http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 151

இதழ் 151
[ பிப்ரவரி 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

நரபதிசிம்மப் பல்லவ விஷ்ணுகிருகம்
விளக்கேற்றல் எனும் அறம் - 2
எறும்பியூர்க் கோயில் பாதச் சிற்பங்கள்
கல்வெட்டுகளில் திருவிடைமருதூர் - 2a
சிந்தை சிலிர்க்கும் சிற்பங்கள் - 2
இதழ் எண். 151 > கலையும் ஆய்வும்
சிந்தை சிலிர்க்கும் சிற்பங்கள் - 2
பால.பத்மநாபன்

 



அங்கையு ளனலும் வைத்தார்

அறுவகை சமயம் வைத்தார்

தங்கையில் வீணை வைத்தார்

தம்மடி பரவ வைத்தார்

திங்களைக் கங்கை யோடு

திகழ்தரு சடையுள் வைத்தார்

மங்கையைப் பாகம் வைத்தார்

மாமறைக் காட னாரே

- அப்பர்- தேவாரம்- 4.33.6





திருப்பழனம் வீணாதரர் 



மாமறைக் காடனார் பார்வதி பாகராய், உள்ளங்கையில் தீயையும், ஒரு கையில் வீணையையும் வைத்தார்! அறுவகைச் சமயங்களைப் படைத்து அடியவர்கள் தம் திருவடிகளை வழிபடுமாறு செய்தவராவார். விளங்குகிற சடையில் சந்திரனைக் கங்கையோடும் வைத்தவர் என்று திருமறைகாட்டு இறைவனை அப்பர் புகழ்கின்றார். 



கி.பி. 9 ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரர் காலத்தவரான சேரமான் பெருமாள் தனது ஞான உலாவில், அனைத்து தெய்வங்களும் தேவர்களும் சிவபெருமானைக் காண ஊர்வலமாக சென்றபொது, அங்கு வாசிக்கப்பட்ட இசைக் கருவிகளின் பட்டியலை தருகின்றார்.



சல்லரித்தாளம் தகுணிதந் தத்தளகம்

கல்லலகு கல்லவடம் மொந்தை –நல்லிலயத்

தட்டழி சங்கம் சலஞ்சலம் தண்ணுமை

கட்டழியாப் பேரி கரதாளம்

குடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ்

இடமாந் தடாரி படகம் – இடவிய

மத்தளர் துந்துபி வாய்ந்த முருடிவற்றால்

எத்திசை தோறும் எழுந்தியம்ப

 --திருக்கைலாய ஞான உலா- (7)


 



திருவிசலூர் வீணாதரர்





கொடும்பாளூர் மூவர் கோயில் வீணாதரர்



திருமால், பிரம்மா, முருகன், விநாயகர் ,சப்தமாதர்கள், துர்க்கை, வித்தியாதரர், இயக்கர், கின்னரர், கிம்புருடர் ஆகியோர் உள்பட அனைவரும் சிவபெருமானை காண ஊர்வலமாய் வர, உடன் இசைக்கும் இசைக்கருவிகளாக பின்வரும் இசைக் கருவிகளை சேரமான் பெருமாள் குறிப்படுகிறார்.



சல்லரி, தாளம் ,தகுணிதம் ,தத்தளகம் ,கல்லவடம், மொந்தை, தட்டழி, சங்கம் , சலஞ்சலம், தண்ணுமை, பேரி, கரதாளம், குட முழவு, கொக்கரை, வீணை, புல்லாங்குழல், யாழ், பம்பை, படகம், மத்தளம், துந்துபி, முருடு ஆகிய இசைக் கருவிகள் அங்கு வாசிக்கப்பட்டன.



இலக்கியங்களில் சிவபெருமான் இசைக்கும் இசைக் கருவிகளாக பேரி, மொந்தை தக்கை, வீணை, கல்லலகு, தமருகம் ஆகியவை காட்டப்பட்டிருந்தாலும், தமருகம்,உடுக்கை, வீணை, மத்தளம் ஆகியவற்றை மட்டுமே சிவன் இசைக்கும் இசைக்கருவிகளாக சிற்பிகள் படைத்திட்டனர்.



தமருகம் தெட்சிணாமூர்த்தியின் பின் கை கருவியாயிற்று. கங்காளமூர்த்தி சிற்பத்தில் உடுக்கை இடம் பெறலாயிற்று. விமானத்தின் தெற்கு கோட்டங்களில் சிலவும் ,சாலை நாசிகை கோட்டங்களில் சிலவும் வீணாதரர் இருப்பிடமாயிற்று. மத்தளம் இசைக்கும் சிவன் தூத்துகுடி மாவட்டம் கழுகுமலை சிவன் கோயிலில் மட்டுமே காணப்படுகின்றார்..



முற்கால சோழர் தளிகளில் சிற்பிகள் ,வீணையுடன் உள்ள விகர்பனை விரும்பிப் படைத்திட்டனர். வீணையுடன் உள்ள சிவனை ”வீணாதரர்” என்று சிறப்புப் பெயர் கொடுத்து இசைக்கருவியின் பெயரோடு சேர்த்து அழைத்தனர் 



மற்ற இசைக்கருவிகளுக்கு இல்லாத பெருமை இந்த வீணைக்கு மட்டும் ஏன் ஏற்பட்டது? என்ற வினா எழ ,விடை தேட புத்தக பக்கங்கள் புரட்டப்பட்டன. பலனில்லை. அறிஞர் பெருமகனாரிடம் (8) வினவியதில், விடை கீழ்க்கண்டவாறு கிடைத்தது. . 





திருப்புறம்பியம் வீணாதரர் 



வீணை, புல்லாங்குழல் மட்டுமே மென்மை தரும், மனதை உருக்கும் இசைக்கருவிகளாகும். மற்றவை பெரும்பாலும் அதிர்வு தரும் பேரிரைச்சல் தரும் கருவிகள் ஆகும். இவ்விரு மென்மை கருவிகளில் ஒன்று பெருமாளுக்குரியதாயிற்று; . மற்றொன்று சிவனுக்குரியதாயிற்று. 





திருச்சின்னம்பூண்டி வீணாதரர் 



வைணவக்கடவுள் கண்ணனுடன் புல்லாங்குழல் இணைக்கப்பட்டது. சிவனின் கைகளில் வீணை ஏறியது. கலைமகள் கைகளில் வீணை காட்டப்பட்டாலும், அதிகம் படைக்கப்படவில்லை



இப்படி படைக்கப்பட்ட வீணாதரர் அமர்ந்த நிலையிலும், நின்ற நிலையிலும் படைக்கப்பட்டனர். திருப்பூந்துருத்தி, குடந்தை, நார்த்தாமலை வீணாதரர்கள் அமர்ந்த நிலையிலும் திருவிசலூர் லால்குடி, துடையூர், உய்யகொண்டான் திருமலை, கீழையூர், கொடும்பாளுர், திருச்சின்னம்பூண்டி, திருப்பழனம், கரந்தை, திருப்புறம்பியம் ஆகிய இடங்களிலுள்ள சிற்பங்கள் நின்ற நிலையிலும் உள்ளவை.



கட்டடக்கலை, சிற்பக்கலை மற்றும் கல்வெட்டுகள் கொண்டு பார்த்தால், திருவிசலூர், திருச்சின்னம்பூண்டி , துடையூர் ,கரந்தை, திருப்புறம்பியம், மற்றும் நார்த்தாமலை தவிர மற்ற அனைத்தும் முதலாம் ஆதித்த சோழனுடைய காலமாகக் கருதலாம். திருவிசலூர், திருச்சின்னம்பூண்டி முதல்பராந்தகனுடையதாகவும், துடையூர் கண்டராதித்தனுடையதாகவும் நார்த்தாமலை முத்தரையருடையதாகவும் கருதலாம். கரந்தை, திருப்புறம்பியம் கோயில்களில் உள்ள வீணாதரர்கள், மூலக் கோயில்களில் ஆரம்ப கட்டுமான முகமண்டபத்தில், இடைக்காலத்தில் இடைச் செருகலாக புகுத்தப்பட்டிருக்கலாம்.



இக்கோயில்களிலுள்ள வீணாதரர்களை ஒப்பீடு செய்கையில் குடந்தை நாகேஸ்வரர் கோயில் வீணாதரர் முதல் தரமானது ஆகும். இச்சிற்பத்தில் வெளிப்படும் ஜீவன், உடல்கூறு அமைப்பு, அளவுகள், இசையை உள்வாங்கி அதை ரசித்து வெளிப்படுத்தும் முக பாவங்கள் யாவும் இதைப் படைத்திட்ட முகம் தெரியாத, முகவரி தெரியாத சிற்பியின் கைகள் காலத்தால் கரைந்துபோனாலும் அச்சிற்பியின் உள்ளத்தில் உள்வாங்கிய உருவங்களும், உணர்ச்சிகளும் உளி வழியே சென்று அப்படியே வெளிப்படுமாறு படைத்திட்ட அவர்தம் கலைத்திறமை 1100 வருடங்கள் சென்ற பிறகும், இன்னும் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது.. சிறிதளவு சிதைந்திருந்தாலும், இன்னும் இச் சிற்பம் நம் சிந்தையை விட்டு நீங்காமல் இன்னும்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறது. இன்னும் 1000 வருடங்கள் கழித்தும், இக்கோயில் உள்ளவரை இந்த தெய்வீக கலை இங்கு உறையும் நாகேசுவரத்து நாயகருடன் இணைந்து வாழ்ந்துகொண்டிருக்கும் 



அடிக்குறிப்புகள்

(1) பதினோராந் திருமுறை-காரைக்கால் அம்மையாரின் மூத்த முதல் திருப்பதிகம்-பாடல்-9

(2) சோழர் கால ஆடற்கலை-இரா.கலைக்கோவன் -பக்கம்-148

(3) சோழர் கால ஆடற்கலை-இரா.கலைக்கோவன் -பக்கம்-149

(4) சம்பந்தர் தேவாரம்-1-117-3

(5) சம்பந்தர் தேவாரம்-1-117-9

(6) சம்பந்தர் தேவாரம்-1-117-5

(7) பதினோராந் திருமுறை-சேரமான் பெருமாள் நாயனாரின் திருக்கைலாய ஞான உலா

(8) அறிஞர் இரா.கலைக்கோவனுடன் 12.6.2020 அன்று நடைபெற்ற அலைபேசி உரையாடலின்போது பெற்ற தரவு 

 


இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.