![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 80
![]() இதழ் 80 [ பிப்ரவரி 15 - மார்ச் 17, 2011 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
வேங்கைப் பூக்கள் மலர்ந்து மணமாலை அழைப்பிதழ் விடுக்கும் வசந்தகாலம் அது. கானக் கிள்ளைகளும், ஓவிய மயில்களும் குறவன் குறத்திகளோடு மகிழ்ந்து உறவாடும் மலைச்சாரல்கள். காற்றில் அகிலும், சந்தனமும் இணைந்தே மணக்க, தொண்டகப்பறை முழங்கும் சிறுகுடி ஊர் அது. இல்லறம் காணத் தலைவி தவிக்கும் நெடும்பொழுதுகள் அவை. அத்தகைய ஒரு பொழுதில், கழுத்தில் சங்கு மணிமாலைகள் ஜதி சொல்ல, நீண்ட கரிய கூந்தல் ஜடை நடனமாட வருகிறாள் அந்த "அகவன் மகள்". அவளை அழைக்கிறாள் தலைவியின் தோழி. முறத்தில் மலை நெல்லை வைத்துத் தெய்வங்களைப் பாடி, நெல்மணியை எண்ணிப் பார்த்துச் சொல்கிறாள் தலைவியின் எதிர்காலம் பற்றிக் குறி. ஔவைப் பெண்ணாளின் "குறிஞ்சி" நிலக்காட்சி இதோ: தோழி கூற்று "அகவன் மகளே பாடுக பாட்டே இன்னும் பாடுக பாட்டேயவர் நன்னெடும் குன்றம் பாடிய பாட்டே" - குறுந்தொகை : 23 : 3-5. "அகவன் மகளே", அதாவது தெய்வங்களை அழைத்துப் பாடுபவளே, பாடு உன் பாட்டை. இன்னும் பாடு தலைவனின் மலையைக் குறித்து இன்னும் பாடு. தலைவிக்கு மேலும் மேலும் கேட்க ஆவலாய் உள்ளது என்பதாம். மற்றொரு குறிஞ்சி நிலக்காட்சி, "பரணரின்" பாடல் வரிகளில் விரிகிறது. தோழி கூற்று "...... வெண்கடைச் சிறுகோல், அகவன் மகளிர் மடப்பிடிப் பரிசில் மான" - குறுந்தொகை : 298 : 6-7 அகவன் மகளிர் குறிசொல்லிப் பாடும்போது வெள்ளிப் பூண் போட்ட சிறுகோலினைக் கையில் வைத்துக்கொண்டுதான் கடவுளர்களை விளித்துப் பாடியுள்ளனர். இம்மகளிர் யானைகள் போன்ற பெரும் பரிசில்களைப் பெற்றுள்ளனர் என்பது இக்குறுந்தொகைப் பாடலின் வரலாற்றுப்பதிவு. பாணர்களுக்கு அதாவது ஏனைய ஆண் கலைஞர்களுக்கு இணையான சன்மானங்களை இப்பெண்கள் பெற்றுள்ளனர். பொன்னும் பொருளும் அல்லாது "மடப்பிடி" போன்று பெரும் பரிசில்கள் பெறும் அளவிற்குச் சிறந்த இசைவளம் மிக்க பாடல்களை இம்மகளிர் பாடியுள்ளனர். மலைநாட்டைச் சேர்ந்தவர்கள் ஆனாலும் இம்மகளிர் தம் தொழில் நிமித்தமாக “அகவன் மகளிர்” எனச் சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் இசைப்பாடல்கள் தனி இலக்கியமாய் அமைந்திருக்கவேண்டும் என்பது மேற்கண்ட சங்கப் பாடல்களின் வழித்தேற்றம். தமிழில் அவர் பாடல்களின் சிறந்த வளர்ச்சிக்கிணையாக, குறவஞ்சிப்பாடல்கள் அமைந்திருப்பதை நாம் அறியலாம். சங்க இலக்கியச் சோலையில் இம்மகளிரைப் பற்றி மிகச்சில புலவர்களே பாடியுள்ளனர் என்றாலும் மேற்கண்ட பரணர் பாடலின் பதிவு அம்மகளிர்தம் சிறந்த சமூக உயர்வுநிலையைக் காட்டும் காலக்கண்ணாடியாகும். ஆண்கலைஞர்களுக்கு இணையான அங்கீகாரம் பெண்கலைஞர்களுக்கும் கிடைத்த சங்கப்பொற்காலம் அது. பெண் கலைஞர்கள் தம்மைப் போற்றி உயர்த்திய தலை சிறந்த தமிழ்ச்சமுதாயம் நமது.பல உயரிய நாகரிகக்கோட்பாடுகள் வாழ்வியல் சிந்தனைகள் என பலவற்றுக்கும் முன்னோடி நம் சங்கத்தமிழனே. [என் கேள்வி இது: ஏன் தமிழ்ப்புத்தகங்கள், பாடநூல்கள் இவர்களைப்பற்றியெல்லாம் எழுதுவதில்லை?]this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |