http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 108

இதழ் 108
[ ஜூன் 2014 ]


இந்த இதழில்..
In this Issue..

வணிகர்கள்
Kudumiyanmalai - 2
பண்டைய கட்டுமானங்களைப் பாதுகாத்த மேலப்பாதி திருக்கோயில்
வரலாற்றின் பார்வையில்.. நியமம் ஐராவதேஸ்வரர் திருக்கோயில்
தேடலில் தெறித்தவை - 14
குடவாயில் மாடக்கோயில்
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 5
ஆய்வுப் பாதையில் ஆங்காங்கே - 4
செழியனின் நற்கொற்கை
இதழ் எண். 108 > கலையும் ஆய்வும்
பண்டைய கட்டுமானங்களைப் பாதுகாத்த மேலப்பாதி திருக்கோயில்
கி.ஸ்ரீதரன்
தமிழ்நாட்டில் தொன்மைச் சிறப்பு மிக்க பல திருக்கோயில்கள் உள்ளன. காலப்போக்கில் கோயிலின் ஒரு பகுதியில் பழுதுபட்டால் அதனைத் திருப்பணி செய்ய வழிவகை செய்யப்பட்டிருந்தது. கோயில் திருப்பணிகளை மேற்கொள்ள நிலங்கள் தானமாக அளிக்கப்பட்டன. இவ்வாறு அளிக்கப்பட்ட நிலம் 'திருப்பணிப்புறம்', 'புதுக்குப்புறம்' என்று அழைக்கப்பட்டதைக் கல்வெட்டுகளின் மூலம் அறிகிறோம். திருப்பணிகளை மேற்கொள்வதற்குச் சிறந்த சிற்பிகள் இருந்தனர். ஒரு சில கோயில்களுக்கு என்று ஸ்தபதிகள் அதாவது சிற்பிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். சிற்பிகளுக்கு நிலங்கள் தானமாக அளிக்கப்பட்டன. அவ்வாறு அளிக்கப்பட்ட நிலம் சிற்பவிருத்தி, சில்பின்காணி, தச்சாசாரியக்காணி, ஆசாரிய தட்சிணை என்றெல்லாம் அழைக்கப்பட்டன. சிற்பிகள் தாங்கள் கோயில்களைக் கட்டப் பயன்படுத்திய அளவுகோல்களையும் (Scale) பொறித்து வைத்துள்ளனர். இதற்குத் 'தச்சுமுழம்' என்பது பெயர். திருவண்ணாமலை, சிதம்பரம், காஞ்சி வரதராஜர் கோயில் போன்ற கோயில்களில் சிற்பிகள் பயன்படுத்திய தச்சுமுழ அளவுகோல்களைக் காணலாம்.

திருக்கோயில்களுக்கு அளிக்கப்பெற்ற தானங்கள், மன்னர்கள் பற்றிய குறிப்புகள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டிருக்கும். அவை அளிக்கும் செய்திகள் வரலாற்றுக்கு முக்கியமான சான்றுகளாகும். கோயில்களில் திருப்பணி மேற்கொள்ளும் பொழுது முன்பிருந்த கல்வெட்டுகளை அழித்துவிடாமல், குறிப்பு எடுத்துக்கொண்டு மீண்டும் அதனைப் பொறித்து வைத்தனர். இவ்வாறு செய்யும்பொழுது கல்வெட்டில் "இதுவும் ஓர் பழங்கற்படி" என்று குறித்துள்ளனர். இதனைத் திருக்கோடிக்கா, திருமழபாடி கோயில் கல்வெட்டுகளில் காணலாம்.

பழைய கோயிலைத் திருப்பணி செய்யும்பொழுது கற்களின் வரிசை மாறிவிடாமல் இருக்க, கற்களில் தமிழ் எண்கள் பொறிக்கப்பட்டிருப்பதைப் பல கோயில்களில் காணலாம். பழைய கட்டுமானங்களைப் பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகளை அரிய சான்றுகளுடன் மேலப்பாதி கோயிலில் காணலாம்.


