http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 157

இதழ் 157
[ ஆகஸ்ட் 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

கல்வெட்டுகளில் திருவிடைமருதூர் - 6
புள்ளமங்கை ஆலந்துறையார் விமானம்
பெரிய பெருமாளும் நம்பிராட்டியாரும்
மாமல்லபுரம் குடைவரைகள் - ஒப்பாய்வு - 2
திருவாசி மாற்றுரை வரதீசுவரர் - 3
பதாமி சாளுக்கியரின் கட்டுமானக் கோயில்கள் - பட்டடக்கல் நினைவுச் சின்னங்கள்
இதழ் எண். 157 > கலையும் ஆய்வும்
திருவாசி மாற்றுரை வரதீசுவரர் - 3
அர. அகிலா, மு. நளினி, இரா. கலைக்கோவன்

இறைவன் விமானம்

கருங்கல் தளத்தின் மேல் துணை உபானம், உபானம், மேல்நோக்குத் தாமரைவரி, கம்பு, ஜகதி, மேல்நோக்குத் தாமரைவரி, உருள்குமுதம், பிரதிவரி என அமைந்துள்ள பிரதிபந்தத் தாங்குதளத்தின்மீது வேதிகைத்தொகுதி பெற்றெழும் இறைவனின் இருதள வேசர விமானத்தின் கீழ்த்தளச் சுவரைச் செவ்வகப் பாதமும் பாதவிளிம்பில் பாம்புப்படமும் பெற்ற எண்முக அரைத்தூண்கள் அணைத்துள்ளன. கட்டு, மாலை, தாமரைக்கட்டற்ற இத்தூண்கள் பிற மேலுறுப்புகளும் தாமரை, பலகை, வீரகண்டமும் பெற்றுள்ளன. தரங்கவெட்டுப் போதிகைகள் விரிகோணக் கைகளால் உத்திரம் தாங்க, மேலே வாஜனம், பூதவலபி. சுண்ணப்பூச்சுக்களால் அழகிழந்துள்ள பூதவலபியை அடுத்து நடு, கோணப்பட்டங்களுடன் விளிம்பும் மேலோட்டமான கூடுவளைவுகளும் பெற்ற கபோதம். மேலே பூமிதேசம்.



தளப் பஞ்சரங்கள்

விமானத்தின் கீழ்த்தளக் கர்ண, சாலைப்பத்திகளுக்கு இடைப்பட்ட தாய்ச்சுவரில் சற்றே வெளித்தள்ளிய நிலையில் பஞ்சரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. துணை உபானத்திலிருந்து வேதிகைவரை விமானம் போலவே வளரும் இப்பஞ்சரங்களின் சுவர்ப்பகுதியை பாம்புப்படத்துடனான செவ்வகப்பாதம் பெற்ற உயரக் குறைவான இந்திரகாந்த அரைத்தூண்கள் தழுவியுள்ளன. பாலி, பலகை, வீரகண்டம், போதிகைகள் கொண்டு கூரையுறுப்புகள் தாங்கும் இவற்றின் வலபியில் அன்னவரி. கபோதம் நேர்ப்பார்வையில் இரு கூடுவளைவுகளும் பக்கங்களில் பக்கத்திற்கொரு கூடுவளைவும் கொண்டுள்ளது. கபோதத்திற்கு மேல் வேதிகையும் உயரமான கிரீவமும் சிம்மத்தலை பெற்ற வளைமுக சிகரமும் சிகரநாசிகையில் நாகர விமானமும் காட்டப்பட்டுள்ளன. இவ்வளைமுக சிகரம் இறைவிமானத்தின் கபோத வளைவு போல பொருந்த இணைக்கப்பட்டுள்ளது.

கோட்டங்களும் சிற்பங்களும்

விமானச் சுவர்களில் முப்புறத்தும் உள்ள கோட்டங்கள் சட்டத்தலை பெற்ற உருளை அரைத்தூண்களால் தழுவப்பட்டுள்ளன. மேலே அம்மன் கோயில் போலவே கூரையுறுப்புகளும் நாகரசிகரமும் தூபியும் காட்டப்பட்டுள்ளன. கோட்டங்களில் தென்புறம் ஆலமர்அண்ணலும் மேற்கில் அம்மையப்பரும் வடக்கில் நான்முகனும் உள்ளனர். ஆலமர்அண்ணல் கோட்டத்தின் முன் ஒருதள நாகர செங்கல் கட்டுமானமாய்ப் பின்னாளைய விமானம்.

ஆலமர்அண்ணல்

குப்புறக் கவிழ்ந்திருக்கும் முயலகன் முதுகின் மீது வலக்காலை இருத்தி, வீராசனத்திலுள்ள ஆலமர்அண்ணலின் பின்கைகளில் அக்கமாலை, தீச்சுடர். சடைப்பாரம், சரப்பளி, நீள்முத்துமாலை, தோள், கை வளைகள், முப்புரிநூல், உதரபந்தம், வீரக்கழல், தாள்செறி கொண்டுள்ள அவரது வல முன் கை காப்பு முத்திரையில் அமைய, அருள்முத்திரை காட்டும் இட முன் கையில் சுவடி. சடைப்பாரத்தின் இருபுறத்தும் சடைச்சுருள்கள். இடைச்சிற்றாடையுடன் உள்ள இறைவனின் இருபுறத்தும் வெறுஞ் செவிகளுடன் சடைமகுடம், தாடி, மீசை, முப்புரிநூலென மடித்த துண்டு, உதரபந்தம், பட்டாடை என அமர்ந்துள்ள முனிவர்களில், இடப்புறத்தார் வலக்கையில் சின்முத்திரை காட்டி, இடக்கையை முழங்கால் மீது இருத்தியுள்ளார். வலப்புறத்தாரின் இடக்கை தொடைமீது அமர, வலக்கை சிதைந்துள்ளது.

நான்முகன்

வடக்குக் கோட்டத்தில் சடைமகுடம், பூட்டுக்குண்டலங்கள், நீள்முத்துமாலை, வளையத் தொங்கல்களுடன் உதரபந்தம், தோள், கடக, கை வளைகள், கீர்த்திமுக இடைக்கச்சு, இடைக்கட்டுடனான பட்டாடை, முத்துத்தொங்கல்கள் பெற்ற குறங்குசெறி என விளங்கும் நான்முகனின் பின்கைகளில் அக்கமாலை, குண்டிகை. வல முன் கை காக்கும் குறிப்பு காட்ட, இட முன் கை தொடைமீதுள்ளது.

அம்மையப்பர்

மேற்குக் கோட்டத்தில் சமபாதத்திலுள்ள அம்மையப்பரின் வல முன் கை அவர் பின் நிற்கும் நந்தியின் தலைமீதுள்ளது. பின்கையில் மழு. அம்மையின் கை நீலோத்பலம் கொண்டுள்ளது. இடைக்கட்டுடன் இறைவன் பகுதியில் சிற்றாடையும் இறைவியின் இடுப்பில் பட்டாடையும் விளங்கும் இத்திருமேனியின் கழுத்தில் சரப்பளி, அரும்புச்சரம். தோள், கை வளைகள், கந்தமாலை, முப்புரி, மார்புநூல்கள் பெற்றுள்ள அம்மையப்பரின் வலச்செவியில் மகரகுண்டலம். இடச்செவி வெறுஞ்செவியாக உள்ளது. நந்தியின் கழுத்தில் பல்வேறு மணிமாலைகளும் பின்புறத்தே வாலைச் சுற்றி மணிமாலையும் காட்டப்பட்டுள்ளன.

ஆறங்க ஆரம்

விமான பூமிதேசத்தின் மேல் கோபுர முதல்தள ஆரம் போலவே ஆறங்க ஆரம். மூலைகளில் கர்ணகூடங்களும் நடுவில் சாலைகளும் அவையிரண்டுக்கும் இடைப்பட்டனவாய்ப் பஞ்சரங்களும் என ஆர ஒருங்கிணைப்பு மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருறுப்புகளுக்கு இடைப்பட்டுக் குறுநாசிகைகள் மிக மெல்லிய உடலுடன் நீள்கின்றன.

கர்ணகூடங்கள்

தெற்கில் மேற்குக் கர்ணகூடத்திலும் மேற்கில் தென்கர்ணகூடத்திலும் அருகிலுள்ள பஞ்சரத்தின் மீதும் படருமாறு முறையே சிவபெருமானின் திருமணக்காட்சியும் இயமனை அழித்த மூர்த்தி கதையும் அமைய, பிற கர்ணகூடங்களில் தனித்த சுதையுருவங்கள். இறைவியை இறைவனுக்கு மணம் கூட்டுவிக்கும் கோலத்தில் பின்கைகளில் சங்கு, சக்கரத்துடன் வலக்கையால் நீரூற்றி இடக்கையை இறைவியின் பின்புறம் கொண்டவராய் விஷ்ணுவும் இறைவன் கைப்பற்ற வலக்கை நீட்டி, இடக்கையைக் கடியவலம்பிதமாக்கிச் சற்றே குனிந்த தலையுடன் இறைவியும் பஞ்சரத்தில் அமைய, ஆரச்சுவர் குறுநாசிகை மறையுமாறு நடுவில் மரம் காட்டி, இறைவிக்காய் வலக்கை நீட்டும் இறைவனையும் மணமக்களை வணங்கி வாழ்த்தும் இந்திரனையும் கர்ணகூடத்தில் நிறுவியுள்ள சுதையாசிரியர், தீ வளர்த்து மணநிகழ்வுகளை நிறைவேற்றும் நான்முகனையும் படைக்கத் தவறவில்லை. கூர்மையான திட்டமிடலுடன் காட்சிப்படுத்தல் நிகழ்ந்துள்ள இத்தகு அமைப்பு சிராப்பள்ளியின் பிற பழங்கட்டுமானங்களில் காணுமாறு இல்லை.

எருமையின் மீது அமர்ந்து பின்கைகளில் முத்தலைஈட்டியும் கத்தியும் கொண்டவராய் முன்கைகளில் பிடித்துள்ள பாசக்கயிற்றை மார்க்கண்டேயன் மீது வீச, அது மார்க்கண்டேயனோடு லிங்கத்திருமேனியையும் பிணைக்க. செய்வதறியாது திகைத்த கோலத்தில் யமனும் தோளில் உருள்பெருந்தடியுடன் அவர் பின்னிருந்து வணங்கும் அவரது உதவியாளரும் மேற்குத் திசையின் தெற்குக் கர்ணகூடத்தை நிரப்ப, லிங்கத்திலிருந்து வெளிப்படும் சிவபெருமானும் மார்க்கண்டேயரும் பஞ்சரத்தில் காட்சியாகின்றனர். முன்கைகளில் யமனை அழிக்க ஓங்கிய ஈட்டியும் பின்கைகளில் மான், மழுவுமாய் இலிங்கத்தில் இடக்கால் ஊன்றி வெளிப்பட்டுள்ள இறைவனின் நீட்டிய வலக்கால் யமனை நோக்கியுள்ளது. ஒரு நாடகக் காட்சி போல இப்புரா ணக்கதை வடிவமைக்கப்பட்டுள்ள பாங்கு குறிப்பிடத்தக்கது.

தெற்கு ஆரத்தின் கிழக்குக் கர்ணகூடத்தில் அம்மை காணத் தீச்சுடர்ச் சூழ் மகரதிருவாசியில் பாம்பின் மீதாடும் பெருமான். சமபாதத்திலுள்ள உமையின் வலக்கையில் மலர். இடக்கையில் அருள்குறிப்பு. படமெடுத்திருக்கும் பாம்பின் உடல்மீது வலப்பாதம் இருத்தி, ஆனந்ததாண்டவமாடும் இறைவனின் பின்கைகளில் உடுக்கை, தீச்சுடர். வல முன் கை காக்கும் குறிப்பிலிருக்க, இட முன் கை வேழமுத்திரையில். இறைவன் வலக்காலருகே முதுகுக்காய்ப் படரும் பாம்பு. இச்சுதையுருவம் வார்ப்புருவமாக இக்கோயிலின் முன்மண்டபத்தில் காட்சிதருவது குறிப்பிடத்தக்கது.

மேற்கு ஆரத்தின் வடக்குக் கர்ணகூடத்தில் பின்கைகளுள் ஒன்றில் வஜ்ரம் ஏந்தியவராய் வலக்கையை நெகிழ்த்தி, இடக் கையில் அருள் காட்டும் முருகனின் மார்பில் சன்னவீரம். வடக்கு ஆரத்தின் மேற்குக் கர்ணகூடத்தில் யானையை அழித்த மூர்த்தி காட்சிதர, கிழக்குக் கர்ணகூடத்தில் பின்கைகளில் பாம்பு சுற்றிய உடுக்கையும் மானும் ஏந்திய சிவபெருமான். அவரது முன் கைகளில் வலப்புறம் முத்தலைஈட்டி, இடப்புறம் தலையோடு. வலப்பாதம் திரயச்ரமாக அமைய, இடப்பாதம் தரை நீங்கி உயர்ந்துள்ளது. கழுத்தில் பேரளவிலான மணிமாலையும் மார்பில் முப்புரிநூலும் அணிந்துள்ள அவரது தலையில் சடைமகுடம். யானைத்தலைமீது வலப்பாதமிருத்தி, இடக்காலை ஊர்த்வஜாநு வாக்கி உடலைச் சுழற்றிக் காட்சிதரும் யானையை அழித்தவரின் எட்டுக் கைகளில் மேலிரண்டு யானையின் தோல் பற்ற, நான்கில் வாள், கேடயம், வில், அம்பு. வல முன் கை முத்தலைஈட்டி கொள்ள, இட முன் கை சிதைந்துள்ளது.

கிழக்குக் கர்ணகூடங்களில் வடபுறம் அம்மையப்பரும் தென்புறம் திரிபுராந்தகரும் இடம்பெற்றுள்ளனர். திரிபுராந்தகரின் கைகளில் வில், அம்பு, மான், மழு. வல முன் கையில் காக்கும் குறிப்பு காட்டி, பின்கையில் மழுவேந்தியுள்ள அம்மையப்பரின் பின்னால் நந்தி. அம்மையின் கைகளில் ஒன்று நெகிழ, ஒன்றில் மலர்.

சாலைகள்

தெற்குச் சாலையில் உத்குடியில் யோகபட்டத்துடனுள்ள ஆலமர்அண்ணலின் வலப்பாதம், கையில் பாம்புடன் குப்புறப்படுத்துள்ள முயலகன் மேல். இறைவனின் பின்கைகளில் மலரும் சுவடியும் அமைய, முன்கைகள் சின்முத்திரையிலும் அருள் குறிப்பிலும். அவரின் இருபுறத்தும் சடைமகுடம், தாடி, மீசை, புலித்தோலாடையுடன் நிற்கும் முனிவர்களில் இடப்புறத்தார் கைகள் சின்முத்திரையிலும் கடகத்திலும் அமைய, வலப்புறத்தார் வலக்கைகளில் சின்முத்திரை காட்டி, இடக்கைகளை அருள், கடியவலம்பிதத்தில் கொண்டுள்ளனர்.

மேற்குச் சாலையில் விஷ்ணுவும் வடக்குச் சாலையில் நான்முகனும் தேவியருடன் சுகாசனத்தில் உள்ளனர். இருவர் முன்கைகளும் காக்கும், அருள்குறிப்புகளில் அமைய, விஷ்ணுவின் பின்கைகளில் சங்கு, சக்கரம். நான்முகன் அக்கமாலை, குண்டிகை பெற்றுள்ளார். இருதிசைத் தேவியரின் கைகளில் மலர், அருள்குறிப்பு.

கிழக்குச் சாலையில் வடக்குப் பார்வையில் நிற்கும் மயில் மீது சுகாசனத்தில் முருகன். பின்கைகளில் சக்தி, வஜ்ரத்துடன் முன்கைகளைக் காக்கும், அருள்குறிப்புகளில் கொண்டுள்ள அவரது இருபுறத் தேவியரும் ஒருகையில் மலர் கொண்டு, மறு கையை நெகிழ்த்தியுள்ளனர்.

பஞ்சரச் சுதையுருவங்கள்

தெற்கிலுள்ள கிழக்குப் பஞ்சரத்தில் கங்காதரரும் மேற்கிலுள்ள வடக்குப் பஞ்சரத்தில் லிங்கோத்பவரும் காட்சிதருகின்றனர். இறைவனின் வலப் பின் கை பற்றியிருக்கும் சடைமுடிச் சுருளில் நீர் பிலிற்றும் கங்கை. இறைவனின் வல முன் கை அருகில் நிற்கும் இறைவியின் முகம் தொட, இடக்கைகளில் முன்கை இறைவியின் இடுப்பில். பின்கையில் மான். இறைவனின் தழுவலில் இதம் காட்டும் இறைவியின் வலக்கையில் மலர். இடக்கை கடியவலம்பிதமாய்.



இலிங்கோத்பவரின் வலப்புறம் நான்முகனும் இடப்புறம் விஷ்ணுவும் வணங்கிய கோலத்தில் அவரவர்க்குரிய கருவிகளுடன் காட்சிதர, லிங்கத்தின் கோளத்திறப்பில் முழங்காலளவினராகக் காட்சிதரும் இறைவனின் பின்கைகளில் மான், மழு. முன்கைகள் காக்கும், கடியவலம்பிதத்தில். இலிங்கத்தின் மேற்பகுதியில் அன்னமும் கீழ்ப்பகுதியில் பன்றியும் காட்டப்பட்டுள்ளன.

வடக்குப் பஞ்சரங்களில் மேற்கில் வீரபத்திரரும் கிழக்கில் சதாசிவரும் உள்ளனர். சுடர்முடியுடன் எண்கையராய் அகல விரித்த கால்களும் தலைமாலையுமாய் பாதம் விலக்கி நிற்கும் இறைவனின் தலையில் சடைமகுடம். வலக்கைகளில் மேலிருந்து கீழாக, வாள், மழு, அங்குசம், முத்தலைஈட்டி. இடக்கைகளில் கேடயம், மணி, கலப்பை, தலையோடு. ஐந்து தலைகளும் பத்துக் கைகளுமாய் சுகாசனத்திலுள்ள சடைமகுட சதாசிவரின் வலக்கைகளில் மேலிருந்து கீழாக முத்தலைஈட்டி, மழு, வாள், சக்தி அமைய, இடக்கைகளில் பாசம், அங்குசம், மணி, தீ. அவரது முன்கைகள் காக்கும், அருள்குறிப்புகளில்.

கிழக்குப் பஞ்சரங்களில் இருபுறத்தும் அடியவர்கள். தெற்கிலிருப்பவர் சடைப்பாரத்துடன் வலக்கையைக் கீழ்நோக்கிய பதாகமாக்கி, இடக்கையைக் கடியவலம்பிதத்தில் கொண்டுள்ளார். வடக்கர் வலக்கை காக்கும் குறிப்பு காட்ட, கரண்டமகுடத்துடன் காட்சிதருகிறார். அவரது இடக்கை சிதைந்துள்ளது.

இரண்டாம் தளமும் ஆரமும்

முன்னிழுக்கப்பெற்ற சாலைப்பத்தியுடன் உயரக் குறைவாக உள்ள இரண்டாம் தளத்தில் பக்கத்திற்கிருவராய் அதன் கூரை தாங்கும் அடியவர்கள் அமைய, தளச் சாலைக் கபோதத்தின் மேல் பூமிதேசத்தில் பரவியவாறு நாற்புறத்தும் திசைக்கிருவராய் லலிதாசன முனிவர்கள். அவர்தம் ஒரு கை காக்கும் குறிப்பு காட்ட, மற்றொரு கை முழங்கால் மீது. தளக் கபோதத்தின் நான்கு மூலைகளிலும் சங்கூதும் பூதங்கள். மேலுள்ள வேதிகையின் நான்கு மூலைகளிலும் கர்ணகூடங்கள். அவற்றின் சுவர்ப்பகுதி களை அமர்நிலைச் சிம்மங்கள் அலங்கரிக்க, அவற்றின் இருபுறத் தும் பக்கத்திற்கிரு நந்திகள்.



கிரீவம்

வேதிகையின் மீது வேசரமாய் அமைந்துள்ள கிரீவசுவரில் எண்திசைக் காவலர்கள் அமைய, கிரீவ கோட்டங்களில் தெற்கில் ஆலமர்அண்ணல். மேற்கில் விஷ்ணு. வடக்கில் நான்முகன். கிழக்கில் எருதூர்பவர். தெற்கில் வீராசனத்திலுள்ள ஆலமர்அண்ணலின் வலப்பாதம் முயலகன் முதுகின்மீதிருக்கப் பின்கைகளில் உடுக்கை, தீச்சுடர். முன்கைகள் சின்முத்திரையிலும் சுவடியேந்தியும் உள்ளன. இறைவனின் இருபுறத்துமுள்ள முனிவர்கள் ஒரு கையில் சின்முத்திரை காட்டி, மறு கையில் சுவடியேந்தியுள்ளனர்.

மேற்கில் முன்கைகளில் காக்கும், அருள்குறிப்புகளுடன் விஷ்ணுவும் ஒரு கையில் மலரேந்தி மற்றொரு கையில் அருள்குறிப்புகாட்டி அவர் தேவியரும் சுகாசனத்தில் உள்ளனர். விஷ்ணுவின் பின்கைகளில் சங்கு, சக்கரம். வடக்கில் ஒரு கையில் மலரேந்தி, ஒரு கையில் அருள்குறிப்பு காட்டும் தேவியுடன் சுகா சனத்திலுள்ள நான்முகனின் பின்கைகளில் குண்டிகை, அக்க மாலை. முன்கைகள் விஷ்ணுவை ஒத்துள்ளன. கிழக்கில் எருதூர்பவராக சுகாசனத்திலுள்ள சிவபெருமானின் முன்கைகள் விஷ்ணுவை ஒத்தமைய, பின்கைகளில் மான், மழு. அருகில் அதே அமர்விலுள்ள உமையின் கைகள் பிற தேவியரை ஒத்துள்ளன.

மண்டபங்கள்

இறைவன் விமானத்தின் முன் அதே கட்டுமானத்தில் அமைந்த முகமண்டபமும் அதன் முன்னிருக்குமாறு பெருமண்டபம், முன்மண்டபம் ஆகியனவும் உள்ளன. முகமண்டபத்தின் வட, தென்கோட்டங்களில் முறையே மகிடாசுரமர்த்தினியும் நின்றநிலைப் பிள்ளையாரும் இடம்பெற்றுள்ளனர்.

முகமண்டபக் கோட்டங்கள்

நெற்றிக்கண்ணுடன் மகிடன் தலைமீது சமபாதத்திலுள்ள மர்த்தினியின் பின்கைகளில் சங்கு, சக்கரம். கரண்டமகுடம், மகரகுண்டலங்கள், கடக, கை வளைகள், முப்புரிநூல், மார்புக்கச்சு இடைக்கட்டுடனான பட்டாடை, இடைக்கச்சு, இடுப்பின் இருபுறத்தும் முந்தானைகள் நெகிழ முத்துச்சரங்களுடனான இடைமடிப்பாடை பெற்றுள்ள அம்மையின் வல முன் கை காக்க, இட முன் கை கடியவலம்பிதத்தில்.

அழகிய நெற்றிப்பட்டம் பெற்ற கரண்டமகுடம், முப்புரிநூல், உதரபந்தம், தோள்களில் இலைமாலை, கைவளைகள், சிற்றாடை கொண்டு இருபுறத்தும் உடைந்த தந்தங்களுடன் சமபாதராயுள்ள பிள்ளையாரின் பின்கைகளில் அங்குசம் பாசம். இட முன் கை மோதகத்தைத் துளைக்கை சுவைக்க, வல முன் கையில் உடைந்த தந்தம்.

பெருமண்டபம்

ஈரடுக்குக் கல்மேடையின் மேல் துணைஉபானம், உபானம், பிரதிபந்தத் தாங்குதளம் கொண்டெழும் பெருமண்டபத்தின் சுவரை நான்முக அரைத்தூண்கள் தழுவியுள்ளன. அவற்றின் மேலுள்ள தரங்கவெட்டுப் போதிகைகள் கூரையுறுப்புகள் தாங்க, மேலோட்டமான கூடுவளைவுகளுடன் கபோதம். கூரையின் தென், வடமேற்கு மூலைகளில் மேற்குப் பார்வையில் பக்கத்திற்கொன்றாகச் சோழர் கால நந்திகள்.

முன்மண்டபம்

கபோதபந்தத் துணைத்தளத்தின் மேல் துணைஉபானம், உபானம், பாதபந்தத் தாங்குதளம் கொண்டெழும் முன்மண்டபத்தின் சுவரை நான்முக அரைத்தூண்கள் அணைத்துள்ளன. தரங்க வெட்டுப் போதிகைகள் கூரைதாங்கும் இதன் கபோதம் பிற மண்டபக் கபோதங்கள் போலவே அமைந்துள்ளது. வடபுற ஜகதியில் நீர்வழி பெற்றுள்ள அதன் கூரையில் கிழக்குப் பார்வையில் தென், வடகிழக்கு மூலைகளில் பெருமண்டபம் போலவே அமர்நிலைச் சோழர் கால நந்திகள். கிழக்கில் முதன்மை வாயிலும் தெற்கில் மற்றொரு வாயிலும் பெற்றுள்ள இம்மண்டபமும் இதன் பின்னுள்ள பெருமண்டபமும் கோட்டங்கள் பெறவில்லை. முதன்மை வாயிலாக அமைந்துள்ள கிழக்கு வாயிலின் மேற்பகுதியில் யானைத்திருமகள் சிற்பம்.



இம்மண்டபத்தின் உட்புறத்தே கிழக்கு மேற்காக ஆறு முச்சதுர இருகட்டுத் தூண்கள் இரு வரிசைகளில் நின்று தரங்கவெட்டுப் போதிகைகளால் கூரைதாங்க, வடபுறத் திண்ணையில் பைரவரும் தென்கிழக்குத் திண்ணையில் கதிரவன், கொற்றவை, வாயிற்காவலர் சிற்பங்களும் உள்ளன. வடமேற்கில் பாம்பின்மீதாடும் பரமனின் திருமுன் வாயில். மண்டபத் தூண்களின் கீழ்ச்சதுர விளிம்புகள் பாம்புப்படம் கொள்ள, கட்டுகளில் பட்டைகள். மண்டபத்தின் தென்வாயிலுக்கு சற்றே முன்னிருக்குமாறு கிழக்குப் பார்வையில் பிள்ளையார். மண்டபத்தின் மேற்கு வாயில் பெருமண்டபத்திற்கு வழிவிடுகிறது.

முன்மண்டபச் சிற்பங்கள்

சமபாதத்தில் தென்பார்வையாய் உள்ள பைரவரின் பாம்பு சுற்றிய இடுப்பில் மணிகள் தைத்த இடைப்பட்டை. நெற்றிச்சுட்டியெனப் பதக்கம் கொண்ட சிரஸ்திரக சடைப்பாரம், சரப்பளி, தோள், கை வளைகள், முத்துக்கள் பதித்த முப்புரிநூல், முத்து உதரபந்தம் பெற்றுள்ள அவரது பின்கைகளில் உடுக்கை, பாசம். வல முன் கை முத்தலை ஈட்டி கொள்ள, பாம்பு சுற்றியுள்ள இட முன் கையில் தலையோடு. வலச்செவியை மகரகுண்டலம் அலங்கரிக்க, இடச்செவியில் பனையோலைச் சுருள். கால்களில் வீரக்கழல்கள். பைரவரின் பின்னிருக்குமாறு கழுத்தில் மணிகள் தொங்கும் மாலையுடன் கிழக்குப் பார்வையில் நாய். இறைவன் தலையின் வலப்புறத்துள்ள கொடிக்கருக்கு அழகூட்டல் இடப்புறத்தில்லை.

தென்கிழக்கு மூலையில் மேற்குப் பார்வையிலுள்ள மூன்று சிற்பங்களில் முதலாவதாக உள்ள கதிரவன் பிற இரண்டினும் காலத்தால் முற்பட்டவர். ஒளிவட்டத்துடனான கரண்டமகுடம், மகரகுண்டலங்கள், முப்புரிநூல், உதரபந்தம், தோள், கை வளை கள், இடைக்கச்சுடன் சிற்றாடை, இடைக்கட்டு, தாள்செறி என சமபாதத்திலுள்ள கதிரவனின் கைகளில் மலர்ந்த தாமரைகள்.

அடுத்துள்ள சிறிய அளவிலான கொற்றவை கரண்டமகுடம், குண்டலங்கள், சரப்பளி, தோள், கை வளைகள் பட்டாடையுடன் பின்கைகளில் சங்கு, சக்கரம் கொண்டு முன்கைகளை காக்கும், கடியவலம்பிதத்தில் கொண்டுள்ளார். கவனிப்பற்ற நிலையில் இச்சிற்பம் பெரிதும் சிதைந்துள்ளது. கோயிலாரால் சந்திரனாகக் கருதப்படும் மூன்றாம் சிற்பம் வாயிற்காவலராகும். சமபாதத்தில் இடக்கையை அருகிலுள்ள உருள்பெருந்தடி மேலிருத்தி, வலக்கையால் அச்சுறுத்தும் அவரது கால்களில் வீரக்கழல்கள். குறங்குசெறியுடன் இடைக்கச்சு பெற்ற அவரது இடையில் சிற்றாடை. சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, கந்தமாலை, தோள், கை வளைகள், வீரச்சங்கிலி பெற்றுள்ள அவரது தலையின் இருபுறத்தும் அடர்த்தியான சடைத்திரள்கள் வளையமிட்டுள்ளன.

பாம்பின் மீதாடும் பெருமான்

முன்மண்டப வடசுவரில் வாயில் பெற்று உள்சுற்றின் வடபுறத்தே ஒரு தள நாகர விமானமாய் விரியும் தனித் திருமுன்னில் இத்தளியின் பெருமைக்குரிய செப்புத்திருமேனி வழிபாட்டில் உள்ளது. தமிழ்நாட்டின் வேறெந்தக் கோயிலிலும் காணமுடியாத தனித்துவம் வாய்ந்த ஆனந்ததாண்டவத் திருமேனியாகப் பாம்பின் மீதாடும் பெருமான் இங்கு இடம்பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் பார்வைக்குக் கிடைக்கும் ஆனந்ததாண்டவச் சிற்பங்கள், செப்புத்திருமேனிகளில் இறைவனின் ஊன்றிய திருவடி பெரும்பாலும் முயலகன் எனும் குறளரக்கன் மீதே அமைந்துள்ளது. சில படிமங்களில் இறைவன் தாமரைத்தளத்தில் காலூன்றி ஆடுமாறும் காட்டப்பட்டுள்ளது. இந்நூலாசிரியர்கள் அறிந்தவரையில் மாற்றுரை வரதீசுவரர் கோயில் தவிர தமிழ்நாட்டின் வேறெந்தத் திருக்கோயிலிலும் ஆனந்ததாண்டவ சிவபெருமானின் செப்புத்திருவடிவங்களில் அவரது ஊன்றிய திருவடி பாம்பின் மீது அமையவில்லை.

சிவபெருமான் பலவகைத் தாண்டவங்களையும் நூற்றி யெட்டுக் கரணங்களையும் நிகழ்த்தியதாக சைவ ஆகமங்களும் நாட்டியசாத்திரமும் கூறுகின்றன. இத்தாண்டவங்கள், கரணங் களைப் படம்பிடிக்கும் சிற்பங்களும் செப்புத்திருமேனிகளும் தமிழ்நாடு தழுவிய அளவில் பல கோயில்களில் கிடைத்துள்ளன. இறைவன் ஆடிய தாண்டவங்களில் குறிப்பிடத்தக்கது ஊர்த்வ தாண்டவம். ஒரு காலை ஊன்றி, ஒரு காலை மேல் நோக்கி உயர்த் தும் இந்த ஊர்த்வதாண்டம் காளியோடு நிகழ்ந்த ஆடல் போட்டியின்போது அப்போட்டியில் அம்மையை வெல்வதற்காக இறைவ னால் நிகழ்த்தப்பட்ட ஆடல்நிலையாகும். சிவபெருமானின் தாண்டவங்களில் பல்லவர்களைப் பெரிதும் கவர்ந்தது ஊர்த்வதாண்டவமே. அவர்தம் கற்றளிகள் பலவற்றில் சிவபெருமானின் ஊர்த்வதாண்டவக் கோலத்தைப் பேரளவினதாகப் பார்க்க முடிகிறது. இவ்வாடல் நிலையின் முதல் காட்சி இராஜசிம்மப் பல்லவரின் கட்டுமானமான காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயிலில் இடம்பெற்றுள்ளது. இடப்புறமிருந்து உமையன்னை காண, வலப்புற அமரரின் ஒருமுக முழவளிக்கும் தாளத்திற்கேற்ப இறைவன் நிகழ்த்தும் இந்த ஊர்த்வதாண்டவச் சிற்பம் பல நிலைகளில் சிறப்புப் பெறுகிறது. தமிழ்நாட்டுக் கோயில்களில் வெளிப்படும் முதல் ஊர்த்வதாண்டவச் சிற்பம் இது என்பதோடு, சுருள்களாய்த் தன் உடலை வளைத்து மூன்று தலைகளை வெளி நீட்டியிருக்கும் முத்தலைப் பாம்பின் மீது இறைவன் தம் இடது திருவடியைப் பொருத்தி இந்த ஆடலை நிகழ்த்தும் பாங்கு இதன் தனித்துவத்தைப் பன்மடங்காய் உயர்த்தியுள்ளது.

எனில், பாம்பின் மேல் திருவடி ஊன்றி இறைவன் ஆடும் காட்சி பல்லவப் பழைமையது என்பது தெளிவு. தாருகாவன முனிவர்களின் ஆணவம் அகற்ற சிவபெருமான் பிச்சையேற்கும் அண்ணலாக அங்குச் செல்ல, அவர் அழகில் முனிபத்தினியர் மயங்க, சினங்கொண்ட முனிவர்கள், வந்த பிச்சையரை அழிக்க வேள்வி வளர்த்துப் புலி, யானை, பாம்புடன் முயலகனையும் ஏவியதாகப் புராணங்கள் சொல்கின்றன. புலியையும் யானையையும் கிழித்து அவற்றின் தோல்களை அரைக்கும் உடலுக்குமாய்க் கொண்ட இறைவன் பாம்பைத் தோளில் அணிந்ததாகச் சில குறிப்புகளும் பாம்போடு முயலகனையும் மிதித்து அழித்ததாகச் சில குறிப்புகளும் கண்காட்டுகின்றன. இந்த அழிவின் உச்சமே ஆனந்ததாண்டவம். முயலகனே இறுதியில் வந்தவர் என்பதால் ஆனந்ததாண்டவப் படைப்புகள் இறைவன் முயலகன் மீது திருவடி பதித்து ஆடுமாறே வெளிப்பட்டன. பாம்பும் இறைவன் திருவடிக் கீழ் நசுக்குண்டதைக் காட்டும் குறியீடாகவே முயலகன் கைப் பாம்பு விளங்குவதாகக் கொள்ளலாம். காஞ்சிபுரம் ஊர்த்வ தாண்டவரும் திருவாசி ஆனந்ததாண்டவரும் குறியீட்டை நேரடி வெளிப்பாடாகவே காட்ட விரும்பிய படைப்பாளிகளின் காட்சிப்படுத்தல் எனக் கொள்வது தவறாகாது.1

மாற்றுரை வரதீசுவரர் கோயிலிலுள்ள பாம்பின் மீதாடும் பெருமானின் ஆடலைக் காணுமாறு அவர் வலப்புறத்தே மாணிக்கவாசகர் திருமேனியும் இடப்புறத்தே உமையன்னையின் படிமமும் இடம்பெற்றுள்ளன. இருபுறத்தும் மலர்களுடன் நெகிழ்ந்திறங்கும் சடைக்கற்றைகள் சூழ்ச் சடைமகுடம், கண்டிகை, சரப்பளி, தோள், கடக, கை வளைகள், மோதிரம், செவிப்பூக்கள், உதரபந்தம், முப்புரிநூல், வீரக்கழல், தாள்செறிகள் கொண்டு விளங்கும் இறைவனின் வலச்செவி நீள்வெறுஞ்செவியாக அமைய, இடச்செவியில் பனையோலைக் குண்டலம். தொடைகளை இறுகத் தழுவிய புலித்தோல் ஆடையின் மீது அழகிய குறங்குசெறி. இடைக்கச்சின் வலப்புறத்தே முந்தானை. இரு தொடைகளுக்கிடையில் வளையமிடும் இடைக்கட்டின் முடிச்சுகள் இடுப்பின் இருபுறத்தும் அழகுற விரிந்துள்ளன. மகரம் உமிழும் தீச்சுடர்கள் திருவாசியாய் விரிய வலப்பாதத்தை பாம்பின் தலைமீது அழுத்தி, இடக்காலை வலப்புறம் வீசி, பின்கைகளில் உடுக்கையும் தீச்சுடரும் கொண்டு ஆனந்ததாண்டவமிடும் சிவபெருமானின் இட முன் கை வேழமுத்திரையில் நீள, படமெடுத்த பாம்பு சுற்றியிருக்கும் வல முன் கை காக்கும் குறிப்பில். இறைவனின் கால் அழுத்துவதால் பாம்பின் தலை, உடலின் முற்பகுதி தட்டையாகிப் பக்கங்களில் விரிவதைக் காணமுடிகிறது. அழுத் தம் தாளாமல் இலேசாகத் திறந்த வாயும் பிதுங்கிய விழிகளு மாய்ப் பாம்பின் முகமும் இறைத் திருவடியின் கீழ்ச் சிக்கியதால் இறைவனின் ஊன்றிய காலொட்டி அவர் தொடைவரை படர்ந்துள்ள அதனுடலின் பிற்பகுதியும் இறைத் திருவடித் திண்மை காட்டுவதுடன் பாம்பின் தவிப்பையும் உள்ளங்கைக் கனியாய் உணர்த்துகின்றன.

சடைமகுடம், மகரகுண்டலங்கள், மூன்று கழுத்தணிகள், தோள், கடக, கை வளைகள், முப்புரி, மார்புநூல்கள், குறங்குசெறி தவழ் பட்டாடை, இடைக்கச்சு, இடைக்கட்டு, கணுக்காலணி, சிலம்பு கொண்டு விளங்கும் இறைவியின் வலக்கையில் மலர் மொட்டு. தாமரைத்தளத்தில் சமபாதத்திலுள்ள அவரது இடக்கை நெகிழ, மகுடம் மீறிய சடைத்தொங்கல்களில் பூப்பதக்கங்கள்.

அக்கமாலை கொண்ட வலக்கையில் சின்முத்திரை காட்டி, இடக்கையில் சுவடியேந்தி முப்புரிநூலும் கோவணஆடையுமாய்த் திரயச்ர பாதங்களுடன் தாமரைத் தளத்தில் நிற்கும் மாணிக்கவாசகரின் செவிகள் நீள்வெறுஞ் செவிகளாய் அமைய, கழுத்திலும் மழித்த தலையிலும் ருத்திராக்கமாலை.





பெருமண்டபம் - உட்புறம்

முன்மண்டபத்தின் மேற்குச் சுவரில் வாயில் பெற்று, கிழக்கு மேற்காக 6. 49 மீ. அளவும் தென்வடலாக 6. 37 மீ. அளவும் கொண்டு ஏறத்தாழ ஒரு சதுரமென விரியும் பெருமண்டபம் முக மண்டபத்தை நெருங்குமிடத்து இருபுறத்தும் சுருங்கி (இச்சுருக்கத்தின் அளவு: கிழக்கு மேற்காக 2. 78 மீ. தென்வடலாக 2. 13 மீ.) முகமண்டப வாயிலைத் தழுவுகிறது. பக்கத்திற்கிரண்டாக நான்கு முச்சதுர இருகட்டுத் தூண்கள் தரங்கவெட்டுப் போதிகைகளுடன் கூரை தாங்கும் இம்மண்டபத்தின் வடபகுதி செப்புத்திருமேனிகளுக்கான செவ்வகத் திண்ணையுடன் விளங்க, இதன் நுழைவாயில் நிலைகள் இரண்டிலும் முதல் பராந்தகர் காலக் கல்வெட்டுகள்.

முகமண்டபம், கருவறை

கிழக்கு மேற்காக 3. 26 மீ. நீளம், தென்வடலாக 2. 60 மீ. அகலம் கொண்ட முகமண்டபத்தின் வாயில் 2. 13 மீ. உயரமும் 1. 07 மீ. அகலமும் பெற்றுள்ளது. இம்மண்டபத்தின் தென்மேற்கு மூலையில் பிரதோஷமூர்த்தியின் செப்புத்திருமேனி உள்ளது. 2. 20 மீ. உயரம், 1. 07 மீ. அகலம் பெற்றுள்ள வாயிலை அடுத்து விரியும் கருவறை 2. 50 மீ. பக்கமுடைய சதுரமாக அமைந்துள்ளது. கரு வறையில் உயரமான வேசர ஆவுடையார் மீது வேசர லிங்கத் திருமேனி வடிவில் இறைவன் எழுந்தருளியுள்ளார்.

காலம்

சம்பந்தராலும் சுந்தரராலும் ஐயடிகள் காடவர்கோனாலும் பாடப்பெற்ற பாச்சில் ஆச்சிராமம் சோழர் காலத்தில் வளமுடன் திகழ்ந்ததைக் கல்வெட்டுகள் வழி அறியமுடிகிறது. தற்போதுள்ள விமானத்தின் கட்டுமானம் பிற்சோழர் காலத்தது. வளாகத்துள்ள சிற்பங்களுள் சிலவும் அக்காலத்தனவே.

குறிப்புகள்

பாம்பின் தீண்டலைத் தவிர்க்க சிவபெருமான் காலுயர்த்தி ஆடியதாகக் கூறும் சகளாதிகாரம், இறைவன் பாம்பின்மீது ஆடியதாகச் சுட்டவில்லை. இறைவனின் ஆடல் பற்றிப் பேசும் ஸ்ரீதத்துவநிதி உள்ளிட்ட பிற ஆகமங்களிலும் இறைவன் பாம்பின் மீதாடிய குறிப்பு இல்லை. காளிங்கனை அழிக்கக் கண்ணன் மேற்கொண்ட முயற்சிகளைக் காளிங்கமர்த்தனமாகவும் காளிங்க நர்த்தனமாகவும் ஆகமங்கள், இலக்கியங்கள் வண்ணிக்கின்றன. அதனால், பாம்பின்மீது திருவடி இருத்தி ஆடிய பெருமை கண்ணனின் தனி உரிமையாகவே இருந்துவந்துள்ளது. பல்லவ, சோழர் காலக் கோயில்களில் காணப்படும் ஆனந்த தாண்டவ, காளிங்கமர்த்தன - நர்த்தனச் சிற்பங்களும் இதையே நிறுவுகின்றன.

ஆகமம், இலக்கியம், சிற்பம் எனும் மூன்றிலும் சுட்டப்பெறாப் புதுமையாக இக்கோயிலில் பாம்பின்மீது ஆனந்ததாண்டவம் நிகழ்த்தும் சிவபெருமானின் செப்புத்திருமேனி 15 அல்லது 16ஆம் நூற்றாண்டிற்கு உரியதாகலாம். திருவரங்கம் அரங்கநாதர், திருச்செந்துறை சந்திரசேகரர் கோயில்களில் ஏறத்தாழ இதே காலக்கட்டத்தைச் சேர்ந்தனவாக விஷ்ணுவை ஆனந்ததாண்டவக் கோலத்தில் காட்டும் இரண்டு கற்சிற்பங்களும் ஒரு சுதையுருவமும் இந்நூலாசிரியர்களுள் ஒருவரான இரா. கலைக்கோவனால் 1982இல் கண்டறியப்பட்டன. ஆனந்ததாண்டவம் சிவபெருமானுக்குரியது. ஆகமம், இலக்கியம், சிற்பம் என மூன்றின் வழியாகவும் இது நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையில் சிவபெருமானுக்குரியதை விஷ்ணு நிகழ்த்துவதாகவும் விஷ்ணு கண்ணனாகச் செய்ததை சிவபெருமானுக்கு ஏற்றிப் பார்ப்பதும் எளிமையாக நடந்துவிடக்கூடியவை அன்று. சமய எல்லைகளைத் தாண்டி ஒருமைப் பார்வையில் சைவத்தையும் வைணவத்தையும் இணைக்கக் கருதிய சான்றோர்களின் கருத்தில் விளைந்த கைவினையாகவே இப்புதிய வார்ப்புகளைப் பார்க்கவேண்டியுள்ளது.

- நிறைவுற்றது.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.