![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 121
![]() இதழ் 121 [ ஜுலை 2015 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
சிராப்பள்ளி முசிறிச் சாலையில் அமைந்துள்ள அய்யம்பாளையம் 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் உருவாக்கப்பட்ட தண்டாயுதபாணிசாமி கோயிலைக் கொண்டுள்ளது. காவிரிக் கரையில் மூன்று நிலைக் கோபுரத்தோடு இருதளக் கலப்பு வேசர விமானம் பெற்றுள்ள இக்கோயிலை அய்யம்பாளையம் பண்ணையார் திரு. தாண்டவராயர் அமைத்துள்ளார். இது குறித்த கல்வெட்டும் அவரது உருவச் சிலையும் கோயிலின் பெருமண்டபத் தென்கிழக்கு மூலையில் இடம்பெற்றுள்ளன. கிழக்கு நோக்கி அமைந்துள்ள கருவறையில் முருகப் பெருமான் தண்டாயுதபாணியாக அருள் செய்கிறார். கபோத பந்தத் தாங்குதளம் பெற்றுள்ள விமானத்தின் சுவர்களை நான்முக அரைத்தூண்கள் அணைத்துள்ளன. பத்திப் பிரிப்பற்ற இவ்விமானத்தின் கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. விமானத்தையும் முகமண்டபத்தையும் தெற்கு, மேற்கு, வடக்கு முப்புறத்தும் சூழ்ந்துள்ள திருநடைமாளிகையின் கூரைமீது பேரளவிலான சுதைச் சிற்பங்கள் உள்ளன. ![]() விமானமும் திருநடை மாளிகையும் இக்கோயிலின் சிறப்பம்சமாக இதன் பெருமண்டபக் கூரையில் 1918இல் மதுரை சுப்பாநாயுடு தம் மகன்களின் துணையோடு வரைந்திருக்கும் ஓவியங்களைக் குறிப்பிடலாம். ஓவியத்தின் ஒரு பகுதியில் சுப்பாநாயுடுவின் பெயர் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. ![]() முருகன் புராண ஓவியமும் ஓவியர் பெயரும் ![]() இராமாயணக் காட்சிகள் கூரையைத் தென்வடலாக நான்கு பத்திகளாகப் பிரித்து ஒவ்வொரு பத்தியிலும் முழுமையுற ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. 3. 33 மீ. அகலமுள்ள வடக்குப் பத்தியில் முருகன் தொடர்பான புராணக் காட்சிகள் உரிய கதை விளக்கங்களுடன் அமைய, அதற்கடுத்துள்ள 3. 30 மீ. அகலப் பத்தியில் சிவபுராணக் காட்சிகள் வரையப்பட்டுள்ளன. 3. 28 மீ. அகலமுள்ள மூன்றாம் பத்தி இராமாயணத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகளைப் படம்பிடித்துள்ளது. இம்மூன்று பத்திகளுமே கிழக்கு மேற்காக 15. 55 மீ. நீளம் கொண்டவை. கண்ணன் கதை பேசும் ஓவியங்களைக் கொண்டுள்ள தென்கோடிப் பத்தி 1. 95 மீ. அகலமும் 10. 50 மீ. நீளமும் பெற்றுள்ளது. ![]() சிவபுராணக் காட்சிகள் இந்நான்கு ஓவியப் பத்திகளில் கண்ணன் பகுதி பேரழிவுக்கு ஆளாகியுள்ளது. முருகன் பகுதியிலும் ஆங்காங்கே ஓவியங்கள் சிதைந்துள்ளன. சிவபுராணக் காட்சிகளும் இராமாயணமும் வரையப்பட்டுள்ள பத்திகள் நடுப்பத்திகளானமையின் பெருமளவிற்குச் சீர்மையோடு உள்ளன. அனைத்துப் பத்திகளிலுமே காட்சி விளக்கங்கள் தமிழில் சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுதப்பட்டுள்ளன. எழுத்துப் பிழைகளும் தொடர்ப் பிழைகளும் ஆங்காங்கே இருப்பினும் காட்சிகளை விளங்கிக்கொள்ள முடிகிறது. பெரும்பாலான காட்சிகள் நன்கு வரையப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பத்திகளைக் காட்சிகளுக்கேற்ப சதுரங்களாகவும் செவ்வகங்களாகவும் பிரித்துக் கட்டமிட்டு வரையறைகள் செய்து தொடர்நிலை கெடாமல் காட்டியிருக்கும் பாங்கு பாராட்டத்தக்கது. கண்ணைப் பறிக்கும் வண்ணங்களாக அமையாமல் பெரும்பாலும் மென்மையான வண்ணங்களையே பயன்படுத்தியிருப்பதையும் சுட்டவேண்டும். புராணங்களிலும் இராமாயணத்திலும் ஓவியர்கள் மேற்கொண்டிருக்கும் காட்சித் தேர்வுகள் அவர்கள் காலத்தே சமூக வழக்கிலிருந்த கதைப் போக்குகளைக் காட்டுவதாகக் கொள்ளலாம். ![]() கலைமகள் சிவபுராணக் காட்சிகள் வரையப்பட்டிருக்கும் பத்தியின் மையப் பகுதியில் கலைமகளின் சுதையுருவம் ஒரு சதுரத்திற்குள் இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. தாமரைப் பதக்கத்தில் இருக்கையின் மேல் சுகாசனத்தில் உள்ள கலைமகளின் பின்கைகளில் வலப்புறம் அக்கமாலையும் இடப்புறம் குண்டிகையும் அமைய, வலமுன்கை வீணை பெற்றுள்ளது. இடமுன்கையில் சுவடியுடன், கழுத்தாரம், குதம்பைகள் பெற்றுப் பட்டுப் புடவையும் மேற்சட்டையுமாய்க் காட்சிதரும் கலைமகளின் நெற்றியில் பொட்டிடப்பட்டுள்ளது. பதக்கத்தின் நான்கு மூலைகளிலும் மலர்ந்த தாமரைகள் காட்டப்பட்டுள்ளன. ![]() சண்முக தீர்த்தம் வளாகத்தின் கிழக்கில் 1950இல் கோயில் பயன்பாட்டிற்காக சண்முக தீர்த்தம் என்ற பெயரில் பேரளவிலான குளமொன்று நீராழி மண்டபத்துடன் கட்டப்பட்டுள்ளது. 16 கால் மண்டபமாக எழுந்திருக்கும் இந்நீராழி மண்டபத்தின் மையப் பகுதி முத்தள வேசர விமானம் போலக் காட்டப்பட்டுள்ளது. தீர்த்தவாரியும் தெப்ப உற்சவமும் நிகழ்ந்து கொண்டிருந்த இக்குளம் இப்போது வற்றியுள்ளது. ![]() உச்சிஷ்ட கணபதி |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |