http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 138

இதழ் 138
[ அக்டோபர் 2017 ]


இந்த இதழில்..
In this Issue..

THE ORNAMENTAL DOORFRAMES IN SRI RANGANATHA SWAMI TEMPLE, SRIRANGAM – REMNANTS OF EARLY CHOLA ARCHITECTURE
புள்ளமங்கை கோபுரம்
பெரியபுராணமும் கற்சிற்பமும் (காரைக்கால் அம்மையார்)
நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்! - 2
விசலூர் ஆய்வுப்பயணம்
கலைக்கோயில்களில் கல்கியின் கதை மாந்தர்கள்
சந்திரபுரத்து நடுகற்கள்
வெகுமக்கள் இலக்கியத்தில் தமிழ் இலக்கணம் -3
இதழ் எண். 138 > கலையும் ஆய்வும்
புள்ளமங்கை கோபுரம்
சு.சீதாராமன்

 



உறுப்பு வேறுபாடுகளற்ற கருங்கல் தாங்குதளத்தின் மேலெழும் செங்கல் கட்டுமானக் கோபுரம் மூன்று தளங்களுடன் விளங்குகிறது. ஆதிதளச் சுவரின் முடிவில் கருங்கல் பலகைகளால் ஆன கூரையைச் செங்கல் கட்டுமானம் தாங்குகிறது. தெற்கு வடக்காக 20' நீளமும் கிழக்கு மேற்காக 14' அகலமும் கொண்ட கோபுரத்தின் ஆதிதளம் 7'அகலமும் 10'3" உயரமும் கொண்ட நுழைவாயில் பெறுகிறது. இந்நுழைவாயிலின் நிலை கருங்கற்களினால் செய்யப்பட்டு, செங்குத்தாக உயரும் நிலைக்கால்களின் கீழ்ப்பகுதி சுமார் 1'6" உயரத்தில் நாகபந்தம் பெற்று விளங்குகிறது. இந்த நாகபந்தத்திலிருந்து நிலைக்கால்களின் இரண்டு பக்கமும் அழகாக இரண்டு கோடுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் உருளைக்கம்பு பொருத்தியது போல் செதுக்கப்பட்டு நிலைக்கால்களின் தோற்றத்திற்கும் நிலைக்கால்களின் மேலே பொருத்தப்பட்ட உத்திரத்திற்கும் அழகு சேர்த்துள்ளனர். இந்த நாகபந்தம் காண்பிக்கப்பட்ட நிலைக்கால்களிலிருந்தே இந்தக் கோபுரக்கட்டுமானம் வெகு நிச்சயமாக அசல் விமானத்தின் காலகட்டத்தில் கட்டப்படவில்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். 



 





 



நிலைக்கால்களின் மேற்குப்புறத்தில் பொருந்துமாறு இரு பக்கமும் இரண்டு கதவுகள் திறந்து மூடும் நிலையில் பொருத்தப்பட்டுப் பயன்பாட்டில் உள்ளன. சாலையிலிருந்து இந்த நிலை வரை ஒரு சாய்மானமான தரைப்பகுதியும், நிலையைத்தாண்டியவுடன் சமமான தரைப்பகுதியையும் இந்நுழைவாயில் கொண்டிருக்கிறது. நிலையைத்தாண்டியவுடன் காணப்படும் கோபுரங்களின் உட்சுவரில் இருபக்கமும் 6" ஆழத்தில் பக்கத்திற்கொன்றாக இரண்டு கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோட்டங்கள் கருங்கல் தளத்தில் ஆரம்பித்து செங்கல் கட்டுமானத்தில் உயர்ந்து மேலே கருங்கல் உத்திரம் பெறுகிறது. இவைகளில் எவ்வித மூர்த்தங்களோ ஓவியங்களோ இடம் பெறாமல் வெறுமையாகவே காட்சியளிக்கிறது. அதற்கு மேலெழும் செங்கல் கட்டுமானம் 10'3" உயரத்தில் நுழைவாயிலின் கருங்கல் கூரையைத் தாங்குகிறது.



 





 



கோபுர ஆதிதளம் கர்ணப்பத்தி, சாலைப்பத்தி, கர்ணப்பத்தி என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுச் சாலைப்பகுதி சற்று முன்னிழுக்கப்பட்டு நுழைவாயிலாக அமைகிறது. சாலைப்பகுதியின் இருமருங்கும் தூண்கள் பெறாமல் சுவராகவே எழும் கட்டுமானம் உத்திரம், வாஜனம் மற்றும் வலபி பெற்றுக் கூரைநீட்சியான கபோதத்தைத் தாங்குகிறது. சாலைப்பகுதியின் மேலுள்ள 

இந்தக் கபோதத்தில் நான்கு கபோதக்கூடுகள் காண்பிக்கப்பட்டுள்ளன. 



 





 



கோபுர முகப்பில் கர்ணப்பத்தி கருங்கல் தளத்தின் மேலெழும் செங்கல் கட்டுமானத்தில் இடம்பெற்ற கம்பிலிருந்து எழும் சுவர் பாத உறுப்புகள் பெறாமல் எழும் சம இடைவெளிகளில் அமைந்த மூன்று அரைத்தூண்கள் மாலாஸ்தானமும் இன்றி தாடி, கும்பம், கண்டம், பாலி, பலகை, வீரகண்டம் பெற்றுச் செவ்வக வடிவப் போதிகைக் கைகளால் உத்திரம் தாங்குகிறது. உத்திரத்தின் மேல் வாஜனம் மற்றும் வலபி ஆகிய உறுப்புகள் பெற்றுக் கூரைநீட்சியான கபோதத்தைத் தாங்குகிறது. இருபுறமும் கர்ணப்பத்தியில் அமைந்த கபோதத்தில் பக்கத்திற்கு மூன்று கபோதக்கூடுகள் காண்பிக்கப்பட்டுள்ளன. கபோதத்தின் மேல் அமையவேண்டிய பூமிதேச உறுப்புகள் அமைக்கப்படாமல் சாதாரணமாக அமைந்த கட்டுமானத்தில் முதல் தள ஆரச்சுவர் எழுகிறது.



 





 



ஆதிதளக்கூரையின் மேல் ஆர உறுப்புகளாக ஓரங்களில் கர்ணகூடுகளும், நடுவில் சற்று முன்னிழுக்கப்பட்ட சாலையும் இவைகளுக்கிடைப்பட்ட பகுதிகளில் பஞ்சரங்களும் காட்டப்பட்டுள்ளன. ஆர உறுப்புகளிடையேயுள்ள ஆரச்சுவர் நாசிகைகள் பெற்றுள்ளது. இவ்வார உறுப்புகளுக்குப்பின் கோபுரத்தின் இரண்டாம் தளக் கட்டுமானம் உயருகிறது. ஆதிதள ஆரச்சுவரின் சாலை நான்கு பக்கங்களிலும் திறப்புப் பெற்று ஒரு சிறு நுழைவாயிலாக அமைகிறது. கிழக்குப்பக்கம் மட்டும் வாயிலின் இருபுறமும் பக்கத்திற்கொருவராகக் கதையுடன் காவலர்கள் சுதையுருவச் சிற்பங்களாகக் காட்டப்பட்டுள்ளனர். ஆதிதள ஆரச்சுவர்களின் கிழக்கு மற்றும் மேற்குப்பகுதிகளில் இடம் பெறும் பஞ்சரங்கள் தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் இடம் பெறாமை குறிப்பிடத்தக்கதாகும்.  அரைத்தூண்கள் பொருந்திய தளச்சுவர் கூரை உறுப்புகள் பெற்றுக் கபோதத்துடன் இத்தளம் முடிவடைகிறது. ஆதிதளக் கோபுர ஆரச்சுவரின் மேற்கு நுழைவாயில் வழியே உள்ளே நுழைய, உள்ளே ஒரு செவ்வக வடிவ அறை நடுநாயகமாக அமைந்துள்ளதைக் காணலாம். இவ்வறையை நான்கு திறப்புகளிலிருந்தும் அணுகலாம். இங்கு விமானத்தின் சாலை, கர்ணகூடங்களிலிருந்து உதிர்ந்த பாகங்கள் கிடத்தப்பட்டுள்ளன.



 





 



இரண்டாம் தளம் தெற்கு வடக்காக 16' நீளமும் கிழக்கு மேற்காக 10' அகலமும் கொண்டது. ஆதிதளத்தின் பூமிதேசத்துக்குச் சற்று உள்ளடங்கி இரண்டாம் தள ஆர உறுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆதிதளத்தை விட நான்கு பக்கங்களிலும் உள்ளடங்கி அமைக்கப்பட்டுள்ளதால் இவை அளவில் சிறியனவாகத் தோற்றமளிக்கின்றன. இத்தள ஆரச்சுவர்களில் மேற்குப் பக்கம் தவிர ஏனைய மூன்று பக்கங்களிலும் சாலையின் இருமருங்கிலும் கதையுடன் சுதையுருவ காவலர் சிற்பங்கள் காட்டப்பட்டுள்ளன. தெற்குப் பக்கக் கர்ணகூடங்களில் நின்ற நிலையில் கூப்பிய கரங்களுடன் நந்திகள் காட்டப்பட்டுள்ளன. வடக்குப் பக்கக் கிழக்குக் கர்ணகூடத்தில் நாரதரும் மேற்குக் கர்ணகூடத்தில் கமண்டலம் ஏந்திய குறுமுனி அகத்தியரும் சுதையுருவங்களாக அமைக்கப்பட்டிருக்கின்றனர். இத்தளத்திலும் நான்கு பக்கச் சாலைகளிலும் நடுவில் திறப்புப் பெற்று மையத்தில் செவ்வக அறை அமைப்பு காணப்படுகிறது.



 





 



 





 



 





 



மூன்றாம் தளம் தெற்கு வடக்காக 12' நீளமும் கிழக்கு மேற்காக 6' அகலமும் கொண்டது. மூன்றாம் தளக் கூரையின் மேல் கிரீவமும் அதன்மேல் சாலை மற்றும் சிகரமும் அமைந்துள்ளன. கிரீவத்தின் நான்கு மூலைகளிலும் பக்கத்திற்கு இரண்டு நந்திகள் இருத்தப்பட்டுள்ளன. கிரீவச்சுவரைத் தெற்கில் மேற்குப் பகுதியில் ஓர் ஆணும், கிழக்குப் பகுதியில் பெண்ணும், வடக்கில் மேற்குப் பகுதியில் ஒரு பெண்ணும், கிழக்குப் பகுதியில் ஆணும் தாங்குகின்றனர். கிரீவத்தின் நான்குபுறமும் மகாநாசிகைக் கோட்டங்கள் காட்டப்பட்டு உள்ளது. கிழக்கிலும் மேற்கிலும் மட்டும் நடுவில் திறப்புகள் பெற்று அவற்றின் மேல் அல்பநாசிகைகள் காட்டப்பட்டுள்ளன. திறப்புகளின் இருபுறமும் கிழக்குப்பகுதியில் மட்டும் கதையுடன் காவலர்களின் சுதைச்சிற்பங்கள் உள்ளன. தெற்கிலும் வடக்கிலும் மகாநாசிகளின் மேல்வளைவுகள் கீர்த்திமுகங்களாய் வடிவமைக்கப்பட்டுள்ளன. தெற்கில் தட்சிணாமூர்த்தியும் வடக்கில் பிரம்மாவும் காட்டப்பட்டுள்ளனர். சாலை சிகரத்தின் மேல் ஐந்து தூபிகள் காட்டப்பட்டுள்ளன.



இக்கோபுரம் பின்னாளில் கட்டமைக்கப்பட்டிருந்தாலும் மிகவும் நேர்த்தியான முறையில் கட்டப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கதாகும்.



 


இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.