![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 85
![]() இதழ் 85 [ ஜனவரி 16 - ஃபிப்ரவரி 15, 2012 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
சங்கச்சாரல்
உலகமே தமிழகத்து ஆடைவகைகளை வியப்புடன் திரும்பிப் பார்த்தது சங்ககாலத்தில். கிரேக்கம், ரோம், சீனம், கீழைக்கடல் நாடுகள் என்று பல நாட்டவரும் சாரைசாரையாகத் தமிழகம் நோக்கிக் கடற்பயணங்கள் மேற்கொண்டனர். பெரும் மரக்கலங்களும், நாவாய்களும் தமிழகத் துறைமுகங்கள் தோறும் பெருவாரியாக வந்திறங்கின. பருத்தி ஆடைகள் மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் மிக்கிருந்தது. தமிழரின் பருத்தி ஆடைகளின் மென்மைத்தன்மை வெண்பஞ்சு மேகப் பொதிகளுக்கு நிகரானவை என்பது அகப்பாடல்கள் வழித்தேற்றம். பருத்தி வேளாண்மை மிகச்சிறந்த தொழிலாக விளங்கியது பண்டைய தமிழகத்தில். புறநானூற்றின் 299ம் பாடலில் பெண்பாற் புலவரான பொன்முடியார் அதியமான் நெடுமான் அஞ்சியைப் பாடும்போது, "பருத்தி வேலிச் சீறூர் மன்னன்" என்கிறார். அஃதாவது, பருத்திச் செடிகளையே வேலியாகச் சூழ்ந்த சிறந்த ஊருக்குரிய மன்னனே என்று பொருள்படும். ஊர் இப்படி என்றால், பருத்திச் சார்ந்த நெசவுத் தொழிலானது மிகவும் பிரசித்தி பெற்று விளங்கியது அதற்கு மிக முக்கியக் காரணம் "பருத்திப் பெண்டிர்". யார் இவர்கள்? சிறந்த நுண்ணிய நூல்நூற்கும் சிறந்த, அரிய கலையைக் கையாண்டவர்கள் இவர்கள். கரும் விதைகளை நீக்கிப் பஞ்சை நூலாக நூற்றவர்கள். இம்மகளிர் சார்ந்தே நெசவுத் தொழிலானது சிறந்து விளங்கியது அன்று. அக்காலத்தில் நூல்நூற்கும் இம்மகளிரைப் புலவர்கள், "பருத்திப் பெண்டிர்" என்ற அடைமொழியாலேயே பாடிச் சிறப்பித்துள்ளனர். வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார் என்ற புலவர், "பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு....." என்று புறநானூற்று 125ம் பாடலில் பாடியுள்ளார். தம் பாடலில், மென்மையான ஊனிற்குப் பருத்தி நூற்கும் பெண்ணின் சுகிர்ந்த பஞ்சு போன்ற என்ற உவமையைக் கையாள்கிறார். மேலும், தங்கால் பொற்கொல்லனார் என்ற புலவர் புறநானூற்று 326ம் பாடலில், "ஊர்முது வேலி பார்நடை வெருகின் இருட்பகை வெரீஇய நாகு இளம்பேடை உயிர் நடுக்குற்றுப் புலாவிட் டரற்றச் சிறையும் செற்றையும் புடையுள் நள் எழுந்த பருத்தி பெண்டின் சிறுதீ விளக்கத்துக் ...." அஃதாவது, இரவிலே காட்டுப்பூனைக்கு அஞ்சிய இளம்பேடை ஒன்று உயிர் நடுங்கித் தொண்டை வறளக் கூவிட, அவ்வேளையிலே பருத்தி நூற்கும் பெண், பஞ்சில் கலந்திருக்கும் சிறையும் செற்றையும் புடைப்பதற்குச் சிறு அகல்விளக்கினை ஏற்றிக் கொண்டு எழுந்திருக்க... என்பது பாடலின் கருத்தாகும். மேலும், நற்றிணைப் பாடல்வழி ஒரு அரிய குறிப்பினைப் பெறுகிறோம். பொய்யா நாவிற் கபிலர் தம் குறிஞ்சித் திணைப்பாடலில் இப்பெண்டிர் பற்றிக் குறிப்பிடும்போது, "ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த நுணங்கு நுண்பனுவல் போல, கணம் கொள" (நற்றிணை : 353 : 1) அஃதாவது கணவனையிழந்த கைம்மை மகளிர் தம் உயிர் வாழ்க்கைக்கு வேண்டும் பொருளின் பொருட்டு முயன்று நூற்கின்ற மிக நுண்ணிய பஞ்சு என்பது இதன் விளக்கம். இதன்வழி நாம் அறிவது வீரயுகத் தமிழ்ச் சமூகத்தில் போர் மிக மலிந்திருந்தது. ஆதலால், வீடுதோறும் கைம்பெண்டிர் இருந்தனர். தம் இல்லிலிருந்து இப்பெண்கள் நெசவு புரிந்து உலகமெங்கும் சிறப்பெய்தித் தமிழனின் புகழ் விளங்கச் செய்தனர் என்பது ஒரு வரலாற்றுச் செய்தியாகும். "பருத்திப் பெண்டிர்" என்ற அடைமொழி காரணம் பற்றியே இவர்களின் நுண்ணிய கைவண்ணத்தை நாம் அறிந்து கொள்ளலாம். this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |