http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 113

இதழ் 113
[ நவம்பர் 2014 ]


இந்த இதழில்..
In this Issue..

கண்களும் பார்வைகளும்
Arivar Koil - 3
வன்பார்த்தான் பனங்காட்டுர் திருக்கோயில் - 2
Mutts in Thiruchirappalli District (C.E. 600 - 1300)
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 6
தேடலில் தெறித்தவை - 17
தலைச்சங்காடு சங்காரண்யேசுவரர்
ஒரகடம் வாடா மல்லீஸ்வரம்
வீரப்பூந்தொடை விழா
இதழ் எண். 113 > கலையும் ஆய்வும்
தலைச்சங்காடு சங்காரண்யேசுவரர்
இரா.கலைக்கோவன், மு.நளினி
காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள பாடல் பெற்ற ஊரான(1) தலைச்சங்காடு மயிலாடுதுறை தரங்கம்பாடிச் சாலையில் ஆக்கூருக்கு 3 கி. மீ. தொலைவில் உள்ளது.

பத்மபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் பெற்று அமைந்துள்ள ஒருதளக் கோபுர வாயிலை அடுத்து விரியும் சுற்றுவெளியின் நடுவில், 2. 46 மீ. உயர வெற்றுத் தளத்தின் மீது பெருமண்டபம், உள்சுற்று, முகமண்டபம், ஒரு தளத் திராவிட விமானம் பெற்று அமைந்துள்ளது சங்காரண்யேசுவரர் மாடக்கோயில்.(2) சுற்றின் கிழக்கில் பிள்ளையாருக்காய் அமைந்த எளிய ஒருதள வேசர விமானமும் அதையடுத்துக் கலைச்சிறப்புக் கொண்ட பலித்தளமும் உள்ளன.


courtesy: www.shaivam.org


பலித்தளம்

தமிழ்நாட்டுக் கோயில்களில் பல்வேறு அமைப்பிலான பலித்தளங்களைக் காணமுடிந்தாலும் அவற்றுள் சிலவே சிறக்கப் படைக்கப்பட்டுள்ளன. தலைச்சங்காட்டுப் பலித்தளம் துணைத்தளம், தாமரை உபானத்துடனான கபோதபந்தத் தாங்குதளம் கொண்டு மேலே மலர்ந்த தாமரையாய்ப் பலித்தளத்தைப் பெற்றுள்ளது. தளக் கட்டுமானத்தின் நாற்புறமும் உள்ள ஆழமான கோட்டங்கள் பத்மபந்தத் தாங்குதளம், எண்முக அரைத்தூண்கள், கூரையுறுப்புகளை மூடும் கபோதம், கிரீவம், சாலை சிகரம் எனக் கோட்டப்பஞ்சரமாய் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கோட்டங்களில் வடக்கிலும் தெற்கிலும் பத்மநிதி இடம்பெற, கிழக்கிலும் மேற்கிலும் உள்ள சங்கூதும் பூதத்தைச் சங்கநிதியாகக் கொள்ளலாம். தாங்குதளத்தை ஊடறுத்து அமைக்கப்பட்டுள்ள இக்கோட்டப்பஞ்சரங்களே பலித்தளத் திற்குத் தனிக் கவர்ச்சி தருகின்றன.

விஷ்ணுவும் தேவியரும்

சுற்றுவெளியின் தென்மேற்கு மூலையிலுள்ள மண்டபக் கோயிலில் விஷ்ணு சீனிவாசப் பெருமானாய் நின்றகோலத்தில் உள்ளார். கரண்டமகுடம், பட்டாடை அணிந்து இருபுறத்தும் நிற்கும் தேவியரில், வலப்புறமுள்ள திருமகள் மார்புக்கச்சுடன் வலக்கையை நெகிழ்த்தி, இடக்கையில் மலர் கொண்டுள்ளார். நிலமகள் கச்சற்றவராய் இடக்கையை நெகிழ்த்தி, வலக்கையில் மலர் பிடித்துள்ளார். பின்கைகளில் சங்கு, சக்கரம் ஏந்திப் புலிமுகக் கச்சு இறுக்கும் பட்டாடையும் கிரீடமகுடமுமாய் நிற்கும் விஷ்ணுவின் வல முன் கை காக்கும் குறிப்புக் காட்ட, இட முன் கை கடியவலம்பிதமாக உள்ளது. இறைவனின் செவிகளில் மகர குண்டலங்கள்.

சுற்றுவெளியின் வடமேற்கில் உள்ள ஒருதளத் திராவிட விமானத்தில் தேவியருடன் முருகன் இடம்பெற்றுள்ளார். வடக்கில் பெருமண்டப வெற்றுத்தளம் அருகே ஒருதள வேசர விமானத்தில் சண்டேசுவரர் சுகாசனத்தில் உள்ளார்.

சேட்டைத்தேவி

சுற்றுவெளியின் வடமேற்கு மூலையில் இரண்டு கால்களையும் தொங்கவிட்டவாறு தளமொன்றில் சேட்டைத்தேவி பட்டாடையுடன் வீற்றிருக்கிறார். கச்சற்ற இள மார்பகங்களுடன் உள்ள அவரது வலக்கையில் மலர்; இடக்கை தளத்தின் மீது ஊன்றியுள்ளது. வலப்புறம் உள்ள நந்திகேசுவரன் இறைவிக்காய் ஒருக்கணித்த உத்குடியில் உள்ளார். இடப்புறமுள்ள அக்னிமாதா உத்குடி போல அமர்ந்துள்ள போதும், வலக்காலும் ஓரளவிற்குக் கீழிறக்கமாகவே உள்ளது. முப்புரிநூல் அணிந்துள்ள மகனின் இடக்கையில் உருள்தடி; வலக்கையில் மலர். மகளின் வலக்கை கடகத்தில் மலர் ஏந்த, இடக்கை இடுப்பருகே. கச்சணிந்த இவரின் இடையில் சிற்றாடை.

வெற்றுத்தளம்

உபானங்களுடன் பத்மபந்தத் தாங்குதளத்தில் எழும் வெற்றுத்தளச் சுவரை, அனைத்து உறுப்புகளும் பெற்ற நான்முக அரைத்தூண்கள் அணைத்துள்ளன. சுவர்த் திருப்பங்களில் இவை இரட்டையாக உள்ளன. போதிகைகள் வெட்டுத் தரங்கமாக வளைந்து கூரை தாங்க, கபோதம், கொடிக்கருக்கு அழகூட்டலுடன் உள்ளது.

தளத்தின் கிழக்குச் சுவரில் உள்ள கோட்டத்தில் திரயச்ர பாதங்களுடன் உள்ள இணையர் சிற்பத்தில் முப்புரிநூல், உதரபந்தம், கழுத்தணிகள் மகரகுண்டலங்கள் அணிந்துள்ள ஆடவரின் இடக்கை அருகிலுள்ள தேவியின் வலக்கையைப் பற்றியுள்ளது. ஆடவரின் வலக்கை சின் முத்திரையிலும் தேவியின் இடக்கை கடியவலம்பிதமாகவும் உள்ள இவ்விணையை அரச இணையாகக் கொள்ளலாம்.

தெற்கு முன்றில்

வெற்றுத்தளத்தின் மீதேற வாய்ப்பாகத் தென்புறத்தே கிழக்குச் சுவரை ஒட்டிய நிலையில் பன்னிரண்டு படிகள் யாளிப்பிடிச்சுவருடன் உள்ளன. படிகளின் மேற்றளம் பெருமண்டபத்திற்கான முன்றிலாக்கப்பட்டுள்ளது. தென்புறம், முன்றிலைத் தாங்கும் நான்கு தூண்களும் சதுர தளத்தில் எழும் இந்திரகாந்த உடல் பெற்று, அனைத்து மேலுறுப்புகளும் கொண்டு வெட்டுத் தரங்கப் போதிகைகளுடன் கூரை தாங்குகின்றன. படிச்சுவரின் தென்புறத்தும் முன்றிலின் கீழமைந்த வெற்றுத்தளத்தின் தென்புறத்தும் வெறுமையான கோட்டங்கள் உள்ளன.

வெற்றுத்தளம்

சங்காரண்யேசுவரர் விமானம், முகமண்டபம் இவற்றைத் தாங்கியுள்ள வெற்றுத்தளமும் அதன் மீதுள்ள விமான உள்சுற்றின் புறச்சுவரும் தாங்குதளம், வேதிகை, தூண் தழுவல் ஏதும் பெறாது பத்மஜகதியின் மீதெழும் நெடுஞ்சுவராக அமைந்துள்ளமை திருப்பணிகளின் விளைவாகலாம்.

பெருமண்டபம்

உபானத்துடனான பத்மபந்தத் தாங்குதளம் பெற்றெழும் பெருமண்டப வெளிச்சுவர் வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் கொண்டு விளங்குகிறது.

கூடுவளைவுகளுடனான கபோதத்திற்கு மேல் வேதிகை காட்டப்பட்டுள்ளது. அதன் தென்கிழக்கு, வடகிழக்குத் திருப்பங்களில் பக்கத்திற்கொரு பூதநாயகரும் காளையும் உள்ளனர். தெற்கிலும் கிழக்கிலும் வாயில்கள் கொண்டுள்ளபோதும் முதன்மை வாயிலாகத் தென்வாயிலே அமைந்துள்ளது.

தென்வாயிலின் இருபுறத்தும் கருங்கல் சாளரங்கள் பெற்றுள்ள இம்மண்டபத்தை முச்சதுர, இருகட்டு உடல் பெற்ற தூண்கள் தாங்குகின்றன. கட்டுகள் முப்பட்டை பெற, சதுரங்கள் சிலவற்றில் சிற்பங்கள். மேலே, பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரை. மண்டபத்தின் வடபுற அறையில் ஆடவல்லானும் உமையும் இடம் பெற்றுள்ளனர்.

ஆடவல்லான்

வலக்காலை முயலகன் மீது இருத்தி, இடக்காலை வலப்புறம் வீசி ஆனந்ததாண்டவம் ஆடும் ஆடவல்லானின் பாம்பு சுற்றிய வல முன் கை காக்கும் குறிப்புக் காட்ட, இட முன் கை வேழ முத்திரையில் உள்ளது. பின்கைகளில் உடுக்கையும் தீச்சுடரும். விரிசடையில் வலப்புறம் வணங்கியவராய் கங்கை; இடப்புறம் பிறை. மகுட முகப்பில் மண்டையோடு. வலச்செவியில் மகரகுண்டலம்; இடச்செவியில் பனையோலைக் குண்டலம், தோள்மாலை, உதரபந்தம், தோள், கடக, கை வளைகள், சிற்றாடை, குறங்குசெறி அணிந்து ஆடும் இறைவனின் இடப்புறம் கரண்டமகுடம், மகரகுண்டலங்கள், அரும்புச்சரம், குறங்குசெறி, பட்டாடை அணிந்து நிற்கும் உமையின் வலக்கை கடகமாய் அமைய, இடக்கை நெகிழ்ந்துள்ளது.

இவ்வறைச் சுவரில் பின்புறம் சுற்றி வளைத்த கொண்டையும் மீசை, தாடியும் நீள்வெறுஞ்செவிகளும் கொண்டு பட்டாடையில் வணங்கி நிற்கும் ஆண்வடிவம் இந்தக் கட்டுமானத்தை எடுத்தவராகலாம். மண்டபத்தின் தென்புறத்தே உள்ள சிறுமேடையில் நால்வர், பட்டினத்தார், கோச்செங்கட் சோழன் சிற்பங்கள் உள்ளன. மண்டபத்தின் மேற்கிலுள்ள வாயில் இறைவன் திருமுன்னைச் சுற்றி அமைந்துள்ள உள்சுற்றுக்கு வழி தருகிறது. இவ்வாயில் அருகே தென்மேற்கில் துணைத்தளத்துடனான மேடை ஒன்று உள்ளது.

இறைவன் விமானம், முகமண்டபம் இவற்றைச் சுற்றி ஒரு மேடையென அமைந்துள்ள உள்சுற்றின் கூரையை முச்சதுர, இருகட்டு உடல் பெற்ற தூண்களின் மேலுள்ள வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்குகின்றன. தெற்கு மேடையில் தேவார மூவர், சண்டேசுவரர், மகாவிஷ்ணு, ஜ&ரAரேசுவரர், ராமர், சீதை திருமேனிகள் அமைய, தென்மேற்கில் வலம்புரிப் பிள்ளையாரும் மேற்கில் முருகனும் வடக்கில் நீலகண்டேசுவரரும் உள்ளனர்.

விமானம்

5. 71 மீ. பக்கமுடைய சதுரமாக அமைந்துள்ள சங்காரண்யேசுவரர் விமானம் உபானங்களின் மேbலழும் கபோதபந்தத் தாங்குதளம் பெற்றுள்ளது. பத்மஜகதி, உருள்குமுதம், பாதங்களும் கம்புகளும் பெற்ற கண்டம், கூடுவளைவுகள் திகழும் கபோதம், பூமிதேசம் என அனைத்து உறுப்புகளும் நன்கு அமைந்துள்ள கபோதபந்தத் தாங்குதளத்தின் மீது வேதிகைத் தொகுதியும் சுவரும் எழுகின்றன. சதுரபாதத்தில் எழும் எண்முக அரைத்தூண்கள் சுவரைத் தழுவ, மேலுள்ள பூமொட்டுப் போதிகைகள் கூரையுறுப்புகளைத் தாங்க, சுவரின் முப்புறத்தும் உள்ள கோட்டங்களைச் சட்டத்தலை பெற்ற உருளைத்தூண்கள் அணைத்துள்ளன.

கோட்டங்கள் உள்ள சாலைப்பத்திகள் சற்றுப் புறந்தள்ளலாக உருளை அரைத்தூண்களின் அணைவுடன் காட்சிதருகின்றன. பஞ்சர அலங்கரிப்புப் பெற்ற இக்கோட்டங்களில் தெற்கில் ஆலமர்அண்ணலும் மேற்கில் இலிங்கோத்பவரும் வடக்கில் நான்முகனும் உள்ளனர். ஆரஉறுப்புகளற்ற விமானக் கீழ்த்தளத்தின் மேலே செங்கல் கட்டுமானமாய் திராவிட கிரீவம், சிகரம் அமைய, கிரீவகோட்டங்கள் வெறுமையாக உள்ளன.

ஆலமர் அண்ணல்

வீராசனத்திலுள்ள இறைவனின் பின்னிருக்கும் ஆலமரத்தில் வலப்புறம் பொக்கணம் தொங்குகிறது. இறைவனின் வலப்பாதம் முயலகனின் மீது இருத்தப்பட்டுள்ளது. அருகே இடப்புறமாக முகம் திருப்பி நந்தி அமர்ந்துள்ளது. சடைப்பாரம் கொண்டுள்ள இறைவனின் வலச்செவியில் மகரகுண்டலம், இடச்செவியில் பனையோலைக் குண்டலம். பின்கைகளில் அக்கமாலையும் தீச்சுடரும் கொண்டுள்ள இறைவனின் முன்கைகள் சிதைந்துள்ளபோதும் வலக்கை சின்முத்திரையிலும் இடக்கை சுவடி ஏந்தித் தொடைமேல் இருப்பதையும் அறியமுடிகிறது. சரப்பளி, முப்புரிநூல், சிற்றாடை அணிந்துள்ள இறைவனின் இருபுறத்தும் உள்ள சுவர்ப்பகுதிகளில் பக்கத்திற்கிருவராக முனிவர்கள். மாடக்கோயில் ஆலமர்அண்ணல்களில் தலைச்சங்காடு இறைவன் தம்முடைய நிகரற்ற புன்னகையால் முதலிடம் பெறுகிறார்.

இலிங்கோத்பவர்

இலிங்கத்திலுள்ள கோளத்திறப்பில் காட்சிதரும் இறைவனின் பின்கைகளில் மானும் மழுவும். சடைமகுடம், இடச் செவியில் பனையோலைக் குண்டலம், தோள், கை வளைகள், முப்புரிநூல், உதரபந்தம், சிற்றாடை அணிந்துள்ள இறைவனின் வல முன் கை காக்கும் குறிப்புக் காட்ட, இட முன் கை கடிய வலம்பிதமாக உள்ளது. வலச்செவி வெறுஞ்செவியாக அமைய, இலிங்கத்தின் மேற்பகுதியில் பூப்பட்டை சுற்றப்பட்டுள்ளது. மேலே அன்னமும் கீழே பன்றியும் காட்டப்பட்டுள்ளன. இறைவனின் இருபக்கத்தும் உள்ள சுவர்ப்பகுதிகளில் விஷ்ணுவும் நான்முகனும் சிறிய அளவினராய் வணக்கமுத்திரையில் உள்ளனர்.

நான்முகன்

சமபங்கத்தில் சடைமகுடம், நீள்வெறுஞ் செவிகள், தோள், கடக, கை வளைகள், உதரபந்தம், முப்புரிநூல், பட்டாடை, இடைக்கட்டு, குறங்குசெறி அணிந்து பின்கைகளில் அக்கமாலை, குண்டிகை ஏந்தி நிற்கும் நான்முகனின் வல முன் கை காக்கும் குறிப்பில் இருக்க, இட முன் கை கடியவலம்பிதமாக உள்ளது.

முகமண்டபம்

விமானத்தின் கட்டமைப்பிலேயே உள்ள முகமண்டபத்தின் தென்கோட்டத்தில் பிள்ளையாரும் வடகோட்டத்தில் மகிடாசுரமர்த்தனியும் உள்ளனர். கரண்டமகுடம், சரப்பளி, வஸ்திர முப்புரிநூல், உதரபந்தம், சிற்றாடை, இடைக்கட்டு இவற்றுடன் நிற்கும் பிள்ளையாரின் துளைக்கை, இட முன் கை மோதகத்தைச் சுவைக்கிறது. பின்கைகளில் அங்குசமும் பாசமும் கொண்டுள்ள அவருடைய வல முன் கையில் உடைந்த தந்தம்.

கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், அரும்புச்சரம், ஸ்வர்ணவைகாக்ஷம், தோள், கடக, கை வளைகள், மோதிரம், மார்புக்கச்சு, இடைக்கட்டுடனான சிற்றாடை, அடுக்குச் சிலம்பு அணிந்து மகிடத்தின் தலை மீது நிற்கும் நெற்றிக் கண் பெற்ற மகிடாசுரமர்த்தினியின் பின்கைகளில் சங்கு, சக்கரம். வல முன் கை காக்கும் குறிப்பில் இருக்க, இட முன் கை கடியவலம்பிதமாக உள்ளது. சோழர் காலச் சிற்பமாக விளங்கும் இம்மர்த்தினி மாடக்கோயில் மர்த்தினிகளில் சிறப்புக்குரியவர்.

காவலர்கள்

முகமண்டப வாயிலின் இருபுறத்தும் உள்ள கோட்டங்களில் காவலர்கள். கீர்த்திமுகம் பெற்ற சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், அரும்புச்சரம், சரப்பளி, முப்புரிநூல், உதரபந்தம், தோள், கை வளைகள், சிற்றாடை அணிந்துள்ள அவர்களுள், தெற்கர் வலக்கையில் வியப்புக் காட்டி, இடக்கையை அருகிலுள்ள பாம்பு ஊரும் மரக்கிளை மீது வைத்துள்ளார். இடப்பாதம் கருவறை நோக்கித் திரும்ப, வலப்பாதம் மரக்கிளை மேல். வலக்கையால் அச்சுறுத்தும் வடக்கர், இடக்கையை மழுவின் மீது தாங்கலாக்கியுள்ளார். அலங்கார முப்புரி நூல் பெற்றுள்ள அவரது வலப்பாதம் கருவறை நோக்கி அமைய, இடப்பாதம் பாம்பு சுற்றியுள்ள மழு மீது உள்ளது. இருவருமே கோரைப்பற்களுடன் காட்சிதருகின்றனர். வடக்கரின் தோள்வளைகளில் கீர்த்திமுகம் காட்டப்பட்டுள்ளது.

முகமண்டப, கருவறை வாயில்களைச் சட்டத்தலை பெற்ற உருளைத்தூண்கள் அணைக்க, முன்னால் மூன்று படிகள் பிடிச்சுவருடன் உள்ளன. உள்சுற்றின் முன் விரிவுக் கூரையையும் முகமண்டபக் கூரையையும் உருளைத்தூண்கள் தாங்க, மண்டபத்தின் சிறிய மேடையில் நந்தி. கருவறையில் இறைவன் வேசர ஆவுடையார் மீது உருளைப்பாணத்துடன் இலிங்கத் திருமேனியராய் உள்ளார்.

அம்மன் கோயில்

கோயில் வெளிச்சுற்றின் வடகிழக்குப் பகுதியில் ஒருதள வேசரமாய் உள்ள அம்மன் கோயில் விமானமும் முகமண்டபமும் ஏறத்தாழ ஒத்த கட்டமைப்பில் உள்ளன. துணைத்தளம், பாதபந்தத் தாங்குதளம், கண்டம், கபோதம், வேதிகை, எண்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் கொண்டுள்ள அம்மன் கோயில் விமானத்தின் சாலைப்பத்தி சற்றே புறந்தள்ளியுள்ளது. அதன் தாங்குதளம் பத்மஜகதியுடன் கபோதபந்தமாகியுள்ளது. வேதிகைக்கு மாற்றாகப் பெருவாஜனம் இடம்பெற்றுள்ளது. முகமண்டபத்தில் புறந்தள்ளல் இல்லை. பஞ்சரமாக அலங்கரிக்கப்பட்டுள்ள விமானக் கோட்டங்களும் முகமண்டபக் கோட்டங்களும் வெறுமையாக உள்ளன.
முன்னுள்ள பெருமண்டபம் துணைத்தளம், தாங்குதளம் (ஒரு சிறு பகுதியில் பிரதிபந்தம், பின் நெடுக பாதபந்தம்), வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், கூரையுறுப்புகள் பெற்று அமைந்துள்ளது. கருவறையில் இறைவி அழகம்மையாய் எழுந்தருளியுள்ளார். கரண்டமகுடம், பட்டாடை, சரப்பளி அணிந்துள்ள அம்மையின் வல முன் கை காக்கும் குறிப்பிலிருக்க, இட முன் கை கடியவலம்பிதமாக உள்ளது. பின்கைகளில் வலப்புறம் அக்கமாலை, இடப்புறம் தாமரை.

கல்வெட்டுகள்

இக்கோயிலில் இருந்து பத்துக் கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன.(3) அவற்றுள் காலத்தால் முற்பட்ட உத்தமசோழரின் கல்வெட்டு அவருடைய அன்னையார் பராந்தகன் மாதேவடிகளான செம்பியன் மாதேவி தலைச்சங்காடு மகாதேவரின் பெரிய கோயிலுக்கு வெள்ளிப்பாத்திரம் தந்த செய்தியைத் தருகிறது. சிதைந்துள்ள முற்சோழர் காலக் கல்வெட்டு, திருவேள்விக்குடி இறைவன் கோயிலுக்குத் தலைச்சங்காடு ஊரவையார் நிலம் விற்ற செய்தியைக் கூறுகிறது. கடல்சூழ்ந்த பார் மாதரும் என்ற மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் இரண்டாம் இராஜாதிராஜரின் கல்வெட்டில், ஜெயங்கொண்ட சோழ வளநாட்டு ஆக்கூர் நாட்டிலிருந்த தலைச்சங்காடு பெருங்கோயிலுக்குச் சொந்தமான தேவதான நிலங்களின் இருப்பிடமும் பரப்பளவும் பொத்தகத்தில் இருந்தாற் போல் பட்டியலிட்டுத் தரப்பட்டுள்ளன. ‘பொன் மேஞ்ச சோழ விளாகம்’ என்ற பெயரில் ஒரு நிலம் இருந்தது.

மூன்றாம் இராஜராஜ சோழரின் ஐந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இவ்வூரையும் இதன் கிழக்கில் இருந்த சிற்றூரையும் காவல் காத்த பாடிகாவலருக்குத் தங்க இடம் இல்லாமையாலும் ஊதியம் வாழ்க்கைக்குப் போதாமையாலும் ஊரவை நான்கு வேலி நிலம் கொடையாகத் தந்ததாகச் சொல்கிறது. அரச துரோகக் குற்றத்தைத் தவிர வேறெந்தச் சூழலிலும் அவர்களுக்குத் தந்த நிலத்தை வேறெதற்கும் மாற்றிக் கொடுக்க முடியாதபடி அவர்களுக்கே உரிமையுடையதாக அக்கொடை அமைந்தது.

அதே மன்னரின் ஆறாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டின் மூலம் ஒரு குத்தகைக்காரர் ஆண்டுக் கடமையான எட்டுக் கலம் நெல்லைத் தொடர்ந்து பல ஆண்டுகளாகக் கொடுக்கத் தவறியதால் அவரிடம் அளிக்கப்பட்டிருந்த ஒரு வேலித் தேவதான நிலம் திருநாமத்துக்காணியாக மாற்றப்பட்டமையும் அம்மாற்றத்திற்குக் குத்தகைக்காரரின் ஒப்புதல் பெறப்பட்டமையும் ஊரவையின் அனுமதியுடன் அந்நிலம் வேறு குத்தகைக்காரர்களுக்கு அடைமுதல் பற்றுக்குத் தரப்பட்டமையும் தெரியவருகின்றன.

அதே மன்னரின் பதினேழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, ஜெயங்கொண்டசோழ நல்லூர் ஊரவையார் அவ்வூரைச் சேர்ந்த இராஜேந்திர சோழேசுவரம் உடையார், குசலேசுவரம் உடையார், வில்வேசுவரம் உடையார் திருக்கோயில்களுக்குக் கேட்பாரற்றுக் கிடந்த மூன்று வேலி பயிரிடக்கூடிய நிலத்தை வரியில்லாச் சொத்தாக ஒப்படைத்தனர் என்றும் ஒழுகு, பொத்தகம் இரண்டிலும் அதைப் பதிவுசெய்து, அடுத்த நிலவுரிமை பற்றிய ஏற்பாட்டின்போது இறையிலி என்பதற்குப் பதிலாகத் திறப்பு என்று குறிக்கப்பட்டால் ஊர்க்குடிகள் நிலவரி செலுத்த வேண்டும் என நிபந்தனை இடப்பெற்றது என்றும் தெரியப்படுத்துகிறது. அதே மன்னரின் பதினெட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, தனுசு மாதத்தில் தலைச்சங்காட்டில் கிராம காரிய பொறுப்பேற்ற ஊரவை உறுப்பினர்கள் கிராமத்தின் பத்துக் கட்டளை, கிராமத்தைச் சுற்றியிருந்த சிற்றூர்கள் இவற்றின் வாரநிலங்களுக்கு உரித்தான சில கட்டுப்பாடுகளையும் சிறப்புரிமைகளையும் வரையறுத்த தகவலைத் தருகிறது.

