http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 31

இதழ் 31
[ ஜனவரி 16 - பிப்ரவரி 15, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

தமிழிசை தழைக்க...
திரும்பிப் பார்க்கிறோம் - 3
அரளிப்பட்டிக் குடைவரை
சோழதேசத்தில் ஒரு சேரர் கோயில் - 1
சங்ககாலத் தமிழகத்தில் முதல் அறிவொளி இயக்கம் - 1
சங்கச்சாரல் - 14
இதழ் எண். 31 > இலக்கியச் சுவை
சங்கச்சாரல் - 14
குழந்தைப்பலி?

பலிக்கடன் செலுத்துதல் என்பது பண்டுதொட்டு இருந்துவரும் பழக்கமாகும். மறவர்கள் செலுத்திய பலிக்கடன்கள் பற்றி பாடல்களும் கல்வெட்டுகளும் பலபடப் பேசுகின்றன. பலிக்கடனாக ஊனும் குருதியும் உயிரளித்து செலுத்தப்பட்டமைக்கு பல சான்றுகள் தமிழ் இலக்கியங்களில் காணக்கிடைக்கின்றன. ஆனால், குழந்தைப்பலி பற்றி இதுநாள் வரையில் கேள்வியுற்றதில்லை. பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் நற்றிணைப் பாடலொன்றிற்கு (15) உரையெழுதுமிடத்துக் "குற்றமற்ற கற்பினையுடைய மடவாள் ஒருத்தி தன் குழவியைப் பலி கொடுப்ப வாங்குதலும் அவள் அதனைக் கைவிட்டாற் போல" என்று பாடலில் வரும் குழந்தையிழப்பு பற்றிய வரிகளுக்கு விளக்கம் தந்துள்ளார். பொருளுரைப் பகுதியில் பாட வேறுபாடு கூறி, தாயிடமிருந்து குழந்தையைப் பேய் பறித்ததாகவும் கொள்ளலாம் என்கிறார். இவ்விளக்கங்களின் உண்மைத்தன்மை குறித்துத் தமிழ்ப் பேராசிரியர்களின் கருத்துரைகள் வரவேற்கப்படுகின்றன.




தாமரை நயந்த வேழத்திரு

தமிழ்நாட்டு இறைத்தோற்ற வரலாற்றில் பழங்காலந்தொட்டே இடம்பெற்றிருக்கும் இறைவடிவங்கள் மிகச்சிலவே. அவற்றின் வரிசையில் வேழத்திருவைச் சேர்க்கிறது கலித்தொகையின் 44ம் பாடல். சங்க இலக்கியங்களுள் ஒன்றான நெடுநல்வாடை திருவைக் குறிக்கிறது. ஆனால், வேழத்திரு கலித்தொகை வாயிலாகவே காட்சிக்கு வருகிறது.

ஆகமங்கள் போலவே இலக்கியங்களும் இறை அறிமுகத்துடன் அவற்றின் தோற்ற அமைப்பும் தருகின்றன. வேழத்திருவை இறையியல் வரலாற்றிற்கு வழங்கும் கலித்தொகையும் அம்மரபில் வழுவாது இரண்டரை அடிகளில் முழுமையான வர்ணிப்பை முன்வைக்கிறது.

"வரிநுதல் எழில்வேழம் பூநீர்மேல் சொரிதரப்
புரிநெகிழ் தாமரை மலரங்கண் வீறெய்தித்
திருநயந்து இருந்தன்ன"

இந்த வண்ணனையை உள்வாங்கிக்கொண்ட பல்லவச் சிற்பிகள் வேழத்திருவை மாமல்லபுரத்து வராகர் குடைவரையில் சுவர்க்காட்சியாகச் செதுக்கி வைத்தனர். "புரிநெகிழ் தாமரை" என்ற சொல்லாட்சியின் விளக்கமாய், முறுக்கவிழ்ந்து இதழ் விரிந்து மலர்ந்த தாமரைப்பூ. அதன் மீதமர்ந்த கோலத்தில் திருமகள். இந்த அமர்வை வீறெய்தி நயந்த அமர்வாய்க் கலித்தொகை காட்டுவதைச் சிற்பிகள் எப்படி வெளிப்படுத்தியுள்ளனர் என்றறிய ஒருமுறை மாமல்லைக்குச் சென்று வாருங்கள். ஏனெனில், சொற்களால் விளக்க முடியாத சுந்தர வீறு இது.

"போதொடு நீர் சுமந்தேத்தி வருவார்" என்று ஐயாறு அப்பர் பெருமான் பாடினாரே! அதுபோல, பூக்களிடம் பெற்ற நீர்க்குடங்களைச் சுமந்தவர்களாய்த் தேவியின் இருபுறத்தும் அழகியர் நால்வர். மேற்புறத்தே வரிகள் படர்ந்த நெற்றிப்பகுதியாம் மத்தகத்தை உடைய அழகிய வேழங்கள் பக்கத்திற்கொன்றாய்க் காட்டப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று நிற்கும் எழிலியர் கைக்குடங்களுள் ஒன்றைத் துதிக்கையில் வாங்கி, மேலே உயர்த்தித் தேவியின்மீது பூநீர் சொரிந்து களிக்கிறது. மற்றொன்று குடம் வாங்கும் முயற்சியில் முனைந்துள்ளது.

கலித்தொகை அடிகளோடே சிறிது கற்பனையும் கலந்ததொரு காட்சியைக் கண்முன் காட்டியிருக்கும் இந்தப் பல்லவச் சிற்பிகள் இலக்கியம் படிக்காதவரா?




கொடுவெறி இன்பம்

உளத்திரிபு நிலைகளுள் ஒன்று கொடுவெறி இன்பம் (Sadism). இத்திரிபுள்ளார் காரணம் ஏதுமின்றிக் கொடுமை செய்வதில் விருப்பமுள்ளவர்களாகவும் அக்கொடுமைகட்கு ஆளாவார்தம் துன்பங்கள் கண்டு அளவற்று மகிழ்பவர்களாகவும் இருப்பர். இவர்தம் கொடுமைகட்கு அனைத்து உயிர்களும் ஆளாவதுண்டு. உலகம் முழுவதும் இன்றளவும் காணப்படும் இக்கொடுவெறி இன்பம் அன்பு தழைத்த சங்க காலத்திலும் இருந்தது.

அடர்ந்து வளர்ந்த தலைமுடியை உடைய பாலைநில மறவர்கள், வலிய உடலும் புலிப் பார்வையும் வீரச்செருக்கும் கொண்டவர்கள். தம் நிலப்பகுதியில் பயணப்படும் புதியவரை வழிமறித்து, அவர்தம் கைப்பொருளைக் கொள்ளையிட்டு, அதுகொண்டு வாழ்க்கை நடத்தும் இவர்கள், கொள்ளையின்போது பயணிகளைக் கொன்றழிப்பதும் உண்டு. கொள்ளைக்காகக் கொலை, குற்றமென்றாலும் காரணமுடையது. ஆனால் உயிரிழப்பவர்களின் வேதனைத் துடிப்புகளைக் கண்டு மகிழ்வதற்காகவே பொருளேதுமின்றிப் பாலைவழியில் பயணம் மேற்கொண்ட புதியவர்களைக்கூடக் காரணமற்ற நிலையில் அம்பெறிந்து கொள்வது இவர்தம் வழக்கமாக இருந்திருக்கிறது.

சங்க வாழ்வின் மறுபக்கமாய்க் கலிப்பாவில் கண் சிமிட்டும் ஆறலைக் கள்வர்களின் இக்கொடுவெறி இன்பம் படிப்பவர் நெஞ்சை நெருடுகிறது.




பேய் வரும் நேரம்

பேய்கள் நள்ளிரவு 12 மணிக்குப் பிறகுதான் உலாவத் தொடங்கும் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால், சங்க இலக்கியங்களுள் ஒன்றான நற்றிணையோ, மாலையிலேயே பேய்கள் தங்கள் உலாவைத் தொடங்கி விடுவதாகக் கூறுகிறது.

பாழடைந்த மன்றங்களில் வாழ்கின்ற இப்பேய்கள், வேனிற் காலத்துச் செம்முருக்கின் காய்ந்த நெற்றுப் போன்ற விரல்காளை உடைய வல்வாய்ப் பேய்கள். வளப்பம் பொருந்திய பழமைச் சிறப்புடைய ஊரிடத்தே, தெய்வத்தின் முன், மாலை நேரத்தில் பூவும் நெல்லும் தூவி வணங்கி வழிபட்டுப் பலிச்சோறிடுவது ஊர்மக்களின் பழக்கம். இந்தப் பலிச்சோற்றை உண்பதற்காகத் தாம் உறையும் மன்றத்தை நீங்கிப் புறப்படும் பேய்களிடம் ஊர்மக்களுக்கு அச்சம் இருந்தது. ஆண் துணையின் அணைப்பில் இருந்தபோதும், பெண்கள் இப்பேய்களுக்கு அஞ்சியதாக நற்றிணை சொல்கிறது.

பேய்களைப் பற்றிய செய்திகள் சங்க இலக்கியங்களில் பரவலாகச் சிதறிக் கிடக்கின்றன. திரட்டிச் சேர்த்தால் பேய்களே மகிழக்கூடிய அளவிற்கு ஒரு நூல் உருவாக்கலாம்.




தகவல் உதவி : வரலாறு ஆய்விதழ் 5 & 6.



this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.