![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 104
![]() இதழ் 104 [ பிப்ரவரி 2014] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே
இந்து மதத்தின் அறுசமயங்களுள் பெருஞ்சமயங்களான சைவம் மற்றும் வைணவத்தின் முதன்மைத் தெய்வங்களாக முன்வைக்கப்படும் சிவபெருமானையும் திருமாலையும் தொடர்புபடுத்திப் பல்வேறு புராணக் கதைகளை இலக்கியங்கள் சுட்டி நிற்கின்றன. இவற்றுள் இவ்விருவரும் நேரடியாக ஒருவரோடொருவர் மோதிக் கொள்ளும் அரியதொரு புராண நிகழ்வினை கம்பராமாயணத்தில் காண நேர்ந்தது. இந்நிகழ்வு பால காண்டத்தில் பரசுராமப் படலத்தில் இடம்பெற்றுள்ளது {பாடல்கள் 25 - 36}. இராமன் மிதிலையில் முறித்த சிவதனுசின் முன்கதையைக் கூற முற்படும் பரசுராமன் இந்த அரிய வரலாற்றை முன்வைக்கிறார். முன்னொரு காலத்தில் தேவர்களின் சிற்ப நிர்மாணத் தொழிலைச் செய்யும் தச்சனான விசுவகர்மனால் இரண்டு சிறந்த விற்கள் செய்யப்பட்டன. இவை வடமேருவைப்போன்று வலிமை படைத்தவை. இவற்றுள் ஒன்றைத் உமையாள் கேள்வனான சிவபெருமானும் மற்றொன்றை நின்று உலகளந்த நேமி நெடியவனான திருமாலும் எடுத்துக்கொண்டனர். இந்த இரண்டு விற்களுள் சிறந்தது எது? என்று தேவர்கள் பிரம்மனை வினவ, அவர் இருபெருந்தெய்வங்களுக்கிடையில் தந்திரமாக உபாயம் செய்து இந்த விற்களின் வலிமையைக் காரணம் காட்டி இருவருக்கிடையே சண்டை மூட்டி விட்டுவிட்டார். இருவரும் ஈரேழுலகங்களும் நடுங்கும்படி போரில் ஈடுபட்டனர். இறுதியில் திரிபுரமெரித்த சிவபெருமானின் வில் உடைந்து விட்டது. இதனால் கோபங்கொண்ட உருத்திரமூர்த்தி மீண்டும் போர் செய்ய முற்படுகையில் தேவர்கள் தலையிட்டு போரை விலக்கி விட்டு விட்டனர். உடைந்த வில்லை இந்திரன் கையில் சிவபெருமான் கொடுத்துச் செல்ல, திருமால் தனது வில்லை இரிச்சிகன் எனும் முனிவருக்குக் கொடுத்துச் சென்றார். சிவபெருமான் கொடுத்த உடைந்த வில்லைத்தான் நீ மீண்டும் எடுத்து உடைத்தாய். திருமால் வில் இரிச்சிகன் மூலம் என் தந்தையை அடைந்து பின் என்னை அடைந்தது! என்று இக்கதையை முடிக்கிறார் பரசுராமன். இதன் மூலம் இராமனின் வீரமிகு செயலை இழித்துரைப்பதே பரசுராமனின் நோக்கம் என்பது தெளிவு. பால காண்டம் கார்முகப் படலத்தில் மிதிலையில் சதானந்த முனிவன் சிவதனுசின் வரலாறைக் கூறும்போது வேறொரு புராணக்கதை கூறப்படுகிறது {பாடல்கள் 11-24}. அதாவது இமையத்தை வில்லாக்கிய ஈசன் அதனைக் கொண்டு தக்கன் யாகத்தைத் தவிடு பொடியாக்கிவிட்டு அதனை ஜனகன் முன்னோரிடம் கொடுத்துச் செல்கிறார். இங்கு கொடுக்கப்பட்டது உடைந்த வில் அல்ல. முழுமையான வீரமிகு வில்லே. இராமன் நாணேற்றிய பிறகுதான் இந்த வில் முறிகிறது {பாடல்கள் 32 - 34}. ஆக, சதானந்தர் கூறும் சிவதனுசின் வரலாறும் பரசுராமன் கூறும் சிவதனுசின் வரலாறும் ஒன்றுக்கொன்று முரண்படுவது கண்கூடு.this is txt file� |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |