http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 136

இதழ் 136
[ ஆகஸ்ட் 2017 ]


இந்த இதழில்..
In this Issue..

Intensive, Pragmatic and Insitu study?
TEMPLES IN AND AROUND THIRUCHIRAPPALLI - 8
புள்ளமங்கை - திருவாலந்துறையார் கோயில் - 2
OLOGAMADEVI ISWARAM – THIRUVAIYARU - 2
உலகப் பார்வைக்கு உதயம் - 4
வெகுமக்கள் இலக்கியத்தில் தமிழ் இலக்கணம் - 1
இதழ் எண். 136 > இலக்கியச் சுவை
வெகுமக்கள் இலக்கியத்தில் தமிழ் இலக்கணம் - 1
சு.சீதாராமன்

சமீபத்தில் ஒரு நாள் இரவுநேரத் தனிமைப் பயணத்தில் இந்தப் பாடலைக் கேட்டு நினைவடுக்குகளின் வழி காலத்தால் பின்னுக்குத் தள்ளப்பட்டேன்!

 

இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்

இது மேற்கில் தோன்றும் உதயம்

இது நதியில்லாத ஓடம்

 

இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்

இது மேற்கில் தோன்றும் உதயம்

இது நதியில்லாத ஓடம்

இது நதியில்லாத ஓடம்

---

நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தை பார்க்கிறேன்

வடம் இழந்த தேரது ஒன்றை நாள்தோரும் இழுக்கிறேன்

சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்

சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்

உறவுராத பெண்ணை எண்ணி நாளெல்லாம் வாழ்கிறேன்

---

இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்

---

வெறும் நாரில் கரம் கொண்டு பூ மாலை தொடுக்கிறேன்

வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்

விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனை பார்க்கிறேன்

விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனை பார்க்கிறேன்

விருப்பமில்லா பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன்

---

இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்

---

உளமறிந்த பின்தனோ அவளை நான் நினைத்தது

உறவுருவாள் எனதனோ மனதை நான் கொடுத்தது

உயிரிழந்த கருவை கொண்டு கவிதை நான் வடிப்பது

உயிரிழந்த கருவை கொண்டு கவிதை நான் வடிப்பது

ஒரு தலையாய் காதலிலே எத்தனை நாள் வாழ்வது?

---

இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்

இது மேற்கில் தோன்றும் உதயம்

இது நதியில்லாத ஓடம்

இது நதியில்லாத ஓடம்

 

ஆம் அப்பொழுது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அது ஓர் அடிப்படை வசதிகளற்ற அரசுப் பள்ளிக்கூடம். ஆனாலும், அவ்வப்பொழுது அத்தி பூத்தாற்போல் அற்புதமான ஆசிரியர்கள்

அப்பள்ளிக்கு வந்து போவார்கள்! அப்படி வந்து சில மாதங்களே தமிழாசிரியராகப் பணியாற்றிய திருமிகு. தங்கராசு அவர்களிடம் பயின்ற இலக்கணமே இன்றுவரை என்னுடைய தமிழறிவாகும்!



அவர் இருக்கும்போது எழுதிய ஒரு தமிழ்த்தேர்வில் இல்பொருளுவமையணிக்கு எடுத்துக்காட்டாக மேற்குறிப்பிட்ட இப்பாடலைச் சுட்டி அவ்வணியை விளக்கியிருந்தேன். எனது நேரம் அவ்விடைத்தாளைத் திருத்தும் முன் அவர் மாற்றப்பட்டு வேறொரு தமிழாசிரியர் பணியேற்று அவருடைய முதல் பணிநாளில் விடைத்தாள்களைத் திருத்தி வகுப்பறையில் மாணவ மாணவிகளுக்கு வழங்கித் தன்னையும் அறிமுகப்படுத்திக்கொண்டார்! 



அவர் நடுநிலைப் பள்ளியிலிருந்து பணி உயர்வு பெற்று உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகப் பொறுப்பேற்றுக்கொண்ட முதல்நாள்! நான் எனது விடைத்தாளைச் சரி பார்த்துக் கொண்டிருந்தேன். இல்பொருளுவமையணி குறித்த வினாவின் எனது விடைக்கு 0 மதிப்பெண் வழங்கியிருந்தார்! எனது விடைத்தாளை எடுத்துக்கொண்டு சென்று அவரிடம் முறையிட்டேன். அவர் திரைப்படப்பாடலை எடுத்துக்காட்டாகச் சுட்டியதை ஏற்கமுடியாது என்று கூறி மதிப்பெண் வழங்க மறுத்துவிட்டார். நான் விடுவதாக இல்லை. ”ஐயா, நான் எழுதிய இவ்விடை சரியே” என்று வாதிட்டேன்.



”என்ன சரி? கோனார் தமிழ் உரையில் கொடுத்த எடுத்துக்காட்டை கொடுத்து விளக்க வேண்டியதுதானே” என்று கேட்டார். மேலும் இல்பொருளுவமையணியின் இலக்கணம் சொல் என்று கேட்டார்.



”ஒரு கவிஞர் ஒரு பொருளையோ நிகழ்வையோ உணர்த்த உலகில் இல்லாத அல்லது நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒரு விஷயத்தை உவமையாகக் கூறுவதே இல்பொருள் உவமையணியாகும்” என்று விடை பகன்றேன்.



”சரியான முறையில் சொல்” என்றார்.



”இயற்கையில் இல்லாத ஒன்றை (ஒருபொருளை) இருப்பது போலக் கற்பனை செய்துகொண்டு அக்கற்பனைப் பொருளை உவமையாக்குவதே இல்பொருள் உவமையணியாகும்”.



”கோனார் தமிழ் உரையில் இதற்கு கொடுத்த எடுத்துக்காட்டு என்ன?” என்று வினவினார்.



“கருஞாயிறன்ன ராமன்” என்ற கம்பராமாயண பாடல் ஐயா! என்றேன்.



”அதன் பொருள்?”



”இயற்கையில் இராமன் கரிய நிறத்தனன்! ஆனால் தோற்றப்பொலிவு மிகுந்தவன். எவ்வாறெனில், சூரியன் கருமைநிறம் கொண்டு பவனி வந்தால் எப்படிப் பிரகாசமாயிருக்குமோ அவ்வாறு கருமைநிறங்கொண்ட இராமன் தோற்றத்தில் பொலிந்து விளங்கினான் என்ற பொருள் படும்படி இவ்வுவமை எடுத்தாளப்பட்டது. சூரியன் கருமையாயிருத்தல் இவ்வுலகில் இல்லாதது. ஆனால், பொலிவு பிரகாசம் என்றால் நம் நினைவுக்கு வருவது சூரியனே. எனவே, கரியநிறமுள்ள இராமனின் தோற்றப்பொலிவு உலகில் இல்லாத கருப்பு சூரியனுடன் ஒப்பிடப்பட்டமையால் இது இல்பொருளுவமையணியாயிற்று”.



”இவ்வளவு தெளிவாகக் கூறும் நீ இதையே எழுதியிருக்க வேண்டியதுதானே?”



”ஐயா!, நான் எடுத்துக்காட்டும் இப்பாடல் திரையிசைப்பாடல் என்பதை நீக்கி ஒரு கவிதையாக மட்டும் பார்ப்போமானால், இப்பாடல் இல்பொருளுவமையணிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் என்று கருதினேன்! இவ்வணியின் இலக்கணம் இப்பாடலில் பரிபூரணமாக விளங்குவதை உணர்ந்து இதையே எடுத்துக்காட்டாகச் சுட்டலாம் என்று அம்முயற்சியில் இறங்கினேன்".



”எப்படி?”



”அகத்திணை வகைகளில் வரும் கைக்கிளைத் திணையே கவிஞரின் பாடு பொருள்! தலைவன் தலைவி ஆகிய இருவருள் ஒருவரிடத்தில் மட்டும் தோன்றும் காமத்தையே கைக்கிளை என்பர். சுருக்கமாகச் சொன்னால் கைக்கிளை என்பது ஒருதலைக்காதல் ஆகும். கை என்பது சிறுமை எனப் பொருள்படும். கிளை என்பது உறவு எனப் பொருள்படும். சிறுமையான உறவு அல்லது பெருமையில்லா உறவு என்பது கைக்கிளையின் பொருள். தலைவியின்பால் கொண்ட ஒருதலைக்காதலைத் தலைவன் விளிப்பதான பாடல்! முற்றிலும் இயற்கையில் இல்லாத பொருளைச் சுட்டித் தலைவி தன் பெயரில் செலுத்தாத காதலை நாசூக்காகத் தலைவன் வெளிப்படுத்தும் பாங்கே இப்பாடலின் சிறப்பு! மேலும் ஒரு பாடலின் பெரும்பான்மையான வரிகள் இவ்வணியின் இலக்கணத்தில் பொருந்துவது இப்பாடலின் தனிச்சிறப்பாக நான் கருதியதால் இப்பாடலையே இவ்வணிக்கான சிறந்த எடுத்துகாட்டாகத் தேர்வு செய்து விடையெழுதியிருக்கிறேன் ஐயா!”



”சற்று விரிவாக விளக்கு”



இது குழந்தை பாடும் தாலாட்டு

குழந்தைக்குத்தான் தாலட்டு-குழந்தை தாலாட்டு பாடுதல் இல்லாத ஒன்றாகும்



இது இரவு நேர பூபாளம்

பூபாளம் –காலையின் ராகம் எனவே இரவுக்குப் பொருந்தாது



இது மேற்கில் தோன்றும் உதயம்

சூரியன் கிழக்கில் தான் உதயம்



இது நதியில்லாத ஓடம்

நதியில் தான் ஓடம் ஓடும்



நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தை பார்க்கிறேன்

நடை மறந்த கால்கள் தடயம் பதிக்காது. எனவே பார்த்தல் இயலாது



வடம் இழந்த தேரது ஒன்றை நாள்தோரும் இழுக்கிறேன்

வடம் இழந்த தேரை இழுத்தல் இயலாது



சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்

சிறகிழந்த பறவை  பறத்தல் இயலாது



உறவுராத பெண்ணை எண்ணி நாளெல்லாம் வாழ்கிறேன்

உறவுராத பெண்ணை எண்ணி  வாழ்தல் இயலாது



வெறும் நாரில் கரம் கொண்டு பூ மாலை தொடுக்கிறேன்

பூ இல்லாமல் பூமாலை தொடுக்க இயலாது



வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்

கல் இல்லாமல் சிலை வடிக்க இயலாது



விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனை பார்க்கிறேன்

சூரியன் உதித்த பின்பு விண்மீன் பார்த்தல் இயலாது



என்று இப்பாடல் முழுவதும் இவ்வணி விரவிக்கிடப்பதால், இல்பொருளுவமையணிக்கு இப்பாடலை எடுத்துக்காட்டாகத் தேர்வு செய்தேன் ஐயா!



“ஆகா அற்புதம்”. இவ்வினாவிற்கான முழு மதிப்பெண்ணையும் உனக்கு வழங்கிவிடுகிறேன் என்று என்னை ஊக்கப்படுத்தி எனக்கு அவ்வினாவிற்கான முழுமதிப்பெண்களும் அவ்வாசிரியரால் எனக்கு வழங்கப்பட்டது!



இந்நிகழ்வு நிகழ்ந்தது 1987. ஒரு தலை ராகம் படம் வெளிவந்தது 1980. வானொலியிலோ அல்லது ஊர்ப்பொது நிகழ்ச்சிகளில் ஏற்பாடு செய்யப்படும் ஒலிப்பெருக்கிகளிலோதான் அப்பொழுதெல்லாம் பாடல்கள் கேட்க இயலும்! அந்தத் தேர்வுக்குச் செல்லும் நாளில் எங்கோ ஒலிப்பெருக்கியில் ஒலித்துக்கொண்டிருந்த அப்பாடல் செவியில் நுழைந்து மனதில் பதிந்து விடைத்தாளில் எடுத்துக்காட்டாக விளைந்து இறுதியில் மதிப்பெண்ணாகவும், மதிப்பிடமுடியாத வாழ்நாள் நினைவாகவும் மாறிப்போனது!



இப்பாடல் கேட்கும்போதெல்லாம் இந்நினைவுகள் வந்து போவது சுகமான அனுபவமே!



வாழ்க தமிழ்

வாழ்க கவிஞர் T.ராஜேந்தர்

 


இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.