http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 163

இதழ் 163
[ மார்ச் 2022 ]


இந்த இதழில்..
In this Issue..

குரங்கநாதர் கோயில் கல்வெட்டுகள்
மெய்யத்துக் களவும் கொலையும்
உறையூர்த் தான்தோன்றீசுவரம்
ஜப்பானியப் பழங்குறுநூறு - 10 (பிறத்தலே இறத்தலின் முதல்படி)
இதழ் எண். 163 > கலையும் ஆய்வும்
உறையூர்த் தான்தோன்றீசுவரம்
இரா.கலைக்கோவன், மு.நளினி

சிராப்பள்ளி மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர்களுள் ஒன்றான உறையூரில் மூன்று பழங்கோயில்கள் உள்ளன. உறையூரின் வடபகுதியில் சம்பந்தரால் பாடப்பெற்ற திருமுக்கீசுவரமும்1 மேற்கில் திருமங்கையாழ்வாரால் குறிக்கப்பெற்ற நாச்சியார் கோயிலும்2 கிழக்கில் பொ. கா. 9ஆம் நூற்றாண்டுத் திருப்பணியான தான்தோன்றீசுவரமும்3 அமைந்துள்ளன. இம்மூன்றுமே இன்று வளமான நிலையில் வழிபாட்டிலுள்ளன.

வாயிலும் வளாகமும்

நந்திப்பந்தல்

உறையூர்ச் சாலைவீதியில் உள்ளடங்கி நிற்கும் தான்தோன்றீசுவரர் கோயில் வடக்கில் கோபுரமற்ற முதன்மை நுழைவாயிலும் கிழக்கில் இரண்டு எளிய வாயில்களும் பெற்றுள்ளது. இரு நான்முக அரைத்தூண்கள் தழுவும் வடக்கு வாயிலின் கபோதத்தில் நான்கு கூடுவளைவுகள். மேலுள்ள வேதிகையின் மேற்பகுதியில் இருபுறத்தும் நந்திகள் அமர, இடையில் நான்முக அரைத்தூண்கள் கீர்த்திமுகத் தலைப்புடன் மகரவளைவு ஏந்தியுள்ள மாடம். அதனுள், சுதையுருவங்களாய் சுகாசனத்தில் சிவபெருமானும் இரு கால்களையும் தொங்கவிட்ட நிலையில் உமையும் நந்தியின் மீது அமர்ந்துள்ளனர். சிவபெருமானின் முன்கைகள் காக்கும், அருட்குறிப்புகளில் அமைய, பின்கைகளில் மான், மழு. வலக்கையில் நீலோத்பலம் ஏந்தியுள்ள இறைவியின் இடக்கை தொடையில்.

இவ்வாயில் வழி உள்நுழைவாரை நாகர கிரீவ, சிகரத்துடன் உள்ள ஒன்பான் கோள்களின் மேடையும் நந்திப்பந்தலும் எதிர்கொள்கின்றன. பாதபந்தத் தாங்குதளத்தின்மீது நான்கு இருசதுர, ஒரு கட்டுத் தூண்கள் பூமொட்டுப் போதிகைகளைத் தாழவிட்டு மதலைகளால் கூரையுறுப்புகள் தாங்கும் சிறு கற்பந்தலில் நந்தி அமர்ந்துள்ளது. தூண்களின் கட்டுகள் நடுப்பட்டை பெற, கீழ்ச் சதுரங்களில் பாம்புப் படங்கள். சதுரங்களில் தும்புரு, ஆவுடையாருடனான இலிங்கத்திருமேனி, வணக்கமுத்திரையுடன் பதஞ்சலி, புலிக்கால் முனிவர், இலிங்கத்தின்மீது பால் சொரியும் பசு, உருள் தடிமீது தலை சாய்த்த காவலர், மோகினி, அவரை வேண்டும் நிலையில் இருவர், மூன்று குடங்கள் பெற்ற வீணையை இசைக்கும் இளநங்கை, அமர்நிலை முனிவர் உள்ளிட்ட சிறிய அளவிலான சிற்பங்கள். ஒரு சதுரத்தில் காட்டப்பட்டுள்ள மரம் கற்பகத்தருவாகலாம். இக்கற்பந்தலை எடுத்த இணையரும் கைகளைக் கூப்பியவாறு இங்குச் சிற்பங்களாகியுள்ளனர். பந்தலின் கபோதம் பேரளவினதாய் நாற்புறத்தும் வளைந்திறங்க, மேலே வேசர கிரீவம், சிகரம், தூபி. கிரீவகோட்டங்களில் வணங்கிய கைகளுடன் நந்தியெம்பெருமான்.

பந்தலுக்குள் இறைவனைப் பார்த்தவாறுள்ள நந்தியின் கழுத்தில் மணிமாலைப்பட்டையும் கிளிஞ்சல் மாலையும் ஒன்றன் மேல் ஒன்றாக அமைந்த மும்மணிக்கோவையும் அமைய, தொடைப் பகுதிகளில் கீர்த்திமுகப் பதக்கங்கள். மும்மணிக்கோவையின் குஞ்சலங்கள் திமிலையடுத்து இருபுறத்தும் நெகிழ்ந்துள்ளன. குளம்புகளுக்கு மேலே வளைப்பட்டைகள். வாலையொட்டிய கிளிஞ்சல்மாலை நந்தியின் பின்புறம் அலங்கரிக்க, முதுகில் பட்டாடை.

வளாகச்சுற்று

சுற்றின் மேற்கில் இறைவன் விமானத்தின் தெற்கில் இருக்குமாறு தேவியருடன் முருகன் திருமுன்னும் வடக்கில் அலைமகள், கலைமகள், மகிடாசுரமர்த்தினி சிற்பங்கள் உள்ள திருமுன்னும் வடசுற்றில் முகமண்டபத்தை ஒட்டி உறுப்பு வேறுபாடற்ற ஒரு தள நாகரமாய்ச் சண்டேசுவரர் திருமுன்னும் உள்ளன. தான்தோன்றீசுவரர் விமானத்தின் வடகிழக்குக் கர்ணபத்தியை ஒட்டிப் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உறுப்பு வேறுபாடற்ற ஒருதள நாகர விமானத்தில் அண்மைக்காலக் கொற்றவைத் திருமேனி. சுற்றின் வடபுறத்தே பெருமண்டபத்தருகேயிருந்த சோழர் காலச் சிதைந்த கொற்றவை, நின்றநிலைப் பிள்ளையார் சிற்பங்கள் தற்போது காணுமாறு இல்லை.

தான்தோன்றீசுவர வளாகத் தென்பகுதி அண்மைக் காலத்தே விரிவாக்கம் செய்யப்பட்டு இரண்டு விமானங்கள் செங்கல் கட்டுமானமாய் எழுந்துள்ளன. வடக்கு விமானத்தில் தில்லைக்காளியும் தெற்கு விமானத்தில் ஜெயகாளிகாம்பாளும் நிறுவப்பட்டுள்ளனர். தில்லைக்காளித் திருமுன்னுக்குக் கீழுள்ள நிலவறையில் மற்றொரு காளியாகப் பாதாளக் காளி. பிருத்யங்கராதேவியின் சுதையுருவம் தில்லைக்காளி விமானத்தின் வடபுறத்தும் வராகியின் சுதையுருவம் ஜெயகாளிகாம்பாள் விமானத்தின் தென்புறத்தும் தனிக் கோட்டங்களில் உள்ளன. இவ்விமானங்களின் முன்னால் பேரளவிலான காரைப்பந்தல். வளாகத்தின் தென்மேற்கு மூலையிலுள்ள உறுப்பு வேறுபாடற்ற ஒருதள நாகர கட்டுமானத்தில் பிள்ளையார். அவரையடுத்து நாகர்களின் மேடை. வளாகத் தென்கிழக்கில் காளித்திருமுன்களைப் பார்த்தவாறுள்ள பின்னாளைய கட்டுமானத்தில் தேவியுடன் சுவர்ண பைரவர்.

இறைவன் விமானம்

பெருமண்டபம், முகமண்டபம், இருதள நாகர விமானம் பெற்று விளங்கும் இறைவன் திருமுன் விமானத்தின் கீழ்த்தளமும் முகமண்டபமும் மட்டுமே பழங்கட்டுமானங்களாய்க் கருங்கல் பணிகளாய்த் திகழ்கின்றன. விமானத்தின் முதல்தள ஆரம், இரண்டாம் தளம், கிரீவம், சிகரம் முதலியன அண்மைக்காலக் காரைக் கட்டுமானங்கள். தான்தோன்றீசுவரர் விமானக் கீழ்த்தளம், சாலை முன்தள்ளலுடன் பாதபந்தத் தாங்குதளமும் வேதிகையும் கொண்டுள்ளது. தாங்குதளத்தின் முதலிரு உறுப்புகளான ஜகதியும் குமுதமும் நிலத்தில் புதையுண்டிருக்க, கண்டத்தின் ஒருபகுதியும் பட்டிகையும் மட்டுமே நிலமட்டத்திற்கு மேலுள்ளன. வேதிகை மீதெழும் சுவரைக் கட்டு, தொங்கல், தாமரைக்கட்டற்ற நான்முக அரைத்தூண்கள் தழுவியுள்ளன. அலங்கரிப்பற்ற அவற்றின் மேலுறுப்புகளை அடுத்துள்ள பாலி, பலகை இரண்டுமே எளிய உறுப்புகளாய் அமைய, மேலுள்ள போதிகைகளின் விரிகோணக் கைகள் தாங்கும் கூரையுறுப்புகளில் வலபியில் அழகிய பூதவரி. அதன் திருப்பங்களில் மார்பளவான தாவுயாளிகள். போதிகைக்கு மேற்பட்ட பகுதிகளில் இரு இடங்களில் மட்டும் கால்விரல் சுவைக்கும் குழந்தைக் கண்ணனின் வடிப்புகள். அவற்றுள் தென்கிழக்குச் சிற்பம் மிக நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது.



தளக்கூரையின் வெளிநீட்டலான கபோதம் கூடுவளைவுகளுடன் அமைய, மேலே திருப்பங்களில் மகரதலைகளுடன் யாளிகள் நடைபயிலும் பூமிதேசம்.4 கர்ணபத்திகளில் பத்திக்கிரண்டாய் நான்கும் சாலைப்பத்தியில் இரண்டுமாகத் திசைக்கு ஆறு கூடுவளைவுகள் பெற்றுள்ள கபோதத்தின் கோணப்பட்டம் பரவிய நிலையில் அமைய, விளிம்பில் தொடர்ச்சியற்ற சந்திரமண்டலம். கூடுகள் பழைமைப் பொலிவுடனான அழகிய கந்தருவத்தலைகள்5 பெற, வளைவுகள் தலைப்பிலிருந்து இருபுறத்தும் பரவும் கொடிக்கருக்குகளால் நிறைந்துள்ளன. பல்வகைத் தலையலங்காரமும் இளநகை வெளிப்படுத்தும் இதழ்களுமாய்க் காட்சிதரும் இக்கந்தருவர்களின் செவிகளில் பனையோலைக் குண்டலங்கள். பல தலைகள் சிறக்க வடிக்கப்பட்டுள்ளபோதும் ஒன்றிரண்டு மேலோட்டச் செதுக்கலாகவும் ஒரு கூடு மட்டும் சிற்பமின்றி வெறுமையாகவும் உள்ளன.





தளச்சுவரின் முப்புறத்துமுள்ள சாலைப்பத்திக் கோட்டங்களைச் சட்டத்தலை நான்முக அரைத்தூண்கள் அணைவு செய்ய, மேலே உத்திரம், வலபி, வாஜனம். தெற்கு, வடக்குக் கோட்டங்களில் பின்னாளைய சிற்பங்களாய் ஆலமர்அண்ணலும் நான்முகனும். மேற்குக் கோட்டத்தில் பொ. கா. 9ஆம் நூற்றாண்டினதாகக் கொள்ளத்தக்க அழகிய அம்மையப்பர் சிற்பம்.

கோட்டச் சிற்பங்கள்

வலமுழங்காலைச் சற்றே மடக்கி, பாதத்தைத் திரயச்ரமாக்கி, இடப்பாதத்தை சமத்திலிருத்தி, வலக்கையைக் காளையின் திமில் மீது வைத்துள்ள அம்மையப்பரின் இடக்கையில் நீலோத்பலம்.6 வலப்புறம் சடைத்திரளாகவும் இடப்புறம் கரண்ட அமைப்பிலுமுள்ள மகுடத்தைச் சுற்றிலும் தீச்சுடர்களுடனான திருவாசி ஒளிர்கிறது. செவிகளில் வலப்புறம் படமெடுத்த முத்தலைப் பாம்பு குண்டலமாக, இடப்புறம் பனையோலைச் சுருள். சரப்பளி, சவடி, முப்புரிநூல், தோள், கை வளைகள், தாள்செறிகள் பெற்றுள்ள அவரது இடைக்கட்டுடனான இடையாடை இறைவன் பக்கம் தொடைவரையான சிற்றாடையாகவும் உமைப்பக்கம் கணுக்கால்வரை நீளும் பட்டாடையாகவும் அமைய, ஆடைநுனி மடிப்புகளுடன் இடத்தொடையில் நெகிழ்ந்துள்ளது. இடையில் இருவட அரைக்கச்சு. முதுகின் இடப்புறத்தே விசிறிமடிப்பாய் முந்தானை. அம்மையப்பரின் பின் நேர்ப்பார்வையிலிருக்கும் காளையின் கழுத்தில் மணிமாலை. முவ்வளைவுக் கோலத்தில் ஒசிந்து நிற்கும் இச்சிற்பத்தின் ஒல்காப் பேரழகு உள்ளம் ஈர்க்கும் தகைமையது.



சடைமகுடம், பூட்டுக்குண்டலங்கள், சரப்பளி, தோள், கை வளைகள், இடைக்கட்டுடனான பட்டாடையணிந்து, சமபாதத்திலுள்ள நான்முகனின் பின் கைகளில் அக்கமாலை, குண்டிகை. முன்கைகள் காக்கும், அருட்குறிப்புகளில்.7 சிறு குன்றின்மீது ஆல மரநிழலில் வீராசனத்திலுள்ள தென்திசைக்கடவுள் வலப்பாதத்தைக் கீழமர்ந்துள்ள நந்தியின் முதுகின்மீதும் அதையடுத்துக் குப்புறப் படுத்திருக்கும் முயலகன் முதுகின்மீதுமாக இருத்தியுள்ளார். ஆறு கைகள் பெற்றுள்ள அவரது வலக்கைகளில் கீழிருந்து மேலாக அக்கமாலை, மழு, படமெடுத்த பாம்பு அமைய, இடக்கைகளில் சுவடி, மான், தீச்சுடர். அக்கமாலையேந்திய வல முன் கை சின்முத்திரையில். சுவடி கொண்ட இடக்கை முழங்கால்மீது. இறைவன் அமர்ந்துள்ள பாறையின் கீழ்ப்பகுதியில் வலமும் இடமுமாகப் பக்கத்திற்கிரு முனிவர்கள். வலப்புற முனிவர் ஒருவர் இரு கைகளையும் தலைக்கு மேலுயர்த்தி வணங்க, இடப்புற முனிவர்களுள் ஒருவர் தொழுத கையராய்த் திகழ்கிறார். ஏனைய இருவரும் சின்முத்திரையர்கள். இக்கோட்டத்தை ஒருதள நாகரத் திருமுன்னாக்குமாறு போல முன்பகுதியில் பின்னாளைய காரைக் கட்டுமானம்.

பூதமாலை

சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள பல்லவர், முற்சோழர் காலத்தனவான பிற பூதமாலைகளிலிருந்து இடப்பங்கீட்டில் பெரிதும் வேறுபட்டுள்ள இதில், பூதங்கள் ஒன்றுக்கொன்று நன்கு இடம்விட்டு அமர்ந்துள்ளன. இலலிதாசனம், குத்துக்காலமர்வு ஆகியவற்றிலுள்ள பெரும்பாலான பூதங்கள் இசைக்கருவிகளுடனும் ஆடற்கோலத்திலும் காட்சியளிக்க, பார்வையாளர்கள் போல் சில பூதங்கள். விளையாட்டுக்களில் ஒன்றிரண்டு பூதங்கள் மூழ்க, போரிடுமாறோ, போர்க்கருவிகளுடனோ இம்மாலையில் ஒரு பூதமும் இல்லை. சடைப்பாரம், இருபுறத்தும் விரிந்த சுருள்முடி எனக் காட்சிதரும் இப்பூதங்களின் கழுத்தில் சவடி, சரப்பளி, மணிமாலைகள் ஆகிய மூன்றனுள் ஒன்று உள்ளது. செவிகளில் பனையோலை அல்லது பூட்டுக்குண்டலங்கள். அனைத்துமே சிற்றாடையுடன் முப்புரிநூல், உதரபந்தம், தோள், கை வளைகள் கொள்ள, தாள்செறிகள் சிலவற்றில் இடம்பெற்றுள்ளன. ஆடற்கைகளில் அர்த்தரேசிதம், வேழக்கை, நெகிழ்கை ஆகியன அமைய, ஒரு கை முத்திரைகளாய்ப் பதாகம், கடகம், கபித்தம் உள்ளன.





மத்தளம், உடுக்கை உள்ளிட்ட பலவகைத் தோலிசைக் கருவிகள், செண்டு, இலைத்தாளம் உள்ளிட்ட கஞ்சக்கருவிகள் இசைக்குமாறு பல பூதங்கள் காட்டப்பட்டுள்ளன. சங்கூதும் பூதங்களுக்கிடையே வீணை இசைக்கும் பூதங்கள் இரண்டைக் காணமுடிகிறது. அவற்றுள் ஒன்று அனுபவித்து வாசிப்பதை அதன் முகப்பாடே வெளிப்படுத்துகிறது. கோயில் கட்டப்பட்ட காலத்தே இப்பகுதியில் சிரட்டைக்கின்னரி பெருவழக்குப் பெற்ற நரம்பிசைக் கருவியாய் விளங்கியது போலும்! ஐந்து பூதங்கள் அதைக் கொண்டுள்ளன. ஒரு பூதம் சிரட்டைக்கின்னரியை இசைத்தவாறே பாடுவதும் ஒரு பூதத்தின் ஆடலுக்கு வீணையும் சிரட்டைக்கின்னரியும் மட்டுமே இசைக்கருவிகளாக அமைந்துள்ளமையும் சோழர் கால நட்டுவர்கள் போல ஒரு பூதம் கையில் செண்டுதாளத்துடன் பாடுவதும் சிறப்பாகக் காணத்தக்கன. பழிப்புக்காட்டுதல், பழம் உண்ணல், பாம்புகளுடன் விளையாடல், பாம்பை வயப்படுத்தல் போன்ற காட்சிகளிலும் சில பூதங்கள் உள்ளன. குரங்கு, நந்திமுகத்துடன் உள்ள சில தவிர, பெரும்பாலான பூதங்கள் மனிதமுகம் பெற்றுள்ளன. பூதமாலையின் இரண்டு இடங்களில் இறைவனுக்கான படையலைச் சுமந்து செல்லும் பூதஊர்வலம்.

விமான மேலுறுப்புகள்

அண்மைக் காலத்தே கோட்டங்களுக்கு மேலிருக்குமாறு கீழ்த்தளக் கூரையில் தெற்கில் வீராசனத்தில் ஆலமர்அண்ணலும் சுகாசனத்தில் மேற்கில் விஷ்ணுவும் வடக்கில் நான்முகனும் சுதையுருவங்களாக இருத்தப்பட்டுள்ளனர். ஆலமர்அண்ணலுடன் முனிவர்கள் அமர, விஷ்ணு, நான்முகனின் இருபுறத்தும் தேவியர். கூரையின் நான்கு மூலைகளிலும் அமர்நந்தியும் பூதமும் சுதையுருவங்களாய்க் காட்டப்பட்டுள்ளன. முதல்தள ஆரம் வெறுமையாக அமைய, இரண்டாம் தளக்கூரையைத் தாங்குமாறு நாற்புறத்தும் பக்கத்திற்கிரு கூரைதாங்கிகள். இரண்டாம் தளக் கூரையின் நான்கு மூலைகளிலும் பூதங்கள். கிரீவகோட்டங்களில் சிவபெருமான் கிழக்கில் சுகாசனத்திலும் தெற்கில் அர்த்தபத்மாசனத்திலும் அமைய, மேற்கிலும் வடக்கிலும் சுகாசன விஷ்ணு, நான்முகன். தெற்கர் தவிர ஏனைய மூவரும் பின்கைகளில் அவரவர்க்குரிய கருவிகளுடன் முன்கைகளைக் காக்கும், அருட்குறிப்புகளில் கொண்டுள்ளனர். மூவரும் பட்டாடை, தோள் துண்டு, அணிகலன்கள் கொண்டிருக்க, தெற்கர் உருத்திராக்க அணிகலன்களுடன் இருகையராய்ப் புலித்தோல் மீது அமர்ந்துள்ளார். அவரது சடைமகுடத்தில் இடப்புறம் கங்கை.

முகமண்டபம்

நிலமட்டத்திற்கு மேல் சுவர்ப்பகுதியிலிருந்து தொடங்குவதால் முகமண்டபத்தின் தாங்குதளம், வேதிகை குறித்து அறியக்கூடவில்லை. கோட்டங்களற்ற அதன் சுவரை விமானம் ஒத்த நான்முக அரைத்தூண்கள் தழுவ, மேலே கூரையுறுப்புகள். வலபி, விமானம் ஒத்த பூதமாலை கொள்ள, கபோதத்தில் கந்தருவத் தலைளுடன் கிழக்கிலும் வடக்கிலும் இரண்டு கூடுகள். தெற்குக் கபோதம் வெறுமையாக உள்ளது. முகமண்டபக் கபோதம் விமானக் கீழ்த்தளக் கபோதத்தினும் ஏறத்தாழ 40 செ. மீ. இறங்கலாக, விமானத்தின் பூதமாலை அளவிற்கு உள்ளது.

பெருமண்டபம்

தெற்கிலும் கிழக்கிலும் வாயில் பெற்றுள்ள பெருமண்டபம் பதினாறு முச்சதுர, இருகட்டுத் தூண்களாலான கற்பந்தலாக இருந்து, பின்னாளில் முப்புறத்தும் தூண்களை இணைத்துச் சுவர் எழுப்பப்பட்ட நிலையில் மண்டபமாகியுள்ளது. அதன் தென், வடபுறத்தே பாதபந்தத் தாங்குதளமும் வேதிகையும் காரைக் கட்டுமானமாய்த் திகழ, மேலே பேரளவிலான கருங்கல் கபோதம். கபோதத்தின் மேல் வடமேற்கு மூலையில் தாவ எத்தனிக்கும் குரங்கின் சிற்பம். பூமிதேசமாக வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய முத்திசைகளிலும் ஆங்காங்கே சிற்பத்தொடர்கள். வடக்கிலும் கிழக்கு வாயிலின் வடபகுதியிலும் உள்ளவை நடைபயிலும் யாளிகளைக் கொள்ள, கிழக்குப் பகுதியின் தென்புறச் சிற்பத்துண்டு பூதவரிசை பெற்றுள்ளது. இது விமான, முகமண்டபப் பூதமாலையினின்று வேறுபட்டுள்ளது.

பெருமண்டபத் தென்வாயில் மேலுள்ள கூரைப்பகுதியில் வளைமாடத்தில் கவரிப்பெண்களுக்கு இடையில் முன்கைகள் காக்கும், அருட்குறிப்புகளிலிருக்க, பின்கைகளில் அங்குசம், மலருடன் சுதையாலான அம்மன். கூரையின் கிழக்கு முகத்தில் தென், வடமூலைகளில் நந்தியும் பூதமும் சுதையுருவங்களாய். கிழக்கு வாயிலின் முன் காரைக் கட்டுமானமாய் மற்றொரு வாயில் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு நான்முகத் தூண்கள் கூரைதாங்க, இருசதுர, ஒருகட்டு ஒட்டுத் தூண்கள் மதலை, பூமொட்டுப் போதிகையுடன் அதே பணியில் உள்ளன. கூரைக்கு மேல் கர்ணகூடங்களுக்கு இடையிலுள்ள சாலையில் சிவபெருமானும் உமையும் சுகாசனத்தில் உள்ளனர். பின்கைகளில் மான், மழு ஏந்தியுள்ள இறைவன் காக்கும், அருட்குறிப்புகள் காட்ட, இறைவியின் இடக்கை முழங்கால் மீது. வலக்கை காப்பு முத்திரையில். கிழக்கு வாயிலை அடுத்து விரியும் சுவர்ப்பகுதியில் பக்கத்திற்கொன்றாக இறைவன் தாயுமானவரான கதைவிளக்கச் சுதையுருவங்கள். சுவரில் முப்புறத்தும் சாளரங்கள்.

மண்டபங்களின் உட்புறம்

கீழ்ச்சதுரத்தில் பாம்புப்படம் பெற்றுள்ள பெருமண்டபத் தூண்கள் தரங்க வெட்டுப் போதிகைகளால் கூரையுறுப்புகள் தாங்குகின்றன. அவற்றுள் வடபுற நடுத்தூண்கள் சுவரால் இணைக்கப்பட்ட நிலையில் அம்மன் திருமுன் உருவாகியுள்ளது. கிழக்கு வாயில் ஒட்டிய இரண்டு தூண்களில், எதிரெதிராக வணங்கிய கைகளுடன் காட்சிதரும் ஆடவரும் அம்மையும் இப்பெருமண்டபத்தைத் திருப்பணி செய்த இணையராகலாம். ஆடவர் இடுப்புச் சிற்றாடையுடன் அடியவர் கோலத்தில் விளங்க, அம்மை புடவை, ரவிக்கை, அணிகலன்கள், அகலமான தாலிச்சரடு பெற்றுள்ளார்.

குங்குமவல்லித் திருமுன்

கருவறை மட்டுமுள்ள அம்மன் திருமுன்னில் தெற்குப்பார்வையில் குங்குமவல்லி என்ற திருப்பெயருடன் இறைவி எழுந்தருளியுள்ளார். வலப் பின் கையில் அங்குசம், இடப் பின் கையில் மலர்மொட்டுடன், வல முன் கை காக்கும் கையாக, இட முன் கையை அருள்முத்திரையில் கொண்டுள்ள அம்மையின் செவிகளில் பனையோலைக் குண்டலங்கள். சடைமகுடம், சரப்பளி, தோள், கை வளைகள், பட்டாடை பெற்றுப் புன்னகை பொலிந்த முகத்துடனுள்ள இத்திருமேனி பின்னாளையது.

பிற இறைத்திருமேனிகள்

இப்பெருமண்டபத்தில் அம்மன் திருமுன் கிழக்குச்சுவரை ஒட்டி வடபுறத்தே அனுமார் சிற்பம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அதை ஒட்டியுள்ள மேடையில் தென்பார்வையாக விஷ்ணுவும் மேற்குப் பார்வையில் சனீசுவரன், கதிரவன், பைரவரும் உள்ளனர். சனீசுவரனின் பின்கைகளில் இருபுறத்தும் கத்தி. முன்கைகள் காக்கும் குறிப்பிலும் கடியவலம்பிதத்திலும் உள்ளன. கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, பட்டாடை பெற்றுள்ள அவர் பின் காகம்.

இருகைகளிலும் சற்றே மலர்ந்த தாமரைகளுடன் காட்சிதரும் கதிரவன் கரண்டமகுடம், சரப்பளி, தோள், கை வளைகள், சிற்றாடை அணிந்துள்ளார். பின்கைகளில் உடுக்கையும் தீச்சுடரும் பெற்றுள்ள பைரவரின் முன்கைகளில் முத்தலைஈட்டி, தலையோடு. தன் ஊர்தியான நாயுடன் சுடர்முடியும் தலையோட்டு மாலையும் பனையோலைக் குண்டலங்களும் தோள், கை வளைகளும் அணிந்து வெற்றுடம்பினராய் நிற்கும் பைரவரின் இடையைப் பாம்பு சுற்றியுள்ளது. விஷ்ணுவின் பின்கைகளில் சங்கு, சக்கரம். கிரீடமகுடம், மகரகுண்டலங்கள், தோள், கை வளைகள், சரப்பளி, முப்புரிநூல், உதரபந்தம், பட்டாடை பெற்றுள்ள அவரது வல முன் கை காக்கும் குறிப்பிலிருக்க, இட முன் கை கடிய வலம்பிதத்தில்.

பெருமண்டபத்தின் தென்மேற்குப் பகுதியில் பிள்ளையாரும் வடமேற்கில் பழனியாண்டியும் தாமரைத்தளத்தில் உள்ளனர். பிள்ளையார் திருமுன் ஒட்டியுள்ள சிறிய ஒருதள நாகர திருமுன்னில் சிவபெருமான் உமையின் உலாத்திருமேனிகள். அம்மன் கருவறையின் வலப்புற மேடையில் ஆடவல்லானும் உமையும். இந்நான்கு செப்புத்திருமேனிகளும் அண்மைக் காலத்தவை.

முகமண்டபம் - காவலர்கள்

முகமண்டப நுழைவாயிலின் இருபுறமும் பக்கத்திற்கொருவராய் நெடிய கம்பீரமான காவலர்கள். உயரமான செவ்வகத் தளங்களின்மீது நிற்கும் இக்காவலர் சிற்பங்கள் நேர்ப்பார்வையும் நெறித்த புருவங்களுமாய், வலச்செவியில் பனையோலைக் குண்டலம், இடச்செவியில் அன்னக்குண்டலம் அணிசெய்யக் கோரைப்பற்களுடன், தோள், கை வளைகள், உதரபந்தம் விளங்கக் காட்சிதருகின்றன. இருவருமே சரப்பளி அணிந்திருந்தபோதும் வடக்கரின் அணிகலன் அழகிய தொங்கல்களுடன் மிளிர, தெற்கர் கூடுதலாகப் பேரளவுச் சவடியும் அணிந்துள்ளார். தெற்கர் கரண்டமகுடம் கொள்ள, வடக்கர் சடைமகுடராக இருபுறத்தும் கனத்த சடைக்கற்றைகள் நெகிழ நிற்கிறார். தெற்கரின் கரண்டமகுடம் மீறிய சடைப்புரிகள் தலையின் இருபுறத்தும் வளையங்களாய் நெகிழ்ந்துள்ளன. இருவரும் முப்புரிநூல் அணிந்திருந்தபோதும் வடக்கருக்கு அது திரட்சியுடன் மாலையென அமைய, தெற்கருடையது அலங்காரமாக உள்ளது. இடைக்கட்டுடனான இடைச்சிற்றாடை முடிச்சுத்தொங்கல்களுடன் முழங்கால்வரை நெகிழ்ந்திருக்கக் கால்களில் கழலணிந்து, வீரப்பெருமிதத்துடன் நிற்கும் அவர்களுள் வலப்புறத்தார் வலப்பாதத்தைப் பார்சுவமாக்கி, இடப்பாதத்தை அக்ரதலசஞ்சாரத்தில் நிறுத்த, இடப்புறத்தார் வலப்பாதத்தை அது போல் நிறுத்தி, இடப்பாதத்தைத் தி ரயச்ரத்தில் திருப்பியுள்ளார்.

தெற்கரின் வலக்கை வியப்பு முத்திரைகாட்ட, இடக்கை உருள்பெருந்தடி மீது பொருந்தியுள்ளது. வடக்கரின் வலக்கை பாம்பு சுற்றிய உருள்பெருந்தடி மீதிருக்க, இடக்கை அச்சுறுத்தும் முத்திரையில். இருவருமே கருவறைப் பார்வை விலக்கி முகத்தை இலேசாகத் தாழ்த்திக் கீழ்ப் பார்வையில் சற்றே ஒருக்கணித்தாற் போல் காட்சிதருகின்றனர். புருவங்கள் நெறித்திருந்தபோதும் அவர் தம் பார்வைகள் அச்சுறுத்தவில்லை. கனிவும் கண்டிப்பும் கலந்த பார்வையும் கீற்றாய் மலர்ந்திருக்கும் இதழோரத்துப் புன்னகையும் இவ்வடிவங்களை உயிரோவியங்களாக்கி உயர்த்துகின்றன.

பொ. கா. 9ஆம் நூற்றாண்டு உளிப்படைப்புகளாகக் கொள்ளத்தக்க இவ்வாயிற்காப்போர் காவல் செய்யும் 1. 63 மீ. உயர, 80 செ. மீ. அகல முகமண்டப வாயிலின் மேல்நிலையில் படரும் கொடிக் கருக்கினிடையே இருபுறத்தும் பக்கத்திற்கிருவராக வானவர்கள் போற்ற இடையில் அர்த்தபத்மாசனத்தில் இருகைகளிலும் தாமரைகள் ஏந்திய திருமகள்.8 கிழக்கு மேற்காக 4. 07 மீ. நீளமும் தென் வடலாக 3. 10 மீ. அகலமும் பெற்றுள்ள இம்மண்டபம் தூண்களற்று வெறுமையாக உள்ளது.

கருவறை

1. 82 மீ. உயரம், 97 செ. மீ. அகலம் கொண்ட எளிய நுழைவாயிலுடன் 3. 60 மீ. பக்கமுடைய சதுரமாக விளங்குகிறது கருவறை. அதில் சதுரமான ஆவுடையாரின் மீது நெடிய உருளைப் பாணம் கொண்ட, இலிங்கத்திருமேனியராய்த் தான்தோன்றீசுவரர் என்ற திருப்பெயருடன் இறைவன் எழுந்தருளியுள்ளார்.

வளாகச் சிற்பங்கள்

இங்குள்ள சிற்பங்களில் அம்மையப்பர், வாயிற்காவலர்கள், வடசுற்றாலைத் திருமுன் சண்டேசுவரர், சுற்றின் தென், வடபுறங்களிலிருந்த கணுக்கால் வரையிலான நின்றகோலப் பிள்ளையார், மார்பளவிலான கொற்றவை ஆகிய சிற்பங்கள் முற்சோழர் காலத்தவை. பிற அனைத்தும் பிற்காலத்தன. கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, தோள், கை வளைகள், மார்புக்கச்சு பெற்றுள்ள சோழக் கொற்றவையின் வல முன் கை காக்கும் குறிப்பு காட்ட, இட முன் கை சிதைந்துள்ளது. பின்கைகளில் வலப்புறம் எறிநிலைச் சக்கரம், இடப்புறம் சங்கு. கரண்டமகுடம், சரப்பளி, இடைக்கட்டுடனான சிற்றாடை, தோள், கை வளைகள், முப்புரிநூல், உதரபந்தம் அணிந்துள்ள சோழர் காலச் சிதைந்த பிள்ளையாரின் வல முன் கையில் உடைந்த தந்தம். பின்கைகளில் அங்குசம், பாசம். இட முன் கை மோதகத்தைத் துளைக்கை சுவைக்கிறது.

சடைப்பாரம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல், மணிகள் பதித்த உதரபந்தம், தோள், கை வளைகள், இடைச்சிற்றாடை அணிந்து வலக்கையில் மழுவேந்தி, இடக்கையைத் தொடைமீதிருத்தி சுகாசனத்திலுள்ள சண்டேசுவரரின் தோற்றம் கம்பீரமும் கனிவும் நிறைந்த காட்சியாகும். கரண்டமகுடம், சரப்பளி, முப்புரிநூல், தோள், கை வளைகள், உதரபந்தம், சிற்றாடை பெற்றுள்ள சுற்றாலைப் பிள்ளையாரின் முன்கைகளில் உடைந்த தந்தம், மோதகம். பின்கைகளில் அங்குசம், பாசம். அவருடைய துளைக்கை இடம்புரியாகச் சுருண்டுள்ளது.



வடமேற்குத் திருமுன்னிலுள்ள அலைமகள் தாமரைமலரில் அர்த்தபத்மாசனத்தில் உள்ளார். சடைமகுடம், குண்டலங்கள், தோள், கை வளைகள், சுவர்ணவைகாக்ஷம், மார்புக்கச்சு, பட்டாடை அணிந்துள்ள அவரது பின்கைகளில் தாமரைகள். முன்கைகள் காக்கும், அருட்குறிப்புகளில் உள்ளன. அவரை அடுத்துள்ள எண்கைக் கொற்றவை பின்னால் சிம்மம் நிற்க, எருமைத்தலை மீது சமபாதத்தில் காட்சிதருகிறார். அவரது வலக்கைகளில் முன்கை காக்கும் குறிப்பு காட்ட, பிற கைகளில் கத்தி, அம்பு, சக்கரம். இட முன் கை கடியவலம்பிதமாக, பின்கைகளில் கேடயம், வில், சங்கு. சடைமகுடம், சரப்பளி, கைவளைகள் பெற்றுள்ள அம்மை புடவை அணிந்துள்ளார். இறுதியில் சுகாசனத்திலுள்ள கலைமகளின் முன்கைகள் வீணை மீட்ட, பின்கைகளில் அக்கமாலை, சுவடி. மார்புக்கச்சற்ற அவரது இடையில் பட்டாடை. மேற்குத் திருமுன்னில் மயில் மேல் சுகாசனத்திலுள்ள ஆறுமுகனின் முன்கைகள் காக்கும், அருட்குறிப்புகளில் உள்ளன. வலக்கைகளில் கத்தி, அம்பு, சக்தி உள்ளிட்ட கருவிகள் இலங்க, இடக்கைகளில் வஜ்ரம், கேடயம் உள்ளிட்டவை திகழ்கின்றன. மகுடம், பனையோலைக் குண்டலங்கள், அரும்புச்சரம், முப்புரிநூல், உதரபந்தம், தோள், கை வளைகள் அணிந்துள்ள அவரது இருபுறத்துமுள்ள தேவியர் முருகனுக்கு அணுக்கமான கைகளில் மலரேந்தி, வெளிக் கைகளை நெகிழ்த்தியுள்ளனர்.

இறைக்கோயிலின் தென்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெண்தெய்வத் திருமேனிகள் சில சுதைவடிவிலும் சில கல் திருமேனியாகவும் உள்ளன. வடக்கிலுள்ள பிருத்யங்கராதேவி சிம்மத்தின் மேல் சுகாசனத்திலுள்ளார். வலப்பாதம் மண்டையோட்டின் மேல். பார்வைக்குக் கிடைக்கும் அவரது நான்கு தலைகளும் சிம்மத்தலைகளாக அமைய, நடுத்தலையில் மண்டையோட்டு மாலை. பிற தலைகளில் மண்டையோடு. அனைத்துத் தலைகளிலும் பிறைநிலா. வலக்கைகளில் கீழிருந்து மேலாக முத்தலைஈட்டி, வாள், அம்பு, சக்கரம். மேற்கை உயர்த்திய பதாகமாக உள்ளது. இடக்கைகளில் கீழிருந்து மேலாகக் கேடயம், வில், சங்கு அமைய, கீழ்க்கை ஏந்தலாகவும் மேற்கை பதாகமாகவும் உள்ளன.

பிருத்யங்கரா தேவியை அடுத்துள்ள திருமுன்னின் மேல், கீழ்ப்பகுதிகளில் தில்லைக்காளி இடம்பெற்றுள்ளார். கீழுள்ளவர் பாதாளக் காளி என்றும் அழைக்கப்படுகிறார். சுடர்முடி, கரண்ட மகுடம், கச்சற்ற மார்பகங்கள், பட்டாடையுடன் காட்சிதரும் தில்லைக்காளி உத்குடியில் உள்ளார். அவரது வல முன் கை முத்தலைஈட்டி கொள்ள, இட முன் கை காக்கும் குறிப்பில். பிற வலக்கைகளில் மேலிருந்து கீழாகக் கத்தி, அம்பு, பாம்பு. இடக்கைகளில் கேடயம், தலை, தலையோடு. இரு கைகளில் பாம்பைப் பிடித்துள்ள முயலகன் மீது அம்மையின் இடப்பாதம். கீழுள்ள காளி சுகாசனத்தில் வலக்கைகளில் தலையோடு, சக்கரம், அங்குசம், முத்தலைஈட்டி கொண்டு இடக்கைகளில் கத்தி, கேடயம், தீச்சுடர், பாசம் பெற்றுள்ளார்.

முகமண்டபம், விமானம் என அமைந்துள்ள ஜெயகாளிகாம்பாள் திருமுன் வாயில் சிறப்பான அலங்கரிப்புடன் இருபுறத்தும் சுதையாலான காவற்பெண்களுடன் விளங்குகிறது. முகமண்டப மேற்குச்சுவரில் சிவபெருமானின் மார்பின்மீது நிர்வாணியாக நிற்கும் காளியின் ஓவியப்படம். கருவறைக் கதவுகள் சிற்பங்களுடன் திகழ, மேல்நிலையில் யானைகள் போற்றும் பிள்ளையார். இருக்கையின் முகப்பில் சிம்மம் அமர்ந்திருக்க, அம்மை உத்குடியில் உள்ளார். சுடர்முடி, சடைமகுடம், சரப்பளி, அரும்புச்சரம், பட்டாடை கொண்டுள்ள அவரது வலக்கைகளில் பாம்பு, அம்பு, கத்தி, முத்தலைஈட்டி. இடக்கைகளில் தலையோடு, தலை, கேடயம். இடமேற்கை காக்கும் குறிப்பிலுள்ளது. இத்திருமுன் வாயிலின் தென்மாடத்துள்ள வராகி கருடனின் மேல் சுகாசனத்தில். முன்கைகள் காக்கும், அருட்குறிப்புகளில் அமைய, பின்கைகளில் ஏர், சிங்கத்தண்டு. பின்னால் ஐந்துதலைப் பாம்பு படமெடுத்துள்ளது.

மேற்குப் பார்வையிலுள்ள தென்கிழக்கு சுவர்ணபைரவர் சுகாசனத்தில் சிவபெருமானும் அவரது இடத்தொடையில் அமர்ந்த நிலையில் உமையும் காட்சிதரும் கோலம். புடவையணிந்துள்ள அம்மையின் வலக்கை இறைவன் தோள் வழி அவரைத் தழுவ, இடக்கையில் முத்தலைஈட்டி. இறைவனின் பின்கைகளில் வலப்புறம் கலசம், இடப்புறம் பாம்பு சுற்றிய உடுக்கை. அவரது வல முன் கை காக்கும் குறிப்பு காட்ட, இட முன் கை இறைவியின் இடுப்பில்.

குறிப்புகள்
1. இரண்டாம் திருமுறை, ப. 551; இரா.கலைக்கோவன், கலை வளர்த்த திருக்கோயில்கள், பக். 140 - 148.
2. நாலாயிர திவ்வியப் பிரபந்தம், பாடல் எண் 1762; இரா.கலைக்கோவன், கலை வளர்த்த திருக்கோயில்கள், பக். 165 - 172.
3. இரா.கலைக்கோவன், ஆதித்தசோழனின் தான்தோன்றீசுவரம், தினமணிசுடர், 21. 11. 1982. Encyclopaedia of Indian Temple Architecture, p. 153.
4. தவத்துறை சப்தரிஷீசுவரர் தாங்குதளம், நெடுங்களம் நெடுங்களநாதர் பூமிதேசம் தவிர்த்த பிற சிராப்பள்ளி மாவட்ட முற்சோழர் தளிகளின் தாங்குதளங்களிலோ, பூமிதேசங்களிலோ நடைபயிலும் யாளிகளைக் காணமுடிவதில்லை. அருகிலுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தின் நகரத்தார்மலைப் பதினெண்பூமி விண்ணகர் மண்டபத் தாங்குதளத்திலும் கண்ணனூர் பாலசுப்பிரமணியர் கோயில் பூமிதேசத்திலும் நடைபயில் யாளிகள் உள்ளன. தமிழ்நாட்டளவிலும் நடைபயில் யாளிகளைப் பிரதிமுகங்களாகப் பயன்படுத்தும் போக்கு குறைவாகவே இருந்துள்ளது.
5. கபோதக்கூடுகளில் கந்தருவத்தலைகள் இடம்பெறும் பாங்கினை மிக அரிதாகவே சிராப்பள்ளி மாவட்ட முற்சோழர் கோயில்களில் காணமுடிகிறது.
6. சிராப்பள்ளி மாவட்டத்தில் காணக் கிடைக்கும் கோட்ட அம்மையப்பர் சிற்பங்கள் மூன்று அல்லது நான்கு கைகளுடனேயே அமைந்துள்ளன. அவ்வகையில் தான்தோன்றீசுவரத்தார் தனித்துவம் பெறுகிறார்.
7. திரு. எஸ். ஆர். பாலசுப்பிரமணியம் நான்முகன் சிற்பத்தைச் சோழர் காலத்ததாகக் குறித்துள்ளார். நுயசடல ஊhடிடய கூநஅயீடநள, யீ. 220.
8. முகமண்டப வாயில் மேல்நிலைகளில் முற்சோழர் படைப்பான இது ஒத்த சிற்பங்கள் மிக அரிதாகவே சிராப்பள்ளி மாவட்டக் கோயில்களில் காணப்படுகின்றன. திருப்பாலைத்துறை மகாதேவர் கோயில் முகமண்டப வாயில் மேல்நிலை குறிப்பிடத்தக்க சிறப்புடையது. மூன்று பிரிவுகளாகக் கொடிக்கருக்குத் தூண்களால் பகுக்கப்பட்டுள்ள இந்த மேல்நிலையில் இருபுறத்தும் நந்தியணுக்கரும் கொற்றவையும் அமைய நடுவில் யானைத்திருமகள். விரிவான தரவுகளுக்கு: அர. அகிலா, மு. நளினி, இரா. கலைக்கோவன், சிராப்பள்ளி மாவட்டச் சோழர் தளிகள் நான்கு, பக். 98, 103-104.
பெருங்குடிப் பெருமுடியீசுவரத்து முகமண்டப வாயில் மேலுள்ள தோரணம் தனித்தன்மையது. பிள்ளையாரை மையப்படுத்தித் தோரணத்தை முப்பெரும் பிரிவுகளாகப் பகுத்து அவை ஒவ்வொன்றையும் கொடிக்கருக்குகளால் பல சிறு உட்பிரிவுகளாக்கி அருமையான சிற்பக்காட்சிகளைப் படைத்துள்ள சோழச் சிற்பிகளின் உளிச் செம்மாப்பு இந்தத் தோரணத்தைச் சிராப்பள்ளி மாவட்டத்தின் நிகரற்ற கலைப் படைப்பாக்கியுள்ளது. அர. அகிலா, மு. நளினி, இரா.கலைக்கோவன், பாச்சில் கோயில்கள், பக். 105 - 107.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.