http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 73

இதழ் 73
[ ஜூலை 16 - ஆகஸ்ட் 15, 2010 ]


இந்த இதழில்..
In this Issue..

ஆயிரமாண்டு அதிசயம்
வரலாற்றில் ஸ்தபதிகள்
இராசராசசோழனும் சோழமகாதேவியும் - 1
மெய்யத்தே பள்ளிகொண்டவரும் நின்றருளியவரும் - 2
தமிழுடன் 5 நாட்கள்
செல்லக் குறிஞ்சியே! ஆராரோ... ஆரீராரோ
இதழ் எண். 73 > இலக்கியச் சுவை
செல்லக் குறிஞ்சியே! ஆராரோ... ஆரீராரோ
ரிஷியா


மேகப் பந்தல்கள் சூழ்ந்த மலைமுகடுகள், பச்சை வண்ணத்தை உடுத்திய மலைச்சாரல்கள், குன்றுதோறும் வீற்றிருந்து காக்கும் தமிழ்த் தெய்வத்தின் குறிஞ்சி நிலம் அது. வால் அருவிகள் விளையாடும் மலைச்சாரல் அருகே செழித்து ஓங்கி வளர்ந்திருந்த தினைப்புனத்தில் நுழைந்தது ஒரு யானைக் கூட்டம். மனம்போன போக்கில், கால்போன திக்கில் யானைக் கன்றுகள் தினைக் கதிர்களைப் பிடுங்கி அடித்துச் சுவைத்து உண்டன. துதிக்கையை உயர்த்தி எக்காளமிட்டுப் பிளிறின. தினைப்புனத்துக் காவற்பரண் அருகிலிருந்து ஒரு குரல். சுகராகமாய், பிரிய அநுராகமாய் உலகத்து இனிமையெல்லாம் தேன்மாரியாய் வாரி வழங்கிற்று.

மலைப்புரத்துக் கொடிச்சி பாடினாள். யாழின் இனிமை, தேனின் சுவையைத் தன் குரலில் கொணர்ந்தாள். சுகராகம் காற்றை நிறைத்தது, மலைமுகடுகளைத் தழுவித் தொட்டது. பொங்கும் இன்பவெள்ளமாய் யானைக் கன்றுகளின் செவிப்புலன்களை மகிழ்வித்தது. இதயத்தை வருடியது. குறமகளின் பாடலை என்னவென்று சொல்ல? என்ன தாளமோ, என்ன ராகமோ. செவிப்புலனைக் கவர்ந்த குறிஞ்சிப்பண், ஏனைய புலன்களையும் தனக்குள் கொணர்ந்தது.

தன்னிலை மறக்கச் செய்தது, சதா அசைந்த காதுகள், அசையவில்லை. மாற்றி மாற்றி வைத்த கால்கள் அசையவில்லை. பசி மறந்தது. தினைப்புனத்துக் காவல் மறந்தது. தன் வயத்தை இழக்கச் செய்தது அந்தக் குறிஞ்சிப்பண். தினையைக் கொய்யாமலும், புனத்தைவிட்டு அகலாமலும், நின்ற இடத்தை விட்டு நகராமலும் அசைவற்றுத் தன் நினைவை விடுத்துக் குறிஞ்சிப் பண்ணில் மயங்கிய இளங்கன்றுகள் மெல்ல மெல்ல இமைகள் மூட, உறங்க ஆரம்பித்தன.

மழகளிறுகள் தன் செயல் மறந்து, குறிஞ்சிப்பண் கேட்டு உறங்கின என்று அகநானூற்றுப் பாடல் விளக்குகிறது.

தலைமகள் கூற்று

அகநானூறு : 102

ஆசிரியர் : மதுரை இளம் பாலாசிரியன் சேந்தங் கூத்தன்

திணை : குறிஞ்சி

துறை : இரவுக் குறிக்கண் சிறைப்புறமாக, தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது.

"ஒலியில் வார்மயிர் உளரினள் கொடிச்சி
பெருவரை மருங்கிற் குறிஞ்சி பாடக்
குரலும் கொள்ளாது நிலையினும் பெயராது
படாஅப் பைங்கண் பாடுவெற்று ஒய்யென
மறம்புகல் மழகளிறு உறங்கும் நாடன்"


குறமகளின் பாட்டினிமைதனில் மழகளிறுகள் கேட்டதுதான் என்னவோ - தாலேலோ, ஆராரோ... ஆரீராரோ, லாலி லாலி, ஜோ... ஜோ...

இசையமுதாய்த் திசைகள் எல்லாம் நிறைந்து, காற்றில் கரைந்து, புலன்களைக் கொள்ளை கொண்டது அந்தக் குறிஞ்சிப்பண். மழகளிறுகளுக்கும் தாயாக மாறினாள் கொடிச்சி. தாலாட்டினாள்.

அன்றைய குறிஞ்சி நிலத்தில் இசைக்கப்பட்ட குறிஞ்சிப் பண்ணைத்தான் சங்கராபரணம் என்று தமிழிசை அறிஞர்கள் சொல்கிறார்கள். பெரும்பாலான தாலாட்டுப் பாடல்களின் அடிப்படை ஸ்வரங்கள் இனிமையான சங்கராபரணம் இராகத்தைக் கொண்டுள்ளன என்பதும் இசை அறிஞர்களின் கருத்து.

தொன்மையான குறிஞ்சிப்பண் இன்று பெயர்மாற்றம் அடைந்து சங்கராபரணமாக ஒலிக்கிறது. குறிஞ்சிப் பண்ணிற்குத் தாலாட்டும் இயல்பும் தன்மையும் அமைந்துள்ளது என்பது சங்கப் பாடலின் மூலம் தேற்றம். மேற்கண்ட அகப்பாடலைப் போன்று பல சங்கப் பாடல்களில் இசைப்பண்களைப் பற்றியும் அவற்றின் தனித்துவமான பயன்பாட்டினைப் பற்றியும் பல குறிப்புகளைக் காணலாம். இன்று வியப்புக்குரியதாய்ப் பேசப்படும் Music Therapy என்பதெல்லாம் சங்கத் தமிழனின் வாழ்வியலில் இயல்பாய் ஒன்றியிருந்தது அன்று. தமிழன் தலை நிமிர்ந்து வாழ்ந்த காலம் அது. உலகிற்கு வழிகாட்டியாய் இலங்கிய சமுதாயம் அது. பெருமையுடன் தமிழிசையை வளர்க்க முனைவோம்.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.