http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 22

இதழ் 22
[ ஏப்ரல் 16 - மே 15, 2006 ]


இந்த இதழில்..
In this Issue..

தமிழகத் தேர்தல்
பாராட்டுவோம்
வரலாற்றின் வரலாறு - 2
Perspectives On Hindu Iconography
கல்வெட்டாய்வு - 15
குடும்பில் குடவோலை
தரிசனமான தக்ஷ¢ணமேரு
ஆயிரம் வருஷத்துப் புன்னகை - 2
Links of the Month
சங்கச் சிந்தனைகள் - 9
இதழ் எண். 22 > கலைக்கோவன் பக்கம்
பாராட்டுவோம்
இரா. கலைக்கோவன்
அன்புள்ள வாருணிக்கு,

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தொடர்பு கொள்வதற்காகப் பொறுத்துக்கொள். 'வரலாற்றின் வரலாறு' என்ற தலைப்பில் என் தந்தையார் மா. இராசமாணிக்கனாரின் வாழ்க்கை, படைப்புகள், சிந்தனைகள் குறித்து ஒரு நூல் உருவாக்கிக் கொண்டிருந்தேன். அதில் காலம் கரைந்துவிட்டது. இரண்டு திங்கள்களாகவே உனக்கு எழுத வேண்டுமென்றுதான் எண்ணம். நேரம் வாய்க்கவில்லை.

தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல், தொல்லியல் துறைத் தலைவரும் என் இனிய நண்பருமான பேராசிரியர் முனைவர் கா.இராஜன், தம் மாணவர்களுக்குப் பயன்படுமாறு, 'கல்வெட்டியல்' குறித்து ஒரு நூல் எழுதியுள்ளார். அந்நூலைச் செம்மையுறப் பதிப்பிக்கக் கருதிய அவர், தம் நண்பர்களும் தமிழ்நாட்டின் மூத்த கல்வெட்டறிஞர்களுமான சிலரைத் தேர்ந்து தம் எழுத்துப் படியை அனுப்பிக் கருத்துரைக்குமாறு கேட்டிருந்தார். எனக்கும் ஒரு படி வந்திருந்தது.

பேராசிரியர் இராஜன் சிறந்த உழைப்பாளி; பண்பாளர்; திறமையும் ஆற்றலும் நிறைந்தவர். மாற்றுக் கருத்துக்களைத் துணிவுடன் முன் வைப்பவர்; நட்புடன் எதிர்கொள்பவர்.

அவருடைய 'கல்வெட்டியல்' கையெழுத்துப்படியை ஆழப்படித்தேன். நன்கு உழைத்துப் பெற்ற தரவுகளை இளைஞர்கள் கற்றுத் தெளியுமாறு எளிமையான முறையில் எழுதியிருந்தார். 'நடுகற்கள்' பகுதியில் அவர் தெரிவித்திருந்த சில கருத்துக்கள் மட்டும் ஏற்புடையனவாக இல்லை. 'தொல்லியல் நோக்கில் சங்க காலம்' என்ற அவருடைய அண்மைக்கால நூலொன்றிலும் இதே கருத்துக்களை அவர் கூறியுள்ளார்.

சங்க இலக்கியங்கள் நடுகளற்களைப் பற்றிக் குறிப்பிடும்போது பல அரிய தரவுகளைப் பதிவு செய்துள்ளன. அவற்றுள், சங்க காலத்தில் நடப்பட்ட நடுகற்களுள் சில, எழுத்துப் பொறிப்புகள் பெற்றிருந்தன என்பது மிக முக்கியமான தரவாகும்.

'மயிற்பீலி சூட்டி பெயர் பொறித்து இனி நட்டனரே' புறம் 264

"கடுங்கண் மறவர் பகழி மாய்த்தென
மருங்குல் நுணுகிய பேஎமுதிர் நடுகற்
பெயர்பயம் படரத் தோன்று குயிலெழுத்து
இயைபுடன் நோக்கல் செல்லா தசைவுடன்
ஆறுசெல் வம்பலர் விட்டனர் கழியும்" - அகம் 297

"புன்தலை சிதைத்த வன்தலை நடுகல்
கண்ணி வாடிய மண்ணா மருங்குல்
கூருளி குயின்ற கோடுமாய் எழுத்தவ்
ஆறுசெல் வம்பலர் வேறுபயம் படுக்கும்" - அகம் 343

"விழுத்தொடை மறவர் வில்லிட வீழ்ந்தோர்
எழுத்துடை நடுகல் இன்னிழல் வதியும்" - அகம் 53

இவற்றுள் நடுவிலுள்ள பாடல்கள் மிகச்செறிவானவை. வீரம் செறிந்தவர்களாய்ப் போரிட்டு இறந்த ஆற்றலாளர்களின் நினைவாக நடப்பட்ட நடுகற்களில் அவர்தம் பெயரும் பெருமையும் பொறிக்கப்பட்டிருந்தன.

'பெயரும் பீடும் எழுதி அதர்தொறும் பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்' (அகம் 67.)

வழிச் செல்வோர் இந்நடுகற்களைக் காணுமிடத்து அவற்றைப் போற்றி வணங்கி அவற்றில் எழுதப்பட்டுள்ள தரவுகளைப் படித்து மகிழ்ந்து செல்வது வழக்கம்.

பாலை மறவர்கள் தங்கள் அம்புகளைக் கூர்தீட்ட இந்த நடுகற்களைப் பயன்படுத்தினர். இச்செயலாலும் உப்பு வணிகர்களின் வண்டிகள் மோதினமையாலும் நடுகற்கள் பல சிதைந்தன. இச்சிதைவு அவற்றில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்களையும் பாதித்தன. இச்சிதைந்த நடுகற்களை எதிர்கொண்ட வழிச்செல்வோர், இவற்றை வணங்கி மகிழ்ந்தாலும் சிதைவின் காரணமாக இவற்றில் எழுதியிருந்த செய்தியின் பொருள் புரிந்துகொள்ள முடியாமல் சென்றனர்.

இப்பாடல்கள் மூன்று முதன்மைத் தரவுகளைத் தருகின்றன.

1. சங்க வீரர்கள் நினைவாக நடப்பட்ட கற்களில் அவர்தம் பெயரும் பெருமையும் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருந்தன.

2. அம்பு தீட்டல், வண்டி மோதல் எனப் பல காரணங்களால் இவ்வெழுத்துக்கள் சிதைந்து உருக்குலைந்தன.

3. வழிச்செல்வோரான எளிய பொதுமக்களும் இந்நடுகற்களில் எழுதப்பட்டிருந்த செய்திகளைப் படித்தறியும் அளவிற்கு எழுத்தறிவு பெற்றிருந்தனர்.

சங்க இலக்கியப் பாடல்கள் மிகத் தெளிவாக முதன்மைப்படுத்தும் இம்மூன்று செய்திகளையும் வரலாற்றறிஞர்களோ, தொல்லியல் ஆய்வர்களோ கருத்தில் கொள்ளவில்லை.

அண்மைக்கால அகழ்வாய்வுகளில் கிடைத்த பானையோடுகளில் பெரும்பாலானவற்றில் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தமை கண்டபிறகே சங்க கால மக்களிடையே எழுத்தறிவு பரவலாக இருந்ததென்ற கருத்தைத் தொல்லியல் அறிஞர்கள் முதன்மைப்படுத்தினர். இதே கருத்தை இலக்கியச் சான்றுகள் வழித் தமிழறிஞர்கள் முன்னரே தெளிவுற மொழிந்திருந்தபோதும் அம்மொழிவுகள் ஏற்கப்படாமல் இருந்தமையை இங்கு நினைவுகூர வேண்டும்.

அண்மைக் காலங்களில் வெளிப்படுத்தப்பட்ட சங்ககாலத்தனவாகக் கருதப்படும் பானையோடுகள், காசுகள் இவற்றில் எழுத்துப் பொறிப்புகளைக் கண்ட பிறகும் தமிழ்நாட்டில் உள்ள பிராமிக் கல்வெட்டுகளைச் சங்க காலத்தனவாக ஐயத்திற்கிடமின்றிக் காலநிர்ணயம் செய்த பிறகும், 'சங்க காலத்தில் நடப்பட்ட வீரக்கற்களில் எழுத்துப் பொறிப்புகள் இருந்திருக்க முடியாது. சங்கப் பாடல்கள் சுட்டும் 'எழுத்துடை நடுகல்' என்பது ஓவியம் வரையப்பட்ட நடுகல்லையே குறித்தது' என்று எழுதினால் என் செய்வது?

'நாணுடை மறவர் பெயரும் பீடும் எழுதி அதர்தொறும் பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்';

இப்பாடலில் உள்ள, 'பெயரும் பீடும் எழுதி' என்ற சொற்றொடர் வீரனின் உருவம் வண்ணமாகத் தீட்டப்பட்டதைக் குறிக்கிறது (ப. 31) என்று தம் 'தொல்லியல் நோக்கில் சங்க காலம்' நூலில் எழுதியுள்ள பேராசிரியர் கா. இராஜன், 'எழுத்துடை நடுகல்' என்ற சொற்றொடருக்கும், 'ஓவியத்துடன் கூடிய நடுகல்' (ப. 33) என்றே பொருள் கூறியுள்ளார். பேராசிரியர் கா. இராஜனுடைய 'கல்வெட்டியல்' நூலும் நடுகற்கள் எனும் தலைப்பின்கீழ் இதே கருத்தை வலியுறுத்துகிறது. இக்கருத்துக் குறித்து நான் அவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவற்றைக் கீழே தந்துள்ளேன்.

'எழுத்துக்களின் தோற்றம்' என்ற இயலின் முதல் பக்கத்தில் சங்க கால நடுகல் (பக். 121) பற்றிய குறிப்புகள் உள்ளன. இதில் 'எழுதிய' எனும் சொல்லாட்சி ஓவியத்தைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது என்று சொல்லியுள்ளீர்கள். 'எழுதிய' என்பது ஓவியம் வரைதலையும் குறித்துள்ளது என்பதுதான் உண்மை. 'எழுதியன்ன' (அகம். 217, 311), 'எழுது சுவர்' (அகம் 351) போன்ற சொல்லாட்சிகளைச் சுட்டலாம். ஆனால், 'எழுத்து' என்றே அகப்பாடல்கள் சுட்டுவதை ஓவியமாக எங்ஙனம் கொள்வது?

"கடுங்கண் மறவர் பகழி மாய்த்தென
மருங்குல் நுணுகிய பேஎமுதிர் நடுகற்
பெயர்பயம் படரத் தோன்று குயிலெழுத்து
இயைபுடன் நோக்கல் செல்லா தசைவுடன்
ஆறுசெல் வம்பலர் விட்டனர் கழியும்" - அகம் 297

"புன்தலை சிதைத்த வன்தலை நடுகல்
கண்ணி வாடிய மண்ணா மருங்குல்
கூருளி குயின்ற கோடுமாய் எழுத்தவ்
ஆறுசெல் வம்பலர் வேறுபயம் படுக்கும்" - அகம் 343

"விழுத்தொடை மறவர் வில்லிட வீழ்ந்தோர்
எழுத்துடை நடுகல் இன்னிழல் வதியும்" - அகம் 53

இந்தப் பாடலடிகளின் பொருளை அன்புகூர்ந்து எவ்விதச் சார்புமின்றிச் சிந்தித்துப் பாருங்கள். 'குயிலெழுத்து', 'கோடுமாய் எழுத்து', எழுத்துடை நடுகல்' எனும் சொல்லாட்சிகள் குறிப்பிடத்தக்கவை. ' எழுதிய' என்பதற்கும் 'எழுத்து' என்பதற்கும் எத்துணை வேறுபாடு உள்ளது. எந்த சங்க இலக்கியத்திலும் ஓவியம் 'எழுத்து' என்று சொல்லப்படவில்லை. எழுத்துக்களைக் குறிக்க, 'குயிலெழுத்து, கூருளி குயின்ற கோடுமாய் எழுத்து' என்பதினும் தெளிவான சொல்லாட்சிகளை ஒரு புலவர் பெய்யமுடியுமா?

'கோடுமாய் எழுத்து' என்பதே தமிழ் எழுத்துக்களின் எழுத்தமைப்பை நயம்படச் சொல்லுமிடம் அல்லவா? பெயரையும் பெருமையையும் வரைய முடியுமா? 'பெயரும் பீடும் எழுதி' என்பதின் நேர்ப்பொருள் கொள்ளாமல், அதை வரைதலாகக் கொள்ளுதல் சால்புடையதா? 'கருதப்படுகிறது - கூறப்படுகிறது - அறிஞர்கள் சொல்கிறார்கள்' என்று நீங்கள் சொல்லக்கூடாது. பல நூறு கள ஆய்வுகள் செய்த அறிஞர் நீங்கள். 'தொல்லியல் நோக்கில் சங்க காலம்' எனும் நூலை ஆக்கித் தந்தவர் நீங்கள். நீங்கள் அறியாததா? உங்கள் கருத்தைக் கூறுங்கள். நன்கு ஆழச் சிந்தித்துக் கூறுங்கள். எந்த சங்கப் பாடலாவது 'எழுத்து' என்று ஓவியக்காட்சியை எங்கேனும் குறித்துள்ளதா என்று பார்த்துவிட்டுக் கருத்துக் கூறுங்கள். யாராவது ஒருவரேனும் தெளிவான முடிவுகளைச் சொல்ல வேண்டாமா? சங்க காலத்தனவாகக் கொள்ளப்படும் பானையோடுகளில் பிராமி எழுத்துக்கள் கிடைக்கலாம். நடுகல்லில் எழுத்து அமைதல் கூடாதா? சங்க காலத்தனவாகக் கருதப்படும் காசுகளில் பிராமி எழுத்துக்கள் இருக்கலாம். ஆனால், நடுகற்களில் இருத்தலாகாதா? பல்வேறு காரணங்களால் சிதைந்த இவ்வெழுத்துக்களைப் படித்துப் புரிந்து கொள்ள முடியாமல் வழிப்போக்கர்கள் மருண்டதைப் பாடல்கள் தெளிவுபடக் கூறியும் நாம் உண்மை காணத் தயங்கலாமா?

வாருணி, பேராசிரியர் இராஜனுக்கு இம்மடலை எழுதிய பிறகு மார்ச்சுத் திங்கள் 27, 28ம் நாட்களில் புதுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழியற் புலம் நடத்திய, 'சங்க இலக்கியமும் கோட்பாடும்' குறித்த தேசியக் கருத்தரங்கில் மைய உரையாற்ற என்னை அழைத்திருந்தார்கள். அதுபோழ்து, 'எது சங்க காலம்?' எனும் பொருளில் சங்க காலத்தின் எல்லைகளை நிர்ணயிக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும், 'எழுத்துடை நடுகல்' என்னும் தொடரில் ஆளப்படும் 'எழுத்து' எதைக் குறிக்கிறது என்பது பற்றிப் பலவாய் சான்றுகள் தந்தும் உரை நிகழ்த்தினேன். பேராசிரியர் கா. இராஜன் 'எழுத்து' என்னும் சொல்லிற்கு 'ஓவியம்' என்று பொருள் கொள்வதையும் அது எங்ஙனம் சரியன்று என்பதையும் விளக்கியுரைத்தேன்.

29.3.2006 புதன்கிழமை காலை பதினொரு மணியிருக்கும். தொலைபேசி ஒலித்தது. பேராசிரியர் கா. இராஜன் தான் பேசினார். தேனி மாவட்டம் அருகே பிராமி எழுத்துப் பொறிப்புகளுடன் மூன்று நடுகற்கள் கிடைத்திருப்பதாகக் கூறி, 'உங்கள் கருத்து சரியே' என்று மகிழ்ந்தார். 'எழுத்துடை நடுகல்' என்றால் எழுத்துப் பொறிப்புடைய நடுகல்தான் என்பதை உறுதிசெய்த அக்கண்டுபிடிப்பினால் சங்கப் புலவர்களின் மொழிவுகள் உண்மையானவை என்பது மீண்டும் நிறுவப்பட்டுள்ளது.

இலக்கியங்களில் கற்பனைப் பூச்சு இருக்கலாம். அதனால், 'இலக்கியமே கற்பனை' என்று ஒதுக்கிடல் நியாயமன்று. இலக்கியத்தில் வரலாறு தேடும் முனைப்பு வேண்டும் என்று நான் ஒரு காலத்தில் கருதியதுண்டு. ஆனால், அவ்விலக்கியங்களை ஆழப் பயிலப்பயில, இலக்கிய அடிகளின் பின்னணியில் வரலாறு நம்மை விழித்து நோக்குவதை உணரமுடிகிறது. இனி, தேடல் வேண்டாம். தெரிவதை அறியும் வரலாற்றுணர்வு இருந்தால் போதுமென்றுதான் கருதுகிறேன்.

'இந்தியா முழுவதற்கும்' எழுத்துமுறை தந்தவன் தமிழனே என்னும் கருத்தை வலியுறுத்துகிறது. அசோகர் பிராமியிலிருந்துதான் தமிழ் பிராமி (தமிழி) வந்ததென்று கருதிய நிலை இன்று மாறிவிட்டது. தமிழ் பிராமியின் பழைமையைக் கொடுமணல் அகழ்வாய்வில் கிடைத்த பானையோட்டுப் பொறிப்புகள் கொண்டு பேராசிரியர் கா. இராஜன் ஏற்கனவே தெளிவாக்கியுள்ளார். இப்போது அம்மொழிவினை உறுதிப்படுத்தும் சான்றுகள் கிடைத்துள்ளன. 'ஆகோள்' என்ற தொல்காப்பியச் சொல்லாட்சியை ஒரு நடுகல் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சங்க இலக்கியப் பாடலடிகள் வரலாற்று வரிகளே என்பதை அழுத்தம் திருத்தமாக நிலை நிறுத்தியுள்ள பேராசிரியர் இராஜனுக்கும் அவர் மாணவர்களுக்கும் தமிழ்கூறும் நல்லுலகத்தின் பாராட்டுக்கள்.

அன்புடன்
இரா. கலைக்கோவன்.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.