜியின் சில ஸ்வரங்களில் மட்டும் பாவவிட்டுப் பாடுவார். அடுத்த சங்கதியில் முன்னல் பாடிய ஸ்வரங்கள் எல்லாம் ஒன்றை ஒன்று அன்புடன் அணைத்துக் கொள்ளும். அடுத்த சங்கதியில் வேறு சில ஸ்வரங்கள் சேர்ந்து கொள்ளும். அடுத்த சங்கதியில் காம்போஜியின் மொத்த உருவம் லேசாக பவனி வர ஆரம்பிக்கும், இப்படி படிப்படியாய் வளர்ந்து வளர்ந்து, 'ஓ ரங்க சாயி' என்ற வரி சில மின்னல் வேக ப்ருகாக்களுடன் காம்போஜி ராகத்தை ரோலர் கோஸ்டரில் இட்டுச் செல்லும். பேட்ஸ்மெனின் ஒவ்வொரு அடியும் எப்படி பவுண்டரியில் முடிந்ததோ அதே போல எம்.எஸ்-இன் சங்கதிகள் எத்தனை எத்தனை இருப்பினும் அவற்றின் விளைவு, கேட்பவர் மனத்தில் மகிழ்ச்சிதான்.

டெஸ்ட் மேட்ச் போன்ற 'ஓ ரங்க சாயிக்கும்', ஒரு நாள் போட்டி போன்ற, ஒரு களையில் அமைந்த 'திருவடி சரணத்திற்கும்' இடையில் எம்.எஸ் காட்டும் difference in approach-ஐ அவரது கச்சேரிகளில் தெளிவாகக் காணலாம். கீர்த்தனைகளில் உச்சரிப்பு, பாவம், சாஹித்ய சுத்தம் என்ற அனைத்து இலட்சணங்களையும் எம்.எஸ்-இன் கச்சேரிகளில் பார்க்க முடியும். சௌந்தர்ய லஹிரியில் ஒரு ஸ்லோகத்தைப் பாடிவிட்டு, எம்.எஸ் பாடும் 'ஹிரண்மயீம் லக்ஷ்மீம்' என்ற லலிதா ராகப் பாடல் கல்லையும் உருக்கிவிடும். இன்னும் 'சரோஜ தள நேத்ரி', 'யாரோ இவர் யாரோ', 'தேவி ப்ரோவ', 'குறையொன்றுமில்லை' என்று பல கீர்த்தனைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இன்றைய நிலையில், எம்.எஸ்-இன் சுப்ரபாதம் போன்ற ஒலிநாடாக்களும், கல்கியின் பாடல்கள் கொண்ட ஒரு துக்கடா collection-உம், மீரா பஜன், சூர்தாஸ் பஜன் போன்ற ஒலிநாடாக்களும்தான் அதிகம் கிடைக்கின்றன. எம்.எஸ்-ஐப் பற்றி அடுத்த தலைமுறைக்கு இவை தவறான ஒரு அபிப்ராயத்தை உருவாக்கும் அபாயம் உள்ளது. வெறும் பஜன்களாலும், துக்கடாக்களாலும்தான் எம்.எஸ் உலகப் புகழ் பெற்றார் என்ற எண்ணம் பரவினால் கூட வியப்பதற்கில்லை. 'ராகம் தானம் பல்லவி' கொண்ட பல கச்சேரிகள், இன்றும் சில இசை ஆர்வலர்களிடம் கிடைக்கிறது.

மஹா வைத்தியநாத சிவன் என்ற சங்கீத சிம்மம் 72 மேள கர்த்தாவையும் கொண்டு, அந்த ராகங்களின் பெயர்கள் சாஹித்யத்தில் வருமாறும், ஆழ்ந்த அத்வைத கருத்துக்களுடனும், 72 இராகங்களிலும் சிட்டை ஸ்வரங்களுடனும் ஓர் அரிய கிருதியை உருவாக்கினார். வெறும் புத்தகத்தில் மாத்திரம் இருந்த கிருதியைப் பாடம் செய்து, உலகுக்கு பரப்பும் வண்ணம் ம்யூசிக் அகாதமியின் துணையுடன் ஒரு ஒலிநாடாவை எம்.எஸ் கொடுத்திருக்கிறார். இந்த ஒலிநாடா இன்று எந்த கடையிலும் கிடைப்பதாகத் தெரியவில்லை. வெறும் ஒலிநாடாவில் கொடுத்ததோடு தன் வேலை முடிந்தது என்றெண்ணாமல், கம்பி மேல் நடப்பது போன்ற கடினமான அக்கிருதியை, தன் கச்சேரிகளில், 12 இராகங்கள் வீதம் பலமுறை பாடியிருக்கிறார் என்றும் தெரிய வருகிறது.

மதுரை ஷண்முகவடிவிடம் தொடங்கி, அரியக்குடி, செம்மங்குடி, முசிறி, வீணை தனம்மாள், பேகம் அக்தர் போன்ற ஜாம்பவான்களிடம் பாடம் கேட்கும் பெரும் பேரை எம்.எஸ் அடைந்தார் என்று கூறலாம். இதனாலேயே, இவரது கச்சேரிகளைப் பாதுகாப்பதும் வெளிக் கொணர்வதும் அவசியமாகிறது. அனைத்திந்திய அளவில் புகழ் பெற்றிருந்த எம்.எஸ்-இன் படாந்தரத்துக்கு ஈடு இணையாக வேறொருவரைக் காண்பது துர்லபம். இன்றைய நிலையில் அருணாசலக் கவி, முத்துத் தாண்டவர் போன்றோர்க்ளின் பல கீர்த்தனைகளை இழந்து நிற்கும் நமக்கு, எம்.எஸ்-இன் கச்சேரிகளின் திரட்டு ஒரு சிறந்த கருவூலத்தை உருவாக்கும். தமிழ், தெலுங்கு, கன்னடம் முதலிய அனைத்து மொழிகளிலும் 70 வருடங்கள் பாடி எம்.எஸ் வைத்துச் சென்றிருக்கும் செல்வம், அவர் கச்சேரிகள் செய்து பணமாய் கொடுத்த தானங்களை எல்லாம் மிஞ்சு செல்வமாகும். அதைப் பாதுகாத்தல் நமது கடமை.

முதல் கட்டமாக, எம்.எஸ்-இன் ஆல் இந்தியா ரேடியோ மற்றும் தூர்தர்ஷன் கச்சேரிகளை வெளியிடலாம்.

மனம் இருந்தால் மார்க்கம் இல்லாமலா போய்விடும்?

வாசல்     பரிந்துரைக்கவும் மின்னஞ்சலில்     ஃபேஸ்புக்கில்
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டம் இடலாம். We welcome your feedbacks. Please use the form below to provide the same.
 
பெயர் / Name
மின்னஞ்சல் / E-Mail
தங்கள் மறுமொழி /
Your Feedback
(C) 2008, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.
web page hit counter