![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 125
![]() இதழ் 125 [ நவம்பர் 2015 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியத்திலுள்ள மதுரகாளியம்மன் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட முசிறி அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் அர. அகிலாவும் சிராப்பள்ளி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் முனைவர் மு. நளினியும் பழங்காலக் கல்வெட்டுகள் சிலவற்றைக் கண்டறிந்தனர். அவற்றுள் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று அக்காலத்தே தொட்டியத்தில் விளங்கிய சமூக அடுக்குகளைப் பற்றிப் பேசுகிறது. முத்தளச் சாலை விமானமாக அமைந்திருக்கும் மதுரகாளியம்மன் கோயிலின் இறையகம் எளிய துணைத்தளமும் பாதபந்தத் தாங்குதளமும் கொண்டுள்ளது. கருங்கல்லால் ஆன கீழ்த்தளச் சுவரின் முப்புறக் கோட்டங்களும் வெறுமையாக அமைய, மேற்றளங்கள் செங்கல் கட்டுமானமாக உள்ளன. சுதையுருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள விமானத்தின் முன்னுள்ள மண்டபங்கள் பிற்காலத்தே அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகளை ஆராய்ந்த டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவன் அவற்றுள் காலத்தால் பழைமையான சோழர் கல்வெட்டு பொதுக்காலம் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகலாம் எனத் தெரிவித்துள்ளார். பிள்ளையார் கோயில் தாங்குதளத்தில் காணப்படும் இக்கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ள கற்கள் தொட்டியத்தின் வேறுபகுதியில் இருந்து அழிந்த கோயிலொன்றைச் சேர்ந்தனவாகலாம். கல்வெட்டு முழுமையுற அமையாதபோதும் கிடைத்திருக்கும் தரவுகள் கொண்டு அது நிலவிற்பனை பேசுவதை அறியமுடிகிறது. அந்தணர் குடியிருப்பொன்றைச் சேர்ந்த ஊரவை, இரண்டரை வேலி நன்செய் நிலத்தைக் கூத்தப்பெருமானுக்கு விழா எடுப்பதற்கும் அவருக்கான படையல்கள், வழிபாடு செய்யவும் இருபது காசுகளுக்கு விற்றுத் தந்தது. கல்வெட்டுக் குறிப்பிடும் கூத்தப்பெருமான் இவ்வூரில் இருந்து அழிந்த சிவன் கோயிலொன்றில் வழிபடப்பட்ட நடராசப் பெருமானாகலாம். விற்கப்பட்ட நிலத்தின் எல்லைகளைப் பற்றிப் பேசும் கல்வெட்டு, கணபுரதேவ வாய்க்காலையும் ஸ்ரீதேவி வதியையும் குறிப்பிடுகிறது. நிலத்தின் விலை இருபது காசுகளாக அமைந்தபோதும் அதற்கான வரியை நீக்க ஊரவை நூறு காசுகள் பெற்றுக்கொண்டது. இந்நிலவிலை ஆவணத்தை எழுதுமாறு ஊரவைத் தலைவர் அத்தோரை கிரமவித்தன் ஆணையிட, சபைக்கணக்கு வெண்ணாவல் ஓலையை எழுதினார். விற்கப்பட்ட நிலத்துண்டுகளின் அளவுகளைக் குறிப்பிடுமிடத்துக் கல்வெட்டு ‘திருவுலகளந்தபடி’ எனும் சொல்லாட்சியைப் பயன்படுத்தியுள்ளது. இதனால், இக்கல்வெட்டுப் பொறிக்கப்பட்ட பொதுக்காலம் 11ஆம் நூற்றாண்டளவில் சோழர் ஆட்சியின் கீழிருந்த நிலப்பகுதி முழுமையும் அளக்கப்பட்டிருந்தமை தெளிவாகிறது. கோபுரச் சுவரில் பொறிக்கப்பட்டுள்ள பொதுக்காலம் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு, மதுரகாளியம்மன் கோயிலைப் பழுதுபார்க்கவும் புதுக்கவும் தொட்டியத்தின் அனைத்துச் சமூக அடுக்குகளைச் சேர்ந்த மக்களும் தங்களுக்குரிய பங்கை அளிக்க முன்வந்தமையைப் பதிவு செய்துள்ளது. பல்வகைத் தொழில் சார்ந்த பிரிவுகள், அலுவலர்கள், இனஞ்சார்ந்த பிரிவுகள் எனப் பல முதன்மையான செய்திகளை இக்கல்வெட்டால் அறியமுடிகிறது. அலுவல்நிலைகளில் மணியகாரர் மேலிடத்திலும் அடுத்துக் காராளன் பிள்ளைமார் வழிவந்த கணக்கர்களும் இறுதியாகக் கோயில் பண்டாரமும் குறிப்பிடப்பட்டுள்ளனர். கொழுந்து குடியானவர், பன்னிரண்டாம் செட்டிமார், பண்டாரவாடை சேணியர், சீமையூர்ப் பூசாரிகள், தாசிகள், கடைக்காரர்கள், சாணார், பாம்பாட்டிகள், கொல்லர், தச்சர், வண்ணார், நாவிதர், மூன்று வகைப் பள்ளர் முதலிய பல குழுவினர் தங்கட்குரிய காணிக்கையைச் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளனர். ஸ்ரீமாமூலம், சித்துளர், மாசம்பேட்டை, சீமை எனப் பல ஊர்களின் பெயர்களையும் வழங்கும் இக்கல்வெட்டு, சந்திரனும் சூரியனும் கல்லும் காவிரிப் புல்லும் பூமியும் உள்ளவரை இவ்வொப்பந்தம் நீடிக்கும் என்கிறது. கோபுரநிலையில் காணப்படும் கல்வெட்டுகள் நிலைக்கால்களைத் தந்தவர்களாகத் தொட்டியம் வானுவர், தேவசிவாயம் பிள்ளை மகன் மாரிமுத்துப்பிள்ளை ஆகியோரைக் குறிப்பிட, கீழ்ப்படியிலுள்ள கல்வெட்டு அதை அளித்தவராக வீரப்பச் செட்டியாரையும் கருப்பச் செட்டியாரையும் சுட்டுகிறது. திருவரங்கம் மேற்குத் தெருவைச் சேர்ந்த முத்துப்பிள்ளை மகன் மன்னாருபிள்ளை மதுரகாளியம்மன் கோயிலில் எப்போதும் வழிபட்டிருப்பதாக ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |