![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 70
![]() இதழ் 70 [ ஏப்ரல் 16 - மே 15, 2010 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
முனைவர்.இரா.குணசீலன் . தமிழ் விரிவுரையாளர் . கே.எஸ் .ஆர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம். http://gunathamizh.blogspot.com சங்க இலக்கியங்கள் சங்கத்தமிழரின் வாழ்வியலைக் கூறும் வரலாறாகும். விடுகதைகள் நாட்டுப்புற மக்களின் சிந்தனைத் திறனுக்கு தக்க சான்றாகும். சங்க இலக்கியங்கள் வாய்மொழி வழி வந்தவை என்பதால் சங்கப்பாடல்கள் பலவற்றிலும் விடுகதைக் கூறுகளைக் காணமுடிகிறது. அதனை எடுத்தியம்புதே இக்கட்டுரையின் நோக்கமாகும். விடுகதை விடும் கதை – விடுவிக்கும் கதை என்பதே விடுகதையாகும். மறைபொருளிலிருந்து பொருள் விளக்கும் முயற்சியே விடுகதை. வினா எழுப்பி விடையளிக்குமாறு இவ்விடுகதைகள் அமையும். அறிவூட்டுவது சிந்தனையைத் தூண்டுவது இதன் நோக்கமாகும். யாப்பு முறையை சுட்டும் போது தொல்காப்பியர், 'பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே' என்றுரைக்கிறார். 'பிசி, நொடி, புதிர், விடுகதை, வெடிபோடுதல், அழிப்பாங்கதை” ஆகியன இதன் வேறு பெயர்களாகும். விடுகதை என்னும் சொல்லாட்சி பழந்தமிழ் இலக்கியங்களில் இல்லை. 'பிசி' என்னும் சொல்லே பிதிர் என்று மாறி புதிர் என்று மாறியது. குறுகிய காலத்தில் விடைகாணும் முயற்சியால் 'நொடி' என்ற பெயரும் பெற்றது. சங்கப்பாடல்களில் விடுகதை - க.கைலாசபதி அவர்கள் 'தமிழ் வீரயுகப்பாடல்கள்' என்னும் தம் நூலில் சங்க இலக்கியப்பாடல்கள் வாய்மொழிப்பாடல்கள் என்று நிறுவியுள்ளார். - கதிர்மகாதேவன், தமிழண்ணல், கமில் சுவலபில் போன்ற தமிழ்ச்சான்றோரும் இதனை ஏற்றுள்ளனர். இவர்களின் கருத்து எவ்வளவு உண்மையானது என்பதை சங்கப்பாடல்களை நன்கு உற்று நோக்கும் போது அறிந்துகொள்ள முடிகிறது. நாட்டுப்புறவியல் கூறுகள் பலவும் பழந்தமிழர் வாழ்வில் இயைபுற்று இருந்தமையும், அவற்றுள் 'விடுகதை' வழக்கிலிருந்த மரபையும் சங்கப்பாடல்கள் வழியாக நன்கு அறிந்துகொள்ளமுடிகிறது. 'துணங்கை அம் செல்விக்கு அணங்கு நொடித்தாங்கு' (பெரும்பாணாற்றுப்படை-459) என்னும் அடிகள் வாயிலாகப் பேய்மகளிர் கொற்றவைக்கு விடுகதை என்னும் நொடிவிட்டதை கடியலூர் உருத்திரங்கண்ணனார் சுட்டுவர். கலித்தொகையில் விடுகதைக் கூறு. தலைவன் தலைவியின் அழகு நலத்தை வியந்து புகழும் பாடல் ஒன்று விடுகதையின் கூறுகளைத் தன்னகத்தே தாங்கிநிற்கின்றது. பாடல் இதோ, 'ஐ தேய்ந்தன்று, பிறையும் அன்று மை தீர்ந்தன்று, மதியும் அன்று வேய் அமன்றன்று, மலையும் அன்று பூ அமன்றன்று, சுனையும் அன்று மெல்ல இயலும், மயிலும் அன்று சொல்லத் தளரும், கிளியும் அன்று' கலி 55-9-14) இதன் பொருள், உன் நெற்றி வியக்குமாறு தேய்ந்தது ஆயினும் பிறையுமல்ல! உன் முகம் மறுவற்றுள்ளது ஆயினும் நிலவுமல்ல! உன் கண் மலர் போலுள்ளது ஆயினும் மலருமல்ல! நீ அது பிறக்கும் சுனையுமல்ல உன் சாயல் மெல்லென அசைவதே ஆயினும் நீ மயிலுமல்ல! நீ சொல்லுக்குச் சொல் தளர்கிறாய் ஆயினும் நீ கிளியுமல்ல! என்பதே ஆகும். விடுகதைக் கூறுகளுள் 'இயைபுநிலை விடுகதை' என்னும் வாய்மொழிக் கூறுகொண்டு இப்பாடல் விளங்குகிறது. இப்பாடலுடன் ஒப்புநோக்கத்தக்க விடுகதை, 'பச்சைப் பசேலென்றிருக்கும் பாகற்காயுமல்ல பக்கமெல்லாம் முள்ளிருக்கும் பலாக்காயுமல்ல உள்ளே வெளுத்திருக்கும் தேங்காயுமல்ல உருக்கினால் நெய்வடியும் வெண்ணெயுமல்ல' விடை – ஆமணக்கு வாழ்க்கை இயல்பு கூறும் விடுகதை தலைவனுடன் உடன்போக்கில் பெற்றோரை நீங்கிச் சென்றாள் தலைவி. தலைவி மீது கொண்ட பற்றினால் அவள் சென்ற வழியிலேயே தொடர்ந்து வந்தால் செவிலி. வழியில் முக்கோர்பவரைக் கண்டு, தாங்கள் வந்த வழியில் எனது மகளைப் பார்த்தீர்களா என்று வினவினாள். அச்சான்றோர் சொன்ன பதிலே விடுகதை போல இருந்தது. அவர்கள் சொன்ன கருத்தை ஆழ நோக்கினால் வாழ்க்கை இயல்பு இதுதான் என்று புரிந்துகொள்ளும் பக்குவம் வந்துவிடும். பாடல் இதோ, 'பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை மலையுளே பிறப்பினும் மலைக்கு அவைதான் என் செய்யும்? நினையுங்காலை நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே சீர் கெழு வெண்முத்;தம் அணிபவர்க்கு அல்லதை நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதான் என்செய்யும் தேருங்காலை நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என் செய்யும்? கலித்தொகை 09 என்றனர். - நறுமணப் பொருளான சந்தனைம் பூசிக்கொள்பவரல்லது மலையிலே பிறந்தாலும் மலைக்கு அவைதான் என்ன செய்யும்? - சிறந்த வெண்முத்துக்கள் அணிபவருக்குப் பயன்படுவதன்றி கடலிலே பிறந்தாலும் கடலுக்கு அவைதான் என்ன செய்யும்? - ஏழ் நரம்பிலான யாழில் தோன்றும் இன்னிசை யாழிலே பிறப்பினும் பாடுபவர்கல்லாது யாழுக்கு அவைதான் என்ன செய்யம்? - இவைபோலவே உன் மகள் உனக்கும். அவள் உன் மகளாயினும் அவள் அவனுக்குப் பிடித்தவனோடு வாழ்வதே வாழ்வின் இயல்பு. என்ற முக்கோற்பவரின் கேள்வி செவிலியைச் சிந்திக்கச் செய்வதாக அமையும். வாழ்க்கையின் இயல்பு அது தான் என்பதை உணரச்செய்வதாகவும் அமையும். (தொடரும்) this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |