http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 103

இதழ் 103
[ ஜனவரி 2013]


இந்த இதழில்..
In this Issue..

தெரிதலில் தொடங்கிப் புரிதல் வரை ...
தேடலில் தெறித்தவை - 9
மலையீசுவரம்
கோனார் கோயில் - திருமால்பூர்
Gokarneswara - 1
இடையார்பாக்கம் மகாதேவர் திருக்கோயில்
அவன்! ஐயையின் தந்தை!
இதழ் எண். 103 > கலையும் ஆய்வும்
நாகபட்டினத்திலுள்ள மலையீசுவரம் மாடக்கோயிலின்[1] செங்கல் கட்டுமானமாய் உள்ள நுழைவாயில் முகப்பை முச்சதுர, இருகட்டுத் தூண்கள் வெட்டுத் தரங்கப் போதிகைகள் உதவியுடன் தாங்க, மேலே கபோதம். வாயிலின் மேலிருக்குமாறு அமைந்துள்ள சாலையில் விடைமீது இவர்ந்த நிலையில் சிவபெருமானும் உமையும் காட்சிதர, வலப்புறம் சுகாசனத்தில் பிள்ளையாரும் இடப்புறம் தேவியருடன் சுகாசனத்தில் முருகனும் சுதை வடிவங்களாக உள்ளனர்.

மலையீசுவரம் திருக்கோயில்


முன்றிலின் தென்சுவரில் உள்ள தமிழ்க் கல்வெட்டு 1777ல் ஆளுநர் ரெயினியர் வான்விளி சிங்கன் பிரபு காலத்தில் இந்தக் கோயில் புதுப்பிக்கப்பட்டதாகக் கூறுகிறது. அதே செய்தியைக் கூறும் ஆங்கிலக் கல்வெட்டு வடசுவரிலும் டச்சு மொழிக் கல்வெட்டு வடக்கு மதில் சுவரிலும் உள்ளன.



வாயிலை ஒட்டி இருபுறத்தும் வளரும் மதிலால் சூழப்பட்ட வளாகத்தில் கிழக்கில் பலித்தளமும் நந்தியும் அமைய, ஒருதள வேசர விமானத்தில் சிறிய அளவிலான பிள்ளையார் இலலிதாசனத்தில் உள்ளார். வடபுறம் உள்ள மணற்கல்லால் ஆன அமர்நிலைச் சிங்கத்தின் மார்புப்பகுதியில் காணப்படும் சிதைந்த சிற்பம் உமாமகேசுவரர் ஆகலாம்.

சுற்றாலைத் திருமுன்கள்

சுற்று வெளியின் தென்கிழக்கில் காணப்படும் வண்டிக்கூடு கூரை மண்டபங்கள் மடைப்பள்ளியாகப் பயன்படுகின்றன. வடகிழக்கில் மதிலையொட்டியுள்ள சிறிய அறையில் பைரவரும் சூரியனும் இடம்பெற்றுள்ளனர். முன்கைகளில் முத்தலை ஈட்டியும் தலையோடும் கொண்டு, பின்கைகளில் உடுக்கையும் பாசமும் ஏந்தியுள்ள பைரவரின் வலச்செவியில் மகரகுண்டலம்; இடச்செவியில் பனையோலைக் குண்டலம். தலையில் சுடர்முடி. இரு கைகளிலும் தாமரைகள் ஏந்தியுள்ள சூரியனின் செவிகளைப் பனையோலைக் குண்டலங்கள் அலங்கரிக்க, கழுத்தில் சரப்பளி. சுற்றுவெளியின் மேற்கில் மதிலையொட்டியுள்ள மாளிகை பத்மஜகதி, உருள்குமுதம், பாதங்கள், கம்புகள் கொண்ட கண்டம், கூடுவளைவுகளுடனான கபோதம் பெற்ற கபோதபந்தத் தாங்குதளத்தின் மேல் அமைந்துள்ளது. மாளிகையின் கூரையைப் பல்வகைத் தூண்கள் தாங்குகின்றன. சதுரம், கட்டு, சதுரம் எனச் சில அமைய, உருளைத் தூண்களாகச் சில உள்ளன. மாளிகையின் வடமேற்குத் தூணில் முப்புறத்தும் கல்வெட்டு உள்ளது.[2] தூண்களின் மேலுள்ள வெட்டுத் தரங்கப் போதிகைகள் கூரையுறுப்புகள் தாங்குகின்றன.

பல அறைகளாகத் தடுக்கப்பட்டுள்ள மாளிகையின் தென்மேற்கில் ஒருதள வேசர விமானத்தில் பிள்ளையாரும் அடுத்துள்ள அறையில் ஜுரஹரதேவரும் நடுவில் உள்ள ஒரு தளத் திராவிட விமானத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகனும் வடமேற்கு அறையில் யானைத்திருமகளும் உள்ளனர். மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று முகங்கள் பெற்றுள்ள ஜுரஹரதேவரின் இரண்டு கால்கள் மண்டலத்தில் அமைய, ஒரு கால் வலப்புறம் வீசப்பட்டுள்ளது. வல முன் கை காக்கும் குறிப்புக் காட்ட, இடப் பின் கையில் தீயகல். மற்றோர் கை வேழ முத்திரையில் இடப்புறம் வீசப்பட்டுள்ளது. யானைத்திருமகளின் இருபுறத்தும் போற்றும் கைகளுடன் பக்கத்திற்கொருவராகப் பெண்கள் காட்டப்பட்டுள்ளனர். சனீசுவரர், ஜுரஹரதேவர், யானைத்திருமகள் திருமுன்கள் வண்டிக்கூடு கூரை பெற்றுள்ளன. இங்குள்ள இறைத்திருமேனிகள் அனைத்தும் பிற்காலத்தவை. திருமுன்களின் முகப்புச் சுவர்கள் துணைத்தளத்தின் மீது வளரும் நான்முக அரைத்தூண்களின் தழுவலில் அமைந்துள்ளன. மேலே வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள். வடக்குச் சுற்றுவெளியில் ஒரு தள நாகர விமானத்தில் சண்டேசுவரர் காட்சிதருகிறார்.

வெற்றுத்தளம்

சுற்றுவெளியின் நடுப்பகுதியில் செங்கல் கட்டுமானமாய் அமைந்துள்ள 4.19 மீ. உயர வெற்றுத்தளம் மேற்குத் தவிர்த்த பிற திசைகளில் உறுப்பு வேறுபாடற்ற தாங்குதளம், வெறுமையான சுவர், உத்திரம், வாஜனம், மதலைகள் பெற்ற வலபி, கபோதம் கொண்டு அமைந்துள்ளது. தென்மேற்கு மூலையிலும் மேற்கிலும் உபானம், பத்மஜகதி, உருள்குமுதம் எனும் உறுப்புகளைப் பெறும் வெற்றுத்தளம், மேலே வெறுமையான சுவர், உத்திரம், வாஜனம், மதலைகள் பெற்ற வலபி, கபோதம் கொண்டு முடிகிறது. வெற்றுத்தளத்தின் மேலே தெற்கு, மேற்கு, வடக்கு முப்புறத்தும் பிடிச்சுவர் காட்டப்பட்டுள்ளது. வெற்றுத்தளத்தின் மேல், தெற்கில் அமைந்துள்ள சோமாஸ்கந்தர் விமானம், முகமண்டபம் இவற்றையும் வடக்கில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி தேவியின் விமானம், முகமண்டபம் இவற்றையும் மேற்கில் அமைந்துள்ள மலையீசுவரரான கயிலாயநாதர் விமானம், முகமண்ட பம், பெருமண்டபம், முன்மண்டபம் இவற்றையும் அடைய, தென்கிழக்குச் சுற்றுவெளியில் இருந்து பதினெட்டுப் படிகள் வளர்கின்றன. படித்தொடரின் தென்புறத்தே உள்ள சிறிய அறையில் அர்த்தபத்மாசனத்தில் உள்ள அன்னபூரணியின் செவிகளில் பனையோலைக் குண்டலங்கள். கரண்டமகுடம், சரப்பளி, மார்புக்கச்சு, பட்டாடை அணிந்துள்ள அவரது இடக்கையில் பாத்திரம். வலக்கையில் கரண்டி.

நடைமண்டபம்

படிகளின் முடிவில் உள்ள நடைமண்டபம் தெற்கிலும் வடக்கிலும் திறப்புகள் கொண்டுள்ளது. தெற்கு வாயில், சோமாஸ்கந்தர் விமானத்தைச் சுற்றிவரப் பாதை தருகிறது. வடக்கு வாயில், இறைவன் விமானத்தின் முன்னுள்ள பெருமண்டபத்திற்கு வழியாகிறது. நடைமண்டபத்தின் மேற்கில் முகமண்டபத்துடன் சோமாஸ்கந்தர் விமானம் அமைந்துள்ளது.

சோமாஸ்கந்தர் விமானம்

வெற்றுத்தளத்தின் மேல் தென்புறத்து அமைந்துள்ள சோமாஸ்கந்தர் விமானமும் முகமண்டபமும் செங்கல் கட்டுமானங்களாய் உள்ளன. உறுப்பு வேறுபாடற்ற தாங்குதளம், உறுப்பு வேறுபாடற்ற உயரமான நான்முக அரைத்தூண்கள் தழுவிய கோட்டங்களற்ற சுவர், கூரையுறுப்புகள் பெற்று ஒருதள வேசரமாய் அமைந்துள்ள சோமாஸ்கந்தர் விமானத்தின் முன்னுள்ள முகமண்டபமும் அதே கட்டமைப்பைப் பெற்றுள்ளது. விமானத்தின் கிரீவகோட்டங்களில் தெற்கில் வீராசனத்தில் ஆலமர்அண்ணலும் மேற்கில் சுகாசனத்தில் தேவியருடன் விஷ்ணுவும் வடக்கில் சுகாசனத்தில் நான்முகனும் உள்ளனர். இவ்விமானத்திற்கும் இறைவன் விமானத்தின் முன்னுள்ள முகமண்டபத்திற்கும் இடையில் குறுகிய இடைவெளி உள்ளது.

பெருமண்டபம்

நடைமண்டபத்தின் வடக்கிலுள்ள பெருமண்டபத்தின் வடசுவர் உபானம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, சுவர், கூரையுறுப்புகள் பெற்றுள்ளது. முச்சதுர, இருகட்டுத் தூண்கள் வெட்டுப் போதிகைகள் கொண்டு கூரை தாங்கும் இம்மண்டபத்தின் சலவைக்கல் பாவிய தரையில் இறைவனை நோக்கியவாறு நந்தி அமைந்துள்ளது. கூரையில் ஓவியங்கள். மண்டபத்தின் வடபுறம் திரிபுரசுந்தரி அம்மனின் முகமண்டபம் இடம்பெற்றுள்ளது. அதன் வாயில் நான்முக அரைத்தூண்களால் அணைக்கப்பட்டுள்ளது. மேலே கூரையுறுப்புகளும் கபோதமும் பூமிதேச உறுப்புகளும் காட்டப்பட்டுள்ளன. முகமண்டப வாயிலை அடுத்துள்ள சுவரில் இடப்புறம் பஞ்சரக் கோட்டமொன்று வெறுமையாக உள்ளது.

மேற்கில் இறைவனின் முகமண்டபமும் கிழக்கில் முன்மண்டபமும் உள்ளன. பெருமண்டபத்தின் வடகிழக்கு மூலையில் உள்ள மேடையில் சடைப்பாரம், மீசை, முப்புரிநூலென அணிந்த மடித்த துண்டு இவற்றுடன் அர்த்தபத்மாசனத்தில் காட்சிதரும் பராசரமுனிவர் வலக்கையைக் காக்கும் குறிப்பில் அமைத்து, இடக்கையைத் தளத்தின் மீது இருத்தியுள்ளார்.

முன்மண்டபம்

நடைமண்டபத்தின் வடக்கிலும் பெருமண்டபத்திற்குக் கிழக்கிலும் உள்ள முன்மண்டபம் உறுப்பு வேறுபாடற்ற தாங்குதளம், நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள், கூரையுறுப்புகள் பெற்றுள்ளது. கூரையின் மேல் வேதிகையில் அமர்ந்த நிலையில் கிழக்கில் முனிவர்களும் தெற்கு, வடக்கு மூலைகளில் நந்திகளும் அமைய, கிழக்குச் சுவரில் வாயில் உள்ளது. மண்டபத்தின் தெற்குச் சுவரில் சாளரமும் விளக்கு மாடங்களும் உள்ளன. வடவாயில் வழி அம்மன் கோயில் விமானத்தையும் இறைவன் விமானத்தையும் சுற்றிவரலாம்.

அம்மன் விமானம்

உபானம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் கொண்டு ஒருதளத் திராவிடக் கற்றளியாய் அமைந்துள்ள திரிபுரசுந்தரி அம்மனின் பஞ்சர அலங்கரிப்புப் பெற்ற சுவர்க் கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. கிரீவகோட்டங்களில் உத்குடியிலும் சுகாசனத்திலும் அமைந்த தேவியின் சுதை வடிவங்கள் இடம்பெற்றுள்ளன. விமானத்தின் முன் அதே கட்டமைப்பில் உள்ள முகமண்டபக் கோட்டங்களும் வெறுமையாக உள்ளன. சலவைக் கல் போர்த்தப் பட்டுள்ள முகமண்டபத்தின் உட்பகுதி வெறுமையாக உள்ளது. கருவறையில் திரிபுரசுந்தரி நின்ற கோலத்தில் சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், கழுத்தணிகள், பட்டாடை அணிந்தவராய்ப் பின்கைகளில் வலப்புறம் அக்கமாலையும் இடப்புறம் தாமரை மொட்டும் கொண்டு, முன்கைகளைக் காக்கும் குறிப்பிலும் அருட்குறிப்பிலும் கொண்டுள்ளார்.

இறைவன் விமானம்

பத்ம உபானம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், கூடுவளைவுகளுடனான கபோதம் கொண்டு, தென்வடலாக 3. 85 மீ. நீளமும் கிழக்கு மேற்காக 3. 48 மீ. அகலமும் பெற்ற ஒருதளத் திராவிடக் கற்றளியாய் விளங்கும் கயிலாயநாதர் விமானச் சுவர்க் கோட்டங்கள் பஞ்சர அலங்கரிப்புப் பெற்றுள்ளன. மேற்கு, வடக்குக் கோட்டங்கள் வெறுமையாக அமைய, தெற்கில் மண்டபக் கட்டுமானத்துடன் வீராசனத்தில் ஆலமர்அண்ணல் இடம்பெற்றுள்ளார். மலையொன்றின் மேல் அமர்ந்திருப்பதுபோல் காட்டப்பட்டுள்ள இறைவனின் வலப்புறம் நந்தி அமர்ந்துள்ளது. முயலகன் மீது இருத்தப்பட்டுள்ள வலத்திருவடியின் இருபுறமும் மலைத்தளத்தில் பக்கத்திற்கிருவராக முனிவர்கள் உள்ளனர். இறைவனின் வல முன் கை சின்முத்திரையில் அமைய, இட முன் கையில் சுவடி. பின்கைகளில் வலப்புறம் அக்கமாலையும் பாம்பும் அமைய, இடப்புறம் தீ. இச்சிற்பத்தின் இருபுறமும் தனிநிலையிலும் பக்கத்திற்கிருவராக முனிவர்கள் காட்டப்பட்டுள்ளனர். கிழக்குப் பார்வையாக வணக்கமுத்திரையுடன் மாணிக்கவாசகரின் சிற்பமும் உள்ளது.

கிரீவகோட்டங்களில் தெற்கில், வல முன் கையைத் தளத்தில் இருத்தி, இட முன் கையை முழங்கால் மீது அமர்த்தி, பின்கைகளில் உடுக்கை சுற்றிய பாம்பும் தீச்சுடரும் ஏந்தி உத்குடியில் உள்ள ஆலமர்அண்ணலின் சடைப்பாரம் இருபுறத்தும் சரிந்துள்ளது. மேற்கில் பரமபதநாதராய்த் தேவியருடன் உத்குடியில் உள்ள விஷ்ணுவின் பின்கைகளில் சங்கு, சக்கரம். முன்கைகளில் வலக்கை காக்கும் குறிப்புக் காட்ட, இடக்கை முழங்கால் மீது உள்ளது. வடக்கில் தேவியருடன் சுகாசனத்தில் உள்ள நான்முகன் பின்கைகளில் அக்கமாலையும் குண்டிகையும் கொண்டு, முன்கைகளைக் காக்கும் குறிப்பிலும் அருட்குறிப்பிலும் காட்டியுள்ளார்.

முகமண்டபம்

விமானக் கட்டமைப்பில் கற்றளியாக உள்ள முகமண்டபத்தின் தெற்குக் கோட்டம் வெறுமையாக உள்ளது. வடக்குக் கோட்டத்தில் மகிடாசுரமர்த்தனி இடம் பெற்றுள்ளார். நாகர மண்டபமாய் அலங்கரிக்கப்பட்டுள்ள இக்கோட்டத்தில் தேவி பின்கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி, முன்கைகளைக் காக்கும் குறிப்பிலும் கடியவலம்பிதத்திலும் கொண்டுள்ளார். முகமண்டப வாயிலின் இருபுறத்தும் காவலர்கள் உள்ளனர். இருவருமே பின்கைகளுள் ஒன்றைப் போற்றி முத்திரையிலும் மற்றொன்றை வியப்பு முத்திரையிலும் இருத்தி, முன் கைகளுள் ஒன்றை அருகிலுள்ள உருள்பெருந்தடியின் மீது அமர்த்தி, மறு கையால் அச்சுறுத்துகின்றனர். இருவருமே கீர்த்திமுகம் பெற்ற சடைமகுடம், குண்டலங்கள், கோரைப்பற்கள், சிற்றாடை, சரப்பளி, கைவளைகள், முப்புரிநூல், உதரபந்தம் பெற்றுள்ளனர். வெறுமையாக உள்ள முகமண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் பாதபந்த அமைப்புடைய வேசர ஆவுடையாரும் பட்டை பெற்ற பாணமுமாய் இலிங்கத்திருமேனியராய் எழுந்தருளியுள்ளார். பாதபந்த அமைப்பில் குமுதம் சிலம்பு வரி பெற்றுள்ளது.

உமா மகேசுவரர்


கருவறையின் பின்சுவர்க் கோட்டத்தில் பின்னாளைய அமைதியில் அமர் சிம்மம் ஒன்று உள்ளது. அதன் மார்புப்பகுதியில் உமாமகேசுவரர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இறைவன், இறைவி இருவருமே சுகாசனத்தில் உள்ளனர். சடைமகுடம், சிற்றாடை பெற்றுள்ள இறைவனின் வல முன் கை காக்கும் குறிப்பிலும் இட முன் கை கடகத்திலும் அமைய, பின்கைகளில் மான், மழு. கரண்டமகுடம், பட்டாடை பெற்றுள்ள இறைவியின் வலக்கை கடகத்திலும் இடக்கை அருட்குறிப்பிலும் உள்ளன.

காலம்

மாடக்கோயில் கட்டமைப்பு கோச்செங்கட்சோழரின் அறிமுகம் என்றாலும் மலையீசுவரத்தின் இன்றைய அமைப்பு அதைப் பொதுக்காலம் 15ஆம் நூற்றாண்டுக்கு உரியதாக உணர்த்துகிறது. கோயிலிலுள்ள கல்வெட்டு படித்தறியப்பட்டால் காலம் குறித்த உறுதிப்பாடு பெறமுடியும்.

குறிப்புகள்

1. ஆய்வு நாள்: 20. 3. 2010.. இக்கோயிலை அறிமுகம் செய்தவர் திரு. க. இராமச்சந்திரன். உடனிருந்து உதவியவர்கள் திருவாளர்கள் பால.பத்மநாபன், த. நாகநாத குருக்கள்.

2. தலைகீழாக அமைந்துள்ள இக்கல்வெட்டுப் பற்றிய தகவல் நடுவண் அரசின் கல்வெட்டுத் துறைக்குத் தரப்பட்டுள்ளது.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.