மேலப்பாதி திருக்கோயில்


நாகை மாவட்டத்தில் தரங்கம்பாடி வட்டத்தில் மயிலாடுதுறை - பூம்புகார் நெடுஞ்சாலையில் 12 கி.மீ தொலைவில் மேலப்பாதி என்ற ஊரில் சுந்தரநாயகி சமேத ஜுரகரேசுவரர் கோயில் அமைந்துள்ளது. திருக்கோயில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், முகமண்டபம், நந்திமண்டபம், பரிவார சன்னதிகள், திருச்சுற்றுமாளிகை என்ற அமைப்புடன் விளங்குகிறது. இக்கோயில் முற்காலச் சோழர்காலத்தில் கட்டப்பட்டுப் பிற்காலத்தில் பல மாற்றங்களைப் பெற்றதை அறியமுடிகிறது. இக்கோயிலில் முதலாம் இராஜாதிராஜன் (கி.பி. 1044) மற்றும் மூன்றாம் குலோத்துங்கசோழன் காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவ்வூர் வீதிவிடங்க சதுர்வேதிமங்கலம் எனவும், இறைவன் வீமேசுரதேவர் எனவும் கல்வெட்டுகளில் குறிக்கப்படுவதை அறியமுடிகிறது.




கல்லு அழிவு கல்வெட்டு


இக்கோயிலின் மகாமண்டபத்தின் ஜகதிப் பகுதியில் ஒரு கல்லில், 'கல் அழிவு' என்று பொறிக்கப்பட்டுள்ளது. தொன்மையான இக்கோயிலைப் புதுப்பிக்கும்பொழுது வெயில், மழையால் அழிந்துவிட்ட கற்களை அகற்றிவிட்டு, புதிய கற்களைச் செருகி வைத்துத் திருப்பணி செய்துள்ளனர். அவ்வாறு கற்களில் மாற்றங்கள் செய்ததைத் தெரிவிக்க 'கல்லு அழிவு' என்று புதிய கல்லில் பொறித்து வைத்துள்ளனர்.



மேலும் திருப்பணியின்போது கற்கள் மாறிவிடாமல் இருக்கக் கற்களுக்கு 6, 7, 8, 9, 10 என்று தமிழில் எண்கள் இட்டு ஒவ்வொரு எண்ணின் அருகிலும் கல்லின் வடிவத்தையும் சதுரம் சதுரமாகப் பொறித்து வைத்துள்ளனர். பண்டைய கோயில் கட்டுமானத்தைப் போற்றிப் பாதுகாப்பதில் இருந்த ஈடுபாட்டினை இக்கல்வெட்டால் அறிகிறோம்.


தெக்குதூண் கல்வெட்டு


மேலும் இக்கோயிலில் ஒரு சிறப்பு. இக்கோயிலில் முன்மண்டபத்தூண் ஒன்றில் "மேல்புறம்" மற்றும் "தெக்குதூண்" எனப் பொறித்து வைத்துள்ளதைக் காணமுடிகிறது. சிற்பிகள் தூண்களை வடிவமைத்த பிறகு, மண்டபத்தில் எந்தப் பகுதியில் அவற்றை நிறுத்தி வைக்க வேண்டும் என்பதற்காக, இவ்வாறு பொறித்து வைத்திருக்கவேண்டும். எழுத்தின் வடிவமைப்பைக் காணும்பொழுது கி.பி. 18ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கொள்ளலாம்.

பண்டைய கோயில் கட்டுமானங்களைப் பாதுகாப்பதற்கும், பின்னர் வரும் சந்ததியினர் அறிந்து கொள்ளும் வண்ணம், கல்வெட்டாகப் பொறித்து வைத்த சிறப்பான கோயிலாக, மேலப்பாதி ஜுரகரேசுவரர் கோயில் திகழ்கிறது.

அடிக்குறிப்புகள் :

1. வரலாறு காட்டும் கோயில் திருப்பணிகள் - சொற்பொழிவு : கி.ஶ்ரீதரன் (24-5-2013)
2. திருக்கோடிகா கல்வெட்டுகள் - தமிழகத் தொல்லியல்துறை - 1992 : நடன.காசிநாதன்
3. திருமழபாடி - எஸ். இராமச்சந்திரன் : பக்கம் 89.
4. தமிழ்நாட்டுச் சிவாலயங்கள் தொகுதி 2 - மா. சந்திரமூர்த்தி - மேலப்பாதி சுரகரேசுவரர்கோயில் - கோ. முத்துசாமி, பக்கம் 115
5. தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - தமிழகத் தொல்லியல்துறை - 2004 - மேலப்பாதி கல்வெட்டுகள், பக்கம் 193 முதல் 197
6. மேலப்பாதி திருக்கோயில் நிழற்படங்கள் உதவி : திரு. கோ. முத்துசாமி.this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.