http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 42

இதழ் 42
[ டிசம்பர் 16 - ஜனவரி 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

கோயில்தோறும் வரலாறு
ஆண்டிச்சிப்பாறைக் குடைவரை
கதை 12 - அரிகண்டம்
திரும்பிப் பார்க்கிறோம் - 14
பழியிலி ஈசுவரம்
வாரணமாயிரம்
முதல் பார்வையில் பாண்டியர் குடைவரைகள்
அங்கும் இங்கும் (டிச. 16 - ஜன. 15)
Silpis Corner (Series)
Silpi's Corner-04
Links of the Month
கல்கி வழியே முத்தொள்ளாயிரம்
அலர் எழுந்தது! அவர் பிரிந்தார்!
இதழ் எண். 42 > தலையங்கம்
கோயில்தோறும் வரலாறு
ஆசிரியர் குழு
வாசகர்களுக்கு வணக்கம்.

தமிழகத்தில் சுமார் முப்பத்தெட்டாயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள், நமக்குத் தமிழனின் வரலாற்றினைப் பற்றிய தெளிவை வழங்கத் தங்கள் சுவர்களிலும் தூண்களிலும் கல்வெட்டுகளைக் காலங்காலமாய்த் தாங்கி வருகின்றன. இவற்றில் கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டிருப்பது வெறும் சில ஆயிரம் கோயில்களே. விஞ்ஞானமும் பொருளாதாரமும் மேற்கத்தியக் கலாச்சாரமும் பெருகிவரும் இச்சமுதாயச் சூழலில், பல்லாயிரக்கணக்கான கோயில்கள் கேட்பாரற்று அவை தாங்கிக்கொண்டிருக்கும் வரலாற்றுப் பொக்கிஷங்களுடனே அழிந்து வருகின்றன. கோயில்கள் வழிபாட்டுக்கு மட்டுமே என்று எண்ணும் வரலாறு என்றால் என்னவென்றே தெரியாத திருப்பணியாளர்களால் பல கோயில்களில் கல்வெட்டுகளையும் சிற்பங்களையும் கட்டடக்கலைக் கூறுகளையும் அழித்து அவற்றுடனே தமிழனின் வரலாற்றையும் தொலைக்கின்றனர். அந்தந்த ஊர் மக்கள் தங்கள் கோயில்களின் வரலாற்றினைப் பற்றி அறிந்திருந்தால், அவர்களே ஆர்வம் கொண்டு அக்கோயில்கள் அழியாமல் பாதுகாப்பர். அறியாமையே இவ்வழிவிற்குப் பெரிதும் காரணமாகின்றன.

கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்ட கோயில்களிலும், அக்கோயில் வரலாறு பொதுமக்களைச் சென்றடைவதில்லை. சில கோயில்களில் தலவரலாறு என்று புத்தகங்கள் வெளியிடுகின்றனர். ஆனால் அவை பெரும்பாலும் வழங்குவது சந்திரனும் இந்திரனும் வந்து தோஷம் நீங்க அக்கோயில்களில் வழிபட்டார்கள் என்பன போன்ற புராணக் கதைகளே. தமிழ்நாடு தொல்லியல் துறை தமிழக வரலாற்றினைப் பற்றிய ஒரு பட்டயப்படிப்பை வழங்கி வருகிறது. முதல் ஆண்டில் அந்தப் பட்டயப்படிப்பை மேற்கொண்ட இருபத்தைந்து மாணவர்களிடம் ஒவ்வொரு கோயிலை ஆய்வுசெய்து அக்கோயில் பற்றிய வரலாற்றினை எழுத வேண்டுமெனக் கூறப்பட்டது. இம்முயற்சியால் சுமார் இருபத்தைந்து கோயில்களின் வரலாறு இம்மாணவர்களால் எழுதப்பட்டது. ஆனால் அதன்பின் இப்படிப்பில் சேர்ந்த மாணவர்கள் சில கோயில்களின் வரலாற்றை எழுதினாலும், அவை பதிப்பிக்கப்படவில்லை. இப்போது இப்படிப்பில் வருடத்திற்கு ஐந்து மாணவர்கள் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். இவர்கள் எழுதுவது முழுமையான வரலாறாக இல்லாவிட்டாலும், வரலாறே இல்லாமல் இருப்பதைவிட எவ்வளவோ பரவாயில்லை. குறைந்தது வருடத்திற்கு ஐந்து கோயில்களின் வரலாறாவது பதிவு செய்யப்படும். இத்துறை பிற நூல்களைப் பதிப்பிக்கும்போது, இதிலும் சிறிது கவனம் செலுத்தலாம். அவ்வளவு ஏன், உலகமெல்லாம் புகழ்பெற்று உலக பாதுகாக்கப்பட்ட சின்னங்களின் பட்டியலில் இருக்கும் தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் கோயிலைப் பற்றியும்கூட முழுமையான ஒரு வரலாற்று நூல் இதுவரையில் வெளிவரவில்லை.

அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில தன்னார்வ வரலாற்று மையங்கள் சில கோயில்களின் வரலாற்றினை முழுமையாகப் புத்தகமாக வெளியிட்டிருக்கின்றன. திருச்சியில் டாக்டர்.மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் தலைவர் முனைவர் இரா. கலைக்கோவன் அவர்களின் தலைமையில், திரு சுந்தர்பரத்வாஜ் அவர்களின் போற்றற்கரிய உதவியால் திருவலஞ்சுழி வரலாறு புத்தகமாய்ப் பதிவானது. அதுபோல் இவ்வரலாற்று இணையதளத்தின் ஆசிரியர் குழுவினர் ஆளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் போட்டு இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் புத்தகங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளோம். இதன்வழி முனைவர் இரா. கலைக்கோவனும், முனைவர் மு. நளினியும் எழுதிய "மதுரை மாவட்டக் குடைவரைகள்" என்ற நூல் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளது. ஆனால் இம்முயற்சிகளும் கடல்நீரைச் சிறுகுடம் கொண்டு அளப்பதற்கு சமமாகும்.

தமிழைச் செம்மொழியாக அறிவித்திருக்கும் இந்நாளில், தமிழன் தன் வரலாற்றினை அறியாமல் இருத்தலும், அறியாமையால் அரிய வரலாற்றினைத் தொலைத்தலும் நேராமல் தடுக்கத் தமிழக அரசாங்கம் தலையிட்டு ஆவன செய்தால்தான் முடியும். ஒவ்வொரு ஊரிலும் உள்ள வரலாற்றாய்வு மையங்கள் மற்றும் தகுதியான வரலாற்று அறிஞர்களைத் தேர்ந்தெடுத்து, அந்தந்த ஊரில் உள்ள கோயில்களின் வரலாற்றினைப் பதிப்பிக்கத் தொகை ஒதுக்கி, வரலாற்றுப் புத்தகங்களை அரசாங்கம் வெளியிடவேண்டும். இப்படி செலவழிக்கப்படும் தொகையில் ஒரு பகுதியை அப்புத்தக விற்பனையின் மூலம் ஈட்டலாம். பின்னர் வாய்ப்புக் கிடைக்கும்போது அவ்வரலாற்றுப் புத்தகங்களை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியிட்டால், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் மற்றும் இந்தியாவின் பிறமாநில மக்களும் தமிழக வரலாற்றைத் தெரிந்துகொள்ள உபயோகமாக இருக்கும். தமிழக அரசுக்கும் இதிலிருந்து வருமானம் கிடைக்கும், சுற்றுலாவும் பெருகும். வரலாற்றறிஞர்கள், வரலாற்றார்வலர்கள் மற்றும் பொதுமக்களின் தரவும் சேர்ந்தால் இம்முயற்சி பெரிதும் வெற்றியடையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஏற்கனவே முந்தைய கலைஞர் ஆட்சியின்போது தமிழக வரலாற்றைக் காலவாரியாக எழுதுவதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டு, பல நூல்களை வெற்றிகரமாக வெளியிட்டும் உள்ளது. அதுபோல் கோயில்வாரியாகவும் வரலாற்றைப் பதிவு செய்யத் தமிழக அரசாங்கம் ஆவன செய்யுமா? தமிழக வரலாறு தொலையாமல் காப்பாற்றப்படுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

அன்புடன்
ஆசிரியர் குழு
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.