http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1772 Articles]
Home About US Temples Facebook
Issue No. 178

இதழ் 178
[ ஜூன் 2024 ]


இந்த இதழில்..
In this Issue..

சங்கப் பாடல்களில் பெண் தொழில்முனைவோர் - 3
Nitheeswarar temple of Srimushnam
கூரம் கோயில்களின் கல்வெட்டுகள்
திருவிளையாட்டம் மாடக்கோயில் - 2
வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகள் - 5
ஜப்பானியப் பழங்குறுநூறு - 74 (கேட்டதும் கிடைத்ததும்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 73 (முகிலில் மறையும் மலர்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 72 (காதல்மொழிகள் கடலலை போலே!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 71 (நெல்வழிசெல் இசை!)
இதழ் எண். 178 > கலையும் ஆய்வும்
திருவிளையாட்டம் மாடக்கோயில் - 2
இரா.கலைக்கோவன், மு.நளினி

சுற்று

பெருமண்டபத்தின் மேற்கில் உள்ள சுற்றின் கூரையைச் சதுரம், கட்டு, சதுரம் என்ற அமைப்பிலான தூண்களும் நான் முகத் தூண்களும் இணைந்து பூமொட்டுப் போதிகைகளின் உதவியுடன் தாங்குகின்றன. சுற்றின் தென்புறமுள்ள திண்ணையில் நால்வர் திருமேனிகள் இடம்பெற்றுள்ளன. சடைமகுடம், பனையோலைக் குண்டலங்களுடன் காட்சிதரும் சம்பந்தரின் கைகளில் செண்டுதாளங்கள். சிற்றாடையும் வணங்கிய கைகளுமாய் நிற்கும் அப்பரின் இடத்தோளில் உழுபடைக் கருவி. வணங்கிய கைகளுடன் பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, தோள், கை வளைகள் இவற்றுடன் காட்சிதரும் சுந்தரரின் இடையில் சிற்றாடை. வலக்கையில் அக்கமாலையும் இடக்கையில் சுவடியும் கொண்டு நிற்கும் மாணிக்கவாசகரின் இடையில் சிற்றாடை.

சுற்றின் மேற்கில் வடக்கிலும் தெற்கிலும் உள்ள திறப்புகள் முகமண்டபம், விமானம் இவற்றைச் சுற்றிவர வழிவிடுகின்றன. முகமண்டப வாயிலை நோக்கியவாறு சுற்றின் கிழக்குப்பகுதியில் பலித்தளமும் நந்தியும் உள்ளன. படிகள் பெற்ற வாயில் கொண்ட வெறுமையான முகமண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் வேசர ஆவுடையாரும் பாணமுமாய் முளைத்தெழுந்த நாயனார் என்ற திருப்பெயருடன் எழுந்தருளியுள்ளார். முகமண்டபத்தின் வாயிலருகே தென்கிழக்குக் கோட்டத்தில் கரண்டமகுடத்துடன் இலலிதாசனத்தில் உள்ள இடம்புரிப் பிள்ளையார் முன்கைகளில் தந்தம், மோதகம் கொண்டு, பின்கைகளில் அங்குசம், பாசம் கொண்டுள்ளார்.

இறைவன் விமான வெற்றுத்தளம்

வளாகத்தில் நடுநாயகமாக விளங்கும் இறைவன் விமான வெற்றுத்தளம் உபானம், உபஉபானம், ஜகதி, எண்பட்டைக் குமுதம், பிரதிவரி கொண்ட பிரதிபந்தத் தாங்குதளம், நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள், ஆழமற்ற கூடுகளுடனான கபோதம், பூமிதேசம் பெற்றுள்ளது. 3.24 மீ. உயரமுள்ள இந்த வெற்றுத்தளத்தின் மீது வேதிகைத்தொகுதியும் மேலே உயரக் குறைவான உறுப்பு வேறுபாடற்ற நான்முக அரைத்தூண்கள் விளங்கும் பிடிச்சுவரும் இடம்பெற்றுள்ளன. வெற்றுத்தளத் தின் தெற்கு, மேற்கு, வடக்குச் சுவர்களிலுள்ள கோட்டங்கள் நான்முக அரைத்தூண்களால் அணைக்கப்பட்டுக் கூரையுறுப்புகளுடன் மகரதோரணத் தலைப்புக் கொண்டுள்ளன.

