http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 162

இதழ் 162
[ ஃபிப்ரவரி 2022 ]


இந்த இதழில்..
In this Issue..

குடக்கூத்து
புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில் கண்டபாதச் சிற்பங்கள் - 3
திருவடிகள் என் தலைமேலன
பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் - கண்ணனூர் - 2
ஜப்பானியப் பழங்குறுநூறு - 9 (இணையற்ற அழகும் நிலையற்றதே)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 8 (தான் மட்டுமே அறியும் அமைதி)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 7 (அன்று வந்ததும் இதே நிலா)
இதழ் எண். 162 > கலையும் ஆய்வும்
புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில் கண்டபாதச் சிற்பங்கள் - 3
அர. அகிலா, மு. நளினி, இரா. கலைக்கோவன்

பெண்தெய்வங்கள்

மூன்று பாதங்களில் காளி, மகிடாசுரமர்த்தினியின் போர்க் காட்சிகள். மூன்றுமே போர்முனைப்பின் உச்சம் காட்டும் பதிவு கள். காளி அரக்கனைக் கொன்று கூளி முதலிய பேய்க்கணங்கள் சூழ, வீறுடன் வீற்றிருப்பது பரணி இலக்கியங்களை நினைவூட்டுகிறது.7 காட்சியின் மையப்புள்ளியாய், இருக்கையில் உத்குடியிலுள்ள காளியின் வல முன் கை சுட்டுமுத்திரையில். பின் கைகளில் வாள், முத்தலைஈட்டி, தமருகம். இறைவியின் இட முன் கை சிதைந் துள்ளது. இடக்கைகளுள் இரண்டில் மணி, கேடயம். ஒன்று வியப்பிலுள்ளது. அம்மையின் முகமும் மார்பகங்களும் சிதைந்திருந்தபோதும் தோற்றத்தின் எழிலை அவரது வலச்சுழற்சி மேம் படுத்துகிறது. கைகளைத் தரையில் ஊன்றி ஒருகால் மடித்து ஒரு கால் நீட்டிக் கீழே விழுந்திருக்கும் அரக்கனின் முதுகில் அம்மையின் முத்தலைஈட்டி.

கீழே, காளியின் இருபுறத்தும் பக்கத்திற்கிருவராய் அவரது தோழியர். அவர்களுள் சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, சிற்றாடையுடன் காளிக்காய் ஒருக்கணித்துள்ளவர்கள் ஒருகாலை நேராக ஊன்றி, மற்றொரு காலை முழங்காலளவில் சற்றே மடித்து நிற்கின்றனர். வலப்பெண் வலக்கையை மார்பருகே கொண்டு, இடக்கையால் இறைவியைப் போற்ற, இடப்பெண்ணின் வலக்கையில் குறுவாள். அவரது இடக்கை வியப்பு முத்திரையில். இருவருமே அரக்கனின் அழிவைக் கண்ணுறுவார் போல் குனிந்துள்ளனர். வலப்புறம் குத்துக்காலிட்டு அமர்ந்துள்ள பெண் வலக்கையை மார்பருகே கொண்டு இடக்கையை நெகிழ்த்தியுள்ளார். இடஒருக்கணிப்பிலுள்ள அவரும் முன்னவர்களைப் போலவே ஆடை, அணிகலன்கள் பெற்றுள்ளார். காளியின் இடப்புறம் லலிதாசனத்திலுள்ளவர் வலக்கையை வயிற்றருகே கொண்டுள்ளார். காளியின் இடப்பாதம் அவரது தொடையில்.

செதுக்கலின் மேற்பகுதியில் காளியின் இடப்புறம் சுடர்முடியும் பனையோலைக் குண்டலங்களும் எலும்புகள் தெரியும் மார்புமாயுள்ள பேயின் வலக்கை வியப்பில் விரிய, இடக்கை காளியின் மணியருகே. அதன் பின் மார்பளவாகத் தெரியும் மற்றொரு பேய் தலையை இடம் சாய்த்து, இடக்கையை நெகிழ்த்தியுள்ளது. காளியின் வலப்புறமுள்ள வடிவம் சடைப்பாரத்துடன் இருகைகளையும் குறுக்கீடு செய்து மார்பில் இருத்தியுள்ளது.

காளியின் போர்நிலை காட்டும் மற்றொரு பாதச்சிற்பம் முதல் பாதியைக் காளிக்கும் அவரது வீரர்கள் மூவருக்கும் ஒதுக்கி, இடப்பாதியைத் தாரகனாய்க் கொள்ளக்கூடிய அரக்கனுக்கும் அவன் வீரர்கள் மூவருக்கும் எனப் பங்கிட்டுள்ளது. பாய்ந்து போரிடும் நிலையில் காளியின் உடல்நிலை.8 பாதவிளிம்பில் நீட்டிய வலப்பாதம் பொருந்த, இடக்கால் முழங்காலளவில் மடிந்து பாதம் வலத்தொடை தொடுமாறு பாய்ச்சலின் வேகம். சுடர்முடி, செவிகளில் பிண, பனையோலைக் குண்டலங்கள், மார்புக்கச்சாய் நெளியும் பாம்பு, முப்புரிநூல், அரைக்கச்சுடன் சிற்றாடை பெற்றவராய்ப் போரில் முனைந்துள்ள அம்மையின் வல முன் கையும் இடக்கைகளுள் ஒன்றும் முத்தலைஈட்டி ஏந்த, ஒரு வலக்கை கடகத்திலுள்ளது. பிற வலக்கைகளில் வாள், தமருகம். இடக்கை களில் ஒன்று கேடயம் கொள்ள, ஒரு கை வியப்பிலும் மற்றொரு கை சுட்டுமுத்திரையிலும் உள்ளன.

இறைவியின் இடக்கால் கீழ்ப் பாய்ந்து முன்னேறும் இரு பெண்வீரர்களுள் ஒருவர் வலக்கையை இடுப்பருகே முஷ்டியாகக் கொள்ள, அவர் முன்னுள்ள பெண் எதிரிலிருக்கும் அரக்கனை நோக்கித் தாவுகிறார். அரக்கனின் கைகளில் உருள்பெருந்தடி. அவன் பின்னுள்ள மற்றோர் அரக்கன் இடக்கை பின்னிருக்க, வலக்கையை மேலுயர்த்தியுள்ளார். உடல் முழு சுழற்சியில். காளியின் வலப்புற வீராங்கனையின் உடல் சிதைந்துள்ளது. அம்மையின் எதிரில் வாளும் கேடயமும் கொண்டு போரிடும் அரக்கன் தாரகனாகலாம். கரண்டமகுடம், மகரகுண்டலங்கள், தோள், கை வளைகள், சிற்றாடை பெற்றுள்ள அவரது முகம் காளியை நோக்கி. அரக்கனின் இடப்புறம் மார்பளவில் காட்சிதரும் ஆடவரின் முகமும் இறைவியின் பார்வையில்.

மூன்றாவது போர் மகிடனுக்கும் சிம்மவாகினிக்கும் இடையில்.9 பாதத்தின் வலப்புறம் வெல்லும் வாகினியும் இடப்புறம் தோற்றோடும் மகிடனும். சிம்மத்தின் மீது வீரக்களிப்பில் அம்மை உயர்த்தியுள்ள முன்கைகளில் முத்தலைஈட்டியும் மணியும். பிற வலக்கைகள் வாள், தமருகம் கொள்ள, இடக்கைகளில் கேடயமும் வியப்புக்குறிப்பும். கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங் கள், சரப்பளி, தோள், கை வளைகள், மார்புக்கச்சு, சிற்றாடை பெற் றுள்ள அம்மையைப் பார்த்தவாறு களம் நீங்க முயலும் மகிடனின் கைகளில் வாள். கரண்டமகுடம், சிற்றாடையுடன் காட்சிதரும் அவரது ஒரு கால் மடிந்து உயர்ந்துள்ளது. மகிடனின் வீரர்களுள் ஒருவரை, அவர் வலக்கை பற்றிக் கவ்வியுள்ள சிம்மத்தின் முன் கால்களுள் ஒன்று அவர் வயிற்றில் அழுந்தியுள்ளது.

கீழே வலமிருந்து இடமாக உள்ள ஐவரில் கருடாசனத்தில் உள்ள பெண் இடக்கையை உயர்த்தி வலக்கையைப் பின்னோக்கி நீட்டிப் போரிட, அடுத்துள்ளவர் வலக்காலை நீட்டி, இடக்காலை மடித்து, இடக்கையை உயர்த்தி, வலக்கையை முஷ்டியாக்கி முன்னேறுகிறார். களம் நீங்க முயலும் மகிடனின் வீரர்களுள் ஒருவர் வலக்கையை இடுப்பில் வைத்தவாறு, இடக்கையில் பதாகம் காட்டி ஓடும் முயற்சியில். இடக்கோடியில் வலஒருக்கணிப் பிலுள்ளவர் வலக்காலை முழங்காலளவில் மடக்கி உயர்த்தியவாறு போரிட முயல்கிறார். அவரது வலக்கை நீண்டிருக்க, இடக்கை நெகிழ்ந்துள்ளது. இவ்விருவருக்கும் இடையில் கீழே வீழ்ந்த நிலையிலும் தரையில் கைகளைப் பதித்துத் தலை உயர்த்திப் பார்க்கிறார் மற்றொருவர்.





பிற சிற்பங்கள்

சிறுமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சிற்றாடை, வீரச்சங்கிலியுடனுள்ள ஆடவர் இடக்காலைத் தரையிலூன்றி, வலக்காலை எதிரிலுள்ள சிம்மத்தின் உடல் மீது அழுத்தித் தம் கைகளால் அதன் வாய்பிளக்கும் காட்சி மேற்குப் பாதத்திலுள்ளது. இது ஒத்த மற்றொரு செதுக்கலை முகமண்டப உட்புறத் தூண் ஒன்றிலும் காணமுடிகிறது. மற்றொரு சிற்பத்தில் சடைமகுடம், சரப்பளி, முப்புரிநூல், சிற்றாடை பெற்றவராய்க் குத்துக்காலிட்டுள்ள ஆடவரின் வலக்கை வலமுழங்கால் தொட்டு நெகிழ்ந்துள்ளது. இடக்கை மார்பருகே விரிந்த விரல்களுடன் அமைய, இடச் செவியில் பனையோலைக் குண்டலம். வலச்செவி நீள்செவியாக வுள்ள அவரைச் சூழ்ந்து வளரும் செண்டு இருபுறத்தும் தாமரைகளைக் கொண்டுள்ளதால் அவரை பத்மநிதியாகக் கொள்ளலாம். இதே போன்றதொரு சிற்பம் புதுச்சேரி திருவாண்டார் கோயிலிலும் இடம்பெற்றுள்ளது.



இடுப்புக்குக் கீழ் ஓருடலும் மேற்பகுதியில் மூவருமாகக் காட்சிதரும் முப்பூத ஆடல் சற்றே மாறுபட்ட காட்சியாகும். சடைப்பாரம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, முப்புரி நூல், உதரபந்தம் அணிந்து இடப்பாதம் பார்சுவமாக, வலப்பாதத்தை அக்ரதலசஞ்சாரத்திலிருத்தி மண்டலநிலையில் ஆடும் நடுஉடலினரின் வலக்கை பதாகம் காட்ட, இடக்கை அர்த்தரேசிதத்தில். வலமும் இடமுமாகக் கிளைத்திருக்கும் உடலினரில், வலப்புறத்தார் தோலிசைக்கருவி முழக்க, இடப்புறத்தார் கையில் தாளம். இருவருமே நடுவர் போல ஆடை, அணிகலன்கள் பெற்றுச் சற்றே குனித்துள்ளனர்.



பிறிதொரு காட்சியில் முன்கால்களை உயர்த்தித் தாவும் குதிரையின் உடலுடன் பிணைக்கப்பெற்ற சேணத்தின்மீது அமர்ந்துள்ள வீரரின் நீட்டிய கையிலுள்ள பொருள் அங்குசமாகலாம். அவரது மற்றொரு கை குதிரையின் மீது தாங்கலாக. குதிரையைத் துரத்தும் யானையின் துளைக்கை வீரரைப் பிடிக்குமாறு போல நீண்டுள்ளது. இரு விலங்குகளுமே அணிகலன்கள் பெற்றுள்ளன. பாதம் ஒன்றில் கொடிக்கருக்கின் இடைப்பகுதியில் இருகைகளை யும் விரித்துக் கருக்கணிகளைத் தொட்டவாறு இடஒருக்கணிப்பிலுள்ள பூதத்தின் செவிகளில் பனையோலைக் குண்டலங்கள்.



மற்றொரு பாதத்தில் தோரணத்தொங்கல்கள் மிளிர ஆடல், இசைக்கலைஞர்களின் காட்சி. மண்டலநிலையில் கால்களைக் குறுக்கீடு செய்து சுவஸ்திகத்தில் ஆடும் அழகியின் இடக்கை அர்த்தரேசிதத்தில். மகரகுண்டலங்களுடன் ஆடும் அவரது வலக்கை கடகம் காட்ட, இடப்புற அழகி ஆலீடத்தில் சற்றே குனிந்து தோலிசைக்கருவியை முழக்குகிறார். வலக்கை இயக்க, இடக்கை கருவியைத் தொடையில் தாங்கலாக்கிப் பற்றியுள்ளது. வலப்புறம் நீண்டு தொங்கும் அவரது இடையாடை இடப்புறம் சிறுத்துள்ளது. புள்ளமங்கைக் கண்டபாதங்களில் இடம்பெற்றுள்ள மக்கள் ஆடல் இது ஒன்றுதான்.



குறிப்புகள்
7. கலிங்கத்துப்பரணி, புலியூர்க் கேசிகன் தெளிவுரை, பக். 71-98.
8. தாரகனுக்கும் காளிக்கும் இடையில் நிகழ்ந்த இப்போர் குறித்து நாவுக்கரசரும் சம்பந்தரும் தங்கள் பதிகங்களில் சுட்டியுள்ளனர்.
'தாரகன் தன்னுயிர் உண்ட பெண்'- 5:63:7.
'பைதற் பிணக்குழைக் காளி வெங்கோபம்' - 4:100:2.
'தாரகன் உடல் அவன் எதிரே புக்கிட்டே வெட்டிட்டே புணர்ந்தெழுந்த சண்டத்தீ' - 1:126:5.
'தாரகனது ஆரூயிர் மடங்கக் கன்றிவரு கோபம்மிகு காளி'-2:32:5.
9. மாமல்லபுரம் மகிடாசுரமர்த்தினி குடைவரையிலும் சாளுவன் குப்பம் அதிரணசண்டேசுவரம் குடைவரைக்கு எதிரிலும் உள்ள மகிடாசுரமர்த்தினியின் பல்லவக் கலைமுறையிலமைந்த போர்க் கோலங்களுடன் இணைத்துக் காணத்தக்க நேர்த்தியுடையது இச்சிற்பத்தொகுதி. மாமல்லபுரம் குடைவரைகள், பக். 75-77, 100-103.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.