http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 128



இந்த இதழில்..
In this Issue..

அருள்மிகு நாகநாதசாமி திருக்கோயில்
SOMESWARA SHRINE OF SOMUR-Continued
திருக்கழுக்குன்றம் குடைவரை
கண்ணாரக் கண்டும் கையாரக் கூப்பியும்....
பரமேசுவரமங்கலம் திருக்கோயில்கள்
சிராப்பள்ளி தொட்டியம் சாலையில் சில கண்டுபிடிப்புகள் - 9
இன்குதல் விறலியர் இசை மரபு
இதழ் எண். 128 > கலையும் ஆய்வும்
திருக்கழுக்குன்றம் குடைவரை
ச.சுந்தரேசன்

ஒருகல் மண்டபம் என்று உள்ளுர் மக்களால் அழைக்கப்படும் திருக்கழுக்குன்றம் குடைவரை செங்கல்பட்டு-மாமல்லபுரம் நெடுஞ்சாலையில் செங்கல்பட்டிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருக்கழுக்குன்றம் குன்றில் அமைந்துள்ளது. இக்குடைவரை இந்திய தொல்பொருள் அளவீட்டுத் துறையினரின் பராமரிப்பில் உ:ள்ளது. இக்குடைவரையைக் காண விரும்புவோர் மாமல்லபுரத்திலுள்ள இந்திய தொல்பொருள் அளவீட்டுத் துறை அலுவலகத்தில் பயண நாளை முன்னரே தெரிவித்தால் குறிப்பிட்ட நாளில் துறையின் உதவியாளர் மாமல்லபுரத்திலிருந்து சாவியுடன் வந்து பார்வைக்குத் திறந்து வைப்பார்.



செங்கல்பட்டு-மாமல்லபுரம் நெடுஞ்சாலையில் திருக்கழுக்குன்றம் பேருந்து நிறுத்தத்தினை ஒட்டியவாறு மேலெழும் நன்கு திருத்தமாய் அமைக்கப்பட்டிருக்கும் அகன்ற படிவரிசை குன்றின் மேலேறிச் செல்ல உதவுகின்றன. அடிவாரம் தொடங்கி மலைக்கோயில் வரை அண்மையில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரையும், இளைப்பாறத் தங்குமிடங்களும் பயணிப்போரை வெயிலிலிருந்தும், மழையிலிருந்தும் பாதுகாக்கிறது. இருப்பினும் படிவரிசைக் கட்டுமானம் செங்குத்தாக இருப்பதால் களைப்பு ஏற்படுவது தவிர்க்க இயலாதது.



குன்றின் பாதியளவு ஏறியதும் இடப்புறம் செல்லும் படிக்கட்டுகள் குன்றின் உச்சியில் இருக்கும் வேதகிரீஸ்வரர் கோயிலுக்கும், வலப்புறத்துப் படிவரிசைகள் நெடிய பாறைச்சரிவில் கிழக்குப் பார்வையாய் அமைந்துள்ள ஒருகல் மண்டபம் குடைவரைக்கும் இட்டுச் செல்கின்றன. குடைவரைக்கு சற்று உயரே படிகளைக் கடந்து சென்றால் கீழே மரகதப் பச்சை வயல்களினூடே திருக்கழுக்குன்றம் ஊரின் அழகும், மையமாய் பக்தவத்சலேசுவரர் திருக்கோயிலும், சங்குத் தீர்த்தமும் கண்களுக்கு விருந்தாய் விரியும்.



மலைக்குச் செல்லும் படிவரிசையின் இடப்புறம் குன்றின் கிழக்குச் சரிவில் கிழக்கு முகமாக அகழப்பட்டுள்ள குடைவரையை அடைய ஏழு படிகள் உதவுகின்றன. தென்புறமாக அமைந்துள்ள படிவரிசையின் ஏழாவது படியை அடுத்த மேற்றளம் முகப்பிற்கு முன்னுள்ள தரையைத் தொட்டு அமைந்துள்ளது. இதே போன்ற வடபுறத்துப் படிவரிசை மலைக்குச் செல்லும் படிகளுக்கிடையே மறைக்கப்பட்டிருக்கலாம். இப்படிகளின் கிழக்குப் புறத்தை யானையின் துளைக்கை வடிவ பிடிச்சுவர் அணைத்துள்ளது.



முகப்பு:



படிவரிசைகள் முடியும் இடம் குடைவரை முகப்பின் தரையுடன் இணைந்துள்ளது. குடைவரையின் முகப்பு, சதுரம், கட்டு, சதுரம் வடிவில் அமைந்த இரண்டு முழுத்தூண்களையும், பக்கத்திற்கொன்றாக இரண்டு அரைத்தூண்களையும் கொண்டமைந்துள்ளது. தூண்களின் மேல் பேரளவிலான போதிகைகள் தங்கள் விரிகோணக் கைகளால் உத்திரம் தாங்குகின்றன.



உத்திரத்தின் மேலே கூரையை ஒட்டியோடும் வாஜனம் அரைத்தூண்களை அடுத்து பக்கச் சுவர்களைத் தழுவி தரை வரை இறங்கியுள்ளது. கூரையின் நீட்சி வடிவமைக்கப்படாத கபோதமாக சமன்படுத்தப்பட்டுள்ளது.



மண்டபம்:



முகப்புத் தூண்களையடுத்து அமைந்திருக்கும் மண்டபம் அதன் மையப் பகுதியில் இரண்டாவது தூண் வரிசையால் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முகப்புத் தூண் வரிசைக்கும், இரண்டாம் வரிசைத் தூண்களுக்கும் இடையில் உள்ள பகுதி முகமண்டபமாகவும், இரண்டாம் வரிசைத் தூண்களுக்கும், கருவறைச் சுவருக்கும் இடைப்பட்ட பகுதி அர்த்தமண்டபமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.



முகமண்டபம்:



முகமண்டபத்தின் தரையும், கூரையும் அழகாக சமன்படுத்தப்பட்டு சீராக்கப்பட்டுள்ளன. கூரையை ஒட்டி நாற்புறமும் ஓடும் வாஜனம் முகப்பின் மேற்குப் பகுதி வாஜனத்தின் மேல் இரண்டாம் சதுரப் பட்டியாகக் காட்டப்பட்டுள்ளது. முகமண்டபத்தின் வடக்குச் சுவரிலும், தெற்குச் சுவரிலும் அகழப்பட்டுள்ள கோட்டங்களில் நின்ற நிலை அடியவர் சிற்பங்கள் அகழப்பட்டுள்ளன.



அர்த்தமண்டபம்:



அர்த்தமண்டபத்தின் தரையமைப்பு முகமண்டபத் தரை மட்டத்திலிருந்து சற்றே உயர்ந்து காணப்படுகிறது. அர்த்தமண்டபத்தில் உள்ள தூண்களும் முகப்புத் தூண்களைப் போலவே சதுரம், கட்டு, சதுரம் என்ற அமைப்பில் இரண்டு முழுத்தூண்களும், பக்கத்திற்கொன்றாக இரண்டு நான்முக அரைத்தூண்கள் உறுப்பு வேறுபாடின்றி அமைந்துள்ளன. தூண்களின் மேலுள்ள எளிய, கனமான போதிகைகள் உத்திரம் தாங்க மேலே வாஜனம் ஓடுகிறது. கூரையும், சுவர்களும் ஒரே சீராக சமன் செய்யப்பட்டுள்ளன.



கருவறை:



குடைவரையின் மேற்குச் சுவரிலிருந்து சற்று முன் தள்ளி அமைந்திருக்கும் கருவறையின் பாதபந்த வகையைச் சேர்ந்த தாங்குதளம் உபானம், ஜகதி, எண்பட்டைக் குமுதம், பாதங்கள், கம்புகளுடன் கண்டம், பட்டிகை, மேற்கம்பு ஆகிய அனைத்துக் கூறுகளையும் கொண்டுள்ளது. கருவறை வாயிலை இரண்டு உறுப்பு வேறுபாடற்ற நான்முக அரைத்தூண்கள் அணைத்தவாறு எழுகின்றன.  



கருவறைச் சுவர் வடபுறமும், தென்புறமும் திரும்பும் இடங்களில் பக்கத்திற்கொன்றாக இரண்டு உறுப்பு வேறுபாடற்ற நான்முக அரைத்தூண்கள் வெட்டப்பட்டுள்ளன. இத்தூண்களின் மீது எழும் எளிய போதிகைகள் உத்திரம் தாங்குகின்றன. மேலே வாஜனமும் வலபி மற்றும் கபோதம். கபோதம் வளைந்து இறங்கும் இடத்தில் விளிம்பினைப் பெற்றுள்ளது. கபோதத்தின் மேல் அர்த்தமண்டபக் கூரையின் வாஜனம் தொடர்கிறது.



கருவறை வாயிலின் இருபுறத்திலும் தூண்களுக்கிடையில் ஆழமற்ற கோட்டகளில் பக்கத்திற்கொன்றாக வாயிற்காவலர் நிற்கின்றனர். கருவறையை அடைய வாயிலின் முன் வளைந்த பிடிச்சுவர்களுக்கிடையில் மூன்று படிகள் வெட்டப்பட்டுள்ளன. அவற்றுள் மூன்றாவது படி நிலாக்கல்லாக அமைந்துள்ளது.



கருவறை அடுத்துள்ள அர்த்தமண்டபப் பின் சுவரில் தென்புறத்துக் கோட்டத்தில் நான்முகனும், வடபுறத்துக் கோட்டத்தில் விஷ்ணுவும் நின்ற கோலத்தில் காட்சியளிக்கின்றனர்.



கருவறையின் தரையும், சுவர்களும் நன்கு சமன் செய்யப்பட்டுள்ளன. தரையில் அமைக்கப்பட்டிருக்கும் வேசர ஆவுடையாரும், லிங்கத் திருமேனியும் பிற்காலத்தவையாகும்.



கல்வெட்டு:



அர்த்தமண்டபத்து வடபுறத்து முழுத் தூண் மேற்சதுரத்தின் கிழக்கு முகத்தில் மிகவும் சிதைந்த நிலையில் உள்ள நரசிம்மப் பல்லவரின் கல்வெட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரீசுவரர் என்று அறியப்படும் ஸ்ரீமூலத்தானத்துப் பெருமானடிகளுக்கு வழிபாட்டுப்புறமாக வாதாபி கொண்ட நரசிங்க போத்தரையர் நிலம் வைத்தமையை சுட்டுவதாக அறிகிறோம்.





































 



நன்றி:



மாமல்லபுரம் குடைவரைகள்,



ஆசிரியர்கள்:



டாக்டர். ஆர். கலைகோவன், முனைவர் மு. நளினி



சேகர் பதிப்பகம், சென்னை 600 078.


இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.