http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 2

இதழ் 2
[ செப்டம்பர் 15 - அக்டோபர் 14, 2004 ]


இந்த இதழில்..
In this Issue..

கல்வெட்டுகளைக் காப்பாற்றுவோம்
எஸ்.ஜே சூர்யாவுக்கு ஒரு கண்டனம்
கதை 1 - சேந்தன்
புதிரான புதுமை
கந்தன் குடைவரை
கட்டடக்கலை ஆய்வு - 2
கருங்கல்லில் ஒரு காவியம் - 2
இது கதையல்ல கலை - 2
'MS - a life in music' - ஒரு விமர்சனம்
இராகமாலிகை - 2
சங்கச்சாரல் - 2
கோச்செங்கணான் காலம்
இதழ் எண். 2 > தலையங்கம்
கல்வெட்டுகளைக் காப்பாற்றுவோம்
ஆசிரியர் குழு
வணக்க....ஹச் !

நலமாக இருக்கிறீர்கள் தா...ஹச் ! ஹச் !

அடடா, என்ன சளி, தும்மல் எல்லாம் பலமாக இருக்கிறதே என்று கேட்கிறீர்களா ?

சொன்னால் கோபிக்கக்கூடாது...

கடந்த ஒருமாதமாக விடாமல் "பாராட்டு மழை"யில் நனைந்து கொண்டிருந்துவிட்டோமா ? அதானல்தான் உடம்புக்கு ஒத்துக்கொள்ளாமல்....

பார்த்தீர்களா, உடனே முறைக்க ஆரம்பித்துவிட்டீர்களே ?

Jokes Apart - வரலாறு முதல் இதழுக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு உற்சாகமளிப்பதாக இருக்கிறது ! தொடர்ந்து நன்முறையில் செயல்பட ஊக்கத்தையும் அளித்துள்ளது. இந்த இதழைப் படிக்கும் அன்பர்களும் சென்ற இதழைப் போலவே Feedback பகுதியை தொடர்ந்து உபயோகித்து தங்கள் கருத்துக்களையும் யோசனைகளையும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாடெங்கிலும் பரவிக்கிடக்கும் பழங்காலக் கோயில்கள் ஒவ்வொன்றிலும் காணக்கிடைக்கும் கல்வெட்டுக்கள் காலம் நமக்களித்துள்ள பொக்கிஷம். அது நம் முன்னோர் நமக்காக விட்டுச் சென்றுள்ள எச்சம். முடிந்துபோன அவர்கள் வாழ்க்கையின் மிச்சம்.

இந்தியாவெங்கும் காணக்கிடைக்கும் மொத்தக் கல்வெட்டுக்களைவிட தமிழகத்தில் கிடைக்கும் கல்வெட்டுக்களின் எண்ணிக்கை அதிகம் என்பது நம்மில் எத்தனைபேருக்குத் தெரியும் ? இதுவரை படியெடுக்கப்பட்டு இன்னும் அச்சுக்கு வராத கல்வெட்டுக்கள் மட்டும் ஒரு இலட்சத்திற்கும் மேல் என்கிறது ஒரு புள்ளி விபரம் ! படியெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மட்டும் இத்தனையென்றால் படியெடுக்கப்படாத கல்வெட்டுக்களின் நிலை பற்றிச் சொல்லவேண்டியதில்லை.

ஒவ்வொரு கல்வெட்டிலும் புதைந்துள்ள சமூக / அரசியல் / பொருளாதாரச் செய்திகளைத் தொகுத்தால் அது ஆயிரமாயிரம் பக்களுக்கும் விரியும். அது என்னவோ பழங்கால சமாச்சாரம் மட்டும்தான், அதற்கும் இன்றைய நிலைமக்கும் என்ன சம்மந்தம் ? என்றெண்ணி விடாதீர்கள் ! அன்றைக்கிருந்த பல நடைமுறைகள் நம்மை ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்த்துகின்றன.

உதாரணமாக, விவசாயத்தின் ஆதாரமான நீர்நிலைகளான ஆறுகள், ஏரி, குளங்கள் முதலியவற்றைப் போற்றிப் பாதுகாக்க அந்நாளைய மக்கள் எடுத்த நடவடிக்கைகள் அசாதாரணமானவை. ஒவ்வொரு ஊருக்கும் நீர்வாரியம் அல்லது எரிவாரியம் என்று ஒன்று இருந்தது. இந்த ஏரிவாரியம் அந்நந்த ஊர்ச் சபைகளின்கீழ் செயல்பட்டு வந்தன. ஏரிவாரியத் தலைவராக இருப்பவருக்கென்று தகுதிகள் இருந்தன. வருடாவருடம் தூர் எடுக்கவும் மதகுகளைச் சரிசெய்யவும் நிதி ஊர்ச்சபை அல்லது மொத்த ஊர்வருமானத்திலிருந்து கொடுக்கப்பட்டது. இன்னின்ன வாய்க்காலில் இன்னின்ன பேர்கள் நீர் எடுத்துக்கொள்ளலாம் என்ற கட்டுப்பாடும் இருந்தது.

ஆனால் இன்றைய நிலைமை ? அன்றைக்கிருந்த பற்பல ஏரிகளையும் குளங்களையும் தேடிச்சென்றால் அங்கே புதிதாய் முளைத்து நிற்கும் கான்கிரீட் வீடுகள் நம்மை வரவேற்கும். அல்லது அந்தக் குளம் ஆண்டாண்டுகாலமாய்த் தூர்ந்துபோய் ஒன்றுக்கும் பயன்படாமல் ஆகியிருக்கும். வெளிநாட்டவரான ஆங்கிலேயர் காலத்தில்கூட கட்டிக் காத்த தஞ்சை செவப்பன் ஏரி போன்ற ஏரிகளையுமல்லவா சென்ற நூற்றாண்டில் நமது சுயலாப நோக்கால் இழந்துவிட்டோம் ? இன்றைக்கு தமிழகம் தண்ணீர்த் தட்டுப்பாட்டால் பட்டுக்கொண்டிருக்கும் அவதிகளை நோக்கும்போது அந்நாளைய நடைமுறைகள் நம்மை சிந்தனைக்குள்ளாக்குகின்றன அல்லவா?

ஆக கல்வெட்டுக்கள் வெறும் சரித்திர ஆவணங்கள் மட்டுமல்ல - அவற்றிலிருந்து பல பாடங்களை / வழிமுறைகளை இன்றைக்கும் நாம் பெற முடியும்.

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுக்கள் தமிழ்நாட்டில் இரண்டுவிதமான ஆபத்துக்களுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றன.

முதலாவது - கவனிப்பின்மை.

கிராமத்திற்கு கிராமம் - ஊருக்கு ஊர் பரவிக் கிடக்கும் நமது பண்டைய கோயில்களும் அவற்றின் கலைச் செல்வங்களும் நூறு நூறு ஆண்டுகளாக நமது அக்கறையின்மையால் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருக்கின்றன. பத்திரிக்கைகளும் இதில் அக்கறை கொண்ட ஒருசிலரும் அங்கொன்றும் இங்கொன்றுமாக குரல் கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறார்கள் - பலன் என்னவோ பூஜ்ஜியம்தான்.

சரித்திர பூர்வமாகவே பார்த்தாலும் கோயில்களிலும் கோயில் வளர்த்த கலைகளிலும் அக்கறை கொண்ட பல்லவ / சோழ / பாண்டியர் மற்றும் விஜயநகர மன்னர்கள் காலத்தில்தான் கோயில்கள் சிறப்புற அமைந்தன என்பதும் ஏனையோர் காலத்தில் வீழ்ச்சியைச் சந்தித்தன என்பதும்தான் வரலாற்று உண்மை.

ஆனால் நமக்கு வியப்பை அளிப்பது வேறொரு விஷயம். அது என்னவெனில் - நாளெரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தெருவுக்குத் தெரு / மூலைக்கு மூலை பற்பல புதிய கோயில்கள் எழும்பிய வண்ணம்தான் இருக்கின்றன. உள்ளுரில் மட்டுமல்ல - தமிழர் வாழும் வெளிநாடுகளிலும் ஆங்காங்கே அற்புதமான புதிய கோயில்கள் எழும்பிக்கொண்டுதான் இருக்கின்றன. ஒருவகையில் இது பெருமைப் படத்தக்க விஷயம்தான் - "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்று இருபத் தொன்றாம் நூற்றாண்டிலும்கூட நாம் மார்தட்டிக்கொள்ள முடியும்.

ஆனால் இந்த அக்கறையில் பத்தில் ஒரு பங்கைக்கூட ஏன் நாம் நமது பழங்காலக் கோயில்களை சீரமைப்பதில் காண்பிக்க மறுக்கிறோம்? இதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

இந்த வேதனை ஒரு பக்கமென்றால் இதைவிடக் கொடிய வேதனை வேறொன்றுள்ளது. அதுதான் நாம் குறிப்பிடும் இரண்டாவது ஆபத்து.

அதாவது கும்பாபிஷேகம் அல்லது குடமுழுக்கு என்ற பெயரில் பழங்காலக் கோயில்களின் கல்வெட்டுக்களையும் சிற்பங்களையும் சிதைப்பது. வெள்ளையடிப்பது என்னும் சுண்ணாம்புப் பாரம்பரியத்தில் நாம் ரொம்பவே ஊறிப்போய்விட்டோம். எந்த அளவிற்கு என்றால் - கோயிலின் எந்த மூலை முடுக்கையும் நாம் விட்டுவைப்பதில்லை - கல்வெட்டுக்கள் உட்பட. இப்படிப்பட்ட சுண்ண மற்றும் வண்ணப் பூச்சுகளுக்கு ஆளான கல்வெட்டுக்களை ஒரு போதும் படிக்க முடியாது என்பது மட்டுமல்ல - அந்தக் கல்வெட்டிற்கு நாளாவட்டத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புக்களையும் அறியமுடியாது. அவை இதுவரை படியெடுக்கப்படாத கல்வெட்டுக்களாயிருந்தால் ? நிரந்தரமாக அவற்றை இழந்தோமென்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

மிக மிக சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுக்கள்கூட இந்த பாதிப்புக்கு உள்ளாவதை எங்கு சொல்லிப் புலம்புவது என்று தெரியவில்லை. உதாரணத்திற்கு உடையார்குடி அனந்தீசுவரர் கோயிலின் "இரவிதாசன் கல்வெட்டைக்" குறிப்பிடலாம். தமிழகத்தின் சரித்திரத்திலேயே ஒரு திருப்புமுனையின் பதிவாக விளங்கும் இந்தக் கல்வெட்டு இன்றைக்கு சுண்ணப் பூச்சு மற்றும் இதர பாதிப்புக்களுக்கு ஆளாகி நிற்கிறது. இப்படி உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

கல்வெட்டுக்களின் நிலை இப்படியென்றால் சிற்பங்கள் படும் பாடு வேறு வகை. நாகரிக வண்ணப்பூச்சுக்கு ஆளாகி அசிங்கமாவது முதல் சிமெண்டுப் பூச்சுக்கு ஆளாகி நிரந்தரமாக அழிந்துபோவது வரை இந்த பாதிப்புக்கள் சொல்லில் அடங்கா.

இதற்கெல்லாம் என்றைக்கு விடிவுகாலம் வரும் ?

கோயில்கள் வரலாற்றுப் பெட்டகங்கள் என்னும் விழிப்புணர்வு தமிழருக்கு என்றைக்கு மனதில் நிரந்தரமாகப் பதியும் ?

நாளைய தலைமுறையினருக்கு சென்ற தலைமுறையினரின் சரித்திரத்தை சரியாகக் கொண்டு சேர்ப்போமா ?

மூத்த தமிழக்குடியின் கலைவீச்சையும் பொறியியல் நுணுக்கங்களையும் அடுத்த நூற்றாண்டின் தமிழர் அனுபவிக்க வகை செய்து கொடுப்போமா ?

கேள்விகள் மனதில் எழும்பியவண்ணம் உள்ளன.

நாம் எழுதப்போகும் விடைகளைத்தான் நாளைய வரலாறு பதிவு செய்யும்.

அன்புடன்
ஆசிரியர் குழுthis is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.