![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 116
![]() இதழ் 116 [ பிப்ரவரி 2015 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
பல்லவர் பாதையில்
மாமண்டூர் நரசமங்கல குன்றுத் தொடரினைப் பிரிக்கும் ஓடையின் வடபுறத்தேயுள்ள பாறையொன்றின் சரிவில் கிழக்கு நோக்கியவாறு இம்மாமண்டூர் குடைவரை அமைந்துள்ளது. பரகேசரியின் அர்த்தமண்டபக் கல்வெட்டு இக்குடைவரையினை ருத்ர வாலீஸ்வரம் என்று குறிப்பிடுகிறது. ![]() முகப்பு குன்றின் சரிவு தனது இரு கரங்களையும் அகன்று விரித்து நன்கு முன்னிழுத்தாற் போல் இறங்கி பூமியைத் தொடுகிறது. குடைவரையின் முன்புறம் இரண்டு அடுக்கு நடைப்பகுதியாக அமைந்துள்ளது. இந்நடைப் பரப்பினை இருபுறங்களையும் அணைந்தவாறு முன்னிழுக்கப்பட்டு இறங்கும் பாறைச்சரிவு இக்குடைவரையின் தெற்கு மற்றும் வடபுறச்சுவர்களாக அமைந்துள்ளது. முன்தரையின் நடைப்பரப்பிற்கு உட்புறம் குடைவரையின் முகப்பில் நான்கு தூண்கள் குடையப்பட்டுள்ளன. அவற்றுள் மையத்தூண்கள் இரண்டும் முழுத்தூண்களாகவும், வ்லது மற்றும் இடதுபுறத் தூண்கள் அரைத் தூண்களாகவும் அமைந்துள்ளன. ![]() அரைத் தூண்கள் நான்கு பக்கங்களையும், முழுத் தூண்கள் சதுரம், கட்டு, சதுரம் அமைப்புகளோடும் உள்ளன. தூண்களின் மேற்சதுரங்களிலிருந்து புறப்படும் போதிகைகளின் கீழ்க்கை விரிகோண வடிவில் மேற்சென்று உத்திரத்தை தாங்குகின்றன. உத்திரத்துடன் இணைந்தவாறு வாஜனம் குடைவரையின் முழு நீளத்திற்கும் செல்கிறது. குடைவரையின் முகப்பில், உத்திரம் மற்றும் போதிகைகள் பச்சை, மஞ்சள், சிவப்பு வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தமைக்கான சுவடுகளைக் காண முடிகிறது. ![]() மண்டபங்கள் முகமண்டபம் முகப்பினையடுத்து மண்டபத்தின் மையப்பகுதியிலுள்ள தூண் வரிசை மண்டபத்தினை இரண்டாகப் பிரிக்கிறது. முகப்பிலுள்ள தூண் வரிசைக்கும் மையப் பகுதியிலுள்ள தூண் வரிசைக்கும் இடைப்பட்ட பகுதியை முக மண்டபம் எனலாம். முக மண்டபத்தின் கூரையின் நாற்புறமும் உத்திரத்தின் மேல் வாஜனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அர்த்தமண்டபம் மண்டபத்தின் மையத் தூண்களுக்கும், கருவறைகளுக்கும் இடையிலுள்ள பகுதியை அர்த்த மண்டபம் எனக் கொள்ளலாம். கருவறைகள் அர்த்த மண்டபத்தின் பின் சுவரில் மூன்று கருவறைகள் குடையப்பட்டுள்ளன. அவற்றின் வாயில்களுக்கு இடைப்பட்ட பகுதியில் பாதபந்த தாங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் முன் சுவரில் அரைத் தூண்களும், ஆழமற்ற கோட்டங்களும் காட்டப்பட்டுள்ளன. அரைத் தூண்களின் உச்சியில் காணப்படும் போதிகைகள் அளவில் சிறிய உத்திரத்துடன் இணைகின்றன. உத்திரத்தின் மேல் வாஜனமும், வலபியும் காட்டப்பட்டுள்ளது. இவற்றின் மேல் நன்கு வடிவமைக்கப்பட்ட வளைவான கபோதம் அமைக்கப்பட்டுள்ளது. ![]() மூன்று கருவறைகளுக்கும் தரையிலிருந்து கருவறையை அடைய படிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கருவறை வாயிலிலும் இருபுறமும் இரண்டு காவலர்கள் தமது சேவையில் நிற்கின்றனர். இம்மூன்று கருவறைகளிலும் மையக் கருவறையில் மட்டுமே சிறிய பாறையொன்றின் மேல் ஆவுடையாருடன் இலிங்கம் காணப்படுகிறது. தெற்கு மற்றும் வடக்கு கருவறைகள் வெறுமையாகவே காட்சியளிக்கின்றன. ![]() a ![]() கல்வெட்டுகள் குடைவரையின் முகமண்டபத்தின் வடசுவரில் முதலாம் இராஜராஜரின் கல்வெட்டும், அர்த்த மண்டபத்தின் தென் சுவரில் பரகேசரிவர்மரின் கல்வெட்டொன்றும் இக்கோயிலுக்கான விளக்குக் கொடைகளைத் தெரிவிக்கின்றன. நன்றி: டாக்டர் இரா. கலைக்கோவன் அவர்கள் முனைவர் மு. நளினி அவர்கள் |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |