http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 112

இதழ் 112
[ அக்டோபர் 2014 ]


இந்த இதழில்..
In this Issue..

கண்கள்
Arivar Koil - 2
வலிவலம்
Urar of Thiruchirappalli District
தேடலில் தெறித்தவை - 16
வன்பார்த்தான் பனங்காட்டூர் திருக்கோயில்
திருவையாறு தென்கைலாயம்
சேரன் சூடிய பனம்பூவே!
இதழ் எண். 112 > கலையும் ஆய்வும்
காவிரியின் தென்கரை ஊர்களுள் ஒன்றான வலிவலம், கச்சணம் கீழ்வேளூர்ச் சாலையில் தண்டலை நீள்நெறியில் இருந்து 5 கி. மீ. தொலைவில் உள்ளது. இங்குள்ள மனத்துளநாதர் திருக்கோயில்[1] இறைவனை சம்பந்தர் இரண்டு பதிகங்களாலும் நாவுக்கரசர் ஒரு பதிகத்தாலும் சுந்தரர் ஒரு பதிகத்தாலும் பாடியுள்ளனர்.[2]

கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்த மாடக்கோயிலைத் தெற்கு, மேற்கு, வடக்கு முத்திசைகளிலும் குளம் சூழ்ந்துள்ளது. கோயில் வளாகத்திற்கான முதல் நுழைவாயில் எளிமையான அமைப்புடன் மேலே சாலையும் கர்ணகூடங்களும் கொண்டு அமைந்துள்ளது. இவ்வாயிலுக்கும் இரண்டாம் கோபுர வாயிலுக்கும் இடைப்பட்ட சுற்றில் வட கிழக்கில் பிடாரிக்கோயிலும் வடக்கில் மாழையொண்கண்ணி என்றழைக்கப்படும் இறைவியின் இருதள வேசர விமானமும் அமைந்துள்ளன.


வலிவலம் விமானமும் வெற்றுத்தளமும்


பிடாரிக் கோயில்

ஒருதளச் சாலை விமானத்தில் உத்குடியில் உள்ள பிடாரி எட்டுக்கையள். வலச்செவியில் மகரகுண்டலமும் இடச்செவியில் பனையோலைக் குண்டலமும் அணிந்துள்ள தேவியின் இடப்பாதம் கீழே விழுந்துள்ளவரின் தலை மேல் அழுந்தப் பதிந்துள்ளது. அரும்புச்சரம், சிற்றாடை அணிந்துள்ள அம்மையின் கைகளில் கேடயம், மணி, தலையோடு, வஜ்ரம், கத்தி, உடுக்கை. இரண்டு கைகளில் உள்ள கருவிகளை அடையாளம் காணமுடியவில்லை. இப்பிடாரியின் அருகிலேயே மற்றொரு பிற்காலப் பிடாரிச் சிற்பமும் உள்ளது.

அம்மன் கோயில்

முகமண்டபம், விமானம் எனத் தென்பார்வையாக உள்ள அம்மன் கோயிலின் முன்மண்டபக் கூரையை முச்சதுர, இருகட்டுத் தூண்கள் பூமொட்டுப் போதிகைகளின் உதவியோடு தாங்குகின்றன. தூண்களின் கீழ்ச்சதுரம் ஒன்றில் வணக்க முத்திரையில் காணப்படும் ஆடவர் மண்டபத்தை எடுத்தவராகலாம். முன்மண்டபத்தை அடுத்துள்ள சிறுமண்டபத்தின் நுழைவாயில் இருபுறத்தும் காவற்பெண்டுகளைப் பெற்றுள்ளது. அடுத்து முகமண்டபமும் கருவறையும் உள்ளன. கருவறையில் இறைவி சமபங்கத்தில் சடைமகுடம், பட்டாடை இவற்றுடன், பின்கைகளில் அக்கமாலை, மலர்மொட்டு ஏந்தி, முன்கைகளைக் காக்கும் குறிப்பிலும் அருட்குறிப்பிலும் கொண்டுள்ளார்.

இருதள வேசரமாய் அமைந்துள்ள விமானத்தின் கீழ்த்தளம், துணைத்தளம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், பூமொட்டுப் போதிகைகள், கூரையுறுப்புகள் கொண்டு அமைந்துள்ளது. புறந்தள்ளியுள்ள சாலைப்பத்திகளின் கோட்டப் பஞ்சரங்கள் வெறுமையாக உள்ளன. சுதையாலான அம்மன் உருவங்களைப் பெற்றுள்ள கீழ்த்தள ஆரச்சாலைகளும் புறந்தள்ளியுள்ளன. இரண்டாம் தளத்தையடுத்துக் காணப்படும் கிரீவகோட்டங்களில் சுதையாலான அம்மன் வடிவங்கள். விமானம் ஒத்த கட்டமைப்பிலுள்ள முகமண்டபக் கோட்டங்களும் வெறுமையாக உள்ளன. முகமண்டபத்தருகே உள்ள ஒருதள வேசர விமானத்தில் சண்டேசுவரி தெற்குப் பார்வையாக இடம்பெற்றுள்ளார். முன்மண்டபத்தின் புறச்சுவர் தாங்குதளமற்று, நான்முக அரைத்தூண்கள் அணைத்த நிலையில் கூரையுறுப்புகள் பெற்றுள்ளது. மண்டபக் கூரையின் வடகிழக்கு, வடமேற்கு மூலைகளில் வேசர கிரீவ, சிகரம் காட்டப்பட்டுள்ளது.

சுற்று

முத்தளக்கோபுரத்துடன் விளங்கும் இரண்டாம் நுழைவாயிலை அடுத்துள்ள சுற்றில் தென்மேற்கில் வலம்புரி விநாயகர் திருமுன்னும் மேற்கில் திருத்தொண்டர் மண்டபம், ஆறுமுகன் திருமுன், யானைத்திருமகள் திருமுன், காசிப்பெருஞ்சிவனார் திருமுன் இவையும் உள்ளன. சுற்றின் வடக்கில் ஒருதள வேசர விமானத்தில் சண்டேசுவரர் திகழ, கிழக்கில் ஒன்பான் கோள்கள். சுற்றின் நடுவில் இறைவன் விமானமும் அதன் தென்புறத்தே சோமாஸ்கந்தர் விமானமும் உரிய மண்டபங்களுடன் வெற்றுத்தளத்தின் மீது அமைந்துள்ளன.

வெற்றுத்தளம்

2. 62 மீ. உயரமுள்ள வெற்றுத்தளம் கிழக்கிலும் சோமாஸ்கந்தர் திருமுன்னைத் தாங்கியிருக்கும் தென்புறத்தும் இறைவன் திருமுன் பெருமண்டபத்தைத் தாங்கியிருக்கும் வடபுறத்தும் முறையான தாங்குதளம் இன்றி நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவருடன் வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் பெற்று அமைந்துள்ளது. இறைவன் விமானம், முகமண்டபம் இவற்றைத் தாங்கியிருக்கும் பகுதியில் தெற்கிலும் மேற்கிலும் வடக்கிலும் வெற்றுத்தளத்தின் கட்டமைப்பு உபானம், ஜகதி, பிரதிவரி, வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள், ஆழமற்ற கூடுவளைவுகளுடன் கபோதம் என மாறுபட்டுள்ளது. இத்தாங்குதளத்தில் குமுதம் இடம்பெறவில்லை.

விமானத்திற்கான 2. 45 மீ. உயரமுள்ள வெற்றுத்தளத்தின் கர்ணபத்திகளும் உயரக் குறைவான நான்முக அரைத்தூண்கள் அணைத்துள்ள சாலைப்பத்திகளும் ஒரே அளவில் புறந்தள்ளியுள்ளபோதும் உருளை அரைத்தூண்களால் அணைக்கப்பட்ட கோட்டம் அமைந்துள்ள நடுப்பகுதியில் சாலைப்பத்தி கூடுதலாக வெளித்தள்ளியுள்ளது. பத்திகளுக்கு இடைப்பட்ட ஒடுக்கங்களில் குடப்பஞ்சரங்கள். கோட்டங்களில் தெற்கில் ஆலமர்அண்ணலும் மேற்கில் முருகனும் வடக்கில் நான்முகனும் உள்ளனர்.

வீராசனத்தில் உள்ள ஆலமர்அண்ணலின் பின்கைகளில் பாம்பும் தீச்சுடரும் அமைய, இட முன் கை சுவடி ஏந்தியுள்ளது. வல முன் கை காக்கும் குறிப்புக் காட்டுகிறது. இறைவனின் இருபுறத்தும் முனிவர்கள். மேற்கிலுள்ள முருகன் பின்கைகளில் சக்தி, வஜ்ரம் கொண்டு சமபங்கத்தில் நின்று காத்து, அருள் செய்கிறார். முன்னால் மயில். நான்முகன் அக்கமாலையும் குண்டிகையும் பின்கைகள் ஏந்த, வல முன் கையால் காத்து, இட முன் கையைக் கடியவலம்பிதமாகக் கொண்டுள்ளார்.

முகமண்டபத்திற்கான வெற்றுத்தளம் விமானத்திற்கான வெற்றுத்தளக் கட்டமைப்பிலேயே இருந்தபோதும் அதில் சாலைப் புறந்தள்ளல் மட்டுமே இடம்பெற்றுள்ளது. கோட்டங்கள் வெறுமையாக உள்ளன.

விமானம்

5. 64 மீ. பக்கமுடைய சதுரமாக அமைந்துள்ள மனத்துளநாதர் விமானம் இருதள வேசரமாகும். அதன் கீழ்த்தளம் பிரதிபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நாகபந்தங்கள் பெற்ற சதுரபாதங்களின் மீதெழும் எண்முக அரைத்தூண்கள் சூழ்ந்த சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள், கூடுவளைவுகளுடனான கபோதம் பெற்றுள்ளது. புறந்தள்ளியுள்ள சாலைப்பத்திகளுக்கும் கர்ணபத்திகளுக்கும் இடைப்பட்ட ஒடுக்கங்களில் குடப்பஞ்சரங்கள். விமானத்தின் சாலைப்பத்திகள் வெற்றுத்தளச் சாலைப்பத்திகள் போல் கோட்டப்பகுதியில் கூடுதல் புறந்தள்ளல் கொள்ளாமை குறிப்பிடத்தக்கது. உருளை அரைத்தூண்கள் அணைத்துள்ள கோட்டப்பஞ்சரங்களில் தென்புறத்தே ஆலமர்அண்ணலும் மேற்கில் விஷ்ணுவும் வடக்கில் நான்முகனும் உள்ளனர்.

முயலகன் மீது வலப்பாதத்தை ஊன்றி, வீராசனத்தில் உள்ள ஆலமர்அண்ணல் சடைமகுடம், மகர, பனையோலைக் குண்டலங்கள் பெற்று, இடப் பின் கையில் தீச்சுடர் ஏந்தியுள்ளார். நந்தியின் தலை மேலுள்ள வலப் பின் கை அக்கமாலையும் பாம்பும் கொள்ள, இட முன் கையில் சுவடி. வல முன் கை சின்முத்திரையில் உள்ளது. மேற்கில் சமபங்கத்தில் உள்ள விஷ்ணு கிரீடமகுடம், பட்டாடை அணிந்து, பின்கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தியுள்ளார். வல முன் கை காக்கும் குறிப்புக் காட்ட, இட முன் கை கடியவலம்பிதமாக உள்ளது. வடக்கில் சமபங்கத்தில் உள்ள நான்முகன் பின்கைகளில் அக்கமாலை, குண்டிகை கொண்டு, இட முன் கையைக் கடியவலம்பிதத்திலும் வல முன் கையைக் காக்கும் குறிப்பிலும் வைத்துள்ளார்.

கீழ்த்தளக் கூரையின் மீதுள்ள ஆறங்க ஆரஉறுப்புகளை அடுத்து, உயரக் குறைவான இரண்டாம் தளமும் வேசர கிரீவமும் சிகரமும் செங்கல் கட்டுமானங்களாக அமைந்துள்ளன. இரண்டாம் தளத்தில் சுவர்ப்பஞ்சரங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. சாலை, கிரீவகோட்டங்களில் தெற்கில் சிவபெருமானும் மேற்கில் தேவியருடன் விஷ்ணுவும் வடக்கில் தேவியருடன் நான்முகனும் இடம்பெற்றுள்ளனர். தெற்கு ஆரச்சாலையில் வீணாதரர் நின்றகோலத்தில் இசையெழுப்ப, கிரீவகோட்டத்தில் ஆலமர்அண்ணல் வீராசனத்தில் உள்ளார். விஷ்ணுவும் நான்முகனும் ஆரச்சாலைகளில் நின்றகோலத்திலும் கிரீவகோட்டத்தில் சுகாசனத்திலும் காட்சிதருகின்றனர்.

முகமண்டபம்

விமானத்தை ஒத்த கட்டமைப்புப் பெற்றுள்ள முகமண்டபத்திற்கும் விமானத்திற்கும் இடைப்பட்ட ஒடுக்கம் 1. 71 மீ. அளவில் அகலப்பட்டுள்ளது. முகமண்டபத்தின் தென்கோட்டத்தில் பிள்ளையாரும் வடகோட்டத்தில் மகிடாசுரமர்த்தினியும் உள்ளனர். வல முன் கையில் தந்தமும் இட முன் கையில் மோதகமும் வைத்து, இடம்புரியாக உள்ள பிள்ளையாரின் பின்கைகளில் அங்குசம், பாசம். மகிடனின் தலை மீது நிற்கும் இறைவியின் பின்கைகளில் சங்கு, சக்கரம். கரண்டமகுடம், பட்டாடை அணிந்துள்ள அம்மையின் வல முன் கை காக்கும் குறிப்புக் காட்ட, இட முன் கை கடியவலம்பிதத்தில் உள்ளது.

முகமண்டபத்தை அடுத்துள்ள பெருமண்டபம் பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் பெற்றுள்ளது. இதற்கும் முகமண்டபத்திற்கும் இடைப்பட்ட 2 மீ. அகல ஒடுக்கத்தில் சாளரம் பெற்ற கோட்டப்பஞ்சரம் இடம்பெற்றுள்ளது.

சோமாஸ்கந்தர் திருமுன்

இருதள வேசரமாக உள்ள சோமாஸ்கந்தர் விமானத்தின் கீழ்த்தளம் பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, எண்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் பெற்றுத் தெற்கிலும் மேற்கிலும் புறந்தள்ளியுள்ள சாலைப்பத்தியில் பஞ்சர அலங்கரிப்புப் பெற்ற கோட்டங்கள் கொண்டுள்ளது. உருளைத் தூண்களால் தழுவப்பட்டுள்ள தெற்குக் கோட்டத்தில் ஆலமர்அண்ணல் இடம்பெற்றுள்ளார். மேற்கு, வடக்குக் கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. பின்கைகளில் பாம்பும் தீயகலும் கொண்டு, வீராசனத்தில் உள்ள இறைவனின் வல முன் கை காக்கும் குறிப்புக் காட்ட, இட முன் கையில் சுவடி.

சாலைப்பத்தியின் தாங்குதளத்தில் உருள்குமுதமும் பட்டிகைக்கு மாற்றாகக் கபோதமும் உறுப்பு வேறுபாடுகளாய் இடம்பெற்றுள்ளன. கீழ்த்தள ஆரஉறுப்புகள் ஆறங்கம் கொள்ள, இரண்டாம் தளம், கிரீவம், சிகரம் இவை செங்கல் கட்டுமானங்களாக உள்ளன. சாலையிலும் கிரீவகோட்டத்திலும் தெற்கில் ஆலமர்அண்ணலும் மேற்கில் விஷ்ணுவும் வடக்கில் நான்முகனும் இடம்பெற்றுள்ளனர். விமானத்தை ஒத்துள்ள கட்டமைப்புடன் விளங்கும் முகமண்டபத்தின் கோட்டங்களற்ற சுவரை நான்முக அரைத்தூண்கள் அணைத்துள்ளன. விமானத்திற்கும் முகமண்டபத்திற்கும் இடையிலுள்ள ஒடுக்கத்தில் குடப்பஞ்சரங்கள் உள்ளன. இம்மண்டபத்தின் முன்னால் இதற்கும் இறைவன் வளாகத்திற்கும் பொதுவாக அமைந்துள்ள முன்மண்டபம் தெற்கு, வடக்கு, கிழக்குப் பக்கங்களில் சிறு தடுப்புடன் திறப்பாக உள்ளது.

முன்மண்டபம்

மனத்துளநாதர் திருமுன், சோமாஸ்கந்தர் திருமுன் இவை இரண்டிற்கான வாயில்களைப் பெற்றுள்ள முன்மண்டபம் கிழக்கில் பதினாறு படிகள் பெற்று உயர்ந்துள்ளது. அதைத் தாங்கும் வெற்றுத்தளம் சோமாஸ்கந்தர் திருமுன் வெற்றுத்தளம் போலவே அமைந்துள்ளது. படிக்கட்டருகே முன்றிலுடன் பிள்ளையார் வீற்றிருக்கும் மண்டபத் திருமுன். அதற்கும் படிக்கட்டுகளுக்கும் இடையில் வெற்றுத்தளத்தில் உள்ள கோட்டப்பஞ்சரமும் படிகளை அடுத்துத் தென்புறத்தே உள்ள கோட்டப்பஞ்சரமும் வெறுமையாக உள்ளன.

நாற்சதுர, முக்கட்டு உடல் பெற்ற தூண்களால் தாங்கப்படும் கூரை கொண்டுள்ள முன்மண்டபத்தின் தெற்கிலும் வடக்கிலும் மேல் சுற்றுக்கான வாயில்கள் உள்ளன. இம்மண்டபத்தின் வடபுறத்தே உள்ள ஒருதள நாகர விமானத்தில் ஆடவல்லானும் உமையும் இடம்பெற்றுள்ளனர். மண்டபத்தின் நடுவே தென்பார்வையாக நந்தி நிறுத்தப்பட்டுள்ளது. மண்டபத்தின் தென்புறம் சோமாஸ்கந்தர் திருமுன் வாயிலும் மண்டபத்தின் மேற்கில் இறைவன் திருமுன் வாயிலும் அமைந்துள்ளன.

சோமாஸ்கந்தர் திருமுன்

கபோத அமைப்புடனான வாயில் பெற்ற அகலமானதொரு முகமண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் சோமாஸ்கந்தர் தொகுதி இடம்பெற்றுள்ளது. சற்றே இட ஒருக்கணிப்புடன் சுகாசனத்தில் உள்ள இறைவனின் பின்கைகளில் மழுவும் மானும். சடைமகுடம், மகர, பனையோலைக் குண்டலங்கள், அரும்புச்சரம், முப்புரிநூல், தோள், கை வளைகள், சிற்றாடை, பாதசரம் அணிந்துள்ள இறைவனின் வல முன் கை காக்கும் குறிப்புக் காட்ட, இட முன் கை கடகத்தில் உள்ளது.

கரண்டமகுடம், நீள்வெறுஞ்செவிகள், அரும்புச்சரம், தோள், கை வளைகள், பட்டாடை அணிந்து சுகாசனத்தில் உள்ள இறைவியின் வலக்கை காக்கும் குறிப்பில் இருக்க, இடக்கை கடகத்தில் உள்ளது. இடையிலுள்ள முருகன் கரண்டமகுடராய் இருகைகளிலும் மலரேந்தி இருபாதங்களையும் திரயச்ரத்தில் திருப்பி, நேர்ப்பார்வையராய் நிற்கிறார்.

இறைவன் திருமுன்

இறைவன் திருமுன் முதல் மண்டப வாயில் நிலைகளை அரைத்தூண்கள் அணைத்துள்ளன. மேலே கூரையுறுப்புகளுடன் இரண்டு கூடுவளைவுகள் பெற்ற கபோதம் வாயிலைச் சிறப்புக்குரியதாக்கியுள்ளது. மண்டபத்தின் வடபுறத்தும் தென்மேற்கிலும் உள்ள கம்பிக் கதவிட்ட மேடையில் செப்புத்திருமேனிகள் இருத்தப்பட்டுள்ளன. அதையடுத்துள்ள சிறு இடைநாழியும் கபோதவாயில் பெற்றுள்ளது. நந்தியும் சூரிய பிரபையும் இங்கு இடம்பெற்றுள்ளன. பேரளவினதாக விளங்கும் முகமண்டபத்தின் வடமேற்கில் இன்பவல்லி அம்மையும் பள்ளியறைத் திருமேனிகளும் இடம்பெற்றுள்ளன. கருவறையில் இறைவன் வேசர ஆவுடையாரின் மீது உருளைப் பாணத்துடன் இலிங்கத்திருமேனியராய்க் காட்சிதருகிறார்.

திரயச்ர பாதங்களுடன் அஞ்சலியில் தலைப்பாகை, அக்கமாலை, பூட்டுக்குண்டலங்கள் மரமேறிஆடை இவற்றுடன் காட்சிதரும் ஆடவரும் தாடி, மீசை, நீள்வெறுஞ்செவிகள், பட்டாடை இவற்றுடன் சமபாதத்தில் வணக்க முத்திரையில் உள்ளவரும் இவ்வளாகக் கட்டுமானத்திற்கு உதவிய அடியவர்களாகலாம்.

இன்பவல்லி

கரண்டமகுடம், மகரகுண்டலங்கள், தோள்மாலை, அரும்புச்சரம், ஸ்வர்ணவைகாக்ஷம், தோள், கடக, கை வளைகள், பட்டாடை, குறங்குசெறி அணிந்து, திரயச்ர பாதங்களுடன் இளநகை பூத்து நிற்கும் இறைவியின் இடக்கை நெகிழ்ந்திருக்க, வலக்கையில் நீலோத்பல மொட்டு.

பள்ளியறைத் திருமேனிகள்

தனித்தனித் தளங்களில் உள்ள இறைவனும் இறைவியும் சோழர் காலத்தவை. சடைமகுடம், வலச்செவியில் மகரகுண்டலம், இடச்செவியில் பனையோலைக் குண்டலம், சவடி, முப்புரிநூல், உதரபந்தம், தோள், கை, வளைகள், சிற்றாடை அணிந்து நெற்றிக்கண், திரயச்ர பாதங்களுடன் நிற்கும் இறைவனின் பின்கைகளில் மழுவும் மானும். முன்கைகளில் வலக்கை காக்கும் குறிப்புக் காட்ட, இடக்கை கடகத்தில் உள்ளது. சடைமகுடம், மகரகுண்டலங்கள், அரும்புச்சரம், தோள்மாலை, முப்புரிநூல், கடக, கை வளைகள், மோதிரங்கள், பட்டாடை அணிந்து நிற்கும் இறைவியின் வலக்கை கடகத்திலிருக்க, இடக்கை நெகிழ்ந்துள்ளது. முந்தானை இடத்தொடையில் படர்ந்துள்ளது.

ஆடவல்லான் தொகுதி

குண்டலங்களுடனான நீள்செவிகள், கடக, கை வளைகள், உதரபந்தம், கால் சரங்கள் அணிந்து குப்புறப் படுத்திருக்கும் முயலகனின் கடக இடக்கை பாம்பின் மீதுள்ளது. முகத்தருகே பாம்பு படமெடுத்துள்ளதால் அச்சத்தில் அலறும் மெய்ப்பாட்டில் முயலகன் வாய் அகலத் திறந்திருக்க, வலக்கை பாம்பைத் தடுக்கும் மெய்ப்பாட்டில் பதாகத்தில் உள்ளது.

முயலகன் முதுகின் மேல் வலப்பாதத்தைத் திரயச்ரத்தில் இருத்தி, இடக்காலை வலப்புறம் வீசி, ஆனந்தத்தாண்டவம் நிகழ்த்தும் இறைவனின் பாம்பு சுற்றிய வல முன் கை காக்கும் குறிப்புக் காட்ட, இட முன் கை வேழமுத்திரையில் உள்ளது. பின்கைகளில் உடுக்கையும் தீச்சுடரும். கொக்கிறகு, பாம்பு காட்டப்பட்டுள்ள சடைமகுடத்திலிருந்து இருபுறமும் பறந்திருக்கும் விரிசடை ஆட்டவேகத்திற்கேற்ப வளைந்துள்ளது. கழுத்தில் பன்றிக்கொம்புடன் அக்கமாலை. சிற்றாடை அணிந்துள்ள சிவபெருமானின் உதரபந்தமாய் முடிச்சிடப்பட்டுள்ள துணியின் தொங்கல்கள் முன்புறம் பறக்கின்றன.

முப்புரிநூலென அணியப்பட்டுள்ள துண்டும் ஆட்டத்திற்கு ஏற்பப் பறந்துள்ளது. நெற்றிப்பட்டத்தின் வலப்புறம் பாம்பு. மகுடமுகப்பில் மண்டையோடு, சுண்டுவிரலில் மோதிரம். இறைவனின் இடப்புறம் நீள் வெறுஞ்செவிகளுடன் உள்ள உமை, கரண்டமகுடம், ஸ்வர்ண வைகாக்ஷம், அரும்புச்சரம், தோள், கடக, கை வளைகள் பட்டாடை அணிந்து, வலக்கையைக் கடகத்திலிருத்தி, இடக்கையை நெகிழ்த்தியுள்ளார்.

கல்வெட்டுகள்

மனத்துளநாதர் கோயிலில் இருந்து ஒன்பது கல்வெட்டுகள்[3] படியெடுக்கப்பட்டுள்ளன. மூன்றாம் இராஜேந்திரரின் பதினைந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, தவப்பெருமாள் திருமடத்துச் சோமநாததேவ முதலியாருக்குச் சில நிலங்களை மனத்துளநாயனார் கோயில் அலுவலர்கள் மாற்றித் தந்த தகவலைத் தருகிறது.

மனத்துளநாதர் கோயிலின் தென்புறம் இருந்த தவப்பெருமாள் திருமடத்தின் தலைவரான திருச்சத்திமுற்றம் வழிவந்த எதிர் ஒப்பிலாதார் சோமநாததேவ முதலியாருக்கு அருமொழிதேவ வளநாட்டு வலிவலக் கூற்றத்துத் தென்விடங்களூர் ஊரார் சில நிலங்களைத் தந்ததாக மூன்றாம் இராஜேந்திரரின் இருபதாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுத் தெரிவிக்கிறது.

மூன்றாம் குலோத்துங்கரின் மூன்றாம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு, அருமொழிதேவ வளநாட்டு வலிவலக் கூற்றத்து வலிவலமான உபயகுலசுத்த சதுர்வேதிமங்கலத்திலிருந்த மனத்துளர் கோயிலின் தேவதான ஊரான குலோத்துங்க சோழ நல்லூரில் இராஜாதிராஜன் பெருங்குளம் அகழக் கோயில் நிலம் பயன்படுத்தப்பட்டதால் அதற்கு மாற்றாக வேறு நிலம் அளிக்கப்பட்ட தகவலைத் தருகிறது.

மன்னர் பெயரோ, ஆட்சியாண்டோ அறியமுடியாதபடி சிதைந்திருக்கும் கல்வெட்டு குலோத்துங்கசோழ நல்லூரில் கோயிலுக்கு நிலமளிக்கப்பட்ட தகவலைத் தருகிறது. மூன்றாம் இராஜராஜரின் பதினான்காம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு, குலோத்துங்க சோழ நல்லூரில் இராஜராஜப் பெருவிலையில் வாங்கப்பட்ட நிலத்துண்டு ஒன்று கோயிலுக்காகக் கொடையளிக்கப்பட்டமையைத் தெரிவிக்கிறது. அதே மன்னரின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு, கோயிலுக்குரிய நிலப்பகுதியில் முத்தலைஈட்டி நடப்பெற்று அந்நிலம் தேவதானமாக அறிவிக்கப்பட்ட செய்தியைக் கூறுகிறது.

சடையவர்மர் சுந்தரபாண்டியரின் ஏழாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு, பாண்டி மண்டலத்து மதுரோதய வளநாட்டு ஆலத்தூர் நாட்டுப் பாலைக்குறிச்சியைச் சேர்ந்த வயிராதராயரின் மனைவியால் கூற்றூரான பொன்மேய்ந்த பெருமாள்நல்லூரில் அருமொழிதேவ வளநாட்டு வலிவலக்கூற்றத்து வலிவலத்திருந்த மனத்துளநாயனார் கோயிலுக்கு நிலம் விற்கப்பட்ட செய்தியைக் கூறுகிறது. அதே மன்னரின் அதே ஆட்சியாண்டில் வயிராதராயரால் குலோத்துங்க சோழ நல்லூரில் நிலத்துண்டொன்று கோயிலுக்கு விற்கப்பட்ட தகவலை மற்றொரு கல்வெட்டுத் தெரிவிக்கிறது.

திருமூலத்தேவர் திருமடத்திற்கு மனத்துளநாதர் கோயில் சிவாச்சாரியார்கள் நிலமொன்றை விற்பனை செய்த தகவலைப் பகிர்ந்துகொள்ளும் கல்வெட்டு, மூன்றாம் இராஜராஜரைப் பெரிய தேவர் என்றழைப்பதுடன் அவருடைய பதினான்காம் ஆட்சியாண்டில் நிகழ்ந்த செயற்பாடு ஒன்றையும் பகிர்ந்து கொள்கிறது. கல்வெட்டுச் சிதைந்திருப்பதால் முழுச் செய்தியையும் அறியக்கூடவில்லை.

காலம்

கட்டுமானம், கல்வெட்டுகள் கொண்டு விமானத்தின் காலத்தைப் பொதுக்காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டாகக் கொள்ளலாம்.

குறிப்புகள்

1. ஆய்வு நாட்கள் 27. 11. 1982, 26. 9. 2008. இக்கோயில் பற்றிய முதல் கட்டுரை 1983 பிப்ருவரி 27ம் நாள் வெளியான தினமணி சுடரில், ‘மனத்துணைநாதர் திருக்கோயில்’ என்ற தலைப்பில் பதிவாகியுள்ளது. ஆய்வுக்குத் துணைநின்ற நண்பர்கள் பால. பத்மநாபன், க.இராமச்சந்திரன், ச.கமலக்கண்ணன், ம. இராமச்சந்திரன், சு. சீதாராமன் ஆகியோருக்கும் கோயில் அலுவலர்களுக்கும் உளமார்ந்த நன்றி.
2. திருமுறை 1: 50, 123; 6: 48; 7: 67.
3. ARE 1911 : 108 - 116.this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.