http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 104

இதழ் 104
[ பிப்ரவரி 2014]


இந்த இதழில்..
In this Issue..

தமிழ் அமுதம்
தேடலில் தெறித்தவை - 10
Chola Ramayana 11
பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் - கண்ணனூர்
Gokarneswara - 2
ஆய்வுப் பாதையில் ஆங்காங்கே - 2
அம்பர் பெருந்திருக்கோயில்
அறுவர்க்கு இளையநங்கை - 2
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 1
வட்டணை ஆடல் கண்ட திருவாய்மூர் திருக்கோயில்
Book Street Bonanza-2
இதழ் எண். 104 > கலையும் ஆய்வும்
அம்பர் பெருந்திருக்கோயில்
இரா.கலைக்கோவன், மு.நளினி
தஞ்சாவூர் மாவட்டம் மயிலாடுதுறை நன்னிலம் பெருவழியில் பூந்தோட்டத்திற்குத் தென்கிழக்கில் 3 கி. மீ. தொலைவில் காரைக்கால் செல்லும் சாலையில் அமைந்துள்ளது அம்பர். துணைத்தளம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் எனக் கீழ்த்தளம் அமைய, மேலிரண்டு தளங்களும் ஆரஉறுப்புகளும் சுதையுருவங்கள் அற்றனவாய் வடிவெடுத்துள்ளன. முத்தளம் பெற்றுள்ள இந்தக் கோபுர வாயில் வழி உள்நுழைவாரை எதிர்கொள்கிறது பாடல் பெற்ற(1) அம்பர்ப் பெருந்திருக்கோயில்.(2)


வெற்றுத்தளத்தின் மீது விமானம்


அம்மன் கோயில்

சுற்றின் வடபுறத்தே தென்பார்வையாக உள்ள பூங்குழல் நாயகியின் விமானம் துணைத்தளம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், வெட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் பெற்ற ஒருதள வேசரமாக அமைந்துள்ளது. விமானச் சுவரில் முப்புறத்தும் உள்ள கோட்டப் பஞ்சரங்களும் கிரீவகோட்டங்களும் வெறுமையாக உள்ளன. விமானத்தின் முன்னுள்ள முகமண்ட பம் உறுப்பு வேறுபாடற்ற தாங்குதளம், நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், உத்திரம், வாஜனம், வலபி பெற்று, வண்டிக்கூடு கூரை கொண்டுள்ளது.

பெருமண்டபம் விமானம் போலவே தாங்குதளம், சுவர் பெற்றிருந்தபோதும் கூரை வண்டிக்கூடு அமைப்பிலேயே உள்ளது. அதன் முன்னுள்ள முன்றில் வெறுமையாக உள்ளது. எண்முகத் தூண்கள் தாங்கும் பெருமண்டபத்தின் வடக்குச் சுவரில் முகமண்டப வாயிலின் இருபுறத்தும் இரண்டு அறைகள் உள்ளன. ஆடிப்பூரஅம்மனுக்கான மேற்கு அறை வெறுமையாக உள்ளது. கிழக்கு அறை பள்ளியறையாகப் பயன்படுகிறது. தூண்களற்ற முகமண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவி பூங்குழல்நாயகியாய்ப் பட்டாடை, சடைமகுடம், கழுத்தணிகள் இவற்றுடன் பின்கைகளில் அக்கமாலை, குண்டிகை ஏந்தி, முன் கைகளில் காக்கும் குறிப்பும் அருட்குறிப்பும் காட்டி நிற்கிறார்.

வாகன மண்டபம்

சுற்றின் கிழக்கில் கொடிமரமும் பலித்தளமும் பேரளவிலான நந்தியொன்றும் அமைய, வடகிழக்கில் வேள்விச்சாலையும் வாகன மண்டபமும் உள்ளன. செங்கல் கட்டுமானமாய் உள்ள வாகன மண்டபத்தின் முகப்பு, குடைவரைக் கால அமைப்பைப் பின்பற்றியுள்ளது. பக்கச் சுவரொட்டி இரண்டு அரைத்தூண்களும் நடுவில் இரு முழுத்தூண்களும் சதுரம், கட்டு, சதுரம் என்ற அமைப்பில் இம்மண்டபத்தின் முகப்பாகியுள்ளன. பாலி, பலகை பெற்றுள்ள இத்தூண்களின் மீதுள்ள மதலைகள் உத்திரம், வாஜனம், வலபி தாங்கக் கபோதமும் காட்டப்பட்டுள்ளது.

முழுத்தூண்களின் தெற்கு முகத்தில் ஒரு கால் பஞ்சரங்கள் திகழ்கின்றன. அரைத்தூண்களில் இந்தப் பஞ்சரங்கள் அரையளவினவாய் இடம்பெற்றுள்ளன. முழுத்தூண்களின் பின்னால் அதே அமைப்பில் இரண்டு வரிசைகளில் மேலும் நான்கு முழுத்தூண்கள் அமைந்துள்ளன. மாறுபட்ட அமைப்புடைய இம்மண்டபம் கி. பி. பதினான்காம் நூற்றாண்டளவில் இப்பகுதியில் விளங்கிய கலைமரபுகளின் படப்பிடிப்பாக உள்ளது.

சுற்றாலைத் திருமுன்கள் சுற்றின் தென்கிழக்கிலும் தென்மேற்கிலும் மேற்கிலும் வடக்கிலும் உள்ள ஒருதள நாகர விமானங்களில் பிள்ளையார்களும் தேவியருடன் முருகனும் ஜம்புகேசுவரரும் திகழ, வடமேற்கிலும் வடக்கிலும் உள்ள சபைக் கூரை போன்ற நாகர சிகரம் பெற்ற ஒருதள விமானங்களில் யானைத்திருமகளும் சண்டேசுவரரும் இடம் பெற்றுள்ளனர்.

தென்மேற்கில் உள்ள இடம்புரிப் பிள்ளையார்களுள் முதலாமவரும் மூன்றாமவரும் ஒன்று போல் உள்ளனர். பின்கைகளில் அங்குசம், பாசம். முன்கைகளில் தந்தம் மோதகம் கொண்டுள்ள இவர்களுள் மூன்றாமவரின் மகுடம் சற்று நீளமாக உள்ளது. நடுவில் உள்ளவர் முன்னவர்களை ஒத்திருந்தபோதும் இடம்புரித் துளைக்கையில் மோதகம் கொண்டுள்ளார். கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், பட்டாடை, ஸ்வர்ணவைகாக்ஷம் கொண்டு காட்சிதரும் முருகனின் பின் கைகளில் சக்தி, வ{ரம். முன்கைகள் காக்கும் குறிப்பிலும் அருட்குறிப்பிலும் உள்ளன. தேவியர் இருவரும் கரண்டமகுடம், பட்டாடை அணிந்து, வெளிக்கைகளை நெகிழ்த்தி, உள்கைகளில் மலர் கொண்டுள்ளனர்.

யானைத்திருமகள் தொகுதியில் உயர்த்திய துளைக்கைகளில் உள்ள குடங்களைக் கவிழ்த்தபடி நிற்கும் யானைகள் தனிச் சிற்பங்களாக அமைய, நடுவிலுள்ள திருமகள் உயரமான மேடையில் கால்களைக் கீழே தொங்கவிட்ட நிலையில் அமர்ந்துள்ளார். சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், பட்டாடை அணிந்துள்ள அவரது இரு கைகளிலும் தாமரை. சடைப்பாரம், பனையோலைக் குண்டலங்கள், பட்டாடை அணிந்தவராய் சுகாசனத்தில் உள்ள சண்டேசுவரரின் வலக்கையில் மழு. இடக்கை தொடை மீது உள்ளது.

வெற்றுத்தளம்

வளாகத்தின் நடுவிலுள்ள பிரம்மபுரீசுவரர், சோமாஸ்கந்தர் விமானங்களைத் தாங்கும் வெற்றுத்தளம் முறையான தாங்குதளம் அற்ற நிலையில் ஆங்காங்கே நான்முக அரைத் தூண்கள் தழுவிய வெறுஞ்சுவராய்க் காரைக் கட்டுமானமாய் 2. 42 மீ. உயரம் பெற்று அமைந்துள்ளது. இச்சுவரின் கிழக்கு முகத்தில் தெற்கிலிருந்து வடக்காக இடம்பெற்றுள்ள மூன்று சிற்பங்களுமே பழைமையானவை. முதற் சிற்பம் ஆடல் காட்சியாக அமைந்துள்ளது. இரண்டாவது சிற்பத்தில் சடைமகுடம், வலச்செவியில் மகரகுண்டலம், இடச்செவியில் பனையோலைக் குண்டலம், சரப்பளி, தோள், கை வளைகள், சிற்றாடை அணிந்து கத்தியை இடத்தோளில் சாத்திய நிலையில் முன்கைகளால் வணங்கி நிற்கும் அதிகார நந்தியின் பின்கைகளில் மான், மழு. அவரது அருகிலுள்ள தேவி கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், தோள், கை வளைகள், பட்டாடை அணிந்து வலக்கையில் மலரேந்தி, இடக்கையை நெகிழ்த்தியுள்ளார். இச்சிற்பம் இக்கோயிலில் இருந்த மகரதோரணத்தின் எச்சமாகலாம்.

மூன்றாவதாக உள்ள தேர்ச்சிற்பத்தில் தேரில் இருப்பவர்களாய் இருவர் காட்டப்பட்டுள்ளனர். முன்னதாக உள்ள தேர்ப்பாகர் பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல் அணிந்து இடக்கையில் கடிவாளத்தைப் பிடித்தவாறு வலக்கையில் சின்முத்திரை காட்டி, தேர்க்காலின் மீது வலக்காலை ஊன்றியவராய்க் காட்சிதருகிறார். கிரீடமகுடமணிந்து பின்னாலுள்ளவர் கைகள் சிதைந்துள்ளன. அவை வணக்க முத்திரையில் இருந்திருக்கலாம் என ஊகிக்குமாறு சிதைவுகள் உள்ளன. இக்காட்சி கீதோபதேசக் காட்சியாகலாம்.

கோட்டங்கள்

வெற்றுத்தளத்தின் முகமண்டபஞ் சார்ந்த பகுதியின் தெற்கிலும் வடக்கிலும் காணப்படும் ஆழமான கோட்டங்களில் பிள்ளையாரும் மகிடாசுரமர்த்தனியும் உள்ளனர். விமானஞ் சார்ந்த மேற்கு, வடக்குக் கோட்டங்களில் விஷ்ணுவும் நான்முகனும் இடம்பெற்றுள்ளனர். தெற்கில் கோட்டம் இல்லை. பின்கைகளில் அங்குசம், பாசம்; முன்கைகளில் தந்தம் மோதகம் கொண்டு, இடம் புரியாக இலலிதாசனத்தில் உள்ள பிள்ளையார் கரண்டமகுடம் பெற்றுள்ளார்.

வடக்கிலுள்ள மகிடாசுரமர்த்தனி கற்றளத்தின் மீது நின்றாலும் கீழே மகிடனின் தலையும் காட்டப்பட்டுள்ளது. கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், பட்டாடை, கழுத்தணிகள் அணிந்துள்ள அம்மையின் பின்கைகளில் சக்கரம், சங்கு. முன் கைகளில் வலக்கை காக்கும் குறிப்புக் காட்ட, இடக்கை கடியவலம்பிதமாக உள்ளது. மேற்கிலுள்ள விஷ்ணு கிரீடமகுடம், மகர குண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல், பட்டையான உதரபந்தம், பட்டாடை அணிந்து பின்கைகளில் சக்கரம், சங்கு கொண்டு, வல முன் கையைக் காக்கும் குறிப்பில் கொண்டுள்ளார். இட முன் கை கடியவலம்பிதமாக உள்ளது. நான்முகன் சடைமகுடம் சரப்பளி, முப்புரிநூல், உதரபந்தம், பட்டாடை அணிந்து பின்கைகளில் அக்கமாலையும் குண்டிகையும் பெற்றுள்ளார். அவரது வல முன் கை காக்கும் குறிப்புக் காட்ட, இட முன் கை கடியவலம்பிதமாக உள்ளது.

படிகள்

வெற்றுத்தளத்தின் தென்புறத்தே காணப்படும் பதினான்கு படிகள் மாடக்கோயிலின் முன்மண்டப நுழைவாயிலுக்கு அழைத்துச் செல்கின்றன. பத்தாவது படியில் காணப்படும் மேற்குமுகத் திருப்பம் மூன்று படிகளுடன் மாடக்கோயில் வெளிச்சுற்றுக்கு வழிவிடுகிறது. வடபுறத்தே சண்டேசுவரர் திருமுன்னை ஒட்டி அமைந்துள்ள பதினொரு படிகளும் இவ்வெளிச்சுற்றிலேn முடிகின்றன.

முன்மண்டபம்

முற்றிலும் செங்கல் கட்டுமானமாய் அமைந்துள்ள முன்மண்டபத்தில் தெற்கிலிருந்து வடக்காக பைரவர், அம்மன், நான்முகன், அப்பர், ஞானசம்பந்தர், கோச்செங்கட்சோழன், முருகன், பிள்ளையார் சிற்பங்கள் காணப்படுகின்றன.

மண்டபத்தின் வலக்கோடியில் ஒன்பான்கோள்கள் உள்ளன. கொண்டையாக முடித்த தலைமுடி, பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, சிற்றாடை இவற்றுடன் காட்சிதரும் கோச்செங்கணானின் இரண்டு கைகளும் வணங்கிய நிலையில் உள்ளன. முன் மண்டபத்தின் மேற்குச் சுவரிலுள்ள இரண்டு வாயில்களுள் தென்வாயில் சோமாஸ்கந்தர் திருமுன்னுக்கும் வடவாயில் இறைவன் திருமுன்னுக்கும் வழி விடுகின்றன.

சோமாஸ்கந்தர் திருமுன்

பெருமண்டபம், முகமண்டபம், ஒருதள வேசர விமானம் என அமைந்துள்ள இத்திருமுன்னின் பெருமண்டபக் கூரையை முச்சதுர, இருகட்டுத் தூண்கள் வெட்டுத் தரங்கப் போதிகைகளுடன் தாங்குகின்றன. தெற்குச் சுவரில் சாளரம் பெற்று வெறுமையாக உள்ள

இதையடுத்துக் காணப்படும் முகமண்டபம் தெற்கு, மேற்கு, வடக்கு முப்புறத்தும் மேடை பெற்றுள்ளது. இம்மேடைகளில் செப்புத்திருமேனிகள் உள்ளன. பெருமண்டபம் போலவே தூண்களும் போதிகைகளும் பெற்றுள்ள இம்மண்டபத்தை அடுத்துக் காரைக் கட்டுமானமாக அமைந்துள்ள விமானக் கீழ்த்தளம் உறுப்பு வேறுபாடற்ற தாங்குதளம், அங்கொன்றும் இங்கொன்றுமாய் நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், கூரையுறுப்புகள் பெற்று அமைந்துள்ளது. சுவரில் தெற்கிலும் மேற்கிலும் கோட்டங்கள் உள்ளன.

தெற்குக் கோட்டத்தில் சடைப்பாரம், சிற்றாடை கொண்டு, வீராசனத்தில் வலப்பாதத்தை முயலகன் மீது இருத்தியுள்ள ஆலமர்அண்ணலின் பின்கைகளில் பாம்பும் தீச்சுடரும் அமைய, வல முன் கை சின் முத்திரையில் உள்ளது. இட முன் கை தொடை மீது இருத்தப்பட்டுள்ளது. இறைவனின் இருபுறத்தும் பக்கத்திற்கிருவராக முனிவர்கள். மேற்குக் கோட்டம் வெறுமையாக உள்ளது.

கருவறையிலுள்ள மேடையில் சோமாஸ்கந்தர் தொகுதியும் தனி உமையும் இடம்பெற்றுள்ளனர்.

சடைமகுடம், தோள், கடக, கை வளைகள், முப்புரிநூல், உதரபந்தம், சிற்றாடை, சிலம்பு கொண்டு சுகாசனத்தில் உள்ள சிவபெருமானின் பின்கைகளில் மான், மழு. அவரது வல முன் கை ஆகூய வரதத்தில் அமைய, இட முன் கை கடகமாக உள்ளது. கரண்டமகுடம், பூட்டுக்குண்டலங்கள், ஸ்வர்ணவைகாக்ஷம் அரும்புச்சரம், பட்டாடை அணிந்து இறைவனின் இடப்புறம் சுகாசனத்திலுள்ள உமை, இரு கைகளையும் கடகத்தில் இருத்தியுள்ளார்.

கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், ஸ்வர்ணவைகாக்ஷம் அணிந்துள்ள முருகன் சிவபெருமானுக்கும் உமைக்கும் இடையில் சற்றே முகம் நிமிர்த்திய நிலையில் குழந்தை அமர்வில் உள்ளார். மலரேந்திய அவரது வலக்கை கடகத்தில் அமைய, ஆகூய வரதத்திலுள்ள இடக்கை சிதைந்துள்ளது. இவர்களின் அருகே உள்ள தனி உமை கரண்டமகுடம், மகரகுண்டலங்கள், அரும்புச்சரம், முப்புரிநூல், பட்டாடை, இடைக்கட்டு, குறங்குசெறி அணிந்தவராய் வலப்பாதத்தை சமத்தில் இருத்தி, இடப்பாதத்தைத் திரயச்ரத்தில் திருப்பியுள்ளார். வலக்கை மலருடன் கடகமாக, இடக்கை நெகிழ்ந்துள்ளது.


கபோதக்கூடு சிற்பம்


இறைவன் திருமுன்

வடவாயிலை அடுத்துப் பெருமண்டபம், முகமண்டபம், விமானம் இவை அமைந்துள்ளன. முச்சதுர, இருகட்டுத் தூண்கள் வெட்டுப் போதிகைகளின் உதவியுடன் கூரை தாங்கும் இம்மண்டபத்தில் பலித்தளமும் நந்தியும் உள்ளன. மண்டபத்தின் வடபுறம் உள்ள அறையில் ஆடவல்லானும் உமையும் இடம்பெற்றுள்ளனர்.

ஆடவல்லான், உமை

தோள்மாலை, தோள், கடக, கை வளைகள், சிற்றாடை, முறுக்கிய உதரபந்தம், முப்புரிநூலென மடித்தணியப்பட்ட துணி இவற்றுடன் பின்கைகளில் உடுக்கையும் தீச்சுடரும் ஏந்தி, வலத்திருவடியை முயலகன் முதுகின்மீது இருத்தி, இடக் காலை வலப்புறம் வீசி ஆனந்தத் தாண்டவம் நிகழ்த்துகிறார் இறைவன். அவரது தாண்டவ வீச்சில் தடுமாறும் முயலகனின் துன்பம் வாய் திறந்த அலறலாகக் காட்டப்பட்டுள்ளது. இறைவனின் பாம்பு சுற்றியுள்ள வல முன் கை காக்கும் குறிப்புக் காட்ட, இட முன் கை வேழ முத்திரையில் உள்ளது. விரிசடையின் வலப்புறம் வணங்கிய கங்கை. இடப்புறம் பாம்பு. இருபுறத்தும் நெருஞ்சிப் பூக்கள். வலச்செவியில் மகரகுண்டலம். இடச்செவியில் பனையோலைக் குண்டலம். கால்களில் வீரக்கழல்.

ஆடலை இரசித்தவாறு சடைமகுடம், மகரகுண்டலங்கள், சரப்பளி, தோள், கடக, கை வளைகள், முப்புரிநூல், பட்டாடை, குறங்குசெறி அணிந்து இடப்புறம் நிற்கும் உமையன்னை வலக்கையில் கடகம் காட்டி, இடக்கையை நெகிழ்த்தியுள்ளார்.

திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் ஆடவல்லானின் வலப்புறத்தே வலக்கையில் சின்முத்திரை காட்டி, இடக்கையில் சுவடி ஏந்தி, மழித்த தலையும் சிற்றாடையுமாய்க் காட்சி தருகிறார். கழுத்தில் உருத்திராக்கமாலை.

முகமண்டபம்

பெருமண்டபத்தின் மேற்குச் சுவரில் காணப்படும் முகமண்டப வாயிலின்இருபுறத்தும் உள்ள காவலர்கள் கீர்த்திமுகம் பெற்ற சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, பூவேலைப்பாடுகளுடனான முப்புரிநூல், கோரைப்பற்கள், தோள், கை வளைகள், சிற்றாடை, கால் வளைகள், சிலம்பு கொண்டு வல முன் கை அச்சுறுத்த, இட முன் கையை மழுவின் மேல் இருத்தியுள்ளனர். பின்கைகள் போற்றி, வியப்பு முத்திரைகளில் உள்ளன. தெற்கர் வலக்காலை மழு மேல் இருத்தி, இடக்காலைத் தரையில் ஊன்ற, வடக்கர் இடக்காலை மழு மேல் இருத்தி, வலக்காலைத் தரையில் ஊன்றியுள்ளார்.

முகமண்டபத்தின் கூரையை முச்சதுர, இருகட்டுத் தூண்கள் வெட்டுத் தரங்கப் போதிகைகளின் உதவியுடன் தாங்க, வடமேற்கு மூலையில் இன்பவல்லி அன்னை உத்குடியாசனத்தில் உள்ளார். சடைமகுடம், மகரகுண்டலங்கள், தோள்மாலை, அரும்புச்சரம், பட்டாடை, தோள், கை வளைகள், நெளிச் சலங்கை, பாடகம் அணிந்துள்ள தேவியின் வலக்கை கடகத்தில் அமைய, இடக்கை தளத்தின்மேல் இருத்தப்பட்டுள்ளது.


விமானம்


விமானம்

தாமரை உபானத்துடனான பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, எண்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், வெட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் பெற்றுள்ள இறைவனின் ஒருதளத் திராவிட விமானத்தின் கீழ்த்தளம் 4. 52 மீ. பக்கமுடைய சதுரமாக அமைந்துள்ளது. சுவரில் கோட்டங்கள் இல்லை. கிரீவகோட்டங்களில் தெற்கில் வீராசனத்தில் ஆலமர்அண்ணலும் மேற்கில் உத்குடியமர்வில் பரமபதநாதரும் வடக்கில் தேவியருடன் சுகாசனத்தில் நான்முகனும் காட்டப்பட்டுள்ளனர்.

கருவறை வாயிலின் வடபுறச் சுவரிலுள்ள கோட்டத்தில் காவலர் காட்டப்பட்டுள்ளார். கரண்டமகுடம், மகரகுண்டலங்கள், சரப்பளி, சிற்றாடை அணிந்து அடர்த்தியான மீசையுடன் வல முன் கையால் அச்சுறுத்தி, இட முன் கையை மழுவின் மீது நெகிழ்த்தியுள்ள காவலரின் வலப் பின் கை போற்ற, இடப் பின் கை வியப்பு காட்டுகிறது. இடப்பாதம் தரையில் படர, வலப்பாதம் மழுவின் மேல். தென்சுவரில் கோட்டம் இல்லை. கருவறையில் பிரம்மபுரீசுவரர் வேசர ஆவுடையாரின் மீது உருளைப் பாணம் கொண்டு அமைய, பின்சுவரை ஒட்டியுள்ள மேடையில் சோமாஸ்கந்தர் சிற்பங்கள் இருத்தப்பட்டுள்ளன.

சடைமகுடம், மகர, பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, சிற்றாடை இவற்றுடன் சுகாசனத்தில் உள்ள சிவபெருமானின் பின்கைகளில் மழு, மான். வல முன் கை காக்கும் குறிப்புக் காட்ட, இட முன் கை கடகத்தில் உள்ளது. இறைவனின் இடப்புறமுள்ள உமை கரண்டமகுடம், மகரகுண்டலங்கள், கழுத்தணிகள், பட்டாடை அணிந்து சுகாசனத்தில் உள்ளார். அவரது வலக்கை நீலோத்பலம் ஏந்த, இடக்கை அருட்குறிப்பில் உள்ளது. இருவருக்கும் இடையில் நிற்கும் முருகன் இரண்டு கைகளிலும் மலர் கொண்டுள்ளார்.

முன்மண்டபம், பெருமண்டபம், முகமண்டபம் இவற்றின் புறச்சுவர்கள் வெற்றுத்தளம் போலவே காரைக் கட்டுமானமாய் உள்ளன. பெருமண்டபத்தின் வடசுவரில் மட்டும் பாதபந்தத் தாங்குதளம் காணப்படுகிறது. இறைவன் விமானத்தின் தெற்கு, மேற்கு, வடக்குப் பக்கங்களில் விமானக் கட்டுமானத்தைக் காணுமாறு திருநடைமாளிகை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நான்முகத் தூண்கள் வெட்டுப் போதிகைகள் கொண்டு, இம்மாளிகையின் வண்டிக்கூடு கூரையைத் தாங்குகின்றன. தூண்களின் உடலைக் குடப்பஞ்சரங்கள் அலங்கரிக்கின்றன.

கல்வெட்டுகள்

இக்கோயிலில் இருந்து முழுமையான கல்வெட்டு ஒன்றும் துணுக்குக் கல்வெட்டுகள் பலவும் படியெடுக்கப்பட்டுள்ளன. சோமாஸ்கந்தர் கோயிலில் காணப்படும் மூன்றாம் இராஜராஜரின் பத்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு உய்யக்கொண்டார் வளநாட்டு அம்பர் நாட்டு வைகாவூராகிய எதிரிலி சோழ நெற்குன்றத்தில் எழுந்தருளியிருந்த எதிரிலி சோழீச்சுவரம் உடையாருக்கு அம்பர் நகரத்தில் வாழ்ந்த வணிகர் பரித்திக்குடையான் இரண்டு விளக்குகள் ஏற்ற வாய்ப்பாகப் பத்துக் காசுகள் தந்தத் தகவலைத் தருகிறது. இக்காசுகளைப் பெற்றுக் கொண்ட கோயில் சிவஅந்தணர்கள் விக்கிரம சோழ பட்டன், ஆட்கொண்ட நாயக பட்டன், விநாயக பட்டன் ஆகிய மூவரும் விளக்கேற்ற ஒப்புக்கொண்டனர்.(3)

மன்னர் பெயரற்ற கல்வெட்டுத் துணுக்குகள் சிவச்செல்வி வளாகம், பழியஞ்சி ஏரி, மேலூராகிய அரித்துவநெற்குன்றம் ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றன.(4) மூன்றாம் குலோத்துங்கர் காலத்தைச் சேர்ந்தவையாகக் கொள்ளத்தக்க துணுக்குக் கல்வெட்டுகள் வளவன் வாய்க்காலை அறிமுகப்படுத்துவதுடன் கயிலாயமுடையார் கோயிலுக்கு விற்கப்பட்ட நிலத்துண்டு பற்றிய தரவுகளையும் முன்வைக்கின்றன.(5) பூசைக்கு உடலாக நீர்வார்த்துத் தரப்பட்ட திருநாமத்துக்காணி நிலமொன்றையும் பூலோகமாணிக்கச் சதுர்வேதிமங்கலத்தையும் சுட்டும் மூன்றாம் இராஜராஜரின் ஒன்பதாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுத் துணுக்குகள் சில கையெழுத்தாளர்களின் பெயர்களையும் தருகின்றன.(6)

காலம்

கோயிலில் தற்போதுள்ள சில கட்டுமானப்பகுதிகள் பொ. கா. 14 அல்லது 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அதன் பிறகும் திருப்பணிகள் நடந்துள்ளமையை பிற கட்டுமானப் பகுதிகள் தெளிவுபடுத்துகின்றன. கல்வெட்டுகள் மூன்றாம் குலோத்துங்கர், மூன்றாம் இராஜராஜர் காலத்தில் இப்பகுதி வளமாக இருந்ததைச் சுட்டுகின்றன.

குறிப்புகள்

1. சம்பந்தர் 3 : 19. ‘அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர் குரிசில் செங்கண்ணவன் கோயில் சேர்வரே’, ‘அம்பர்ச் செம்பியர் செறிகழல் இறை செய்த கோயில்’ எனும் பாடல் அடிகள் குறிக்கத்தக்கன.
2. ஆய்வு நாட்கள் 13. 2. 1982, 25. 12. 2000, 25. 10. 2005, 31. 8. 2008. உடனிருந்து உதவிய திரு. பால. பத்மநாபன், நிருவாக அலுவலர் மு. முருகைய்யன், திருவாளர்கள் வீ.கணேசமூர்த்தி, ச. புகழேந்தி, கி.ஜெயராமன், ஆகியோருக்கு உளமார்ந்த நன்றி. இக்கோயில் பற்றிய முதற் கட்டுரை, ‘திருஅம்பர்ப் பெருந்திருக்கோயில்’ என்ற தலைப்பில் 1982 செப்டம்பரில் வெளியான செந்தமிழ்ச் செல்வி ஆய்விதழில் இடம்பெற்றுள்ளது.
3. ARE 1918: 238.
4. ARE 1918: 236.
5. ARE 1918: 237.
6. ARE 1918: 239.this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.