http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 100

இதழ் 100
[ அக்டோபர் 2013] நூறாவது இதழ்


இந்த இதழில்..
In this Issue..

வரலாற்றுக்குத் தலைவணங்கி..
ஒரு மன்னரும் ஒரு கோயிலும் - 1
பட்டணம் அகழாய்வுகளும், சங்ககாலத் துறைமுகம் முசிறியும்
காஞ்சி வைகுந்தப்பெருமாள் திருக்கோயில் - கலைப்படத் தொகுப்பு
இராமனை அறிதல்
Thirumeyyam - 6
Chola Ramayana 09
தப்பிப் பிழைத்த தமிழ்க் கூத்து - 1
தேடலில் தெறித்தவை - 7
சுவர்ச் சிற்பம் தீட்டும் காவியம்
சேக்கிழாரும் அவர் காலமும் - 7
ஆலக்கோயில் அமைந்த திருக்கச்சூர்
மீண்டெழுந்த சோழர் பெருநாள்
வரலாற்றின் தூண்டலில்...
சீயமங்கலம் அவனிபாஜன பல்லவேஸ்வரம்
பாதையில் கால்கள் பதியுமுன்..
மங்கல இசை மன்னர்கள் - பி.எம்.சுந்தரம்
வாசிப்பில் வந்த வரலாறு - 4
வீரமிகு புன்னகையே! வெற்றிவாகையே!
இதழ் எண். 100 > கலையும் ஆய்வும்
சுவர்ச் சிற்பம் தீட்டும் காவியம்
ஸ்தபதி வே.இராமன்
காவிரியும் கொள்ளிடமும் அரவணைத்துச் செல்லும் தெய்வீக மணம் கமழும் அழகு திருவரங்கத்தின் அரங்கநாதர் திருக்கோயில் பல சன்னிதிகளை தன்னகத்தே கொண்டதாகும். பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருவரங்கம் வைணவ சமயத்திற்கு ஒரு திசைவிளக்காய்த் திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆழ்வார்கள் அனைவராலும் போற்றி வணக்கப்பட்ட தலம் இது.

வைணவர்களுக்குக் கோயில் என்றாலே திருவரங்கம்தான். இத்தகைய திருக்கோயில் ஆதித்தன் கலைமுறையுடன் தொடங்கப்பெற்று பாண்டியர், போசளர், விஜயநகர நாயக்க மன்னர்கள் மேற்கொண்ட பலவித திருப்பணிகளால் இன்று விரிந்தும் பரந்தும் பரவசமாய்க் காட்சியளிக்கிறது.

தெற்குப் பார்த்த பார்வையில் அமைந்த இறைவன் திருமுன்னின் நான்கு திசைகளிலும் உள்ள திருச்சுற்றுகளில் சிறியதும் பெரியதுமாய் பல சன்னிதிகளும் விமானங்களும் கோபுரங்களும் அமைந்துள்ளன. தூரத்திலிருந்து கண்டு தரிசிக்கும் வகையில் அமைந்துள்ள தெற்கு இராஜகோபுரம் கட்டிடக் கலைக்கோர் உதாரணமாய் செம்மாந்து நிற்கின்றது.

வேணுகோபாலர் சன்னிதி

இவற்றுள் சிற்பக் கலையாலும் கட்டிடக் கலையாலும் சிறப்புற்று விளங்குவது ஐந்தாம் திருச்சுற்றுப் பாதையில் அரங்கவிலாச மண்டம் அருகே அழகே வடிவாய் விளங்கும் வேணுகோபாலர் சன்னிதியாகும். போசளர் பரம்பரையில் வந்த வீர ராமநாதனால் கி.பி.1270-ல் எடுப்பிக்கப்பெற்ற இக்கோயிலைக் குழலூதும் பிள்ளைக்கோயில் எனக் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. இந்தக் கோயில் கருவறை, முகமண்டபம். மஹாமண்டபம் மற்றும் படிக்கட்டு மண்டபம் எனப் பல அங்கங்களைப் பெற்று சிற்ப ஆகம நூல் மரபுப்படி அமையப் பெற்றதாகும்.

பல்லவர், பாண்டியர், சோழர் கலைமுறையினின்றும் மாறுபட்ட போசளர் கலைமுறையினைப் பின்பற்றிக் கட்டமைக்கப்பட்ட எழில்மிகு திருக்கோயிலாகும் இது.

இத்திருக்கோயிலின் மூலவர் கருவறை அமைந்துள்ள விமானம் இரண்டு தளங்களுடன் காட்சியளிக்கிறது. இதன் ஆதிதளம் உப பீடம் முதல் பிரஸ்தரம் (கூரை) வரை கருங்கல்லில் அமைய அதன் மேலுள்ள தள அமைப்புக்கள் செங்கல் மற்றும் சுதையால் அமைக்கப்பெற்றுள்ளன.

விமான ஆதிதளம்

கருவறை உள்ளடக்கியபடி கருங்கல் கட்டுமானமாக அமைந்துள்ள ஆதிதளம் பல்வேறு சிற்ப-கட்டுமான சிறப்புக்களைக் கொண்டுள்ளது. இதன் உறுப்புக்களை கலை நயத்துடனும் கற்பனைத் திறனுடனும் மிக கவனமாகவும் நுணுக்கமாகவும் சிற்பிகள் செதுக்கியுள்ளனர். இத்தளத்தில் சிறியதுதம் பெரியதுமாய் இடம்பெற்றுள்ள சிற்பங்கள் எண்ணிலடங்கா. ஒவ்வொரு சிற்பமும் ஒன்றுக்கொன்று மாறுபட்டதாய்ப் பல்வேறு நிலைகளில் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன.

இத்தளத்தின் புறச்சுவர்களில் பல அழகியர் வடிவங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

வீணையைத் தாங்கி இசை மீட்டுபவளாய் ஓர் அழகி. ஆடியில் முகம் நோக்கி நெற்றியில் திலகம் பதிப்பவளாய் இன்னொரு அழகி. காதல் மணாளனுடன் அணைப்பில் நெருங்கி உவகை நிலையில் உலகை மறந்தவளாய் ஓர் அழகி. ஆடைகள் முழுவதும் களைந்து அத்தனையும் மறந்தவளாய் இன்னொரு அழகி என்று புறச்சுவரெங்கிலும் அமைந்துள்ள இந்த அற்புத அழகியர் வடிவங்கள் கண்டு இன்புறத்தக்க வகையில் பேசும் கற்சிற்பங்களாய் கருவறையைச் சுற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

நிறுத்தப்பட்டுள்ளனர் என்றா கூறினோம்? இல்லை.. இல்லை.. சுவர்ப்பகுதியிலிருந்து உயிரும் உணர்ச்சியும் பெற்று மெல்ல அடியெடுத்து மெதுநடை போட்டு நம்மை நோக்கி வரவல்லவா செய்கிறார்கள்? கற்சிலைதான்.. ஆனால் அதில் கல் எங்கே இருக்கிறது?

ஆடியில் முகம்காணும் அழகி


கண்ணாடியில் முகம் காணும் அழகி, திருவரங்கம்.


மீண்டும் நெற்றியில் திலகமிட்டுக் கொண்டிருக்கும் அந்த அழகியைக் காண்போம்.

'காறை பூணும் கண்ணாடி காணும் தன் கையில் வளைகுலுக்கும் கூறை உருக்கும் அயர்க்கும் தன் கொவ்வைச் செவ்வாய் திருத்தும்' எனும் பெரியாழ்வாரின் திருமொழி வரிகளுக்குக் கல்லில் செதுக்கிய காவிய விளங்கமாகவல்வா நின்று கொண்டிருக்கிறாள் இந்த எழிலரசி?

நீள்சதுரப் பத்ம பீடத்தில் இடதுகாலை ஊன்றி வலது காலை மெல்ல எடுத்து வைத்த நிலை. தன் இடக்கையில் கண்ணாடி பார்த்து தன்னை மறந்து தன் வலக்கையால் திலகமிடும் நங்கையிவள். இந்தச் செயலை இவள் செய்யும் நிலையில்தான் எத்தனை நயம்! எத்தனை ஒயில்!

கண்ணாடி பார்க்கும் வட்ட வடிவ முகம், கோடிட்ட புருவம், பருவ அழகூட்டும் கண்கள், மூக்கு, இதழ்கள்... எழில்மிகு தோள்கள்.. உடல்மீது தவழும் கண்டிகை, பதக்கமணி, பதக்கம் பதித்த நீண்ட மணிச்சரம் ஆகிய அணிகள் யாவும் அழகுக்கு அழகு சேர்க்கின்றன.

வலது தோளின் மீது வலப்புறமாய்ப் பறந்து விரிந்த ஆடை அவள் நிற்கும் அழகைக் காவியமாக்குகின்றன. இடையில் மேகலை, இடைக்கட்டு, பதக்கம் பதித்த தொடைக்கட்டு, முழங்கால் வரை தொங்கும் அணிகள், ஆடையின் மடிப்பு மற்றும் கொசுவம் என்று அனைத்தும் இந்த எழிலரசியின் அழகைச் சிறக்கச் செய்கின்றன.

இத்தனை சிறப்புமிக்க உயிரோவியச் சிற்பங்கள் அரங்கனின் கோயில் வளாகத்தில் அழியாக் காவியமாய்த் திகழ்ந்து நம்மையெல்லாம் வியப்பில் ஆழ்த்துகின்றன.

தமிழகத்தின் சிற்பக்கலை நுட்பங்களையெல்லாம் கல்லில் தாங்கி நிற்கும் இந்தப் பேரழகை... ஆழ்வார் பதிகங்களுக்கு உயிர் கொடுத்தாற்போல் அழியாக் காப்பியமாக நிற்கும் அழகியரை.. நேரில் பார்த்து மகிழ்வதுபோல் சொற்களில் வடிக்க முடியவில்லைதான்.

கலைக்கும் கலைஞனுக்கும் எல்லையில்லை.

ஆனால் சொற்களுக்கு எல்லை உண்டல்லவா?this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.