http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 45

இதழ் 45
[ மார்ச் 16 - ஏப்ரல் 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

குறத்தியறை
திரும்பிப் பார்க்கிறோம் - 17
அப்பர் என்னும் அரியமனிதர் - 2
இராஜராஜனின் வாசுதேவனே நம:
கழனி சூழ் பழனம் பதி
Alathurthali in Malayadipatti
1000 ரூபாய்த் திட்டம்
நினைத்தது நடந்தது
இதழ் எண். 45 > இலக்கியச் சுவை
நினைத்தது நடந்தது
இரா. கலைக்கோவன்
பரணர் பொல்லாதவர். அன்னி மிஞிலி எனும் சங்க நங்கை சூளுரைத்து வென்ற வரலாற்றை அகப்பாடல் ஒன்றில் அவர் பதிவுசெய்திருக்கும் முறையே அதற்குச் சான்று.

பூக்களை வாரி வரும் அருவிகள், விழுந்து நிறைக்கும் சுனைகளைப் பெற்ற மலையில், மழை மெலிதாக விழுந்து செடி, கொடி, மரங்களை நனைக்கும். இத்தகு நீர்வளத்தால் செழித்துக் குலுங்கும் மலர்களின் மது வளத்தையும் தோள்வலியால் பெற்றிடும் மகிழ்ச்சியையும் கொண்ட பேகனின் அந்த மணம் பொலிந்த மலை போல மணப்பவள் அவள். அழகிய, இனிய சொற்களைச் சிந்தி வந்த அவளால் நான் பூரித்து மகிழ்ந்ததை எண்ணிப் பார்க்கிறேன்.

அந்த மகிழ்வை எதற்கு இணையாக்கலாம்? தந்தைக்குக் கேடிழைத்தவர்களைத் தண்டிப்பேன் என்று சூளுரைத்து, கருதியது முடித்த மகிழ்வால் நிறைந்தாளே அன்னி மிஞிலி, அந்த மகிழ்ச்சியைத்தான், காதலியிடம் கலந்து வந்த என் மகிழ்விற்கு இணையாகக் கூறமுடியும்.

மிஞிலியின் வரலாறு வேண்டுமா? இதோ, சொல்கிறேன்.

'பழைமையான பசிய காட்டிலே பின்னியிருந்த கொடிகளை உழக்கி, எருதுகள் பல பூட்டிய ஏர்களால் உழுது, விளைநிலமாக்கிய சிவந்த புன்செய் நிலத்தில், இடவேண்டுவனவற்றைச் சரியாக இட்டதால், நிலம் பூரித்து விளைந்து தழைத்திருந்தது. பசிய இலைகள் பொருந்திய அந்தப் பயற்றுச் செடிகளை மிஞிலியின் தந்தை வளர்த்த பசு ஒன்று ஆசையோடு மேய்ந்து மகிழ்ந்தது.

நில உரிமையாளர்களான பழைமை வாய்ந்த ஊர் ஒன்றைச் சேர்ந்த கோசர்கள், பசு மேய்ந்து பயிர் கெட்ட செய்தி அறிந்து, பசுவின் உரிமையாளரைத் தேடினர். மிஞிலியின் தந்தை அவர்களை அணுகி, 'என் பசுவே மேய்ந்தது' என்று உண்மை புகன்று குற்றம் பொறுக்க வேண்டியும், அருளில்லாத அக்கோசர்கள் அவர் கண்களைப் பிடுங்கித் துன்புறுத்தினர்.

தகவல் பெற்ற மிஞிலி துடித்துப் போனாள். உண்மை சொல்லியும் துன்பப்படுத்திய கோசர்களைப் பழிவாங்காமல் கலத்தில் இட்டு உண்ணேன்; நல்ல உடைகளை அணியேன் என்று சூளுரைத்த மிஞிலி, சினத்தினால் நோன்பு மேற்கொண்டு துவன்றாள்.

காலம் கண் திறந்தது. வீரம் பொருந்திய படையும் போர்த்திறம் பெற்ற குதிரையும் கொண்டு வெற்றியே கண்டு வந்த குறுநிலத் தலைவனான திதியன், மிஞிலியின் துன்பமும் சூளும் வரலாறும் அறிந்தான். அவள் பக்கம் உண்மை இருப்பதை உணர்ந்தான். கோசர்களைத் தாக்கி அழித்தான். சூள் முடிந்த மிஞிலி சினம் மாறினாள். உண்மை பேசிய தந்தையின் உறுப்பழித்த கொடியவர் உருக்குலைந்த செய்தி அவளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.'

இப்போது சொல்லுங்கள், என் காதலி தந்த மகிழ்விற்கு மிஞிலியின் சூள் முடித்த மகிழ்வு சரியான ஒப்பீடுதானே? அகம் - 262.




அகம். 262.

தலைவன் கூற்று

பொருள் : இரவுக்குறிக்கண் தலைமகளைப் புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது
திணை : குறிஞ்சி
ஆசிரியர் : பரணர்

முதை படு பசுங் காட்டு அரில் பவர் மயக்கி,
பகடு பல பூண்ட உழவுறு செஞ் செய்,
இடு முறை நிரம்பி, ஆகு வினைக் கலித்து,
பாசிலை அமன்ற பயறு ஆ புக்கென,
வாய் மொழித் தந்தையைக் கண் களைந்து, அருளாது,
ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின்,
கலத்தும் உண்ணாள், வாலிதும் உடாஅள்,
சினத்தின் கொண்ட படிவம் மாறாள்,
மறம் கெழு தானைக் கொற்றக் குறும்பியன்,
செரு இயல் நல் மான் திதியற்கு உரைத்து, அவர்
இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய
அன்னி மிஞிலி போல, மெய்ம் மலிந்து,
ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
நுண் பல துவலை புதல்மிசை நனைக்கும்
வண்டு படு நறவின் வண் மகிழ்ப் பேகன்
கொண்டல் மா மலை நாறி,
அம் தீம் கிளவி வந்த மாறே.



this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.