![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 100
![]() இதழ் 100 [ அக்டோபர் 2013] நூறாவது இதழ் ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
முன்பெல்லாம் குடும்பத்தினருடன் நண்பர்களுடன் கோயில்களுக்கு செல்வதில் இறைவழிபாடு எனும் ஒரு நோக்கம் மட்டுமே மிகுந்து இருக்கும். குடும்பத்தோடு ஒன்றாக செல்கின்றோம் ,புதிதாக ஒரு கோயிலை காண்கிறோம் அவ்வளவுதான்
.ஆனால் கோயில்கள்தாம் நம் வரலாற்றின் எச்சங்கள் என வரலாற்று ஆய்வாளர் திரு கலைக்கோவன் அவர்களின் உரை பொறி தட்டினாற்போல் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியபின் எனது பார்வையே மாறிவிட்டது .அதற்குப்பின் எங்கு போனாலும் அந்த கோயிலின் களம், சரித்திர புலம் பற்றிய விசாரிப்பு, அதன் வடிவமைப்பைப் புரிந்துகொள்ள முயலுதல், ஏதேனும் கல்வெட்டுகள் காணப்படுகிறதா என்கிற தேடல், முடிந்தால் கோயிலார் அனுமதியுடன் புகைப்படம் எடுத்தல் என்று போக ஆரம்பித்து விட்டது. நண்பர் குடந்தை சு.சீதாரமனுடன் உடன் பயணித்து நான் கண்ட தருமபுரி சிவன் கோயில், அம்மன் கோயிலின் உப பீடத்தில் உள்ள இராமாயண சிற்பங்கள், மதுரை மீனாட்சியம்மன் கோயில், அழகர்கோயில் பெருமாள் கோயில், திருவெள்ளறை நடுகல் - இப்படிக் கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறிந்த செயல்பாடுகள் மேலும் மேலும் வரலாற்று சின்னங்களை தேடித் தேடிப் போய்ப் பார்க்கத் தூண்டின. அத்தகைய தூண்டுதல்களினால் சமீப காலங்களில் நான் கண்ட சில கோயில்களின் பின்புலம் பற்றிய எனது அனுபவங்களை இங்கே வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். திருநெல்வேலி நகருக்கு அருகில் புறவழிச்சாலையை ஒட்டி சுமார் 1/2 கிலோமீட்டர் தொலைவில் மணிமூர்த்தீஸ்வரம் கிராமத்தில் தாமிரபரணி நதிக்கரையில் விநாயகருக்கென்று தனிக்கோயில். ராஜகோபுரத்துடன் எட்டுநிலை மண்டபங்கள், மூன்று திருச்சுற்றுகள் கொடிமரத்துடன் அமைந்துள்ளன. சுமார் 600 வருடங்களுக்கு முந்திய கோயில் என்றார்கள். நான் சென்ற சமயம் அங்கே திருப்பணிகள் நடந்துகொண்டிருந்தன. அங்கிருந்த அர்ச்சகரிடம் திருப்பணி செய்யும்போது கோயிலில் எங்கேனும் கல்வெட்டுகளைக் கண்டீர்களா? என வினவிய போது 'இப்ப ஒன்றும் இல்லை. ஆங்கிலேயர் காலத்தில் மேடை போலீஸ் ஸ்டேஷன் கட்ட இங்கிருந்து கற்களை எடுத்து சென்றதாக கூறுவார்கள். ஒருவேளை அதில் எதாவது கல்வெட்டுகள் இருக்கலாம்' என்றார். திருப்பணி கமிட்டி பொருளாளர் திரு சாய் குமாரிடம் போனில் தொடர்புகொண்டு 'கும்பாபிஷேகம் செய்யும்போது தலவரலாறு வெளியிடுவீர்கள் அல்லவா? அதில் இந்த கோயில் குறித்து கேள்வி ஞானமாக கூறுவதை விட மேடை போலீஸ் ஸ்டேஷன் சென்று நேரில் ஆய்வு செய்யுங்கள். குறைந்த பட்சம் அது உண்மையா இல்லையா என்று தெளிவு கிடைக்குமே? .பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் "டிஸ்ட்ரிக்ட் கெஸடீயரில் இந்த கோயிலை பற்றிய தகவல்கள் கிடைக்கலாம். அதையெல்லாம் சேகரித்து சரியான தகவல்களை தரலாமே?' எனக்கூறி விடை பெற்றேன். ![]() ஆண்டிச்சிப்பாறை குடைவரை திருநெல்வேலிக்கு அருகிலேயே கங்கைகொண்டானை அடுத்து பதினாலாம் பேரிக்கு திரும்பும் கிழக்கு பாதையில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ஆண்டிச்சிப்பாறை அமைந்துள்ளது. திருப்பணி என்ற பெயரில் பண்டைய கோயில்களின் கல்வெட்டுக்களையும் கட்டுமானங்களையும் அழித்துக் கொண்டிருக்கும் பக்தி புயலுக்கு நடுவே இறையருளால் இதுவரை தப்பி பிழைத்திருக்கும் இந்தக் குடைவரை பிறந்தமேனிக்குக்கு காட்சிதருகிறது. மகுடமற்ற இடம்புரி விநாயகரும், மகன் மகள் புடைசூழ அமர்ந்திருக்கும் சேட்டைதேவியும் புடைப்பு சிற்பங்களாக உள்ளனர். இச்சிற்பங்கள் 8ஆம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம் என்று வரலாறு 42ம் இதழில் படித்த நினைவு. ![]() ஆண்டிச்சிப்பாறை குடைவரை சிற்பங்கள் என் துணைவியாரின் சொந்த ஊரான சீவலபேரி செல்லும் வழியில் இதையும் கண்டு வரலாமே என்கிற நினைப்பில் உறவினர் பிரேமானந்த் வழிகாட்ட மோட்டார் சைக்கிளில் சென்றோம். குடைவரை அமைந்துள்ள கற்குன்றை மறைத்து prosofisjuliflora எனப்படும் வேலிகாத்தான் முள்செடி மரமாக வளர்ந்து கிடந்தது. உள்ளே சென்று காணமுடியாத நிலை .சற்று தூரத்தில் ஒரு நிலத்தை பொக்லைன் வைத்து சமனம் செய்துகொண்டிருந்தார்கள். பிரேமானந்த் அந்த ஓட்டுனரிடம் சென்று பேசிவிட்டு வந்தார். தெரிந்தவர் போலும். பொக்லைனைத் திருப்பி நாங்கள் சென்று பார்க்குமளவிற்கு முட்களை அகற்றி வழி செய்து கொடுத்தார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு உள்ளே நுழைந்தோம். ![]() ஆண்டிச்சிப்பாறை குடைவரை சிற்பங்கள் ![]() முனைவர் இரா.கலைக்கோவன் அவர்களால் சில வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ஆண்டிச்சிப்பாறை குடைவரை நாங்கள் சென்ற நேரம் நல்ல உச்சி வெயில். கையில் இருந்த செல் போன் கேமராவால் சில புகைப்படங்கள் எடுத்துகொண்டோம் .2008ம் ஆண்டு வரலாறு 42ம் இதழ் வர்ணித்திருக்கும் நிலையில் இருந்து சற்றும் மாறுபடாமல் குடைவரை காட்சியளித்தது. இவ்வாறு வெய்யில் மழையிலிருந்து குடைவரையைப் காப்பாற்றிய அந்த வேலிகாத்தான் மரத்தை குடைவரை காத்தான் என்றே அழைக்கலாமென்று தோன்றியது. வருடாந்திரக் குற்றாலம் பயணத்தில் அருவியில் குளித்த நேரம் போக அங்குள்ள இலஞ்சி முத்துக்குமாரசாமி கோயில்,தோரணமலை ,குற்றாலீஸ்வரர் கோயில்,திருமலைக்கோயில் என பல திருக்கோயில்களை வலம் வந்தோம். பேரருவியில் குளிக்கும்போது உள்ளூர் நண்பர் அண்ணாமலை ஆண்கள் குளிக்கும் பகுதியில் பேரருவி கொட்டும் மலை விளிம்பின் அடியில் சில சிவலிங்கங்கள் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டு இருப்பதைக் காட்டினார். அருவியில் நீர் இல்லாதபோது இந்தச் சிற்பங்களை புகைப்படமாக எடுத்து வைத்திருக்கிறேன் என்றுவேறு அவர் கூறவே அவசரமாக அவரது வீட்டிற்குச் சென்றோம். ![]() குற்றாலம் சிற்பங்கள் ![]() குற்றாலம் சிற்பங்கள் புகைப்படங்களை உடனே மெயிலில் திரு கலைக்கோவன் அவர்களுக்கு அனுப்பி வைத்து அவற்றின் பழமை, காலம் பற்றி கேட்டபொழுது அவை மிகவும் பிற்காலத்தியன. ஆனால் ஐந்தருவி மலைப் பகுதியில் சுமார் 15 கி.மீ. தொலைவில் வாய்தா மலை என்னுமிடத்தில் நிறைவுபெறாத குடைவரை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது, முடிந்தால் அது குறித்து மேல்விவரங்கள் அறிந்து வாருங்கள் என்றார் .வனத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற நண்பர் அண்ணாமலை மழைக்காலம் முடிந்து பாறை வழுக்கல் இல்லாமல் காய்ந்து இருக்கும்போது போய் பார்த்து வருவோம் என்றார். அதற்கான வாய்ப்புக் கிடைக்குமென்று எதிர்பார்க்கிறேன். அடுத்த நாள் அருகில் உள்ள கீழப்பாவூரில் திருக்காவலீச்வரர் மற்றும் பிரசன்ன வேங்கடாசலபதி கோயில்களுக்குச் சென்றோம். பெருமாள் கோயில் சமீபத்தில் புத்துருக்கு பெற்றுள்ளது .அங்கிருந்து 500 மீ. தொலைவில் உள்ள சிவாலயம் பழைமை மாறாமல் உள்ளது .சில கல்வெட்டுகள் சுண்ணாம்பு பூச்சில் மறைந்துள்ளன. கோயில் அர்ச்சகர் அச்சிட்ட வரலாற்றுக்குறிப்பு ஒன்றை தந்தார். அதில் சோழராட்சிக் காலத்தில் ஷத்ரிய சிகாமணி நல்லூர் என்றும் பாண்டியராட்சிகாலத்தில் பாகூர் என்றும் அழைக்கப்பட்டதாக தெரிகிறது. ஷத்ரிய சிகாமணி என்பது முதலாம் ராஜராஜனின் விருது பெயர்களுள் ஒன்று. கீழப்பாவூரின் எல்லைகளாக அரிஞ்சிகைப் பிராட்டி சதுர்வேதி மங்கலமும், தெலுங்க குலகாலச் சதுர்வேதி மங்கலமும் குறிக்கப்பட்டுள்ளன. ஆகையால் இவ்வூர் 10நூற்றாண்டிற்கு முற்பட்டதாக இருக்கலாம் என கணிக்கிறார்கள். இங்குள்ள பாசன வாய்க்கால் வீரராஜேந்திரன் வாய்க்கால் என்றே இன்றும் வழங்கி வருகிறது முனையெதிர் மோகர், தென்னவன் ஆபத்துதவிகள் போன்ற பெயரில் போர்ப் படைகள் இங்கு தண்டிறங்கி இருந்ததைப் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டுக்களில் மெய்க்கீர்த்தியும் ,நிவந்தம் கொடுத்த விவரங்களும் உள்ளன என்பது தெரியவந்தது. இது போல கோயில்களை தேடிப் பயணித்த இடங்களுள் ஐஹோளே ,பட்டடக்கல் ,பேலூர்,ஹளபேடு ஹாசன்,ஹம்பி பிஜப்பூர் லேபாக்ஷி போன்றவை குறிப்பிடத்தக்கன .வரலாற்று சின்னங்கள் அங்கெல்லாம் தொல்பொருள் துறையால் நன்கு பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது .உள்ளூர் மக்களின் சிந்தனையும் செயலும் அன்றாட வாழ்வாதாரம் தேடி உழைப்பதில் கழிந்துவிடுவதால் பழமையான சின்னங்களுக்கு பாதகம் ஏற்படவில்லை . தென்னிந்தியாவில் வரலாற்று சின்னங்களாகிய கோயில்களுக்கு குறைவில்லை,-ஆயினும் முறையான காலவரிசைத் தொகுப்போ ,கல்வெட்டுகளை பற்றிய விவரங்களோ கிடைப்பதில்லை .அந்தந்த கோயில்களிலேயே அங்குள்ள கல்வெட்டு வரி விவரங்கள், பொருள், அதன் காலம் போன்ற தகவல்களைத் தந்து பொதுமக்களும் எதிர்கால சமுதாயமும் வரலாற்றின் எச்சங்களை அறிந்துகொள்ள வகை செய்யலாம் . this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |