http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 54

இதழ் 54
[ டிசம்பர் 18 - ஜனவரி 23, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

வல்லறிதல் வேந்தன் தொழில்
பார்க்கவும் படிக்கவும் . . .
ஒரே ஒரு கேள்வி
திரும்பிப்பார்க்கிறோம் - 26
திரிபுவன வீரனே! பாண்டியாரியே! - மூன்றாம் பாகம்
Thirumeyyam - 1
தனித்தமிழ்க் கலைச்சொற்கள் - 1
அவர் - ஏழாம் பாகம்
என் துன்பம் நீயும் பெறுவாய்!
கௌடல்யரின் அர்த்தசாஸ்த்ரத்தில் ஒற்றாடல்
இதழ் எண். 54 > தலையங்கம்
வல்லறிதல் வேந்தன் தொழில்
ஆசிரியர் குழு
வாசகர்களுக்கு வணக்கம்.

சில வாரங்களுக்கு முன்பு மும்பையில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்த பொதுமக்களுக்கும் காவல்துறை மற்றும் இராணுவ வீரர்களுக்கும் வரலாறு.காம் தனது வீரவணக்கங்களைச் செலுத்துகிறது. இந்தத் தாக்குதல்களுக்கான காரணங்களைப் பல்வேறு ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் அலசி ஆராய்ந்து தத்தம் கொள்கைகளுக்கேற்ப முடிவுகளைத் தெரிவித்து வருகின்றன. வழக்கம்போல எதிர்க்கட்சிகள் இதைவைத்து அரசியல் ஆதாயம் தேடவும் தவறவில்லை. ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் ஒரே நாட்டுக்குள் சோழர்களும் பாண்டிய ஆபத்துதவிகளும் போல் இருப்பதை விடுத்து, சோழச் சக்ரவர்த்திக்கு உறுதுணையாகவும் நட்பாகவும் இருந்த சிற்றரசர்களைப் போல் செயல்பட்டால்தான் இந்தியாவின் வளர்ச்சி முழுமையானதாக இருக்கும். இல்லாவிடில், என்னதான் திறமையான பிரதமரையும் உள்துறை, நிதியமைச்சர்களையும் பெற்றிருந்தாலும், அவர்களின் முயற்சிகள் அனைத்தும் விழலுக்கிறைத்த நீராகவே வீணாகும். உள்நாட்டு எதிரிகளைச் சமாளிக்கத்தான் அதிக நேரத்தைச் செலவிட வேண்டியிருக்கும். இதுதானே நமக்குச் சோழர் வரலாறு கற்றுத்தந்த பாடம்? முதலாம் இராஜராஜரும் இராஜேந்திரரும் தம் போர்த்திறத்தால் மட்டுமே வென்றிருக்கக்கூடிய நாடுகளையும்கூடத் திருமணம் மற்றும் வணிக உறவுகளால் அரவணைத்ததும் இதற்காகத்தானே?

எதிர்க்கட்சிகளுக்கு இருக்கவேண்டிய அதே அளவு பொறுப்புணர்ச்சி ஊடகங்களுக்கும் தேவை. இன்றைய செய்திகள் நாளைய வரலாறு என்பதை நம் ஊடகங்கள் உணரும் நாள் எந்நாளோ? தாக்குதலின்போது ஊடகங்களின் செயல்பாடுகள் பல்வேறு தரப்பினராலும் விமர்சிக்கப்பட்டு வருகின்றன. 'பரபரப்புச் செய்திகளுக்குத் தரும் முக்கியத்துவத்தில் ஒரு சதவீதத்தையாவது உண்மைச் செய்திகளுக்கு வழங்கக்கூடாதா?' என்பதே பெரும்பாலானோரின் ஆதங்கமாக இருக்கிறது. இருப்பினும், தாக்குதலுக்கான முக்கியக் காரணம் உளவுத்துறையின் செயல்பாட்டில் இருந்த குறைபாடே என்பதை மைய அரசும் ஒப்புக்கொண்டிருக்கிறது. அதைச் சரிசெய்யும் நோக்கில் சில நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அவையும் தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் செயலாக இல்லாமல், வருமுன் காப்பதாக இருக்கவேண்டும்.

தற்போதைய உள்துறை அமைச்சர் நிதியமைச்சராக இருந்தபோது ஒவ்வோர் ஆண்டும் வரவு செலவுத் திட்டத்தை அளிக்கும்போதும் ஒவ்வொரு திருக்குறளை மேற்கோள் காட்டி அனைவரின் பாராட்டைப் பெற்றதைப்போல், இப்போது மேற்கோளுடன் நின்றுவிடாமல் திருக்குறளின்படி நடக்கவும் வேண்டியது அவசியம். பொருட்பாலில் அரசியல் மற்றும் அங்கவியலில் இருக்கும் அரசாட்சி தொடர்பான குறள்களை ஆழ்ந்து படித்து அதைப் பிரதமருக்கும் மற்ற முக்கிய அமைச்சர்களுக்கும் விளக்கினால் நன்றாக இருக்கும். உளவுத்துறைக்காகவே ஒரு தனி அதிகாரத்தை (பொருட்பால் - அரசியல் - ஒற்றாடல்) வள்ளுவர் அளித்ததிலிருந்தே அதன் முக்கியத்துவம் தெரிகிறதல்லவா? இதிலுள்ள பத்துக் குறட்பாக்களைத் தாண்டி உளவுத்துறை செய்ய வேண்டியது எதுவும் இல்லை.

581.
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.

582.
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.

583.
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல்.

584.
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று.

585.
கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.

586.
துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று.

587.
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று.

588.
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.

589.
ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்.

590.
சிறப்பறிய ஒற்றன்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை.

'வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று'
என்ற குறள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டிருந்தாலும், எக்காலத்துக்கும் பொருந்தக் கூடியதல்லவா? இன்றைக்கு இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மதத்தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டியது நம் அனைவரின் கடமை. இந்தியாவுக்கு வெளியிலிருக்கும் மதம், உள்ளிருக்கும் மதம் என்ற பாகுபாடில்லாமல், மனித நேயத்தை வளர்க்கத் தவறிய அனைத்து மதங்களின் பெயராலும் வெளிப்படும் தீவிரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டியது இன்றைய அத்தியாவசியத் தேவைகளுள் ஒன்று. இன்றைய தீவிரவாதத் தாக்குதல்களுக்கு முன்பு உளவுத்துறைக்குப் பல்வேறு தகவல்கள் கிடைத்தாலும், அவை உண்மையான ஒற்றுச் செய்திகளா அல்லது அரசின் கவனத்தைத் திசைதிருப்பச் செய்யப்படும் முயற்சிகளா என்பதைச் சோதித்து அறியவேண்டியது அவசியம். உளவுத்துறைக்குள்ளும் சில புல்லுருவிகள் இருப்பது சாத்தியமே. 'ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல்' என்ற குறள் இச்சிக்கலைத் தீர்க்கிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிடத் தொழில்நுட்ப ஆற்றல் பன்மடங்கு பெருகியிருக்கும் இன்றைய காலகட்டத்தில் ஒற்றறிதலில் குறைபாடுகள் இருக்கின்றன. ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இராஜராஜரும் இராஜேந்திரரும் தமக்கு முன் யாரும் கற்பனைகூடச் செய்து பார்த்திராத ஒரு பெரிய நிலப்பரப்பை ஆண்டார்கள் என்றால், அவர்களது ஒற்றர்படை எவ்வளவு வலிவுடையதாக இருந்திருக்க வேண்டும்? வேற்றுமொழி பேசும் அண்டை மாநிலங்களிலும் நாடுகளிலும்கூட வெற்றிக்கொடியை நாட்டியிருக்கிறார்கள் என்றால், கண்டிப்பாக ஒற்றர்கள் விஷயத்தில் மிகுந்த அக்கறை கொண்டிருந்திருக்க வேண்டும். சமயோசித அறிவும் மொழிப்புலமையும் பன்முக ஆளுமையும் கொண்டவர்களைத் தேடிப்பிடித்துச் சேர்த்திருக்கவேண்டும். மற்ற சில அரசியல் பயிற்சிகளும் அளிக்கப்பட்டிருக்கவேண்டும்.

ஒரு நாட்டின் மன்னர் தனது நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்க வேண்டும். நமது பாதுகாப்பு ஆலோசகர், இந்தியாவுக்கு எந்த ஊறும் விளைவிக்க எண்ணமில்லாத புலிகளை ஒடுக்க இலங்கை எல்லையில் காட்டிய தீவிரத்தை, வெளிப்படையான சவால் காத்திருக்கும் பாகிஸ்தான் எல்லையிலும் சற்று காட்டியிருக்கலாம். அதை நினைவூட்டுவதுதான் 'எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில்' என்ற குறள். இக்குறளைத் தலைமேற்கொண்டு செயல்பட்டிருந்தாலன்றி, இராஜராஜருக்கும் இராஜேந்திரருக்கும் இத்தகைய வெற்றிகளும் உள்நாட்டுப் பாதுகாப்பும் சாத்தியமாகியிருக்காது.

இன்றைய இந்திய அரசுக்கும் இதுதான் தேவை.

அன்புடன்
ஆசிரியர் குழு
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.