![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 83
![]() இதழ் 83 [ நவம்பர் 16 - டிசம்பர் 17, 2011 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
காவிரிக் கரையில் பிறந்து வளர்ந்த அனைவருக்கும் சிறுவயது முதலே தெரிந்த புராணக்கதை - சிலந்தியும் யானையும் சிவவழிபாடு செய்த திருத்தலம் திருவானைக்கா பற்றியது. கல்லணை எடுத்த கரிகாலனைப் போல் கோச்செங்கணனும் இங்கு மிகப் பிரபலம். ஜம்புகேசுவரர் ஆலயத்தின் திருச்சுற்றில் கோச்செங்கணனுக்கு ஒரு சிறிய அளவிலான சன்னதி ஒன்றுள்ளது. திருக்கோயில் தலபுராணக் கதையின் கதாநாயகன் என்ற அளவிலே மிகவும் அறிமுகமானவர் திரு. கோச்செங்கட்சோழன் அவர்கள். நமக்குச் சோழ அரசனாய் அறிமுகமான அவர் 63 நாயன்மார்களில் ஒருவராக இடம்பிடிக்கிறார் நம் மனதில். திருத்தொண்டர் தேனமுதத்தில், "தென்னவனாய் உலகாண்ட செங்கணனார்க்கு அடியேன்" என்ற வரிகள் அவர் புகழ் பேசும். யார் இந்தக் கோச்செங்கணான்? வரலாற்று ஆய்வாளர்களால் தமிழ்நாட்டின் இருண்டகாலம் (இன்னும் எத்தனை காலத்திற்கு?) என்று சொல்லப்படும் காலகட்டத்தில் இம்மன்னன் சோழநாட்டை ஆண்டுள்ளார். பின்னாளில் பெரியதிருமொழிப் பாசுரங்களில் திருமங்கையாழ்வாரால் சிறப்பாகப் பாடப்படுகிறார். "இருக்கிலங்கு திருமொழிவாய் எண்டோள் ஈசற்கு எழில்மாடம் எழுபதுசெய் துலகம் ஆண்ட திருக்குலத்து வளர்ச் சோழன்" சங்கச் சோழனா? சிலந்திச் சோழனா? இருண்டகாலமா? வீரச்சோழர் புகழ் ஓங்கிய "ஒளிர்ந்த" காலமா? வரலாற்றுத் தரவுகள், இலக்கியத் தரவுகள், கோயில் களப்பணிகள் எனப் பல முயற்சி கொண்டு விடைகண்டுள்ளார் டாக்டர். திரு. கலைக்கோவன் தம் நூலான "மலைக்க வைக்கும் மாடக்கோயில்கள்"தனில். 384 பக்கங்களும் அறிவு வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் வரலாற்றுத் தரவுகள் ஏராளம். "மாடக்கோயில்களும் மாமன்னரும்" என்ற முதல் அத்தியாயத்தில், மாடக்கோயில்கள் என்றால் என்ன என்ற விளக்கம் மிக எளிமையாகவும் சிறப்பாகவும் சொல்லப்பட்டுள்ளது. மன்னர் மன்னனாய் விளங்கும் கோச்செங்கணான் பற்றிய ஆய்வும் மிக அற்புதம். தமிழகக் கட்டடக்கலை வரலாற்றில் புதிய திருப்பமான "மாடக்கோயில்" என்னும் கட்டமைப்பு பற்றிய விளக்கம் மிகவும் அருமை. எம்மைப் போன்ற மாணாக்கர்க்கு மிகமிகப் பயன் நல்கும் பக்கங்கள். தஞ்சை பசுபதீசுவரர் கோயில் முதல் நாகைப் பெருங்கடம்பனூர் மாடக்கோயில் வரை தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இடம்பெறும் 32 மாடக்கோயில்கள் பற்றிய விரிவான தகவல்களை இந்நூலில் நாம் படிக்கலாம். கட்டடக்கலையை வர்ணிக்கும் பகுதிகள் மிகவும் அற்புதம். நம் காட்சிப்புலத்தில் ஒவ்வொரு மாடக்கோயிலும் பிரம்மாண்ட விசுவரூபம் எடுக்கின்றன. விமான அமைப்புகள், பாதபந்தத் தாங்குதளங்கள், சுவர்ப் பத்திகள், கோட்டங்கள், வலபிகள், பூதவரிகள் எனக் கட்டடக்கலையின் அனைத்துக் கூறுகளும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. சிற்பத் தொகுதிகள், செப்புத் திருமேனிகள், கல்வெட்டுகள் என வரலாறு பேசும் அனைத்தும் நுணுக்கமான ஆய்வுக்கு உட்பட்டுள்ளன டாக்டரின் நூலில். "மாடக்கோயில்கள் - ஒப்பாய்வு" என்ற அத்தியாயம் பல வரலாற்றுத் தரவுகளின் கருவூலமாய் அமைந்துள்ளது. இதுபோன்ற நூல்கள் வரலாற்று மாணவர்களுக்குப் பாடப்புத்தகமாய் அமையவேண்டும். அந்நாள் எந்நாளோ!! (தொடரும்) this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |