http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[177 Issues]
[1753 Articles]
Home About US Temples Facebook
Issue No. 173

இதழ் 173
[ நவம்பர் 2023 ]


இந்த இதழில்..
In this Issue..

அடையாளத்தின் அடையாளம்
மாமல்லரும் மகாபலியும்
எலவானசூர்க்கோட்டை மாடக்கோயில்-1
வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகள் -1
ஜப்பானியப் பழங்குறுநூறு - 54 (இன்றே இனிய நினைவுடன்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 53 (கொடிது கொடிது தனிமை கொடிது!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 52 (வாள்போல் வைகறை)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 51 (வலிவிடு தூது)
இதழ் எண். 173 > கலையும் ஆய்வும்
எலவானசூர்க்கோட்டை மாடக்கோயில்-1
அர. அகிலா, மு. நளினி, இரா. கலைக்கோவன்

சிராப்பள்ளி சென்னை நெடுஞ்சாலையில் உளுந்தூர்ப் பேட்டைக்கு முன்னாக இடப்புறம் பிரியும் திருக்கோயிலூர்ச் சாலையில் 8 கி. மீ. பயணித்தால் எலவானசூர்க்கோட்டையை அடையலாம். ஊரின் நடுவே பெரியதொரு வளாகத்துள் சிறைப்பட்டிருக்கும் ஊர்பாகம் கொண்டருளியவர் கோயில் வடதமிழ்நாட்டில் காணப்படும் மாடக்கோயிலாகும்.1 துணைத்தளம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, எண்முக அரைத்தூண்களும் குடப்பஞ்சரங்களும் தழுவிய சுவர், வெட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள், வெறுமையான வலபி எனக் கீழ்த்தளம் கருங்கல்லாலும் மேல் நான்கு தளங்கள் செங்கல்லாலும் ஆன நுழைவாயிற் கோபுரம் சிற்பங்களின்றிக் காட்சிதர, வளாகத்தின் தென்புறமுள்ள சபாமண்டபம் திருமணக் கூடமாகியுள்ளது.

அம்மன் கோயில்

வளாகத்தின் தென்புறம் கிழக்குப் பார்வையாக உள்ள பெரியநாயகி திருக்கோயில் விமானம், முகமண்டபம், பெருமண்டபம், முன்மண்டபம், முன்றில் பெற்று நீண்டுள்ளது. முச்சதுர, இருகட்டுத் தூண்கள் பூமொட்டுப் போதிகைகளுடன் கூரை தாங்கும் முன்றிலில் சாமுண்டியின் பழைமையான சிற்பம் இருத்தப்பட்டுள்ளது. சுகாசனத்தில் விரிசடை, பூட்டுக் குண்டலங்கள், சிற்றாடை, மண்டையோட்டுமாலை இவற்றுடன் காட்சிதரும் சாமுண்டியின் வல முன் கை முத்தலைஈட்டி ஏந்த, இட முன் கை தொடைமீதுள்ளது. பின்கைகளில் வலப்புறம் உள்ளது குறுவாளாகலாம். இடக்கை தலையோடு ஏந்தியுள்ளது.



முச்சதுர, இருகட்டுத் தூண்கள் வெட்டுத் தரங்கப் போதிகை களுடன் கூரையுறுப்புகள் தாங்கும் முன்மண்டபத்தின் வடபுறத்தே கொற்றவையின் சிற்பம் இடம்பெற்றுள்ளது. கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, பட்டாடை, கச்சு அணிந்து தாமரை மலரில் நிற்கும் இறைவியின் பின்னே மான் நிற்கிறது. சமபங்கத்திலுள்ள இறைவியின் முன்கைகளுள் வலக்கை காக்கும் குறிப்புக் காட்ட, இடக்கை கடியவலம்பிதத்தில் உள்ளது. பின்கைகளுள் வலக்கை எறிநிலைச் சக்கரம் ஏந்த, இடக்கையில் சங்கு. செங்கல் கட்டுமானமாக விளங்கும் இம்மண்டபத்தின் புறச்சுவரை பாதபந்தத் தாங்குதளத்தின் மீது வளரும் நான்முக அரைத்தூண்கள் கூரை உறுப்புகளுடன் அலங்கரிக்கின்றன.

உருளைத்தூண்கள் வெட்டுப் போதிகைகளுடன் கூரை தாங்கும் பெருமண்டபம் வெறுமையாக உள்ளது. அதன் புறச்சுவர் விமானக் கட்டுமானம் ஒத்துக் கருங்கல் பணியாக உள்ளது. சிறிய அளவினதான முகமண்டப வாயில் வலபியில் பூதவரி இடம்பெற்றுள்ளது. கருவறையில் பெரியநாயகி பின்கைகளில் மலர்மொட்டுக்கள் ஏந்திக் கரண்டமகுடம், அணிகலன்கள், பட்டாடை இவற்றுடன் முன்கைகளைக் காக்கும் குறிப்பிலும் அருட்குறிப்பிலும் கொண்டு எழுந்தருளியுள்ளார்.

விமானக் கட்டமைப்பை ஒத்துள்ள முகமண்டபத் திண்ணையில் பின்னாளைய செப்புத்திருமேனிகள் இடம்பெற்றுள்ளன. அம்மன் விமானம் பாதபந்தத் தாங்குதளம், நான்முக அரைத் தூண்கள் தழுவிய சுவர், வெட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் கொண்டு ஒருதள வேசரமாக அமைந்துள்ளது. கூரைவரை கருங்கல்லால் ஆன இதன் மேலுறுப்புகள் செங்கல்லால் கட்டப்பட்டுள்ளன.

இரண்டாம் கோபுரமும் சுற்றும்

பலித்தளம், கொடிமரம், சிறு அளவினதான நந்தி மண்டபம் பார்த்து, ஒரு தளக் கட்டுமானமாக விளங்கும் இரண்டாம் கோபுரம் வழி நுழைவாரைச் சுற்று மண்டபம் எதிர்கொள்கிறது. கோபுர கிரீவத்தில் சிவபெருமானும் உமையன்னையும் பிள்ளைகளுடன் வீற்றுள்ளனர். சுற்றின் வடமேற்கில் இறை ஊர்திகள் அமைய, தென்மேற்கில் இலிங்கத்திருமேனி, வள்ளி, தெய்வானையுடன் முருகன், இரண்டு பிள்ளையார் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று பத்துக் கைகளுடன் இடத்தொடையில் துணைவி அமரக் காட்சியளிக்கிறது.

துணைத் தளத்தின் மீது இரு வரிசை உருளைத் தூண்கள் வெட்டுப் போதிகைகளுடன் கூரை தாங்க வளரும் சுற்று மாளிகையின் கிழக்கில் கால பைரவர், சூரியன், முருகன், சனீசுவரன் இடம்பெற்றுள்ளனர். சுடர்முடி, பனையோலைக் குண்டலங்கள், முப்புரிநூல் கொண்டு நிற்கும் கால பைரவரின் முன்கைகள் முத்தலைஈட்டி, தலையோடு ஏந்த, பின்கைகளில் உடுக்கையும் பாசமும் உள்ளன. பைரவரின் பின்னால் அவரது ஊர்தியான நாய் காட்டப்பட்டுள்ளது.

கோவிந்தராஜப் பெருமாளாகக் கோயிலாரால் அடையாளப் படுத்தப்பட்டுள்ள முருகன் சென்னி சூழ் நீள்மகுடம், சரப்பளி, சிற்றாடை, முப்புரிநூல், இடைக்கட்டு இவற்றுடன் பின்கைகளில் வக்ஷரம், அக்கமாலை கொண்டு, வல முன் கையில் மலர் ஏந்தியுள்ளார். இட முன் கை கடியவலம்பிதமாக உள்ளது.

மாளிகையின் தென்புறத்தே பழைமையான எழுவர் அன்னையர் தொகுதி சேர்ந்த கெளமாரி, நான்முகி சிற்பங்களுடன், விக்னேசுவரி சிற்பமும் இடம்பெற்றுள்ளது. சுகாசனத்தில் சென்னிசூழ் மகுடமும் சிற்றாடையும் கொண்டு கருங்கல் ஆசனத்தில் அமர்ந்துள்ள கெளமாரியின் பின்கைகளில் வஜ்ரமும் அக்கமாலையும் இடம்பெற்றுள்ளன. வல முன் கை காக்கும் குறிப்புக் காட்ட, இட முன் கை தொடைமீது உள்ளது. நான்முகியும் சுகாசனத்தில் உள்ளார். சடைமகுடம், அரும்புச்சரம், முப்புரிநூல் அணிந்துள்ள அவரது பின்கைகளில் அக்கமாலையும் குண்டிகையும் இடம்பெற, வல முன் கை கடகத்தில் உள்ளது. இட முன் கை தொடைமீது அமர்ந்துள்ளது.



அர்த்தபத்மாசனத்தில் உள்ள விக்னேசுவரியின் தலையைக் கரண்டமகுடம் அணிசெய்ய, இடையில் சிற்றாடை. மார்பில் முப்புரிநூல். பின்கைகளில் கரும்புத்தோகையும் தந்தமும் அமைய, வலம்புரியாக உள்ள அம்மையின் வல முன் கை கடகத்தில் உள்ளது. இட முன் கை தொடைமீது அமர, வலத்தந்தம் உடைந்துள்ளது. இச்சிற்பங்களை அடுத்துப் பிள்ளையாரும் நால்வரும் உள்ளனர்.

வெற்றுத்தளம்

சுற்றின் நடுவில் அமைந்துள்ள மாடக்கோயிலைத் தாங்கும் வெற்றுத்தளம் துணைஉபானம், தாமரை உபானம், கம்பு, அகலமான நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள், கந்தர்வத்தலைகள் பெற்ற கூடுவளைவுகளுடனான கபோதம், பூமிதேசம் பெற்று 3. 29 மீ. உயரத்துடன் விளங்குகிறது. வடக்கிலும் தெற்கிலும் மேற்கு முகமாக மேலேறும் படிகளுக்காக நன்கு புறந்தள்ளி உள்ள வெற்றுத்தளத்தின் மேல் இறைவிமானம், முகமண்டபம் இவற்றின் முன்னுள்ள பெருமண்டபத்தின் புறச்சுவர் நாற்புறத்தும் சூழ்ந்துள்ளது.



எண்முக அரைத்தூண்களால் அணைக்கப்பட்டுள்ள இச்சுவரின் மேல் வளரும் கூரையுறுப்புகளை வெட்டுப் போதிகைகள் தாங்குகின்றன. வெற்றுத்தளம் போலவே படிப் பகுதிகளில் புறந்தள்ளியுள்ள பெருமண்டபச் சுவரின் மேல் வடபுறத்தே மட்டும் செங்கல் கட்டுமானமாய்க் குடங்களற்ற சாலை காட்டப்பட்டுள்ளது. வடபுறத்தே பதினாறு படிகளும் தென்புறத்தே பதினைந்து படிகளும் உள்ளன.

வெற்றுத்தளத்தின் தென்பகுதியில் உள்ள கோட்டங்களில் பிள்ளையாரும் ஆலமர்அண்ணலும் இடம்பெற்றுள்ளனர். அர்த்தபத்மாசனத்தில் உள்ள வலம்புரிப் பிள்ளையாரின் முன் மோதகப்பெட்டி உள்ளது. சரப்பளி, முப்புரிநூல் அணிந்துள்ள அவரது இடத்தந்தம் உடைந்துள்ளது. பின்கைகளில் கரும்புத் தோகையும் பாசமும் அமைய, வல முன் கை காக்கும் குறிப்பில் உள்ளது. இட முன் கை தொடை மீது இருத்தப்பட்டுள்ளது.

பின்னாளைய மண்டப இணைப்புப் பெற்றுள்ள கோட்டத்தில் சடைப்பாரம், சரப்பளி, உருத்திராக்கமாலை, முப்புரிநூல், உதரபந்தம், சிற்றாடை அணிந்து வலச்செவியில் மகரகுண்டலமும் இடச்செவியில் பனையோலை குண்டலமும் கொண்டு ஆலமர்அண்ணல் வீராசனத்தில் உள்ளார். வல முன் கை உடைந்துள்ளது. இட முன் கையில் சுவடி. பின்கைகளில் அக்கமாலை, தீச்சுடர்.

சண்டேசுவரர்

சுற்றின் கிழக்கில் மண்டபக் கட்டுமானமாய்த் தென்பார்வையாக உள்ள சண்டேசுவரர் திருமுன் முன்றில் பெற்றுள்ளது. உள்ளே சுகாசனத்தில் சடைப்பாரம், பனையோலைக் குண்டலங்கள், தோள் கை வளைகள், சரப்பளி, சிற்றாடை அணிந்தவராய் வீற்றிருக்கும் சண்டேசுவரரின் இடக்கை தொடை மீது அமர, வலக்கையில் மழு. இத்திருமுன்னை அடுத்துள்ள கிணறு அலங்காரப் புறச்சுவர் பெற்றுள்ளது.

மேல் நடைமண்டபம்

இறைவன் விமான வளாகத்தை அடைய தென்மேற்கிலும் படித்தொடர் உள்ளது. பதினெட்டுப் படிகள் பெற்றுள்ள இத்தொடரின் கீழ்ப்படிகளைத் தென்புறத்தே துளைக்கைச் சுவர் அணைத்துள்ளது. இந்தத் தொடரை அடுத்து மேலே விரியும் நடைமண்டபம் தெற்கிலும் வடக்கிலும் சுற்று மாளிகைக் கூரையின் மீது செல்ல வழி அமைக்கிறது. நடைமண்டபத்தின் நடுப்பகுதி இறைவன் திருமுன்னுக்கு முன்னுள்ள மண்டபச் சுற்றின் வாயிலாக அமைந்துள்ளது. நடைமண்டபத்தை உருளைத் தூண்கள் வெட்டுப் போதிகைகளுடன் தாங்க, தென்புறத்தே மட்டும் நான்கு முச்சதுர, இருகட்டுத் தூண்கள் பூமொட்டுப் போதிகைகளுடன் இப்பணியில் பங்கேற்கின்றன. இத்தூண்களின் சதுரங்களில் சிற்பங்கள் மிக்குள்ளன. கூரையின் இப்பகுதியில் தாமரைமலர் வடிக்கப்பட்டுள்ளது.

மண்டபச் சுற்றின் விரிந்த மேற்குப் பகுதியை உருளைத் தூண்கள் வெட்டுப் போதிகைகளுடன் கூரையுறுப்புகள் கொண்டு தாங்குகின்றன. வெறுமையாக உள்ள இதனை அடுத்து வடக்கிலும் தெற்கிலும் இறைவன் விமானத்தைச் சூழும் குறுகலான உள்சுற்றின் கூரையை நான்முகத் தூண்கள் வெட்டுப் போதிகைகளுடன் தாங்குகின்றன. கூரை பலகைக் கற்களால் மூடப்பட்டுள்ளது.

விமானம்

சாலைப் புறந்தள்ளலுடன் 5. 34 மீ. பக்கமுள்ள சதுரமாக அமைந்துள்ள இருதள வேசர விமானம் துணைஉபானம், உபானம், தாமரை ஜகதி, பிரதிவரி கொண்டு எழுகிறது. குமுதம் இடம்பெறவில்லை. சதுர பாதங்களின் மீதெழும் எண்முக அரைத்தூண்கள் சுவரைத் தழுவியுள்ளன. அவற்றின் மீதுள்ள வெட்டுத் தரங்கப் போதிகைகள் கூரையுறுப்புகள் தாங்குகின்றன. சாலைப் புறந்தள்ளல்கள் கோட்டங்களின்றி அமைய, போதிகைகளும் வாஜனம், வலபி ஆகிய கூரையுறுப்புகளும் சுற்றுக் கூரைத்தளத்தில் மறைய, மேலே கபோதம், பூமிதேசம் வேதிகை இவையும் அவற்றின் மேல் சாலைப் புறந்தள்ளலுடன் செங்கல் கட்டுமானமாக இரண்டாம் தளமும் காட்டப்பட்டுள்ளன. நான்முக அரைத்தூண்கள் அணைத்துள்ள இரண்டாம் தளத்தின் கர்ணபத்தி, சாலைப்பத்தி இவற்றில் காட்டப்பட்டுள்ள கோட்டங்கள் முப்புறத்தும் வெறுமையாக உள்ளன. கிரீவகோட்டங்களில் தெற்கில் ஆலமர்அண்ணலும் மேற்கில் விஷ்ணுவும் வடக்கில் நான்முகனும் கிழக்கில் சிவபெருமானும் இடம்பெற்றள்ளனர்.

முகமண்டபம்

விமானக் கட்டமைப்பிலுள்ள முகமண்டபத்தில் சாலைப் புறந்தள்ளலோ, கோட்டங்களோ இடம்பெறவில்லை. அதன் முன்னுள்ள முன்றில் வடக்கிலும் தெற்கிலும் படிகள் கொண்டுள்ளது. முகமண்டப வாயிலின் இருபுறத்தும் மேடைகளின்மீது காவலர் நிற்கின்றனர். கருவறை நோக்கி ஒருக்கணித்துள்ள காவலர் இருவருமே கீர்த்திமுகத்துடனான சடைமகுடம், கோரைப்பற்கள், அணிகலன்கள், சிற்றாடை கொண்டுள்ளனர். சிம்மக் குண்டலங்கள் அணிந்துள்ள தெற்கரின் சடைமகுடத்தின் மேல் முத்தலைஈட்டி காட்டப்பட்டுள்ளது. வலக்காலைத் தரையில் ஊன்றி, இடப்பாதத்தை மழு மீது இருத்தியுள்ள அவரது வல முன் கை அச்சுறுத்த, இட முன் கை வேழ முத்திரையில் உள்ளது. பின்கைகள் வியப்புக் காட்டிப் போற்றுகின்றன.

யானைக் குண்டலங்கள் அணிந்துள்ள வடக்கர் இடக்காலைத் தரையில் ஊன்றி, வலப்பாதத்தை மழு மீது இருத்தியுள்ளார். அவரது வல முன் கை அச்சுறுத்த, இட முன் கை மழு மீது உள்ளது. பின்கைகள் வியந்து போற்றுகின்றன. முகமண்டப வலபியைப் பூதவரி அலங்கரிக்கிறது. கருவறையில் இறைவன் சதுர ஆவுடையாரின் மீது பேரளவு பாணத்துடன் இலிங்கத்திருமேனியராய் எழுந்தருளியுள்ளார்.

மேற்சுற்றுவழி

வெற்றுத்தளத்தின் வடக்கிலும் தெற்கிலும் உள்ள படிகள் விமானத்தைச் சூழ்ந்துள்ள சுற்றில் நுழைய வழியமைக்கின்றன. தெற்கில் இவ்வழி அடைபட்டுள்ளது. அங்கே சிவபெருமானும் உமையும் தனிச்சிற்பங்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். சடைமகுடம் அணிந்துள்ள இறைவனின் வல முன் கை சிதைந்துள்ளது. இட முன் கை கடகத்தில் உள்ளது. பின்கைகளில் மான், மழு. கரண்டமகுடம் அணிந்துள்ள இறைவியின் வலக்கை மலரேந்த, இடக்கை நெகிழ்ந்துள்ளது. இச்சிற்பங்களின் பின்னுள்ள சுவரில் நந்தியும் அன்னமும் வரையப்பட்டுள்ளன. சுவரின் மேற்பகுதியில் காணப்படும் பதக்கத்தில் ஊர்த்வஜாநு ஆடற்கோலத்தில் பிள்ளையார் சிற்பமாகியுள்ளார்.

குறிப்பு
1. ஆய்வு நாட்கள் 14. 3. 1991, 2. 1. 2011. உடனிருந்து உதவிய திருவாளர்கள் பால. பத்மநாபனும் பி. லோகநாதனும் நன்றிக்குரியவர்கள்.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.