![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 92
![]() இதழ் 92 [ பிப்ரவரி 2013 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
தேடலில் தெறித்தவை
சங்கராமநல்லூர் யாழ்வல்லான் தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளில் பதிவாகியுள்ள இசைத்தரவுகளைத் தேடிக் கொண்டிருந்தபோது தெறித்த ஒரு முத்தே யாழ்வல்லான் கல்வெட்டு (தெ. க. தொ. 26: 155). கோயமுத்தூர் மாவட்டம், உடுமலைப்பேட்டைவட்டத்தைச் சேர்ந்த சங்கராமநல்லூர்ச் சோழீசுவரர் கோயிலின் வடசுவரில் வெட்டப்பட்டுள்ளதாகப் பதிவாகியிருக்கும் விக்கிரமசோழரின் இருபத்துமூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி. பி. 1277-78) யாழ்வல்லார் ஒருவரைக் கொடையாளராகச் சுட்டுகிறது. அரசரின் முதலிகளுள் ஒருவராகத் திகழ்ந்த இந்த யாழ்வல்லான் பாண்டியனான விக்கிரமசோழ இருங்கோளன் கரைவழிநாட்டுக் கொழுமத்தில் இருந்த ஆளுடையார் வீரசோழீசுவரம் உடையாருக்கு தம் நலத்திற்காகத் திருக்கார்த்திகை அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தினார். யாழ்வல்லான் என்ற குறிப்புக் கொண்டு இவர் யாழ் இசைப்பதில் வல்லவராக விளங்கியதாகக் கருத இடமுண்டு. திருக்கார்த்திகை அன்று இறைவன் திருமுன் விளக்கேற்றித் திருப்பண்ணிகாரம், விஞ்சனங்கள், அமுதுபடி அளித்து, இறைத்திருமேனியை ஊரில் எழுந்தருளுவிப்பதற்காக யாழ்வல்லான் நிலக்கொடை வழங்கினார். இக்கொடை கீரனூர் நிலம், பூலுவன் எம்பெருமான் நிலம், சிறுகுளத்து வீரபாண்டி நிலம், கொங்கூரில் பத்தன் நிலம் முதலிய பல நிலத்துண்டுகளை உள்ளடக்கியிருந்தது. இந்நிலத்துண்டுகளின் எல்லைகளைச் சுட்டும்போது பலர் பெயரில் அமைந்த நிலங்களும் யாழ்வல்லானுக்குச் சொந்தமான ஊராண்மைக் காணியும் ஊராண்மைக் கண்ணாற்றுக் கவரும் குறிக்கப்பட்டுள்ளன. உரிமையாளர், அவர்தம் ஊர்களின் பெயர் களுடன் எல்லை நிலங்கள் சுட்டப்பட்டுள்ளன. பல்லவரையன் நிலம், குலோத்துங்கப் பல்லவரையன் நிலம், பிள்ளையன் செய், சிங்காதன் செய், ஞானவேந்தன் செய், கோவன் நக்கன் செய், சேனை அங்கராயன் செய், சேரமான் தோழன் செய் என்பன ஆட்பெயர்கள் மட்டும் கொண்டிருக்க, திருவானைக்காவுடையான் செய், பந்தலூர் ஊரான் மகன் உடையான் செய், கீரனூர் மருத்துக் கோழி ஆண்டான் செய் ஆகியன ஊர்ப்பெயர்களும் கொண்டுள்ளன. சேரமான் தோழன், ஞானவேந்தன் எனும் பெயர்கள் சமுதாயத்தில் நிலவிய சமயச் சிந்தனைகளை வெளிப்படுத்துமாறு உள்ளன. ஒரு நிலத்துண்டு கொம்பூதிச் செய் என்று அழைக்கப்பட்டுள்ளது. கோயிலில் கொம்பூதிய கலைருக்கு இந்நிலத்துண்டு வழங்கப்பட்டிருக்கலாம். கொடைக் கல்வெட்டாகவே இருந்தபோதும் இந்த முப்பத்தாறு வரிக் கல்வெட்டு, பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் உடுமலையில் வாழ்ந்த சமுதாயத்தின் பல முகங்களைப் படம்பிடிக்கிறது. வரலாறு என்னும் வளமான நதி இது போன்ற துளிகளில் இருந்துதான் உற்பத்தியாகிறது. this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |