http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 77

இதழ் 77
[ நவம்பர் 16 - டிசம்பர் 15, 2010 ]


இந்த இதழில்..
In this Issue..

நம்பள்க்கி நிம்பள்க்கி
செப்பேடுகள் பேசும் வரிகள்
மேற்றளியாரும் நலக்குன்றத்தாரும் - 2
புத்தூர்ப் பாறைக் குடைவு
சென்னை அருங்காட்சியகச் செப்பேடுகள் - 2
தீஞ்சுவைக் கரும்பு
இதழ் எண். 77 > கலையும் ஆய்வும்
சென்னை அருங்காட்சியகச் செப்பேடுகள் - 2
மு. நளினி


(சென்ற இதழின் தொடர்ச்சி)

மூவேந்த வேளாரின் விண்ணப்பம் கேட்ட உத்தமசோழ தேவர் வரவினங்களைக் கோயிற் செயற்பாடுகளுக்கு ஒதுக்கும் பணியை வேளாரிடமே ஒப்படைத்துக் (நீயேய் நிவந்தஞ் செய்வீய்), கோயிற்செயற்பாடுகளைக் கவனிக்கும் பொறுப்பைக் (ஸ்ரீகார்யம் ஆராய) கம்புழான் பாடி, அதிமானப்பாடி ஆகிய இரு சேரிகளும் ஏற்றுக்கொள்வதெனத் திட்டம் செய்தருளினார். அரசர் ஆணைப்படி வரவினங்களைக் கோயிற் செயற்பாடுகளுக்காக ஒழுங்குபடுத்தும் பணியைச் சோழ மூவேந்த வேளார் மேற்கொண்ட வகைமையைச் செப்பேட்டின் அடுத்துவரும் வரிகள் விளக்குகின்றன.

வரவினங்கள் :

1. காலளவு கூலி, கோல் நிறை கூலி.

2. இறைவனுக்காக விலைக்குப் பெறப்பட்ட நிலங்களின் விளைவு.

3. கல்வெட்டுகளின்படி இறைவனுக்கு வரவேண்டிய வட்டி (பொலியூட்டு)

இம்மூன்றாம் வரவினத்தைக் குறிக்கும் கல்வெட்டுகளின் சாரமும் தரப்பட்டுள்ளது.

கல்வெட்டு எண் 1.

பரகேசரிவர்மரின்8 இருபத்திரண்டாம் ஆட்சியாண்டில் கூரத்து9 மகாசபையாரும் அரியற்பெரும்பாக்கத்துச் சபையாரும் கோயிலிடமிருந்து பெற்ற பொன் 250 கழஞ்சு. இதற்கான வட்டியாக ஆண்டுதோறும் இவ்விரு சபையாரும் சேர்ந்து தங்களூர் எண்ணாழிப் பொற்கால் என்னும் முகத்தல் அளவையால் 500 காடி நெல்லைக் கோயிலுக்கு அளக்க வேண்டும்.

கல்வெட்டு எண் 2.

இதே மன்னரின் இதே ஆட்சியாண்டில் உழையூர் சபையார் கொண்ட பொன் 50 கழஞ்சு. இதற்கான வட்டியாகச் சபையார் ஆண்டுதோறும் அளக்க வேண்டிய நெல் 150 காடி.

கல்வெட்டு எண் 3.

கோவிசைய கம்பவர்மரின் ஒன்பதாம் ஆட்சியாண்டில் ஒழுக்கைப் பாக்கத்துச் சபையார் கொண்ட பொன் 24 கழஞ்சு. இதன் வட்டியாக ஆண்டுதோறும் சபையார் தரவேண்டிய பொன் ஒரு கழஞ்சே நான்கு மஞ்சாடி.

காலளவு மற்றும் கோல் நிறை கூலி, நிலங்களின் விளைவு, மூன்று கல்வெட்டுகளின்படி அந்தந்த சபையார் இறுக்கவேண்டிய ஆண்டுவட்டி ஆகிய வருவாய் கொண்டு மூவேந்த வேளாரால் திட்டமிடப்பட்ட கோயிற் செயற்பாடுகளை இரண்டாம் ஏட்டின் பின்புறத் தொடக்கத்திலிருந்து தொடர்ந்து காணமுடிகிறது.

ஊரகம் கோயிலுக்கான அறக்கட்டளைகள்

படையல் மற்றும் வழிபாட்டுப் பொருட்களுக்கான ஒதுக்கீடுகள், கோயிற் பணியாளர்களுக்கான ஒதுக்கீடுகள் என்னும் இரண்டு தலைப்புகளில் ஊரகம் கோயிலுக்கான அறக்கட்டளைகளைப் பிரிக்கலாம்.

1. படையல், மற்றும் வழிபாட்டுப் பொருட்களுக்கான ஒதுக்கீடுகள்.

1. படையல்

அ. மூன்று சந்திக்கும்


திரு அமுது - முக்குறுணி அறுநாழி நெல்
இரண்டு கறி அமுது - நானாழி நெல்
போது உரியாக மூன்று சந்திக்கும் நாழி உரி தயிரமுது - முன்னாழி நெல்
அடைக்காய் அமுது - முன்னாழி நெல்

ஆ. நாள்தோறும்

நெய்யமுது ஓர் உழக்கு - ஐந்நாழி நெல்
மடைப்பள்ளி விறகுக்கு - இருநாழி நெல்

2. வழிபாட்டுப் பொருட்கள்

திருமெய்ப்பூச்சு, திருப்புகைக்காக10 - திங்கள் தோறும் 1/8 கழஞ்சு பொன்னாக, ஆண்டுக்கு 1.5 கழஞ்சு
திருநமனிகை11 மூன்றிற்காக - ஆண்டுக்கு 3/4 கழஞ்சு பொன்
திருபரிசட்டம் மூன்றிற்காக - ஆண்டுக்கு 1 கழஞ்சு பொன்

அடிக்குறிப்புகள்

7. கோல்நிறை கூலி, காலளவு கூலி என்பன நிறுத்தல் மற்றும் முகத்தலுக்குரிய பொருட்களின்மீது விதிக்கப்பட்டிருந்த வரிகள். SII Vol. III, Part III, P.268.

8. இப்பரகேசரிவர்மர் விசயாலய சோழராகலாம் என்று திரு. எச். கிருஷ்ண சாஸ்திரி கருதுகிறார்.

9. காஞ்சிபுரத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் காஞ்சிபுரம் அரக்கோணம் சாலையில் கூரம் அமைந்துள்ளது. இங்குள்ள வித்யா விநீத பல்லவ பரமேசுவர கிருகம் பல்லவர் கட்டிய கோயில்களுள் காலத்தால் பழமையானது. இக்கோயில் குறித்து எழுந்த செப்பேடுகளே கூரம் செப்பேடுகள்.

10. கோயில்களில் மணத்திற்காக எரிக்கப்படும் சிதாரியின் புகை.

11. புனிதத் திருமுழுக்காட்டு (Sacrad Bath) என்று பொருள் விளக்கம் தருகிறார் திரு. எச். கிருஷ்ண சாஸ்திரி. SII Vol. III, Part III, P.273.

(தொடரும்)
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.