நாகர முன்றில் பெற்றுள்ள தெற்குக் கோட்டத்தில் சடைப்பாரம், மகர, பனையோலைக் குண்டலங்கள், உருத்திராக்க மாலை, சரப்பளி, சிற்றாடை அணிந்து வீராசனத்திலுள்ள ஆலமர்அண்ணலின் வீரக்கழல் பெற்ற வலக்கால் முயலகன் மீது இருத்தப்பட்டுள்ளது. பின்கைகளில் அக்கமாலையுடன் பாம்பும் தீச்சுடரும் கொண்டுள்ள அவரது இட முன் கையில் சுவடி. வல முன் கை சின்முத்திரையில் உள்ளது. அவரது இருபுறத்தும் கோட்டத்திற்கு வெளியே பக்கத்திற்கிருவராக முனிவர்கள் அமர்ந்துள்ளனர்.

மேற்குக் கோட்டத்தில் சடைமகுடத்துடன் உள்ள இலிங்கோத்பவர் பின்கைகளில் மழு, மான் ஏந்தி, முன்கைகளைக் காக்கும் குறிப்பிலும் கடியவலம்பிதத்திலும் கொண்டுள்ளார். வடகோட்டத்தில் சடைமகுடம், நீள்செவிகள், சரப்பளி, முப்புரிநூல், உதரபந்தம், பட்டாடை, புலிமுகக் கச்சுடனான இடைக்கட்டு அணிந்து சமபாதநிலையில் உள்ள நான்முகனின் பின்கைகளில் அக்கமாலையும் குண்டிகையும் அமைய, முன் கைகள் காக்கும் குறிப்பிலும் கடியவலம்பிதத்திலும் உள்ளன.

இறைவன் விமானம்

உபானம், உபஉபானம், ஜகதி, எண்பட்டைக்குமுதம், பிரதிவரி இவற்றுடனான பிரதிபந்தத் தாங்குதளம், வேதிகைத் தொகுதி, மேற்கம்பு, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள், ஆழமற்ற கூடுகள் பெற்ற கபோதம், பூமிதேசம் கொண்டுள்ள ஒருதளக் கலப்புத் தூங்கானை மாடமாய் விளங்கும் இறைவன் விமானம் கிழக்கு மேற்காக 5. 97மீ. நீளமும் தென்வடலாக 5. 28மீ. அகலமும் கொண்டுள்ளது. வலபியில் பூதவரி இடம்பெற்றுள்ளது. சுவர்க்கோட்டங்களில் தெற்கில் ஆலமர்அண்ணலும் மேற்கில் இலிங்கோத்பவரும் வடக்கில் நான்முகனும் இடம் பெற்றுள்ளனர். அவர்களுள் மேற்குக் கோட்ட இலிங்கோத்பவர் அண்மைக் காலத் திருமேனியர். அவர் கோட்டத்தின் இருபுறத்தும் வணங்கிய கைகளுடன் காட்டப்பட்டுள்ள விஷ்ணு, நான்முகன் இவர்களும் ஆலமர்அண்ணலின் இருபுறத்தும் பக்கத்திற்கொருவராக அமர்ந்துள்ள முனிவர்களும் பிற்சோழர் காலத் திருமேனிகளாகலாம்.

வல முன் கையைச் சின்முத்திரையில் இருத்தி, இட முன் கையில் சுவடி கொண்டு, பின்கைகளில் அக்கமாலையும் தீச்சுடரும் பெற்றுச் சடைப்பாரம், மகர, பனையோலைக் குண்டலங்கள், முப்புரிநூல், உதரபந்தம் அணிந்து காட்சிதரும் ஆலமர்அண்ணலும் சடைமகுடம், சரப்பளி, முப்புரிநூல், உதரபந்தம், புலிமுகக் கச்சு இருத்தும் பட்டாடை இவற்றுடன் பின்கைகளில் அக்கமாலை, குண்டிகை கொண்டு, முன்கைகளில் வலக்கையைக் காக்கும் குறிப்பிலும் இடக்கையைக் கடியவலம்பிதத்திலும் கொண்டு விளங்கும் நான்முகனும் பிற்சோழர் காலத் திருமேனிகளாகலாம்.

கிரீவகோட்டங்களில் தென்புறம் ஆலமர்அண்ணலும் மேற்கில் பரமபதநாதரும் வடக்கில் யானையை அழித்த மூர்த்தியும் கிழக்கில் முருகப்பெருமானும் இடம்பெற்றுள்ளனர். கோட்ட நாசிகைகளின் கீர்த்திமுகங்களில் தென்புறம் உத்குடியில் ஆலமர்அண்ணலும் மேற்கில் நரசிம்மரும் வடக்கில் அர்த்தபத்மாசனத்தில் நான்முகனும் கிழக்கில் சுகாசனத்தில் சிவபெருமானும் காட்டப்பட்டுள்ளனர். கிரீவசுவரில் எண் திசைக் காவலர்களின் வடிவங்கள் இடம்பெற்றுள்ளன.

கிரீவகோட்ட இறைவடிவங்கள்

சடைமகுடத்துடன் வீராசனத்திலுள்ள ஆலமர்அண்ணல் பின்கைகளில் பாம்பும் தீயகலும் கொள்ள, வல முன் கை சின் முத்திரையிலும் இட முன் கை சுவடியேந்திய கடகத்திலும் உள்ளன. அண்ணலின் இடப்புறத்தே சுகாசனத்தில் இடம்புரியாக உள்ள பிள்ளையாரின் பின்கைகளில் பாசம், அங்குசம் அமைய, முன்கைகளில் தந்தம், மோதகம் உள்ளன. மேற்கில் கிரீடமகுடம், பட்டாடை அணிந்து உத்குடியில் தேவியருடன் உள்ள பரமபதநாதரின் வல முன் கை பாம்புடலின் மீது படர, இட முன் கை முழங்கால் மீதுள்ளது. பின்கைகளில் சங்கு, சக்கரம். தேவியரின் உள்கைகள் மலர் கொள்ள, வெளிக் கைகள் தளத்தின்மீது உள்ளன.

வடக்கிலுள்ள யானையை அழித்தமூர்த்தி எண்கையராய்ச் சுடர்முடியுடன் காட்சிதருகிறார். இடக்காலை வலப்புறமாய் உயர்த்தி முழங்கால் அளவில் உட்புறமாய் மடித்துச் சுழற்சியில் உள்ள அவர் கோலமும் இருப்பும் சிறப்புக்குரியன. கிழக்கில் கரண்டமகுடம், பட்டாடை இவற்றுடன் மயில்மேல் சுகாசனத்தில் உள்ள முருகன் பின்கைகளில் சக்தி, வஜ்ரம் கொண்டு முன்கைகளில் காக்கும், அருட்குறிப்புகள் காட்டுகிறார்.

முகமண்டபம்

விமானத்தை ஒத்த கட்டமைப்பில் உள்ள முகமண்டபத்தின் வலபி பூதவரி பெறாது வெறுமையாக உள்ளது. அதன் தெற்குக் கோட்டத்தில் பிள்ளையாரும் வடக்குக் கோட்டத்தில் மகிடாசுரமர்த்தனியும் இடம்பெற்றுள்ளனர். மகிடாசுரமர்த்தனி இலிங்கோத்பவர் போல அண்மைக் காலத்தவர். மூஞ்சுறு மேல் ஊர்த்வஜாநு கரணத்தில் வலமுழங்காலை உயர்த்தியிருக்கும் இடம்புரிப் பிள்ளையாரின் வல முன் கை தந்தம் கொள்ள, இட முன் கை அர்த்தரேசிதத்தில் உள்ளது. பின்கைகளில் வலப்புறம் அங்குசமும் இடப்புறம் மோதகமும் உள்ளன. மூஞ்சுறுவின் வலப்புறம் காட்டப்பட்டிருக்கும் அடியவர் வலக்கையால் தலையில் பாத்திரம் ஒன்றைத் தாங்கியபடி இடக்கையை வாயருகே வைத்துள்ளார். இத்திருமேனி சிதைந்திருப்பதால் காலத்தை நிர்ணயிக்கக்கூடவில்லை.

கல்வெட்டுகள்

களஆய்வின்போது இக்கோயிலில் இருந்து ஒன்பது கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டன.2 அவற்றுள் மூன்று கல்வெட்டுகளே முழுமையான அளவில் கிடைத்துள்ளன. எஞ்சியன திருப்பணிகளால் துண்டாடப்பட்ட நிலையில் உள்ளன. கல்வெட்டுகளில் இவ்வூர் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து விளைநாட்டுப் பெருமுளையாக அழைக்கப்படுகிறது. இறைவன் முளைத்தெழுந்த நாயனாராக அறியப்படுகிறார். இக்கோயில் விமானத்தைக் கட்டியவராக எதிரிலி சோழரான பல்லவராயர் பெயரைக் குறிப்பிடும் பிற்சோழர் காலக் கல்வெட்டின் கீழ், அவரது உருவச்சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. வணங்கிய கைகளும் இடையாடையும் பெருங்கொண்டையும் கொண்டு விளங்கும் பல்லவராயர் சிற்பம் சிதைந்துள்ளது.

மூன்றாம் குலோத்துங்கரின் பதினைந்தாம் ஆட்சியாண்டில் (கி. பி. 1192) வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு, பெருமுளையில் விக்கிரமசோழீசுவரம் என்ற பெயரில் திருமுற்றம், திருமடை வளாகம், தீர்த்தக்குளம், திருநந்தவனம் உள்ளிட்ட இறைக் கோயில் ஒன்று அமைக்கப்பட்டதாகவும் கோயிலுக்குரிய நாள் கடமைகளை முன்னிட்டுக் கோயிலை கட்டிய பெருமகனாரே வழிபாடு, படையல், பணியாளர் செலவினங்களுக்காக ஐந்து வேலி நிலத்தைக் கோயிலுக்குத் திருநாமத்துக்காணியாக நீர்வார்த்துக் கொடுத்ததாகவும் கூறுகிறது. கல்வெட்டுச் சிதைந்திருப்பதால் கட்டியவரின் பெயரை அறியக்கூடவில்லை.

அரசஆணையாக விளங்கும் சோழப் பேரரசர் மூன்றாம் குலோத்துங்கரின் பதினைந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, கொடையளிக்கப்பட்ட இந்நிலத்தை மன்னர் இறையிலித் தேவதானமாக்கியதாகக் கூறுகிறது. இக்கல்வெட்டால் சோழப் பேரரசின் வருவாய்த்துறையைச் சேர்ந்த உயர்அலுவலர்களின் பெயர்களும் புரவுவரி ஸ்ரீகரணநாயகம், ஸ்ரீகரணத்து முகவெட்டி முதலிய அலுவல்நிலைகளும் சோழ மண்டலத்தைச் சேர்ந்த பல ஊர்களின் பெயர்களும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

மூன்றாம் குலோத்துங்கரின் இருபத்தேழாம் ஆட்சியாண்டில் (கி. பி. 1204) தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த கூடல் கிழான் திருநட்டப் பெருமானின் துணைவியார் செந்தாழ்வி இக்கோயில் இறைவன் திருமுன்னில் இளங்காலைப் போதில் விளக்கொன்று ஏற்றுவதற்காக 500 காசுகள் தந்தார். வைப்புத் தொகையாக அதை ஏற்றுக்கொண்ட கோயில் கருவூலத்தார் அதிலிருந்து வரும் வட்டித்தொகை கொண்டு விளக்கேற்ற ஒப்புக்கொண்டனர்.

கோயில் விமான வெற்றுத்தளத்தின் தென்புறத்தே காணப்படும் ஆலமர்அண்ணல் சிற்பத்தை மூன்றாம் இராஜராஜரின் மூன்றாவது ஆட்சியாண்டில் (கி. பி. 1218) செந்தாழ்வியும் அவர் மகள் பெரிய நாச்சியும் எழுந்தருளுவித்ததாகக் கூறும் கல்வெட்டு, அவருக்கு நாள்தோறும் வழிபாடு செய்து படையலிட வாய்ப்பாக 1,500 காசுகளைக் கோயில் கருவூலத்தில் அவர்கள் செலுத்திய செய்தியையும் தருகிறது.

ஆட்சியாண்டும் மன்னர் பெயரும் அற்ற சோழர் காலக் கல்வெட்டு, கோயிலாரின் வேண்டுகோளை ஏற்றுக் கோயிலில் திருவிளக்கு ஏற்ற, பெருமுளையில் வாழ்ந்த வாணிய நகரத்தார் எண்ணெய் வழங்க ஒப்புதல் அளித்தமையைத் தெரிவிக்கிறது.

வெற்றுத்தளத்தின் வடக்கிலும் மேற்கிலும் பரவியுள்ள கிருஷ்ணதேவராயரின் கல்வெட்டு, அவர் வென்ற பகுதிகளின் பட்டியலையும் தோற்கடித்த அரசர்களின் பெயர்களையும் கொண்டுள்ளது. தம்முடைய வெற்றியை முன்னிட்டுத் திருமாணி குழி, திருப்புகலூர், திருமுட்டம், வைகல், இறைவானசூர், தென்னவன்மங்கலம், திருநாவலூர், திட்டைக்குடி, திருநாரையூர், பெருமுளை உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட சைவ, வைணவக் கோயில்கள் அரசுக்கு வரியாக அளித்துவந்த சோடி வரி, அரசப்பேறு பதினாயிரம் வராகனைச் செலுத்தவேண்டாம் என்றும் அத்தொகையை அவ்வக்கோயில்களே வைத்துக் கொண்டு படையல், வழிபாடு, திருப்பணிகள் ஆகியவற்றைச் செவ்வனே செய்துகொள்ளலாம் என்றும் கிருஷ்ணதேவராயர் ஆணையிட்டமையைக் கல்வெட்டுத் தெரிவிப்பதுடன், அந்த அரசஆணையைத் தொடர்புடைய கோயில்களில் கல்வெட்டாக அமைத்துக்கொள்ளவும் கிருஷ்ணதேவராயர் உத்தரவிட்டதாகக் கூறுகிறது.

குறிப்பு
2. தினமணி 1. 2. 2010; The Hindu 3. 2. 2010.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.