![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [186 Issues] [1832 Articles] |
Issue No. 186
![]() இதழ் 186 [ அக்டோபர் 2025 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
நாகபட்டினம் மாவட்டம் வேளாங்கன்னி அருகே 10 கி. மீ. தொலைவில் அமைந்துள்ள கீழையூர் அரங்கநாதர் கோயில் மாடக்கோயில் வகையினது.1 துணைத்தளம், பாதபந்தத் தாங்கு தளம், எண்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள், கூரையுறுப்புகள் கொண்டு விளங்கும் முத்தளக் கோபுரத்தின் கீழ்த்தளம் கருங்கல்லால் ஆனது. மேற்றளங்களும் கிரீவம், சிகரம் இவையும் செங்கல் கட்டுமானங்கள். கோயில் வளாகத்தின் தென்மேற்கில் வண்டிக்கூடு கூரை பெற்ற மண்டபம் உள்ளது. அதிலுள்ள நான்கு அறைகளில் இரண்டு அறைகள் வெறுமையாக உள்ளன. இரண்டு அறைகளில் ஆழ்வார்கள் இடம்பெற்றுள்ளனர். இறுதி அறை ஒருதள வேசர விமானமாக்கப்பட்டுள்ளது. ஆழ்வார் மண்டபத்தை அடுத்துள்ள வளைமாடத்தில் பிள்ளையார் இடம்பெற்றுள்ளார். வடமேற்கில் உள்ள அறையும் மண்டபமும் வெறுமையாக உள்ளன. நடைமண்டபம் வளாகத்தின் தெற்கில் பலித்தளம், கொடிமரம் அமைந்த மேடை உள்ளது. மூன்று படிகள் பெற்றுள்ள இம்மேடையின் பின் உள்ள நடைமண்டபம் வண்டிக்கூடு கூரை பெற்றுள்ளது. குடைவரை முகப்புப் போல நான்முகமாய் அமைந்த இரண்டு முழுத்தூண்களும் இரண்டு அரைத்தூண்களும் பெற்றுள்ள நடைமண்டப முகப்பு மூன்று வாயில்கள் கொண்டுள்ளது. நடு வாயிலின் முழுத்தூண்களில் பிதுக்கமாக எண்முக அரைத்தூண்கள் காட்டப்பட்டுள்ளன. கிழக்கு, மேற்கு வாயில்களில் வெட்டுப் போதிகைகள் கூரையுறுப்புகள் தாங்க, நடு வாயிலில் மதலைகள் அப்பணி செய்கின்றன. கிழக்கு, மேற்கு முகப்பு அரைத்தூண்களை அடுத்துத் தள அமைப்புப் பெற்ற சுவர்த் துண்டுகள் இடம்பெற்றுள்ளன. துணைத்தளம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நாகபந்தப் பாதம் பெற்ற எண்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், பூமொட்டுப் போதிகைகள், உத்திரம், மதலை வலபி என அமைந்திருக்கும் இப்பக்கப் பகுதிகளில் உள்ள கோட்டப் பஞ்சரங்கள் வெறுமையாக உள்ளன. நடு வாயிலின் உள் இருக்குமாறு ஒருதள வேசரமாய் கருடன் திருமுன் அமைந்துள்ளது. நடைமண்டபத்தின் மேற்கில் தெற்குச் சுவர்த்துண்டை ஒட்டி அதிரூபத்தாயாரின் இருதள வேசர விமானமும் முக மண்டபமும் உள்ளன. அதன் முன் இரண்டு அடுக்குகளாய் எட்டுப் படிகள் உள்ளன. நடைமண்டபக் கூரைமேல் மணிக்கூண்டு கட்டப்பட்டுள்ளது. அதிரூபத்தாயார் விமான வெற்றுத்தளம் உறுப்பு வேறுபாடற்ற தாங்குதளம், எளிய நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள், கூரையுறுப்புகள் பெற்றுள்ள வெற்றுத்தளத்தின் மகரதோரணத் தலைப்பிட்ட கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. மகரதோரணத்தில் நாமம் நடுவிலும் சங்கு, சக்கரம் இவை நாமத்தின் இருபுறத்தும் காட்டப்பட்டுள்ளன. அதிரூபத்தாயார் விமானம் இருதள