அதே மன்னரின் பத்தொன்பதாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, மன்னரின் ஆட்சிக் காலத்தில் நிலவிய குழப்பமான சூழ்நிலையைப் படம்பிடிக்கிறது. மன்னரின் ஐந்து, பதினொன்று, பதினைந்தாம் ஆட்சியாண்டுகளில் நாடு இருந்த குழப்பமான சூழ்நிலையில் தலைச்சங்காட்டு ஊரவையில் இருந்த நில உரிமை, வரித்தண்டல் தொடர்பான பழைய பொத்தகங்களும் பதிவேடுகளும் தொலைந்துவிட்டமையால், ஊரவை, பிள்ளை புரோசைக்குடியார் சத்யவாக்கர் திருவேகம்பம் உடையார் மூலம் பிள்ளை சேந்தமங்கலமுடையார் சிவதவனப் பெருமாளான இருங்கோளரை அணுக, அவர், மன்னரின் பதிbனட்டாம் ஆட்சியாண்டு வரை நிலங்களை அனுபவித்து வந்த குடிகளின் பெயருக்கே அந்தந்த நிலங்களின் உரிமை ஆவணத்தைப் புதுப்பித்து வழங்குமாறு நெறிப்படுத்தினார்.

அதே மன்னரின் சிதைந்த நிலையில் உள்ள இருபத்திரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, நிரந்தர அமைப்பாக இருந்து ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்பாக மாற்றப்பட்ட நிருவாக அலுவலர் குழுமத்திற்கு ஊதியம் அளிப்பதற்காகத் தண்டப்பெற்ற வாடகையினங்கள் சிலவற்றை ஊரவை நீக்கிய தகவலைத் தருவதுடன், இவ்வலுவலர் குழுமம் தங்களுக்கு வழங்கப்பட்ட நெல்லையே ஊதியமாகக் கொண்டு பணியாற்ற முடிவானதாகவும் கூறுகிறது.

கி. பி. 1474ல் வெட்டப்பட்டுள்ள அரசர் பெயரற்ற கல்வெட்டு, பெருந்திருக்கோயில் உடைய நாயனார் கோயிலில் தம்மால் ஏற்படுத்தப்பட்ட வழிபாட்டுச் செலவினங்களுக்காக சோழ பாண்டிய நல்லூரில் மூன்று வேலி நிலம் அந்தணர் ஒருவரால் கொடையாகத் தரப்பட்ட செய்தியைத் தெரிவிக்கிறது.

இக்கோயில் பெருமண்டபத் தெற்கு வாயிலருகே புதிதாகக் கண்டறியப்பட்ட கல்வெட்டு, ‘திருமிகைச்சூர் எழுவை’ எனும் பெயரில் அமைந்த அளவுகோல் ஒன்றைச் சுட்டுகிறது.(4)

காலம்

பாடல் பெற்ற தலமான இக்கோயிலின் சிற்பங்கள் சில முற்சோழர் காலத்தனவாக அமைய, கட்டுமானங்கள் பிற்சோழர் காலத்தனவாக உள்ளன. பொ. கா. ஆறாம் நூற்றாண்டிலிருந்தே சிறப்புடன் திகழ்ந்த இக்கோயில் பிற்சோழர் காலத்தில் வளம் பெற்றதாகக் கொள்ளலாம்.

குறிப்புகள்
1. 2: 55. சம்பந்தரின் பதிகத்தில் ஊரின் பெயர் தலைச்சங்கை என்றுள்ளது.
2. ஆய்வு நாட்கள் 10. 8. 1982, 26. 9. 2009. இக்கோயில் பற்றிய முதல் ஆய்வுக்கட்டுரை 1983ல் வெளியான செந்தமிழ்ச் செல்வி, செப்டம்பர், அக்டோபர் இதழ்களில் ‘சைவமும் வைணவமும் தழைத்தோங்கும் தலைச்சங்காடு’ என்ற தலைப்பில் பதிவாகியுள்ளது.
3. ARE 1925: 204 - 213.
4. இக்கல்வெட்டு பேராசிரியர் முனைவர் மு. நளினியால் கண்டறியப்பட்டது.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.