http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 84

இதழ் 84
[ டிசம்பர் 16, 2011 - ஜனவரி 15, 2012 ]


இந்த இதழில்..
In this Issue..

தமிழில் தந்தால் என்ன குறைந்தா போய்விடும்?
திரும்பிப்பார்க்கிறோம் - 31
சேக்கிழாரும் அவர் காலமும் - 2
பொய்யாமை அன்ன புகழில்லை - 2
புத்தகத் தெருக்களில் - ஆனைக்கா கதாநாயகனும் நானும் - 2
நாலூர் மாடக்கோயில்
கண்டறியாதன கண்டேன்
இதழ் எண். 84 > கலையும் ஆய்வும்
சேக்கிழாரும் அவர் காலமும் - 2
மா.இராசமாணிக்கனார்


(சென்ற இதழ்த் தொடர்ச்சி...)

இவற்றின் ஆசிரியர் உமாபதி சிவமா?


திருத்தொண்டர் புராண வரலாறும் திருமறை கண்ட புராணமும் இயற்றியவர் சந்தான ஆசாரியருள் ஒருவரும், சைவசித்தாந்த நூல்கள் பலவற்றின் ஆசிரியருமான கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார் என்று சில பதிப்புகளிற் காண்கின்றன (13). அவர் பாடியனவாகத் திருத்தொண்டர் புராணசாரம், திருப்பதிக்கோவை என்பனவும் காணப்படுகின்றன. இவற்றுள் முன்னது பெரியபுராணத்தைத் தழுவிச் செய்யப்பட்டதாகும். அதனில் (1) 'இடங்கழியார் கொடும்பாளூர் வேளிர்குலத்தரசர்' என்றும், (2) கழற்சிங்கனும் ஐயடிகள் காடவர்கோனும் பேரரசர் என்றும் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளன' (14). இதனைப் பாடிய உமாபதிசிவமே இச்செய்திகளையே தவறாகக் கூறும் சேக்கிழார் புராண வரலாற்றையும் பாடினார் என்பது எங்ஙனம் பொருந்தும்?

'திருத்தொண்டர் புராண வரலாறும் திருமறை கண்ட புராணமும் உமாபதிசிவம் பாடினார் எனக்கூறுதல் மரபு' (15) என்று சமாஜப் பதிப்புக் குறித்துள்ளது. 'இவற்றை உமாபதிசிவம் பாடினார் என்று கூறும் தனிப்பாட்டு சில பிரதிகளில் இல்லை' (16) என்று திரு. வி.கலியாணசுந்தர முதலியார் பதிப்புக் குறித்துள்ளது.

இவற்றை நோக்க, உமாபதி சிவாச்சாரியார் திருத்தொண்டர் புராணசாரம் முதலிய மூன்று நூல்களைச் செய்தவராகலாம் எனக்கோடல் தவறாகாது. உமாபதிசிவனார் காலம் கி.பி. 14ம் நூற்றாண்டின் முற்பகுதியாகும் (17). ஆயின், திருத்தொண்டர் புராண வரலாறும், திருமுறை கண்ட புராணமும் செய்த ஆசிரியர் இன்னவர் என்பதோ, அவர் காலம் இன்னது என்பதோ திட்டமாகக் கூறுதற்கில்லை. ஆயினும், அவற்றுள் இராசராசன், அநபாயன் என்ற அரசர் பெயர்களும், கல்வெட்டுகளோடு ஒன்றுபடும் சேக்கிழார் பற்றிய குறிப்புகள் சிலவும் தவறின்றிக் கூறப்படலால், அவை சேக்கிழார்க்குப் பிற்பட்ட ஒன்றிரண்டு நூற்றாண்டுகளில் செய்யப்பட்டன ஆகலாம் எனக் கோடல் தவறாகாது. மேலும், புகழ்பெற்ற உமாபதிசிவனார் தவறின்றிப் பாடிய திருத்தொண்டர் புராண வரலாறு பெயர் தெரியாத ஒருவரால் பாடப்பட்டது என்பது பொருத்தமுடையதன்று. ஆதலால், திருத்தொண்டர் புராண வரலாறு, மிகுந்த சைவப்பற்றும் சமண சமய வெறுப்பும் கொண்ட ஒருவரால் உமாபதி சிவாச்சாரியாருக்கு முன்பே பாடப்பட்டது; அவராலேயே திருமுறை கண்ட புராணமும் பாடப்பெற்றது எனக்கோடல் பொருத்தமாகும். எனவே, இப்பெயர் தெரியாத ஆசிரியர் கி.பி. 13ம் நூற்றாண்டினர் எனக்கொள்ளலாம். இங்ஙனம் கொள்ளின், சிறந்த புலவரும் சைவசித்தாந்த ஆசிரியருமாகிய உமாபதிசிவனார்க்கு நிறையுண்டாகுமே அன்றிக் குறை உண்டாகாமை காண்க.

உமாபதிசிவத்தின் மூன்று சிறு நூல்களையும் அவற்றின் தொடர்பான சேக்கிழார் புராண வரலாற்றையும் திருமுறை கண்ட புராணத்தையும் கண்ட பிற்காலத்தார், பின்னவையும் உமாபதிசிவமே பாடினார் எனக் கொண்டிருத்தல் இயல்பே (18).

பொருந்தும் செய்திகள்

இவ்வாறு பொருந்தாச் செய்திகள் சில இருப்பினும், சேக்கிழார் புராணம் சேக்கிழார் வரலாற்றை அறிய உறுகருவி என்பதை மறுத்தற்கில்லை. ஆதலின், அதன்கண் காணப்படும் பெரும்பாலும் நம்பத்தக்க செய்திகளாவன:

1. சேக்கிழார் குன்றை நாட்டுக் குன்றத்தூரினர்; வேளாளர் மரபினர்; அவர் தம்பி பாலறாவாயர். குன்றத்தூரில் சேக்கிழார் கோயில் இன்றும் இருக்கின்றது. அதற்கு அண்மையில் பாலறாவாயர் குளம் இருக்கின்றது. சேக்கிழார் மரபினர் அங்கு வாழ்கின்றனர்.

2. சேக்கிழாரை ஆதரித்த அரசன் 'அநபாயன்' என்பதைச் சிறப்புப் பெயராகக் கொண்டவன்.

3. சேக்கிழார் சோழ அரசியலில் தலைமை அமைச்சராக இருந்தவர். அங்ஙனம் இருந்து, உத்தம சோழப் பல்லவராயன் என்ற பட்டம் பெற்றனர். அங்ஙனம் அரசற்கு அடுத்த உத்தியோகத்தில் இருந்தமையாற்றான் அவருடைய சைவப்பற்றும் அவர் அறிந்த நாயன்மார் வரலாற்றுச் செய்திகளும் நிறைந்த தமிழ்ப்புலமையும் அரசனும் இளவரசனும் அறிய வாய்ப்புண்டானது எனக்கோடல் பெரிதும் பொருத்தமே ஆகும்.

4. அவர் சோணாட்டுத் திருநாகேச்சரத்தில் ஈடுபட்டவர். அந்நினைவு கொண்டு தமதூரில் அப்பெயரால் கோயில் கட்டினவராகலாம். குன்றத்தூரில் இப்பெயரால் ஒரு கோயில் இருக்கின்றது.

5. சேக்கிழார் பெரியபுராணம் பாடியவர்.

இனி, 'அநபாயன்' யாவன் என்பதைக் காண்போம். பின்னர்க் கல்வெட்டுச் செய்திகளையும் மேற்சொன்ன சேக்கிழார் வரலாற்றுச் செய்திகளையும் ஆராய்ந்து பொருந்துவன காண்போம்.

அநபாயன் யாவன்?

சேக்கிழார் காலத்தைத் தத்தமக்குக் கிடைத்த சான்றுகளைக் கொண்டு ஆராய்ந்து முடிபுகட்டிக் கூறினோர் பலராவர். அவர் முடிவுகளைக் கீழே காண்க.

1. சேக்கிழார் - இராசேந்திரன் 1 (கி.பி. 1012-1044) காலத்தவர் (19)
2. சேக்கிழார் - முதற் குலோத்துங்கன் (கி.பி. 1070 - 1120) காலத்தவர் (20)
3. சேக்கிழார் - இரண்டாம் குலோத்துங்கன் (கி.பி. 1113 - 1150) காலத்தவர் (21)
4. சேக்கிழார் - மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1178 - 1218) காலத்தவர் (22)

இவற்றுள் முன் இரண்டு முடிபுகளும் பொருந்துவன அல்லவென்று முன்பே அறிஞர் விளக்கிவிட்டனர் (23). ஆதலின், அவைபற்றி நாம் பேசவேண்டுவதில்லை. சேக்கிழார் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தவர் என்பார் கூற்று புதியது. ஆதலின், அவர் கூறும் காரணங்களை ஆராய்ந்து முடிபு காணல் நமது கடமையாகும். அவர் கூறும் காரணங்களாவன:

1. "இரண்டாம் குலோத்துங்கனை உலாவிற் பாடிய அவனது ஆசிரியரான ஒட்டக்கூத்தர், அவ்வுலாவில் (வரிகள் 76-116) அவன் பேரம்பலம் பொன் வேய்ந்ததைக் குறிக்கவில்லை. ஆதலின், அவன் பேரம்பலம் பொன் வேய்ந்தவன் ஆகான்.

2. "இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் சேக்கிழார் பெரியபுராணம் பாடியிருப்பின், ஒட்டக்கூத்தர் அதனை உலாவிற் கூறாதிறார்.

3. "இரண்டாம் குலோத்துங்கற்கு ஆசிரியர் ஒட்டக்கூத்தர். அவர் சிறந்த சிவபக்தர். அரசன் அவரைக்கொண்டு பெரியபுராணம் பாடச்செய்யாது, சேக்கிழாரைக் கொண்டு பாடச் செய்தான் என்பது பொருத்தமற்றது.

4. "திருப்புறம்பயத்துக் கல்வெட்டுகளில் 'பேரம்பலம் பொன் வேய்ந்த சோழன்' என்பதைக் குறிப்பிடும் கல்வெட்டுக்கு மேல் உள்ள கல்வெட்டு மூன்றாம் இராசராசனுடையது எனக் கல்வெட்டாளர் கொண்டனர். இரண்டாம் குலோத்துங்கற்கு மூன்று தலைமுறைக்குப் பிந்தியவன், மூன்றாம் இராசராசன். எனவே, மூன்று தலைமுறைக்குப் பிந்தியவன் கல்வெட்டு மேலும், முந்தியவன் கல்வெட்டுக் கீழும் அமையுமாறு எங்ஙனம்? முந்தியவனது மேலும், பிந்தியவனது கீழும் அமைவதன்றோ இயலும்? ஆகவே, கல்வெட்டுத் துறையாளர் கொண்ட கருத்துத் தவறுடையதாகும். உண்மையாதெனில், மேற்கூறிய கல்வெட்டுகளிற் கண்ட இராசராசன் இரண்டாம் இராசராசனே, குலோத்துங்கன் மூன்றாம் குலோத்துங்கனே. இவ்வாறு கொள்ளின், யாம் மேலே கிளப்பிய ஐயத்திற்கு இடமிராது.

இக்காரணங்கள் பொருந்துவனவா?

1. இரண்டாம் குலோத்துங்கன் உலாவில் (வரிகள் 71-116) 'பேரம்பலம்' என்ற சொல் காணப்படுகின்றது. ஆனால், அதற்கடுத்த இராசராசன் உலாவில், இராசராசன் இன்னவன் மகன் என்று குறிப்பிடும் இடத்தில் அவன் பேரம்பலம் முதலியவற்றைத் தூய செம்பொன்னிற் குயிற்றினாற்கு மகன் என்பது தெளிவாக உள்ளது (24). ஆதலின், 'இரண்டாம் குலோத்துங்கன் பேரம்பலம் பொன் வேய்ந்ததைக் கூத்தர் குறிக்கவில்லை' என்ற முதற்காரணம் பொருந்தாமை காண்க.

2. இஃது ஒரு சிறந்த காரணமாகாது. முதல் இராசராசன் நம்பியாண்டார் நம்பியைக் கொண்டு திருமுறைகளை வகுத்தான் என்பதும், உலகம் போற்றும் இராசராசேச்சரத்தைக் கட்டினான் என்பதும், சைவத்தைப் பெரிதும் வளர்த்தான் என்பதும் பாராட்டத்தக்க - குறிக்கத்தக்க செயல்கள் அல்லவா? அவன் மகன் புதிதாக நியமித்த கங்கைகொண்ட சோழபுரம், அதன்கண் எடுப்பித்த பெரிய கற்றளி, அவன் செய்த சைவ சமயத் தொண்டு இவை குறிக்கத்தக்க செயல்கள் அல்லவா? இவற்றுள் ஒன்றையேனும் அவர்களைப் பற்றிக் கூறிய இடங்களிற் கூத்தர் குறித்தாரில்லை. கூத்தர் விக்கிரமசோழன் காலத்தவர்; அவன் செய்த திருப்பணிகள் யாவும் நேரிற் கண்டவர். அவன் சிதம்பரம் கோயிலிற் பல திருப்பணிகள் செய்தான் என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன (25). இவற்றுள் ஒன்றையேனும் கூத்தர் குறிப்பிட்டார் இல்லை. ஏன் குறிக்கவில்லை என்று யார்தான் காரணம் கூறக்கூடும்? இவற்றையெல்லாம் நோக்க, இவ்விரண்டாம் காரணம் வலியுடைத்தாகாமை கண்டு கொள்க.

3. ஒட்டக்கூத்தர் குலோத்துங்கன் ஆசிரியர் என்பதும், அவர் சிறந்த சிவபக்தர் என்பதும் உண்மையே. ஆயின், அவர் சேக்கிழாரைப் போலத் திருத்தொண்டர் புராணச் செய்திகளில் நிறைந்த புலமையுடையர் என்பதற்குச் சான்றென்னை? சான்றின்மையின் திருத்தொண்டர் புராணச் செய்திகளை முற்றுமுணர்ந்த சேக்கிழாருடைய உணர்ச்சியையும், தகுதியையும் நன்குணர்ந்த அரசன் அவரைப் பெரியபுராணம் பாடச் செய்தான் என்று கோடலில் எவ்விதத் தவறும் இல்லை. அரசன் சேக்கிழாரைக் கொண்டு பெரியபுராணம் பாடுவித்தமையால் ஒட்டக்கூத்தர் பெருமை குறைந்துவிடாதன்றோ?

4. இக்காரணமும் பொருத்தமுடையதாகாது. என்னை? எல்லாக் கோயில்களும் அரசர் காலமுறைப்படி அவரவர் காலத்துக் கல்வெட்டுகளை மேலிருந்து கீழ்நோக்கி வெட்டி வந்தனர் என்பது கூறக்கூடவில்லை. அங்ஙனம் வெட்டவும் முடியாது; கல்வெட்டுச் செய்தியின் அளவு, அது வெட்டத்தக்க வசதியான இடம் இவற்றை நோக்கி வெட்டலே இயல்பாதலின் என்க. மேலும், திருப்புறம்பயத்துக் கோயில் சோழர்காலம் முதல் இன்றுவரை புதுப்பிக்கப்படவில்லை என்று திட்டமாகக் கூறத்தக்க சான்றில்லை. திருவொற்றியூர், எண்கண், திருக்கடம்பூர், கானாட்டு முள்ளூர் முதலாய கோயிற் கல்வெட்டுகளில் முறை பிறழ்ந்தும் தலை தடுமாறியும் உள்ள கல்வெட்டுகள் பலவுண்டு. சிறப்பாக எண்கண் என்ற இடத்தில் உள்ள பழுதுபட்ட சிவன் கோயிற் கல்வெட்டுகளும் கானாட்டு முள்ளூர்ச் சிவன் கோயிற் கல்வெட்டுகளும் காணத்தக்கவை (26).

பின்குறிப்புகள்

13. Navalar edition and C.K.S.Mudaliyar's edition, Vol I
14. V. 59, 58 and 52
15. Vide pp. 664 and 661
16. Vide pp. 6 and 37
17. Sen Tamil, Vol. 27, p.27
18. Prof. K.A.N. Sastry, in a similar context, observes : "In view of the tendency, common in Indian Literature, of fathering minor works of unknown origin upon celeberted authors, and in view of the mediocre and common place character of these two works, we have to receive withgreat suspicion the popular legends on their authorship and the occassions for their composition" - vide his 'Cholas', Vol II. pp. 527-528.
19. Sentamil, Vol II, pp. 273, 386
20. R. Gopinatha Rao's 'Chola Vamsa Charitra Surukkam'
21. C.M.Ramachandra Chettiar's article in 'Sentamil Selvi' Vol. 10, pp. 132-141; M. Raghava Iyengar's 'Sasana Tamil Kavi, Charitam', pp. 70-78; A.R.E. 1912, II, 27; A.R.E. 1918, p. 150, K.A.N. Sastry's 'Cholas' Vol. II, Part I, p.76
22. V.S.Vandaiyar's article in Tamil Polil, Vol 13, pp. 462-467. My esteemed friend Mr. T.V.S.Pandarathar also is of the same view
23. C.M.Ramachandra Chettiar's valuable article in Sentamil Selvi, Vol. 10, pp. 132-141 and M.Raghava Iyengar's 'Sasana Kavi Charitam', pp. 70-78
24. Vide Rajarajan Ula, lines 59-65
25. S.I.I III, P. 185 ff; Ep. Ind. Vol. 7, p.5; K.A.N. Sastry's 'Cholas', Vol. II, Part I, pp. 65-66
26. I have visited all these places in April 1943.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.