http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 102

இதழ் 102
[ டிசம்பர் 2013]


இந்த இதழில்..
In this Issue..

2013 ஆண்டிற்கான மாமன்னன் இராஜராஜன் விருது
Thirumeyyam - 8
மாமண்டூர் நரசமங்கலம் குடைவரைகள் - 01
ஒரு கல், ஒரு கண்ணாடி
மரபுக் கட்டடக்கலை - 02
தனித்து விடப்பட்ட சோழர் காலத் திருமால்
விட்டலாபுரம் விட்டல கிருஷ்ணன் திருக்கோயில்
ஆலமர் செல்வன் பெற்ற கொடை
இதழ் எண். 102 > கலையும் ஆய்வும்
மரபுக் கட்டடக்கலை - 02
ஸ்தபதி வே.இராமன்
அளவு முறைகள்


அளவைகள்
பண்டைய நிகண்டுகள் ஏழு வகையான அளவை முறைகளைப் பற்றி கூறுகின்றன. அவை முறையே எண்ணல், நிறுத்தல், முகத்தல், பெய்தல், நீட்டல், தெறித்தல், சார்தல் என்பனவாகும்.

எண்ணல் - ஒன்று, இரண்டு, மூன்று என்ற எண்ணாகவோ, வீசம், அரைக்கால், கால் என்ற இலக்கமாகவோ அல்லது பதாதி, சேனாமுகம், குமுதம் எனத் தொகையாகவோ எண்ணிக் கணக்கிடுவது எண்ணல் அளவை ஆகும்.

நிறுத்தல் - குன்றிமணி, வராகனெடை, பலம், வீசை, துலாம் எனப் படிக்கல் கொண்டுத் தராசில் வைத்து நிறுப்பது நிறுத்தலளவை ஆகும்.

முகத்தல் - பால், மோர், போன்ற நீரியல் பொருளை உழக்கு, படிகளால் மொண்டு எடுத்து அளப்பது முகத்தலளவை ஆகும்.

பெய்தல் - நெல் முதலியவற்றை படி, மரக்கால்களில் அளப்பது பெய்தலளவை ஆகும்.

நீட்டல் - விரல், சாண், முழம் என நீளத்தை கை அல்லது கோல்களில் அளப்பது நீட்டலவை ஆகும்.

தெறித்தல் - நொடி, நாழிகை, நாள் எனக் காலத்தைக் கணித்து அளப்பது தெறிப்பளவை ஆகும்.

சார்த்தல் - சுரம், ஒலி, நிறம், உரு முதலியவற்றைக் கூறி ‘இப்படி’ அதைப்போல என்று ஒப்பிட்டு அளப்பது சார்தலளவை ஆகும்.

சிற்பக்கலைத்துறை நீட்டல் அளவை

சிற்பக்கலைத்துறைக்கு ஒரு வகை நீட்டல் அளவை முறை தொன்று தொட்டு இன்று வரை நடைமுறையில் இருந்து வருகிறது. நிலங்கள், மனை இடங்கள், சாலைகள் ஆகியவற்றை அளப்பதற்கு ஒரு வகை நீட்டல் அளவையும், வீடு, மாளிகை, மன்றம், கோயில் குளம், கிணறு அளப்பதற்கு மற்றொரு வகை அளவையும், மஞ்சம், கட்டில் தொட்டில், ஊஞ்சல், நாற்காலி ஆகியவை அளவிடப் பிரிதொருவகை அளவையும் தேர், சப்பரம், வண்டிகள் அளப்பதற்கு வேறொர் அளவையும், சிற்பங்களை அளவிட்டு செய்வதற்கு இன்னொரு வகை அளவையும் முறையும் நடைமுறையில் இருந்து வருகிறது.

கலைத் தொழில் நுட்பங்கள், இலக்கணங்கள் பண்டையக் காலத் தமிழக அளவைகளின் வாயிலாகவே கூறப்படுகின்றன. சிற்பக்கலை நுணுக்கங்களை ஆய்வு செய்யும்போதும், செயல்படுத்தும்போதும் இவ்வளவை முறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது. இதனால் பண்டைய நம் கலை மரபும் அதற்குரிய சிறப்பியல்பும் வழுவாமல் காக்கப்பட்டு வருகிறது.

சிற்பக் கட்டக்கலைத் துறையினை அறிந்துக்கொள்பவர்களும், ஆர்வலர்களும் இந்த அளவை முறைகளைத் தெரிந்து, புரிந்து பிறர்க்கு தெரிவிக்கும் நேரத்தில் அவரவர்களுக்கு தெரிந்த அளவைகளில் மாற்றி வழங்கிட முடியும். பண்டைய சிற்ப அளவை முறைகளை அறியாமல் புதிய அளவை முறைகளை நேரடியாக கையாளுவது இத்துறையில் இயலாத ஒன்றாகும்.

விரல்
இத்துறையில் கையாளப்பெறும் நீட்டல் அளவுமுறை பரமாணுவிலிருந்து தொடங்குகிறது. எந்த நுட்பமான பொருளை கண்களால் நாம் காண இயலாதோ அதற்குப் பரமாணு என்று பெயர்.

பரமாணு 8 கொண்டது தேர்த்துகள்
தேர்த்துகள் 8 கொண்டது மயிர்நுனி
மயிர்நுனி 8 கொண்டது ஓர் ஈர்
ஓர் ஈர் 8 கொண்டது ஓர் பேன்
ஓர் பேன் 8 கொண்டது ஒரு நெல்
ஒரு நெல் 8 கொண்டது ஒரு விரல் (அங்குலம்)

பெரும்பாலும் நெற்கள் ஐந்து வகைப்படும். அவை செந்நிறம், பொன்னிறம், வெண்ணிறம், பெருநெல், சௌகந்தி என்பவனாகும். இவ்வகை நெற்களில் செந்நெல்லே விரல் அளவு கொள்வதற்கு ஏற்றதென தென்னகத்துச் சிற்ப நூலோர்கள் தேர்ந்தனர். செந்நெல்லின் அளவை யவை என்றும், விரல் அளவை அங்குலம் என்றும் சிற்பநூல்கள் தெரிவிக்கின்றன.

மானாங்குலம்
அளப்பதற்கு பொதுவான அங்குலம், எட்டு நெல் (யவை) அகலம் கொண்டது. விரல் அளவு அல்லது அங்குலம் அளவு மானாங்குலம் என்பதாகும். (மானம் - அளவை) எட்டு நெற்களை அகலவாட்டில் ஒன்றொடொன்று நெருங்க அமைத்து அதன் மொத்த அகலம் ஒரு அங்குலமெனக் கொள்ள வேண்டும்.



ஆறு மானாங்குலம் கொண்ட நீளஅளவு தாளமென்றும், இரண்டு தாளம் கொண்டது விதஸ்தி (முழம்) என்றும் இரண்டு விதஸ்தி கொண்டது ஒரு கிஷ்கு (தச்சுமுழம்) என்றும் கூறுவர். அதாவது 24 விரல் நீளம் கொண்டது கிஷ்கு முழம் ஆகும். இதனையே “நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்கோல் அளவிருபத்து நால் விரலாக” என சிலம்பு கூறுகிறது.
ஒரு விரல் என்பது 13/8 அங்குலத்திற்கு சமமாகும். இதனைப் பொறியாளர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர் சுருங்க கூறினால்
6 மானாங்குலம் = 1 தாளம்
2 தாளம் = 1 விதஸ்தி
விதஸ்தி அல்லது = 1 ஹஸ்தம் அல்லது
24 விரல் = தச்சுமுழம்

பலவகை முழக்கோல்கள்
ஒரு முழத்திற்கு 24 விரல் என்பதே அடிப்படை அளவாகும். இருப்பினும் காரணம் பற்றி வேறு சில முழக்கோல் அளவுகள் சிற்பநூல்களில் கூறப்பெற்று நடைமுறையில் வெவ்வேறு பெயர்களில் வழங்கி வந்திருக்கின்றன.



அவை முறையே கிஷ்கு 24 விரல் கொண்டது 2’9”
பிரஜாபத்தியம் 25 விரல் கொண்டது 2’ 10 3/8”
தனுர்முஷ்டி 26 விரல் கொண்டது 2’11 ¾”
தனுர் கிரகம் 27 விரல் கொண்டது 3’2 1/8”
பிராச்யம் 28 விரல் கொண்டது 3’4 ½”
வைதேகம் 29 விரல் கொண்டது 3’ 5 1/8”
வைபுல்யம் 30 விரல் கொண்டது 3’7 ¼”
பிரகீர்ணம் 31 விரல் கொண்டது 3’ 9 3/8”

வீடு, மாளிகை, அரண்மனை, கோயில் ஆகிய கட்டடங்களைக் கிஷ்கு முழத்தாலும், பிராஜாபத்திய முழத்தாலும் அளவிட்டுச் செய்தல் வேண்டும். வண்டிகள், படுக்கைகள் ஆகியவற்றைக் கிஷ்கு முழத்தால் அளவிடலாம். மனையிடங்களைத் தனுர்முஷ்டி முழத்தால் அளவிட வேண்டும், கிராமம், நகரம், பட்டணம் ஆகிய பெரிய நிலப்பரப்புகளைத் தனுர்கிரகக் முழத்தாலும் அளவிட வேண்டும்.

கயிறு 32 முழம் = 32 X 2 ¾’ = 88’-0”
விரல் 24 கொண்டது 1 கிஷ்கு முழம்
கிஷ்குமுழம் 4 கொண்டது 1 தண்டம்
தண்டம் 8 கொண்டது 1 ரஜ்ஜு அல்லது கயிறு
நான்கு கிஷ்கு முழம் கொண்டது தனுர் தண்டம் என்றும்,
எட்டு தண்டம் கொண்ட நீளத்தைக் கயிறு என்றும் கொள்ளப்படும். இதனைச் சாலைகள் அளப்பதற்குப் பயன்படுத்துதல் வேண்டும்.

தேங்காய் நார், தர்ப்பை புல், ஆலமரபுரி, பருத்தி நூல், பட்டு நூல், பனை நார் ஆகியவை கயிறு செய்வதற்கு ஏற்றப்பொருளாகும். திரிக்கப் பெற்ற கயிறு முப்பிரிவுகளை உடையதாகவும், 1 விரல் பருமனுடையதாகவும், முண்டு முடிச்சுகள் இன்றி இருத்தல் வேண்டும்.

முழக்கோல் செய்வதற்குரிய மரங்கள் - சந்தனம், தேவதாரு, கருங்காலி, தேக்கு, முருக்கு, மா, பனை, வேங்கை, செண்பகம் ஆகிய மரங்களும், பொன், வெள்ளி, தாமிரம், இரும்பு ஆகிய உலோகங்களும் முழக்கோல் செய்வதற்கு ஏற்றவையாகும்.

முழக்கோலை 24 பாகங்களாக பிரித்து அதில் அரை முழம், கால் முழம், அரைக்கால் முழம் வரையிலும், ஒரு விரல், அரைவிரல், கால் விரல், அரைக்கால் விரல் அளவுகளைக் குறித்தல் வேண்டும்.



யாக மண்டபத்தில் நடைபெறவிக்கும் வேள்விப்பணியை தலைமை ஏற்று நடத்தும் ஆகம விற்பன்னர், அவருயை கை முழம் யாகசாலை அமைக்கும் பணிக்கு அளவாகக் கொள்ள வேண்டும். இந்த அளவுகோல் இரண்டு வகைப்படும். ஒன்று ரத்னி, மற்றொன்று அரத்னி. முன்னகை முட்டியிலிருந்து விரிந்து நீண்ட கையின் சிறுவிரல் நுனி வரை அரத்னி என்றும், விரல்களை முட்டியாக்கி முழங்கை முட்டி முதல் முதல் மடக்கிய கை முட்டி வரை கொண்ட நீளம் ரத்னி என்றும் சொல்லப்படும்.

இதுவரை மரபுக்கட்டடக்கலை கட்டுமானம் அடிப்படையான அளவுகோல்களைப் பார்த்தோம். அடுத்து கோயில் அங்கங்கள் குறித்து தொடர்ந்து பேசலாம்.

பயன்பட்ட நூல்கள்

சிற்பச்செந்நூல் 2001 தொழில் நுட்பக்கல்வி இயக்கம்
மரபுக் கட்டடக்கலை 2001 கோ.திருஞானம்.this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.