![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 83
![]() இதழ் 83 [ நவம்பர் 16 - டிசம்பர் 17, 2011 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
என் இனிய கரிகாலக்கண்ணனுக்கு, காற்று இங்கே இனிமையாக வீசுகின்றது. ஆதித்தனின் மஞ்சள் ஒளி எங்களைச் சுகமாய்த் தாலாட்டுகிறது. சோழத் தென்றலும் காதோரமாய் இதமாய் வருடிச் செல்கிறது. நம் மங்கலச் செல்வியும், குலதெய்வமான காவிரியும் அரங்கனை மாலையிட்ட பெருமிதக் களிப்புணர்வில் சுழித்துக் கொண்டு கரைதொட்டு நடைபயில்கிறாள். நம் சோழநாடு சுகமே! நம் மக்களும் சுகமே! நானும் இங்கு சுகமே! நம் காவிரியும் சுகமே! நமது டாட் காம்மின் பிரம்மா கீற்று.காம்மில் வெளியான கட்டுரை ஒன்றினை எனக்கு அனுப்பியிருந்தார். கடந்த ஆண்டு இறுதியில் எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தாலும் வலிதாங்கிக் கொள்ளப் பழகிக் கொண்டுவிட்டேன். ஆனால், நமது டாட் காம்மின் பிரம்மா மிகவும் இளகிய மனம் கொண்டவர். அவரால் கீரனூர் திரு. ஜாகிர்ராஜா எழுதிய கட்டுரையைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை. மறுப்புத் தெரிவிக்க என்னைக் கேட்டுக்கொண்டார். அவர் சொல்வதை நான் ஒருபோதும் மறுப்பதில்லை என்பது உனக்கே தெரியும். எனக்கு கீற்று.காம் நண்பர்களைத் தனிப்பட்ட முறையில் தெரியாது. ஆனால், ஒடுக்கப்படும் மானுடம், நசுக்கப்படும் மனிதம் இவற்றுக்கெல்லாம் ஓங்கிக் குரல் கொடுப்பவர்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியே. ஆனாலும், அவர்களுக்கு ஏன் திரு. இராஜராஜசோழன் மேல் இவ்வளவு நியாயமற்ற கோபமோ தெரியவில்லை. இன்றளவும் தமிழனின் பெருமையை உலகமே வியந்து பாராட்டவைத்த அந்த மாமன்னன் பற்றிச் சரியான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் பல கட்டுரைகள் கீற்று.காம்மில் வெளியிட்டுள்ளார்கள். இது என்ன நியாயம் என்று புரிபடவில்லை எனக்கு. திரு. ஜாகிர்ராஜா அவர்களின் கட்டுரையான "தஞ்சை பெரியகோயில் - ஒரு பொதுப்பார்வை" பல வரலாற்றுப் பிழைகளின் தொகுப்பாய் அமைந்துள்ளது. இராஜராஜேசுவரத்து இன்றைய புல்வெளிதான் அன்றைய தளிச்சேரி என்பதற்குத் தொல்லியல் ஆதாரம் ஏதேனும் உள்ளதா? தளிச்சேரிப் பெண்கள் நானூறு பேரும் வதைபடும் வாழ்க்கையை வாழ்ந்தனர் என்பது ஒரு மிகப்பெரிய வரலாற்றுப் பிழையாகும். அவர்கள் மிகவும் மேன்மையான முறையிலேயே வாழ்ந்தனர் என்பது கல்வெட்டுகள் சொல்லும் நிஜங்கள். இப்பெண்கள் திருக்கோயிலுக்கு வழங்கிய கொடைகள், நிவந்தங்கள் இவர்களின் செல்வச் செழிப்பான வாழ்வுநிலைக்குச் சான்றாகும். சமுதாயத்தாலும், சோழப் பேரரசாலும் நல்ல மதிப்புடனும் மரியாதையுடனுமே இவர்கள் நடத்தப்பட்டனர். மாபெரும் சோழப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகே இவர்களின் வாழ்வுநிலையில் மாற்றம் ஏற்பட்டது. (வரலாறு.காம்மில் வெளியாகியுள்ள ஆடலரசிகள் 400வர் கட்டுரையைப் படிக்கவும்). மாமன்னன் இராஜராஜசோழன் மட்டும் தமிழக வரலாற்றில் விருதுப் பெயர்களைச் சூட்டிக்கொள்ளவில்லை. அவருக்கு முன்னால் தமிழ்நாட்டை ஆண்ட பல்லவ வேந்தர்களான மகேந்திரவர்மனும், இராஜசிம்மனும் பல விருதுப் பெயர்களைக் கொண்டிருந்தனர். பண்டிதச் சோழன் என்பது திரு. இராஜேந்திர சோழனின் விருதுப் பெயராகும். சிற்பங்கள் செதுக்கியபின் சிற்பியின் கண்கள் இராஜராஜசோழனால் குருடாக்கப்பட்டன என்ற வதந்தி உலவுவதாக திரு. ஜாகிர்ராஜா எழுதியுள்ளார். வரலாற்றில் மாபெரும் பிரமாண்டக் கலைப்பொக்கிஷங்களை உருவாக்கிய அனைத்து மரபுகளின் பேரரசர்களும் இவ்வாறு சிற்பிகளை ஊனமாக்கியதாக ஒரு "வாடிக்கைக் கதை" உள்ளது. இதற்கு திரு. இராஜராஜசோழனும் விதிவிலக்கல்ல. தாஜ்மகாலை எழுப்பிய திரு. ஷாஜகானும் விதிவிலக்கல்ல. இராஜராஜேசுவரத்து ஓவியங்களை ஆராயும்போது ஏன் ஓவியர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என்பது ஒரு புதிர்தான். ஆனால், அவ்வோவியங்களில் இராஜராஜனோ, அவர் மனைவிமார்களோ, குருநாதரோ இடம்பெறவில்லை என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும். (தொடரும்) this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |