http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 83

இதழ் 83
[ நவம்பர் 16 - டிசம்பர் 17, 2011 ]


இந்த இதழில்..
In this Issue..

நூலகம் மட்டும் என்ன விதிவிலக்கா?
பொய்யாமை அன்ன புகழில்லை - 1
கரூர்த் தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமணர்
சேக்கிழாரும் அவர் காலமும் - 1
துருவ நட்சத்திரம் - நூல் வெளியீடு
புத்தகத் தெருக்களில் - ஆனைக்கா கதாநாயகனும் நானும் - 1
இதழ் எண். 83 > கலையும் ஆய்வும்
சேக்கிழாரும் அவர் காலமும் - 1
மா.இராசமாணிக்கனார்


நாம் ஆராய்ச்சி செய்ய எடுத்துக்கொண்ட பொருள் "சேக்கிழாரும் அவர் மேற்கொண்ட வரலாற்றுச் செய்திகளும் பற்றிய ஆராய்ச்சி" என்பது. இதற்கு முதற்படியாக வேண்டுவது, 'சேக்கிழார் யார்? அவர் காலம் என்ன?' என்பது. இங்கு இதுபற்றி ஆராய்வோம்.

சேக்கிழார் புராணம்

சேக்கிழார் வரலாறு, இப்போதுள்ள பெரிய புராணப் பதிப்புகளின் முதலில் அல்லது ஈற்றில் சேர்க்கப்பட்டுள்ள 'திருத்தொண்டர் புராண வரலாறு' அல்லது சேக்கிழார் புராணம் என்பதில் காணப்படுகிறது. இதுவே சேக்கிழார் வரலாற்றைக் கூறவந்த முதல் நூலாகும். இதனிற் கூறப்படும் சேக்கிழார் வரலாறு இதுவாகும்.

"தொண்டை நாட்டு 24 கோட்டங்களுள் ஒன்றாகிய புலியூர்க் கோட்டத்தில் குன்றை வளநாட்டுக் குன்றத்தூரில் வேளாளர் மரபில் சேக்கிழார் குடியில் அருள்மொழித்தேவர் என்பவர் பிறந்தார். அவர் தம்பி பெயர் பாலறாவாயர் என்பது. அருள்மொழித் தேவரது புலமைச் சிறப்பு மிகுதிப்பட, அவர் குடிப்பெயரான 'சேக்கிழார்' என்று குறிக்கப்பட்டார். அவரது பெரும்புலமையைக் கேள்வியுற்ற 'அநபாயச் சோழவேந்தன்'(1) அவரைத் தனது முதல் அமைச்சராகக் கொண்டான். அவருக்கு உத்தமச் சோழப் பல்லவராயன் என்ற பட்டம் கொடுத்தான்.

"சேக்கிழார் சோழநாட்டுத் திருநாகேச்சரத்தில் உள்ள சிவபிரானை வழிபட்டு, அக்கோவிலைப் போன்றதொரு கோயிலைத் தமது குன்றத்தூரில் கட்டி, அதற்குத் திருநாகேச்சரம் என்று பெயரிட்டு மகிழ்ந்தார்.

"அக்காலத்தில் அரசன் சமணப் பெருங்காவியமாகிய சீவகசிந்தாமணியைப் படிக்கக்கேட்டு மகிழ்ந்தான். அதனைப் பலபடப் பாராட்டினான். அதுகண்ட சேக்கிழார், இளவரசனை நோக்கி, "சமணர் செய்த அப்பொய்ந்நூல் இம்மைக்கும் பயனில்லை; மறுமைக்கும் பயனில்லை. சிவகதை ஒன்றே இம்மை மறுமைகட்குப் பயனளிக்க வல்லது' என்றார். அதுகேட்ட அரசன், 'அங்ஙனமாயின், அச்சிவகதை ஏது? அது கற்றவர் யார்? அது சீவகசிந்தாமணியைப் போல இடையில் வந்த நவகதையோ? புராணமோ? முன்னூல் உண்டோ? அதனை இவ்வுலகிற் சொன்னவர் யார்? கேட்டவர் யார்? முறையாகக் கூறுக.' என்றான். உடனே சேக்கிழார், 'தில்லைப்பிரான் அடியெடுத்துத் தரச் சுந்தரர் பதினொரு திருப்பாட்டாக அடியவரைப் பற்றித் தொகை பாடினார். அதனைத் திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையார் விளக்கிக் கூற, அவர் அருள் பெற்ற நம்பியாண்டார் நம்பி, 'திருத்தொண்டர் திருவந்தாதி' என்றொரு நூல் பாடினர். அந்நூலைத் திருமுறைகண்ட இராசராச தேவர் (2) முதலியோர் பாராட்டினார்' என்றார். அதுகேட்ட சோழன் மகிழ்ந்து, 'அவ்வடியார் வரலாற்றைக் கூறுக' என்றான். சேக்கிழார் அடியார் வரலாறுகளைத் தொகை, வகைகளைக் கொண்டு விளங்கவுரைத்தார். கேட்டு மகிழ்ந்த மன்னன், 'இவ்வரலாறுகளைப் பெரியதோர் காவியமாக நீரே பாடியருள்க' என்று அவருக்கு வேண்டிய ஆள் உதவி பொருளுதவி தந்து தில்லைக்கு அனுப்பினான்.

"தில்லையை அடைந்த சேக்கிழார் கூத்தப் பெருமான் திருமுன் நின்று, 'அடியேன், புகழ்பெற்ற உம் அடியார் சிறப்பை எங்ஙனம் உரைப்பேன்! எனக்கு அடியெடுத்து உதவி அருள்க' என்று வேண்டினார். அவ்வமையம் 'உலகெலாம்' என்ற சொல் சேக்கிழார் செவியிற்பட்டது. அவர் அதனையே புராணத்திற்கு முதலாகக் கொண்டு பாடி, புராணத்தை முடித்தார். அரசன் தில்லை அடைந்தான். தில்லை ஆயிரங்கால் மண்டபத்தில் பெருஞ்சைவர் கூட்டத்தில் சேக்கிழார் தமது புராணத்தை அரங்கேற்றம் செய்தார். இறுதியில் அரசனால் பெருஞ்சிறபுப் பெற்றார்; 'தொண்டர் சீர் பரவுவார்' என்ற பெயரும் பெற்றார்.

"அரசன், சிறந்த பக்திமானாகிய சேக்கிழாரைத் தன்கீழ் வேலையில் வைக்க விரும்பாமல், அவர் தம்பி பாலறாவாயரைத் 'தொண்டைமான்' என்ற பட்டத்துடன் தொண்டை நாட்டை ஆளும்படி விடுத்தான். அவர், 'தொண்டை மண்டலம் நின்று காத்த பெருமாள்' (3) எனப்பெயர் பெற்றார்.

"பின்னர்ச் சேக்கிழார் தில்லையில் தங்கிக் கூத்தப் பெருமானைச் சேவித்துக் கொண்டிருந்து முக்தி பெற்றார். சேக்கிழார் மரபினர் இன்றுவரை அரசியல் உயர் அலுவலாளராக இருந்து வருகின்றனர். இனியும் இருப்பர்".

இவ்வரலாறு பற்றிய ஆராய்ச்சி

இவ்வரலாற்றில் பெரும்பாலும் நம்பத்தக்க செய்திகளே கூறப்பட்டுள்ளன. ஆயின், சில ஆராய்ச்சிக்கு உரியனவாகவும் உள்ளன. ஆதலின், அவற்றை முறையே ஆராய்தல் நமது கடமையாகும்.

1. சிந்தாமணியைச் சோழன் படித்துச் சுவைத்ததைக் காணப்பொறாத சேக்கிழார் அதனைத் 'திருட்டுச் சமணர் பொய்ந்நூல்' எனக் கூறியதற்கும், சிந்தாமணிக்கு மாறாக இவர் பெரியபுராணம் செய்தார் என்று கூறியிருந்ததற்கும், சேக்கிழார் புராணச் செய்யுளைத் தவிர வேறு சான்றில்லை. சேக்கிழார் பாடிய பெரியபுராணத்திலும் இதற்கு அகச்சான்று இல்லை. ஆயின், இதற்கு மாறாகச் சேக்கிழார் சிந்தாமணியை நன்றாய்ப் படித்தவர் என்பதற்குப் பெரியபுராணத்திலிருந்து பல சான்றுகள் காட்டலாம். இங்ஙனம் அந்நூலை நன்றாய்ப் படித்து அனுபவித்த பெரும் புலவராய சேக்கிழார் அதனை வெறுத்தனர் என்றோ, அதற்கு மாறாக அரசனைத் தூண்டிப் பெரியபுராணம் செய்தார் என்றோ கோடல் பொருத்தமன்று. எனவே, சேக்கிழார் புராணக்கூற்று அதனைப் பாடிய ஆசிரியரது மனப்போக்கையும் சமணத்தில் வெறுப்பும் சைவத்தில் அளவு கடந்த பற்றும் கொண்ட மனப்பண்பையுமே உணர்த்துவதாகும் (4) எனக்கோடலே பொருத்தமாகும்.

2. இப்புராண ஆசிரியர் பெரிய புராணத்தை நன்றாகப் படித்தவராகத் தெரியவில்லை. 'நாயன்மாருள் முடிமன்னர் அறுவர்' எனக்கூறி 'அவருள் இடங்கழியார் ஒருவர்' எனவும், 'குறுநில மன்னர் ஐவர்' எனக்கூறி, 'அவருள் காடவர்கோன் கழற்சிங்கன், ஐயடிகள் காடவர்கோன் என்பவர் இருவர்' எனவும் கூறியிருத்தல் பெருந்தவறு. (5) என்னை? இடங்கழியார் கொடும்பாளூரை ஆண்ட சிற்றரசர் (6) என்றும், பின்னவர் இருவரும் பல்லவப் பேரரசர் என்றும் சேக்கிழார் தமது புராணத்தில் தெளிவாகக் கூறியுள்ளார் (7) ஆதலின் என்க. சுந்தரர், தமது காலத்தவனான கழற்சிங்கனைத் தாம் பாடிய திருத்தொண்டத் தொகையில்,

"கடல்சூழ்ந்த உலகெல்லாம் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்"

என்று தெளிவாகக் கூறியுள்ளார். இதனையேனும் இத்திருத்தொண்டர் புராண ஆசிரியர் கவனித்தவராகத் தெரியவில்லை.

3. அறுபத்து மூன்று நாயன்மாருள்.

இயல், இசைத்தமிழ் வல்லோர் - அப்பர், சம்பந்தர், பேயார்
இசைத்தமிழ் வல்லோர் - நந்தனார், ஆனாயர், பாணர்
இயற்றமிழ் வல்லோர் - ஐயடிகள், திருமூலர், காரியார், சேரமான்பெருமாள்

என்று வகுத்துக்கூறும் இந்த ஆசிரியர் சுந்தரரை இப்பிரிவுகளிற் சேர்த்துக் கூறத் தவறிவிட்டார் (8). சுந்தரர், இயல், இசைத்தமிழ் வல்லோர் அல்லரா? நந்தனார் இசைத்தமிழில் வல்லார் என்பதற்குச் சான்று என்னை?

4. இங்ஙனமே, இந்த ஆசிரியர் பாடிய 'திருமுறை கண்ட புராணம்' என்ற நூலிலும் சில தவறுகள் உண்டு. அவற்றுள் குறிக்கத்தக்க பெருந்தவறு ஒன்றுண்டு. அஃதாவது, இராசராசன் (கி.பி 985-1014) காலத்துத் திருமுறை வகுத்த நம்பியாண்டார் நம்பி, அவன் மகனான இராசேந்திரன் (கி.பி. 1012-1044) புதிதாக உண்டாக்கிய கங்கைகொண்ட சோழபுரத்தில் கட்டப்பெற்ற கங்கைகொண்ட சோழீச்சுரம் பற்றிக் கருவூர்த் தேவர் பாடிய திருவிசைப்பாவை ஒன்பதாம் திருமுறையில் (இராசராசற்கு எதிரில்) சேர்த்தார் என்பது. மகன் தனது ஆட்சிக் காலத்திற் கட்டிய கோயிலைப் பற்றிய பாடல் ஒன்றை அம்மகனுடைய தந்தை காலத்துப் புலவர் அத்தந்தை முன்னிலையிலேயே மற்றத் திருமுறைகளை வகுத்தபொழுதே, தொகுத்தார் என்னன் எங்ஙனம் பொருந்தும்?

இங்ஙனம் இராசராசன் காலத்தவரும் பிற்பட்டவருமான புலவர் பாக்களை எல்லாம் இராசராசன் காலத்திலேயே நம்பி தொகுத்து முடித்தார் என்று திருமுறை கண்ட புராண ஆசிரியர் தவறாகக் கூறிவிட்டதால், (10) ஆராய்ச்சியாளர், 'திருமுறைகள் முதற் குலோத்துங்கன்' காலத்தில் தொகுக்கப்பட்டனவாதல் வேண்டும் (11) என்றும், நம்பி, 'திருவிசைப்பாவையும் தொகுத்தார்' என்று புராணம் கூறலால் அவர் இராசராசற்குப் பிற்பட்டவர் (12) என்றும் கருதலாயினர்.

(தொடரும்)

பின்குறிப்புகள்

1. Thiruthondar purana varalaaru, S.98
2. Ibid, S.24
3. Ibic, S.99
4. T.V.Kalyanasundarar edition Int., P.6
5. S.39, Tamil Pozhil, Vol 3, P.209
6. Idangazhiyaar puraanam, S.2&3
7. Kazharsingar puraanam, S 1&2; Aiyadigal puraanam, S 1,2&7
8. S.46
9. This will be discussed in chap. 2
10. V. 26-28
11. A.R.E. 1918, II, 34
12. S.I.I, II, P. 20
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.