http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 142

இதழ் 142
[ ஆகஸ்ட் 2018 ]


இந்த இதழில்..
In this Issue..

கயிலைப் பயணம் - 4
அழகியசேம விண்ணகரம்
பத்தாளப்பேட்டைப் புதையல்
பாலகுமாரன் என்ற கிருஷ்ணன் இராமன்
இதழ் எண். 142 > கலையும் ஆய்வும்
பத்தாளப்பேட்டைப் புதையல்
அர. அகிலா
சிராப்பள்ளி மாவட்டம் கிளியூருக்கு அருகிலுள்ள பத்தாளப்பேட்டை வளமான வரலாற்றுச் சுவடுகளைக் கொண்டுள்ள சிற்றூராகும். இங்குள்ள செங்கல்மேட்டில் சிதைந்த கோயிலொன்றின் பகுதிகள் சிதறிக் கிடப்பதாகத் திரு. ம. முருகேசனும் திரு. க. தமிழ்ச்செல்வனும் பாரதி பதின்ம மேனிலைப்பள்ளி முதல்வர் திரு. க. பாலகிருஷ்ணனிடம் தெரிவித்தனர். பாலகிருஷ்ணன் டாக்டர்மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்திற்குத் தகவல் தர, 14.3.2018 அன்று காலை களப் பயணம் அமைந்தது.

பத்தாளப்பேட்டையில் காத்திருந்த திரு. முருகேசன் முட்செடிகள் காடாய் மண்டியிருக்கும் செங்கல் மேட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றார். கோயிற் கட்டுமானத்தில் இருந்த கற்கள் அங்குச் சிதறிக் கிடந்தன. பலித்தளம் ஒன்று ஒரு மரத்தடியில் காணப்பட்டது. மேட்டுப்பகுதியில் காலில் தட்டிய நிலையில் கிடைத்த சிற்பத்தொகுதி ஒன்றையும் கல்வெட்டு எழுத்துக்கள் உள்ள தூண் ஒன்றையும் ஊர் அய்யனார் கோயிலருகே பாதுகாப்பாக வைத்திருப்பதாக முருகேசன் தெரிவித்தார். தூண் துண்டுகள் சிலவற்றைப் பார்வையிட்டுப் புலவர் பி. தமிழகன், சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் மு. நளினி, டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவன் உள்ளிட்ட ஆய்வுக்குழு அய்யனார் கோயிலை அடைந்தது.

1. 44மீ. உயரம் 66 செ.மீ. சுற்றளவுள்ள கருங்கல் தூணொன்று அய்யனார் கோயில் மரத்தடியில் கிடத்தப்பட்டிருந்தது. 30 செ.மீ. அகலம் 28 செ.மீ. உயரச் செவ்வகமாக அமைந்திருந்த அதன் கீழ்ப்பகுதியில் பொதுக்காலம் 12 ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில் வெட்டப்பட்டிருந்த ஏழு வரித் தமிழ்க் கல்வெட்டில் ஆங்காங்கு கிரந்த எழுத்துக்களும் கலந்திருந்தன.



முதல் ஐந்து வரிகள் தெளிவாகவும் இறுதி இரண்டு வரிகள் சிதைந்துமுள்ள அக்கல்வெட்டைப் படித்த பேராசிரியர் மு. நளினி, பிற்சோழர் காலத்தைச் சேர்ந்த இளவிதேவயன் என்பாரின் மனைவி ரெஜலதேவியார் சதிவிஞ்செய் என்பவர் இத்தூணைச் செய்தளித்ததாகத் தெரிவித்தார். பிற்காலத்தே இலிங்கத்திருமேனி போல மாற்றப்பட்ட அத்தூணின் கீழ்ப்பகுதியில் கோட்டுருவச் செதுக்கலாக முகலிங்க அமைப்பும் உள்ளது.









தூண் இருக்கும் இடத்திற்குச் சற்றுத் தள்ளியுள்ள மற்றொரு மரத்தடியில் சிற்பத்தொகுதி செதுக்கப்பட்டுள்ள கருங்கல் பலகை இருந்தது. 1. 21 மீ. நீளம், 33 செ. மீ. உயரமுள்ள அதில் ஆணும் பெண்ணுமாக நான்கு இணைகளின் ஆடல். முதல் மூன்று இணைகளில் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் அணைத்த கோலத்தில் ஆடும் இச்சிற்பத்தொகுதி தனித்துவம் வாய்ந்ததென்றார் டாக்டர் இரா. கலைக்கோவன். பொதுவாகத் தமிழ்நாட்டில் காணப்படும் ஆடற்சிற்பங்களில் ஆண், பெண் இணைந்தாடும் காட்சிகள் மிகவும் குறைவாகும். அவற்றுள்ளும் தழுவிய நிலையிலோ, அணைத்தவாறோ ஆணும் பெண்ணும் ஆடும் காட்சிகள் மிக அரிதாகவே காணப்படுகின்றன. அவ்வகையில் செங்கல்மேட்டில் கிடைத்த இச்சிற்பம் சிறப்புக்குரியதாகும். இதில் ஆடுவோரில் பெரும்பாலோர் கைகளில் கருவியொன்றைக் கொண்டுள்ளனர். பெண்கள் பட்டாடை அணிந்தும் ஆடவர் சிற்றாடையுடனும் பலவித அணிகலன்களுடன் காட்சிதருகின்றனர். தலையலங்காரமும் ஒருவருக்கொருவர் மாறுபட்டு நன்கு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



நாயக்கர் காலக் கலையமைதியில் காணப்படும் இச்சிற்பத்தொகுதியில் முதல் இரண்டு இணைகளுக்கிடையில் வலக்கையில் மலரேந்தி, இடக்கையை நெகிழவிட்டுள்ள பெண்தெய்வம் ஒன்று காட்டப்பட்டுள்ளது. மூன்றாம் நான்காம் இணைகளுக்கிடையில் காட்டப்பட்டுள்ள பானை விழாவுக்கான குறியீடாகலாம். ஊரகப்பகுதிகளில் நிகழ்ந்த இது போன்ற பண்பாட்டு ஆடல்கள் குறித்துப் பழந்தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரம் பல அரிய செய்திகளைத் தருவதாகக் குறிப்பிட்ட டாக்டர் இரா. கலைக்கோவன், தமிழ்நாட்டில் இதுவரை கிடைத்துள்ள ஆடற்சிற்பத் தொகுதிகளில் விழாக் கொண்டாட்டமென அமைந்த மிகச் சிறந்த ஆடற்காட்சியாக இதைக் குறிப்பிடலாம் என்றார். செங்கல்மேடு பகுதியில் அரசு அகழ்வாராய்ச்சி மேற்கொண்டால் இப்பகுதி வரலாற்றின் சிறப்பான செய்திகள் வெளிவரும் என்பது ஊர்மக்களின் எதிர்பார்ப்பு. அவர்களின் கனவு நிறைவேறுமா அல்லது கல்வெட்டுத் தூணையும் ஆடற்சிற்பத் தொகுதியையும் அளித்தாற் போல் செங்கல்மேடு தானாகவே உள்ளிருப்பவற்றை வெளிப்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.