http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 4

இதழ் 4
[ நவம்பர் 15 - டிஸம்பர் 14, 2004 ]


இந்த இதழில்..
In this Issue..

தரவுகளைத் தொகுப்போம்
மத்தவிலாச அங்கதம் - 2
கதை 3 - கண்டன்
தட்டப்படாத கதவுகள் திறப்பதில்லை
கல்வெட்டாய்வு - 3
ஆத்மாவின் அடையாளங்கள்
கட்டடக்கலை ஆய்வு - 4
இராஜசிம்மன் இரதம்
Rare Karana Sculptures from Thirumalapadi
இராகமாலிகை - 3
சங்கச்சாரல் - 4
கோச்செங்கணான் யார் - 2
இதழ் எண். 4 > தலையங்கம்
தரவுகளைத் தொகுப்போம்
ஆசிரியர் குழு
வணக்கம்.

வரலாறு இணைய மாத இதழின் நான்காம் இதழ் தற்போது உங்கள் கைகளில். பழைய பகுதிகளைத் தவிர புதியதாக ஆங்கிலப் பகுதியொன்றும் இந்த இதழிலிருந்து அறிமுகமாகிறது.

தமிழகத்தின் வரலாற்றுச் செல்வங்களை உலக அரங்கில் எடுத்துச் சொல்லும் பல முயற்சிகளில் இதுவும் ஒன்று. இந்தப் பகுதியில் பல்வேறு தலைப்புக்களில் வரலாற்றாய்வுச் செய்திகள் இடம்பெற இருக்கின்றன - படித்துவிட்டுக் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

தொடர்ந்து வரலாறு இதழ் படிக்கும் பலருக்கும் அது வெளியாகும் தேதி பற்றிய குழப்பங்கள் இருக்கின்றன.

ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி வரலாற்றின் புதிய இதழ் வெளியாகும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். வரலாறு வெளியாகும் தேதி பற்றி ஆர்வத்துடன் விசாரித்த அன்புள்ளங்களுக்கு நன்றி.


***********************************************************************************************


எந்தத் துறையின் வளர்ச்சிக்கும் அந்தந்தத் துறையில் பாடுபடும் ஆய்வாளர்களின் உழைப்பும் ஆய்வும் மிக முக்கியமானதாகும். தீவிரமான உழைப்புடன் கூடிய ஆய்வும் உண்மையை தைரியமாக அணுகும் அறிவியல் நோக்குமே ஒரு துறையின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் தரக் கற்கள் என்பது நாம் அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயம்.

இத்தகைய ஆய்வுகளின்போது இதற்கு முன்பு அதே துறையில் / தலைப்பில் செய்யப்பட்ட ஆய்வுகளையும் தரவுகளையும் தொகுத்து ஒப்பிட்டுப் பார்ப்பதும் அத்தரவுகளின் தரத்தை நிர்ணயித்துப் புதிய தரவுகளுக்கும் முடிவுகளுக்கும் கூட்டிச் செல்வதுமே ஒவ்வொரு ஆய்வாளனின் நோக்கமாகவும் இருக்கும் - இருக்க வேண்டும்.

ஆக ஒவ்வொரு துறையின் வளர்ச்சிக்கும் அத்துறையில் இதுவரையில் நிகழ்ந்திருக்கும் ஆய்வுகள், அவற்றின் முடிபுகள், தொகுக்கப்பட்டிருக்கும் தரவுகள் - அவை கிடைக்குமிடம் முதலியவை ஆய்வாளருக்கு இன்றியமையாதவையாம்.

உதாரணமாக கணிப்பொறித் தொழில்நுட்பத்தை எடுத்துக் கொள்வோம். இத்துறையின் உலகளாவிய அபரிமிதமான வளர்ச்சிக்கு பல காரணங்கள் இருந்தாலும், அவற்றில் முக்கியமானதாக நாம் நினைப்பது தரவுகளின் தொகுப்பும் அவை இணையம் மூலம் பலருக்கும் எளிதில் கிடைக்கும் வசதியுமேயாகும்.

ஒரு புதிய கணிப்பொறித் தொழில்நுட்பத்தைப் பற்றி புத்தகங்களிலும் மற்ற மீடியாக்களிலும் வருவதற்குமுன்பே இணையத்தில் தெரிந்துகொள்ள முடிகிறது. அது மட்டுமல்ல - நமக்கு நாம் உபயோகிக்கும் வன்பொருளிலோ / மென்பொருளிலோ (Hardware / Software) ஏதேனும் பிரச்சினைகள் வந்தால் இதே பிரச்சினையை உலகின் வேறொரு மூலையில் வேறு எவராவது முன்பே சந்தித்திருக்கிறார்களா - அவ்வாறு இருந்தால் அவர் அந்தப் பிரச்சினையை எப்படிக் கையாண்டார் முதலான சகல விஷயங்களையும் இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இத்தகைய வசதிகள் கணிப்பொறித் தொழில்நுட்பத்தின் அன்றாட வளர்ச்சிக்குப் பெரிதும் உறுதுணையாயிருக்கின்றன என்பது அனுபவம் கண்ட உண்மை.

கணிப்பொறித் தொழில்நுட்பத்திலிருந்து நம் கண்களைச் சற்றே திருப்பித் தொல்லியல் மற்றும் வரலாற்றாராய்ச்சி என்னும் துறையை நோக்கினால் நாம் காண்பதென்ன ?

ஒரு குறிப்பிட்ட தலைப்பில் தன்னை ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்ளும் வரலாற்றாய்வாளர் இதற்கு முன் இதே தலைப்பில் யாராவது ஆராய்ச்சி செய்துள்ளார்களா என்றுகூடத் தெரிந்துகொள்ள முடியாத அவல நிலை. பல்வேறு பல்கலைக் கழகங்களிலும் வரலாற்றாய்வுகள் தொடர்ந்து நடந்தவண்ணம்தான் உள்ளன - ஆனால் ஒருவருடைய ஆய்வு முடிவுகளையும் தரவுகளையும் மற்றவர் பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலையே நீடிக்கிறது.

புத்தகங்கள் என்று எடுத்துக்கொண்டோமானால் பல ஆய்வாளர்களும் ஐம்பது வருடங்களுக்கும் முற்பட்ட புத்தகங்களையே நம்பி ஆய்வு முடிவுகளை செலுத்த வேண்டிய அவலம். இந்த ஐம்பது வருடங்களில் எத்தனையோ கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன - எத்தனையோ ஆய்வுகள், கட்டுரைகள் வாசிக்கப்பட்டு விட்டன - ஆனால் இவையெல்லாம் முறையாகத் தொகுக்கப்படாததால், பல ஆய்வுகள் முறையாக நூல்வடிவம் பெறாததால், அப்படியே தப்பித்தவறி நூல்வடிவம் பெற்றாலும் அவை மறுபதிப்புக்கள் காணாமல் அழிந்து போய்விட்டதால் - தன்னுடைய தலைப்பில் முன்பு ஆய்வு செய்தவர் இன்னார் இன்னார் என்றுகூடத் தெரிந்துகொள்ளமுடியாத நிலையில் நிற்கின்றார்கள் வரலாற்றாய்வாளர்கள்.

இதனால் ஒரே துறையில் ஒரே தலைப்பில் பல ஆய்வுகள் ஆங்காங்கே நிகழ்ந்தும் புதிய முடிபுகளுக்கும் தரவுகளுக்கும் செல்லமுடியாமை நிகழ்கிறது. அது மட்டுமல்ல - ஒரே தலைப்பில் வெவ்வேறு இடங்களில் ஒரே மாதிரியான ஆய்வுகள் நிகழ்வதையும் தடுக்க முடியாமல் போகின்றது. இதனால் உழைப்பு வீணாவதும் புதிய தரவுகள் வரலாற்றிற்குக் கிடைக்காமையும்தான் விளைவுகளாகும்.

ஆய்வாளர்களுக்கு என்றில்லை - ஆய்வைத் தேர்வு செய்ய வருபவருக்கும் இத்தகைய தகவல்களின்மை ஒரு பிரச்சினையே என்பதை சொல்லத் தேவையில்லை. பல நேரங்களில் ஆய்வாளர் உண்மையில் ஆய்வில் ஈடுபட்டாரா அல்லது வேறொரு ஆய்வின் முடிவுகளையே புதிய அறிக்கையாகப் படைக்கிறாரா என்பதையும்கூட அறிதல் அசாத்தியமே.

ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்பிருந்த நிலை வேறு.

தங்களது பழைய வரலாற்றைத் தெரிந்து கொள்வதில் பொதுமக்களுக்கும் சரி, படித்த பண்டிதர்களுக்கும் சரி - பெரியதொரு ஆர்வம் இருந்தது. அதனால் பல ஆய்வாளர்களின் கட்டுரைகளும் ஆய்வுகளும் நூல்வடிவம் பெற்றன. வள்ளல்களின் கருணைப் பார்வை வரலாற்றாய்வாளர்களின் பக்கம் இருந்தது. அதனால் ஆங்கிலத்திலும் தமிழிலுமாகப் பல பொக்கிஷங்கள் நமக்குக் கிடைத்தன.

ஆனால் இன்றைக்கு நிலைமை வேறு.

தரமான வரலாற்றாய்வு என்பதே சற்று அரிதான விஷயமாகிவிட்ட நிலையில் பல்வேறு ஆய்வு முடிவுகளும் கட்டுரைகளும் பல்கலைக் கழகங்களின் நூலகங்களில், ஆய்வாளர் வீட்டின் பழைய பரண்களில், பழைய புத்தகக்கடைகளில் தம் கடைமையை நிறைவேற்றிவிட்ட நிம்மதியில் உறங்கிக் கொண்டிருக்கின்றன.

இணையம் என்னும் மகத்தான சாதனத்தை மட்டும் நாம் சரியாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால் இந்த அவல நிலையை எளிதில் மாற்றும் சாத்தியக்கூறு உண்டு. இதில் முதல் படி இதுவரை பல்வேறு பல்கலைகளிலும் ஆய்வகங்களிலும் புரியப்பட்டுள்ள வரலாற்றாய்வுகளின் தலைப்புக்களையும் முக்கிய தரவுகள் மற்றும் முடிபுகளையும் தொகுப்பதேயாம்.

அடுத்ததாக வரலாற்றாராய்ச்சி என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அத்தனை நூல்களையும் அவை தற்போது கிடைக்குமிடங்களையும் பதிவு செய்தல் அவசியம்.

இதற்கும் அடுத்த கட்டப்பணியாக அச்சில் வாராத நூல்களை, மறுபதிப்புக் காணாத வரலாற்று நூல்களை இணையத்தில் ஏற்றி வலம் வரச் செய்ய வேண்டும். இப்படிப் படிப்படியாக வளரும் தரவுக் களஞ்சியம் விரைவில் ஆய்வாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி உபயோகிக்கும் இணையக் கன்னிமாராவாக மாறிவிட வாய்ப்புண்டு.

எல்லாமே பெரிய முயற்சிதான் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் ஊர்கூடித் தேரிழுத்தால் எதுவும் சாத்தியமே.

செய்வோமா ?

அன்புடன்
ஆசிரியர் குழுthis is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.