http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 22

இதழ் 22
[ ஏப்ரல் 16 - மே 15, 2006 ]


இந்த இதழில்..
In this Issue..

தமிழகத் தேர்தல்
பாராட்டுவோம்
வரலாற்றின் வரலாறு - 2
Perspectives On Hindu Iconography
கல்வெட்டாய்வு - 15
குடும்பில் குடவோலை
தரிசனமான தக்ஷ¢ணமேரு
ஆயிரம் வருஷத்துப் புன்னகை - 2
Links of the Month
சங்கச் சிந்தனைகள் - 9
இதழ் எண். 22 > கலைக்கோவன் பக்கம்
வரலாற்றின் வரலாறு - 2
இரா. கலைக்கோவன்
பள்ளி ஆசிரியராக நிலையானதொரு பணியில் அமர்ந்த நிலையில் 1930 செப்டம்பர் ஒன்பதாம் நாளில் திரு.துரைசாமி, திருமதி ஜெயலட்சுமி மகளார் கண்ணம்மாளை மணந்தார். அப்பொழுது இவருக்கு வயது 23. மணமகளுக்கு வயது 14.

1928ஆம் ஆண்டு ஜூலை முதல் 1936ஆம் ஆண்டு ஜூன் வரையில் தியாகராயர் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர் மாணவர்க்கான பாடநூல்களையும் துணைப்பாட நூல்களையும் எழுதும் பணியில் ஈடுபட்டார். இவர் எழுதிய முதல் நூல் 1930இல் வெளி வந்தது. அப்போது இராசமாணிக்கனாருக்கு வயது 23. கல்வித் தகுதி வெறும் எஸ்.எஸ்.எல்.சி மட்டுமே. கே.பழனியாண்டிப்பிள்ளை கம்பெனியின் மூலம் வெளியிடப்பட்ட 102 பக்க அளவிலான 'நாற்பெரும் வள்ளல்கள்' என்னும் அந்நூல், மிகுந்த அனுபவமோ ஆழ்ந்த பய்ற்சியோ பெரிய கல்வித் தகுதியோ இல்லாத ஒருவரால் எழுதப்பட்டதெனக் கருத முடியாதபடி கருத்துக் கருவூலமாய் அமைந்துள்ளமை அந்த இளம் வயதிலேயே இராசமாணிக்கனார் பெற்றிருந்த புலமையை பறைசாற்றுவதாய் உள்ளது.

1935இல்தான் இராசமாணிக்கனார் வித்துவான் பட்டம் பெற்றார். ஆனால், அதற்குள் பல நூல்களை அவர் எழுதி வெளியிட்டிருந்தார். அவற்றுள் குறிப்பிடத்தக்க சில: 'ஹர்ஷவர்த்தனன் (1930)', 'முடியுடை மூவேந்தர் (1931)', 'ஏப்ரஹாம் லிங்கன் (1934)', 'முசோலினி (1934)'. இவருடைய முதல் பாடநூலான, பொற்கால வாசகம்' 1932இல் வெளியிடப்பட்டது.

தம்முடைய இருபத்து மூன்றாம் வயதில் முதல் நூலையும் இருபத்தைந்தாம் வயதில் முதல் பாடநூலையும் எழுதி தம் தமிழ்த் தொண்டைத் தொடங்கிய இராசமாணிக்கனார், பள்ளி மாணவர்களுக்கான நூல்களில் தொடங்கி, பல்துறை சார்ந்த நூல்களையும் எழுதியுள்ளார். அவர் எழுதிய இலக்கிய, சமய, வரலாற்று ஆராய்ச்சி நூல்கள் அவரைப் புகழின் உச்சிக்கு கொண்டுசென்றன; அழியாமையை அவருக்கு வாழ்வாக்கின.

ஏறக்குறைய எட்டு ஆண்டுகள் தியாகராயர் நடுநிலைப்பள்ளியில் பணியாற்றிய பிறகு, 1936ஆம் ஆண்டு ஜூலையில் சென்னை ஜார்ஜ் டவுனில் தம்புசெட்டித் தெருவிலிருந்த முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பொறுப்பேற்றார். அங்கு இருந்த காலத்தில் (1936 ஜூலை முதல் 1947 ஜூன் முடிய) பள்ளிக்குரிய பாடநூல்களை எழுதி வெளியிட்டதோடு, பி.ஓ.எல் (1939), எல்.டி (1944), எம்.ஓ.எல் (1945) என்னும் பட்டங்களும் பெற்றார்.

எல்.டி வகுப்பில் வரலாறு, தமிழ் என்னும் இரண்டு பாடங்களையும் விருப்பப் பாடங்களாக எடுத்துக்கொண்டு படித்தார். அங்குத் தமிழ்ப் பேராசிரியராக இருந்த ச.ஆறுமுக முதலியார், 'தமிழிலக்கியத்தின் சில மைல் கற்கல்' என்ற தலைப்பில் ஆறு சொற்பொழிவுகள் எல்.டி வகுப்பில் இவரைக் கொண்டே நடைபெறச் செய்தார். வரலாற்று பேராசிரியர் வரலாற்றுக் குழு ஒன்றுக்கு இவரையே தலைவராக ஆண்டு முழுவதற்கும் அமர்த்தினார். ஆண்டு இறுதியில் நடந்த தேர்வில் இவர் முதல்வராகத் தேறினார். இச்செய்தி அவ்வாண்டு வெளியான அரசிதழில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

எம்.ஓ.எல் பட்டத்திற்குப் பெரியபுராணத்தை நன்கு ஆய்வு செய்து, 'பெரியபுராண ஆராய்ச்சி' என்ற தலைப்பில் தம் ஆய்வேட்டை அளித்தார். அந்த ஆய்வேட்டின் திருத்திய பதிப்பே பின்னாளில், 'பெரிய புராண ஆராய்ச்சி' என்னும் நூலாக வெளியாகியது.

இராசமாணிக்கனார் முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றியபோதுதான் 'மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்து வெளி நாகரிகம்' (1941), 'பல்லவர் வரலாறு' (1944), 'சேக்கிழார் - ஆராய்ச்சி நூல்' (1945), 'சோழர் வரலாறு' (1947) ஆகிய அவருடைய சிறப்புக்குரிய நூல்கள் வெளியாயின.

சிந்துவெளி நாகரிகம் பற்றி விரிவான அளவில் முதன்முதலில் தமிழில் நூல் எழுதி வெளியிட்டவர் இவரே. பல்லவர் வரலாறு பற்றியதொரு முழுமையான ஆய்வு நூலாகத் தமிழில் அமைந்த நுல் இவருடைய 'பல்லவர் வரலாறு' ஆகும். சேக்கிழாரை வரலாற்று அறிஞராக அறிமுகம் செய்த முதல் ஆய்வாளர் என்ற பெருமையும் இராசமாணிக்கனாருக்கே உரியது. முதன் முதலில் தமிழில் சங்க காலம் தொடங்கி, பிற்காலம் வரையில் ஆண்ட சோழர் வரலாற்றை முழுமையாக - ஆராய்ச்சிப் போக்கில் பெற்றமைந்தது இராசமாணிக்கனாரின் 'சோழர் வரலாறு' என்ற நூலேயாகும்.

இராசமாணிக்கனார் தியாகராயர் பள்ளியிலும் முத்தியாலுப்பேட்டை பள்ளியிலும் பணியாற்றிய காலத்தில் சுயமரியாதை இயக்கத்தில் பற்று கொண்டு, சீர்திருத்தப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். 'பேராசரியர் அவர்களுக்குச் சுயமரியாதை இயக்கத்தில் பற்று உண்டு. அடிக்கடி தமிழர்கள் மேற்கொண்டு ஒழுகும் மூடநம்பிக்கைகளைக் கண்டித்து கடிந்துரைப்பார்கள். கொள்கை வீரராய் அவர் விளங்கியதைக் கண்டேன்.' என்பார் சிறுவை நச்சினார்க்கினியன்.

தமிழர் திருமணத்தில் சடங்குகள் பெருகிச் செலவுகளும் மிகுந்த நிலையில் பல குடும்பங்கள் கடன் சுமையால் துன்பப்பட்டமையைக் கண்ணுற்ற இராசமாணிக்கனார் உளம் வருந்தினார். அச்சமயத்தில் 'தமிழர் நல்வாழ்க்கைக் கழகம்; என்ற அமைப்பு இராசமாணிக்கனாரிடம், 'தமிழர் திருமண நூல்' ஒன்றை இயற்றித் தருமாறு வேண்டியது. பழந்தமிழர்தம் எளிய திருமணமுறைகளை உரிய இலக்கியச் சான்றுகளோடு எடுத்துக்காட்டி 1939இல் அந்நூலை வெளியிட்டார். தமிழ் நாட்டு அறிஞர்களின் ஒருமுகமான போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் அந்நூல் உரியதாயிற்று.

(வளரும்)this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.