வேசரமாக அமைந்துள்ள தாயார் விமானம் வெற்றுத்தளக் கட்டமைப்பையே பெற்றுள்ளது. விமானத்தின் சுவர்க் கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. தளச் சாலை களில் அம்மனின் பத்மாசன சுதையுருவங்கள் இடம்பெற, கிரீவ கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. கோட்டங்கள் பெறாமல் விமானக் கட்டமைப்பை ஒத்துள்ள முகமண்டபம் நடைமண்டபத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. முகமண்டப வாயிலின் மேலே யானைத்திருமகள் சிற்பமும் நடைமண்டபத்தின் வடக்குச் சுவர்க் கோட்டத்தில் அநுமார் சிற்பமும் இடம்பெற்றுள்ளன. கருவறையில் அரங்கநாயகி அர்த்தபத்மாசனத்தில் பின் கைகளில் மலர் கொண்டு முன்கைகளைக் காக்கும், அருட்குறிப்புகளில் கொண்டுள்ளார். உற்சவர் அதிரூபத்தாயாரும் அதே அமைப்பில் உள்ளார். ஆண்டாள் விமானம், வெற்றுத்தளம் வளாகத்தின் வடமேற்கில் காணப்படும் ஆண்டாள் விமானம், முகமண்டபம் இவற்றைத் தாங்கும் வெற்றுத்தளம் அதிரூபத்தாயார் திருமுன் வெற்றுத்தள அமைப்பிலேயே உள்ளது. ஆண்டாள் விமானம், முகமண்டபம் இவையும் அதிரூபத்தாயார் விமானக் கட்டமைப்பிலேயே உள்ளன. இங்கும் கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. தளச் சாலைகளிலும் கிரீவ கோட்டங்களிலும் ஆண்டாளின் நின்றகோலச் சுதையுருவங்கள் இடம்பெற்றுள்ளன. முன்னுள்ள இடிந்த செங்கல் கட்டுமானம் பெருமண்டபமாகலாம். வளாகத்திலிருந்து விமானத்தை அடையப் பத்துப் படிகள் உதவுகின்றன. கருவறையில் வலக்கையில் மலரேந்தி நிற்கும் ஆண்டாளின் இடக்கை நெகிழ்ந்துள்ளது. விஷ்வக்சேனர் விமானம் கிழக்குச் சுற்றின் வடகோடியில் உள்ள ஒருதள வேசர விமானத்தில் விஷ்வக்சேனர் சுகாசனத்தில் உள்ளார். கிரீடமகுடம், சரப்பளி, மகரகுண்டலங்கள், முப்புரிநூல், பட்டாடை அணிந்து, பின் கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி, முன்கைகளில் வலப்புறம் காக்கும் குறிப்புக் காட்டும் இறைவனின் இட முன் கை கடகமாய் உள்ளது. இவர் விமானத்திற்கும் இறைவன் விமானம் தாங்கும் வெற்றுத்தளத்திற்கும் இடையிலுள்ள இடைவெளி ஆண்டாள் விமானத்திற்கும் இறைவன் விமானம் தாங்கும் வெற்றுத்தளத்திற்கும் இடையில் இல்லை. வடக்கு மதிலின் நடுவிலுள்ள வாயில் கோபுரக் கீழ்த்தளமாய் அமைந்துள்ளது. இறைவன் விமான, முகமண்டப, பெருமண்டப வெற்றுத்தளம் உறுப்பு வேறுபாடற்ற தாங்குதளம், நான்முக அரைத தூண்கள் தழுவிய சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் பெற்று மேற்கு, வடக்கு, கிழக்கு முப்புறத்தும் சூழும் 2. 64 மீ. உயர வெற்றுத்தளத்தின் மேலே பிடிச்சுவர் காட்டப்பட்டுள்ளது. சுற்று மண்டபம் நடைமண்டபத்தை அடுத்துள்ள சுற்று மண்டப வெற்றுத் தளமும் இறைவன் விமான வெற்றுத்தள அமைப்பிலேயே உள்ளது. வண்டிக்கூடு கூரை பெற்றுள்ள இம்மண்டபம் பாத பந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, எளிய நான்முக அரைத் தூண்கள் தழுவிய சுவர், கூரையுறுப்புகள் பெற்றுச் செங்கல் கட்டுமானமாக உள்ளது. தெற்கிலும் கிழக்கிலும் உள்ள நடைமண்டப வாயில்கள் வழி இம்மண்டபத்தை அடையலாம். இதன் முன் 3 படிகள் உள்ளன. படிகளை அடுத்துக் கிழக்கிலும் மேற்கிலும் சுற்றாக விரியும் இம்மண்டபத்தின் தெற்கு வாயில் அருகே உள்ள தூண் கல்வெட்டுகள்2 ரெங்கப்ப ராசா, இலிங்க ராசா இவர்தம் மரபு வழிகளைச் சுட்டுவதுடன், அவ்விருவர் கொடையாகச் சுற்று மண்டபத்தைக் குறிக்கின்றன. வரதையர், கிருஷ்ணன் இருவரும் இக்கோயிலில் நாளும் வழிபாடு செய்வதாகவும் இவை கூறுகின்றன. முச்சதுர, இருகட்டு உடல் பெற்ற ஆறு தூண்கள் தாங்கும் இம்மண்டபத்தின் வடக்கில் காவலர்கள் பெற்ற பெருமண்டப வாயில் அமைந்துள்ளது. கிரீடமகுடத்துடன் நேர்நோக்கி நிற்கும் காவலர் இருவருமே நெடிய திருமேனியராய்ப் பின் கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி, ஒரு கையைக் கதையின் மீது இருத்தி மறு கையால் அச்சுறுத்துகின்றனர். பெருமண்டபம் உறுப்பு வேறுபாடற்ற தாங்குதளம், எளிய நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் பெற்றுக் கருங்கல் கட்டுமானமாக உள்ள பெருமண்டபத்தின் கூரையை முச்சதுர, இருகட்டு உடல் கொண்ட தூண்கள் தாங்குகின்றன. மண்டபத்தின் மேற்குச் சுவரில் நாமம், சங்கு, சக்கரம் இடம்பெற்றுள்ளன. மண்டபத்துள் வடமேற்கில் இரண்டு இராமர் தொகுதிகளும் வடகிழக்கில் கோபாலர் தொகுதியும் செப்புத்திருமேனிகளாக இடம்பெற்றுள்ளன. இராமர் தொகுதி இராமர், சீதை, இலக்குவன், அநுமார் என நால்வராகத் தனித்தனியே இருக்கும் பேரளவிலான முதல் தொகுதி செப்புத் திருமேனிகளாக இருந்தபோதும் மூலவர் தொகுதி என அழைக்கப்படுகிறது. வலக்கையைக் கடகத்தில் கொண்டு இடக்கையை வில் பிடிக்குமாறு போலக் கடகமாய் உயர்த்தியுள்ள இராமர் கிரீடமகுடம், மகரகுண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல், முத்துமாலை, தோள், கை வளைகள், குறங்குசெறி, உதரபந்தம் அணிந்து பாதங்களைத் திரயச்ரத்தில் இருத்தியுள்ளார். அவர் முகம் புன்னகை மாறாமல் உள்ளது. இடுப்பாடையை புலிமுகக் கச்சு இறுக்கியுள்ளது. இராமரை ஒத்த அதே அலங்கரிப்பில் காட்சிதரும் இலக்குவன் தலையில் சிறு மகுடம். கரண்டமகுடம், சரப்பளி, தோள், கை வளைகள், மகர குண்டலங்கள், ஸ்கந்தமாலை, ஸ்வர்ணவைகாக்ஷம், குறங்கு செறி, பட்டாடை அணிந்து வலக்கையை நெகிழ்த்தி, இடக்கையைக் கடகத்தில் கொண்டுள்ளார் சீதை. கரண்டமகுடம், பூட்டுக்குண்டலங்கள், தோள், கை வளைகள், முப்புரிநூல், சிற்றாடை அணிந்து வலக்கையால் வாய்ப்பொத்தி, இடக்கையைத் தொடையருகே கொண்டுள்ள அநுமனின் முகத்தில் பத்திமை ஒளி. இராமர், சீதை, இலக்குவன் என மூவராக அமைந்திருக்கும் தொகுதியை உற்சவர்களாகக் கொண்டுள்ளனர். இத்தொகுதித் திருமேனிகளும் பேரளவுத் திருமேனிகள் போலவே அமைந்துள்ளன. கோபாலர் தொகுதி தேவியர் இருவருடன் நிற்கும் கோபாலர் தலையில் மகுடம். வலச்செவி வெறுஞ்செவியாக அமைய, இடச்செவியில் பனை யோலைக் குண்டலம், சரப்பளி, முப்புரிநூல், உதரபந்தம், தோள், கை வளைகள், குறங்குசெறி, புலிமுகக் கச்சு இருத்தும் சிற்றாடை இவற்றுடன் நிற்கும் கோபாலரின் பாதங்கள் திரயச்ரமாக உள்ளன. கைகள் இரண்டும் கடகத்தில் உள்ளன. தேவியர் இருவரும் பட்டாடை, ஒன்று போல் மகுடம் கொண்டு ஒரு கையை நெகிழ்த்தி மறு கையைக் கடமாக்கியுள்ளனர். இருவரது செவிகளுமே வெறுமையாக உள்ளன. வலத்தேவி ஸ்வர்ணவைகாக்ஷம், ஸ்கந்தமாலை கொள்ள இடத்தேவி முப்புரிநூல் அணிந்துள்ளார். முன்மண்டபம் பெருமண்டபக் கட்டமைப்பில் விளங்கும் முன்மண்டப மேற்குச் சுவரில் சாளரம் உள்ளது. சங்கு, சக்கரம், நாமம் இவையும் இடம்பெற்றுள்ளன. மண்டபத்தின் கிழக்கிலுள்ள மேடை வெறுமையாக உள்ளது. முகமண்டபம் பெருமண்டபக் கட்டமைப்பில் விளங்கும் முகமண்டபத்தின் கூரையை முச்சதுர, இருகட்டு உடல்பெற்ற தூண்கள் பூமொட்டுப் போதிகைகளுடன் தாங்குகின்றன. மண்டபத்தின் கிழக்கு, மேற்குச் சுவர்களை அடுத்துள்ள மேடைகள் வெறுமையாக உள்ளன. விமானம் தென்வடலாக 5. 83 மீ. அகலமும் கிழக்கு மேற்காக 7. 38 மீ. நீளமும் கொண்டுள்ள இறைவன் விமானம் முகமண்டபத்தை ஒத்த கட்டமைப்பில் முத்தளச் சாலையாக அமைந்துள்ளது. கீழ்த்தளம் தவிர்த்த பிற உறுப்புகள் செங்கல்லால் ஆனவை. சுவர்க் கோட்டங்கள் மூன்றும் வெறுமையாக உள்ளன. கிரீவ கோட்டங்களும் வெறுமையாக உள்ளன. கருவறை வாயிலை முச்சதுர, இருகட்டுத் தூண்கள் அணைத்துள்ளன. உள்ளே பாம்புப் படுக்கையில் தெற்கில் இலேசாக ஒருக்கணித்தவராய் மேற்கில் தலை வைத்து கிழக்கில் தாமரை மேல் கால் வைத்துப் பள்ளி கொண்டுள்ளார் பெருமாள். அவரது வலக்கை கிரீடமகுடமணிந்த தலைக்குப் பக்கத்தில் உள்ளது. இடக்கை தொடை தழுவியுள்ளது. கச்சம் வைத்த பட்டாடை, தாள்செறிகள், மகரகுண்டலங்கள் அணிந்துள்ள இறைவனின் பாதத்துக்குப் பின்னால் நிலமகள் இலலிதாசனத்தில் உள்ளார். கரண்டமகுடம், சரப்பளி, முப்புரிநூல் அணிந்து வெறுஞ்செவிகளோடு காட்சிதரும் இறைவியின் இடக்கை அருட்குறிப்பில் உள்ளது. வலக்கையில் மலர். பின்சுவரில் நாமம், சங்கு, சக்கரம் இவை காட்டப்பட்டுள்ளன. கருவறைத் தரையில் வலப்பக்கம் சடைமகுடம் அணிந்து அர்த்தபத்மாசனத்தில் காட்சிதரும் மார்க்கண்டேயரின் கைகள் வணக்க முத்திரையில் உள்ளன. படுக்கையின் கிழக்கு முகப்பில் சேஷனின் வால், தலை இரண்டும் காட்டப்பட்டுள்ளன. உற்சவராக இருக்கும் ஆயனார் வலக்கையில் காக்கும் குறிப்புக் காட்டி, இடக்கையைக் கடகத்தில் உருள்பெருந்தடி மேல் வைத்துள்ளார். பின் கைகளில் சங்கு, சக்கரம். இருபுறத்தும் உள்ள தேவியர் வெளிக் கைகளை நெகிழ்த்தி, உள்கைகளில் மலர் கொண்டுள்ளனர். ஆண்டாள் வலக்கையில் மலரேந்தி, இடக்கையை நெகிழ்த்தி உள்ளார். குறிப்புகள் 1.இக்கோயிலை அறிமுகப்படுத்தியவர் திரு. பால. பத்மநாபன். ஆய்வு நாள் 20. 3. 2010, 2. 4. 2010. 2.இக்கல்வெட்டுகள் முனைவர் மு. நளினியால் படித்தறியப்பட் டன. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |