http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 73

இதழ் 73
[ ஜூலை 16 - ஆகஸ்ட் 15, 2010 ]


இந்த இதழில்..
In this Issue..

ஆயிரமாண்டு அதிசயம்
வரலாற்றில் ஸ்தபதிகள்
இராசராசசோழனும் சோழமகாதேவியும் - 1
மெய்யத்தே பள்ளிகொண்டவரும் நின்றருளியவரும் - 2
தமிழுடன் 5 நாட்கள்
செல்லக் குறிஞ்சியே! ஆராரோ... ஆரீராரோ
இதழ் எண். 73 > கலையும் ஆய்வும்
இராசராசசோழனும் சோழமகாதேவியும் - 1
கி.ஸ்ரீதரன்

தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையில் துணைத் தொல்லியல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிப் பணிநிறைவு பெற்றிருக்கும் திரு. கி.ஸ்ரீதரன் அவர்கள் இக்கட்டுரை தொடர்பாக நமக்கு எழுதியுள்ள கடிதம்.



அன்புடையீர்,

வணக்கம். தங்கள் அறிமுகம் கிடைத்தது குறித்து மகிழ்ச்சி அடைந்தேன்.

நான் முன்பு கூறியபடி திருச்சிராப்பள்ளி - திருவெறும்பூர் அருகில் உள்ள சோழமாதேவி கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கைலாசநாதர் கோயில் பற்றிய கட்டுரையை அனுப்பியுள்ளேன்.

1. இக்கோயில் முழுவதும் செடிகள் முளைத்து இதன் சிறப்பினை உணராமல் செய்த நிலையில் இருந்தபொழுது தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை (திருச்சிராப்பள்ளி அலுவலகம்) டாக்டர் இரா. கலைக்கோவன் (டாக்டர். மா.இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையம்) மற்றும் திருச்சிராப்பள்ளி சீதாலட்சுமி இராமசாமிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் இணைந்து அக்கோயிலின்மீது முளைத்திருந்த செடிகொடிகளை அகற்றிக் கோயிலின் சிறப்பினை அனைவரும் அறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

2. இக்கோயிலில் காணப்பட்ட கல்வெட்டுகளைப் படியெடுத்து வரலாற்றுச் சிறப்பினைத் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கல்வெட்டுக் கருத்தரங்கில் என்னால் கட்டுரை வாசிக்கப்பட்டது. மத்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையும் கல்வெட்டுகளைப் படியெடுக்க நடவடிக்கை மேற்கொண்டது.

3. இக்கோயிலின் வரலாற்றுச் சிறப்பினைத் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம் 'கிராமத்துக் கோயில்கள்' என்ற தலைப்பில் ஒலிபரப்பியது.

4. இக்கோயிலை 'வரலாற்றுச் சின்னமாக' அறிவித்துப் பாதுகாக்கத் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை நடவடிக்கை மேற்கொண்டது.

5. இக்கோயிலின் கட்டடக்கலைச் சிறப்பினை ஸ்தபதி வே.இராமன் கட்டுரையாகக் கல்வெட்டு இதழில் எழுதியுள்ளார்.

சோழமாதேவி கோயிலின் கட்டடக்கலை மற்றும் சிற்பங்களை மற்ற கோயில்களுடன் ஒப்பிட்டுத் தொடர்ந்து அடுத்த பகுதியில் எழுதி அனுப்புகிறேன். நிழற்படங்களையும் அனுப்புகிறேன். இக்கோயிலில் காணப்படும் இராஜேந்திர சோழன், வீரராஜேந்திரன் கல்வெட்டுக் குறிப்புகள், திருவெறும்பியூர் - கூத்தப்பார் - திருப்பாலைத்துறை ஆகிய கோயில் கல்வெட்டுகளில் காணப்படும் இக்கோயில் பற்றிய குறிப்புகள் போன்றவற்றைத் தொடர்ந்து எழுதுகிறேன். வரலாறு.காம் இதழில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மிக்க நன்றி.

அன்புடன்
கி.ஸ்ரீதரன்
sridharmythily@gmail.com




தமிழ்நாட்டு வரலாற்றில் சோழர் வரலாறு மிகவும் உயரிய புகழைப் பெற்று விளங்குகிறது. தனது அரசியல், நிர்வாகம், ஆட்சித்திறமை, கோயிற்கலை ஆகியவற்றால் சிறப்புப் பெற்றுச் சோழர் வரலாற்றைப் பொற்காலமாக மாற்றிய பெருமை இராசராசசோழனுக்கு உண்டு.

"செந்திரு மடந்தை மண் சீராசராசன்
இந்திரசமானன் இராச சாவஞ்ஞன்"

என்று திருக்கோயிலூர்க் கல்வெட்டு அவனைப் புகழ்ந்து பேசுகிறது. இவனது பெருமைமிக்க கலைப்படைப்பாய் விளங்கும் தஞ்சை இராஜராஜீச்சரம் (பெரியகோயில்) தமிழகத்திற்குப் பெரும்புகழ் ஈட்டித் தந்துள்ளது.

தஞ்சைப் பெரியகோயில் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, வார்ப்புக்கலை, கல்வெட்டுகள், கோயில் நிர்வாகம், அனைவரின் பங்களிப்பு என்று பல்வேறு சிறப்புகளுடன் விளங்குகிறது. இக்கோயிலில் பணியாற்றிய பலவகைப் பணியாளர்கள் பற்றியும், அவர்கள் பெற்ற ஊதிய விவரங்கள் கல்வெட்டுகளில் விரிவாகக் கூறப்படுகின்றன. பண்டாரிகள், திருப்பரிசாரகம், கணக்கெழுதுவான், கீழ்க்கணக்கு, தளிச்சேரிப் பெண்டுகள், திருமெய்க்காப்பு, திருப்பதியம் பாடுவோர், உடுக்கை வாசிப்பார், கொட்டி மத்தளம் வாசிப்பார் போன்ற பலர் பணியாற்றியுள்ளனர். பரிசாரகர் ஸ்ரீகோயிலுக்குரிய உள்ளூர்ப் பண்டாரத்தில் (கருவூலம்) ஊதியம் பெற்றுக் கொள்ளவேண்டும். பரிசாரகர்களில், பாண்டிய குலாசனி வளநாட்டு, விளாநாட்டுச் சோழமகாதேவி சதுர்வேதி மங்கலம் மற்றும் ஸ்ரீகண்ட சதுர்வேதி மங்கலம் (திருவெறும்பூர்) ஆகிய ஊர்களிலிருந்து ஒவ்வொருவர் பணியாற்றியுள்ளனர். இதேபோன்று கோயிலைப் பாதுகாக்கப் பலர் நியமிக்கப்பட்டனர்.

இவர்களைத் 'திருமெய்க்காப்பு' என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன. இன்று திருக்கோயில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களை 'மெய்க்காவல்' என அழைக்கிறோம். தஞ்சைப் பெரிய கோயிலில் பணியாற்றிய மெய்க்காப்பாளர்கள் எந்தெந்த ஊர்களிலிருந்து வந்தவர்கள் என்பதையும், இவ்வாறு அனுப்பிய 23 சதுர்வேதி மங்கலங்களைப் பற்றியும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இவர்களை அனுப்பிய ஊர்ச்சபையினரே அவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 100 கலம் நெல் அளிக்கவேண்டும் எனக் கல்வெட்டு குறிக்கிறது. அனைவருக்கும் தஞ்சைப் பெரியகோயிலின்மீது ஈடுபாடு கொண்டு விளங்கவேண்டும் என்ற சீரிய நோக்கத்துடன் இத்தகைய நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது என்பதை ஊகிக்க முடிகிறது. மெய்க்காப்பாளரை இக்கோயிலுக்கு அளித்த சதுர்வேதி மங்கலங்களில் சோழமகாதேவி சதுர்வேதி மங்கலமும் ஒன்று!

சோழமகாதேவி

இராசராசசோழனுக்குப் பல மனைவியர் இருந்தனர். இவர்களில் லோகமாதேவி, சோழமகாதேவி, அபிமானவல்லி, திரைலோக்கிய மகாதேவி, பஞ்சவன் மாதேவி, பிருத்வி மகாதேவி, இலாடமாதேவி போன்ற அரசிகள் தஞ்சைப் பெரியகோயிலில் வழிபாட்டிற்காகச் செப்புத்திருமேனிகள், அவைகளுக்கு ஆபரணங்கள் போன்றவற்றைச் செய்து அளித்தனர் என்பதைக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

சோழமகாதேவியார் தஞ்சைக் கோயிலுக்கு ஆடவல்லாம் - நம்பிராட்டியார் உமாபரமேசுவரியார் ஆகிய திருமேனிகளைச் செய்து அளித்தார். அத்திருமேனிகளே இன்றும் வழிபாட்டில் இருந்து வருகிறது எனக் கருதலாம்.

(தொடரும்)
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.